////”நண்பர்களே: எப்போதும் காதல், காமம், தமிழ், தமிழரினம், புரட்சி, அறிவுரை, இயற்கை என இவைகளை மட்டுமே பாடிக் கொண்டிருந்தால் போதுமா? வேறு எவ்வளவோ சுவையான, சிந்தனைக்குரிய செய்திகள், நிகழ்வுகள் உள்ளனவே!” ////
அவனடியாரின் இச்சொல் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. எண்ணிப்பார்ப்போமானால் சிறிது காலங்களாக அவர் உரைத்துள்ளதுபோல் குறிப்பிட்ட சில தலைப்புகளிலேயே பாவியற்றி வருகின்றோம் என்பது உண்மையே! கவிஞன் என்பவன் தான் வாழும் காலத்தோடு ஒன்றி அவன் வாழ்ந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளையும், அக்காலத்திற் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றியும் பாடுதல் இன்றியமையாத ஒன்றாகும். அதன் அடிப்படையை மனதில் வைத்துக்கொண்டுதான் தமிழநம்பி அவர்கள் நான்கு தலைப்புகள் வழங்கிய போது, இறை சார்ந்த தலைப்பொன்றை வழங்க வேண்டினேன். காரணம் இன்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் நித்யானந்தாவின் அந்தரங்க கூத்துகளின் வெளிப்பாடும் ஒர் காரணமாகும். இருப்பினும் தாங்கள் யாரும் இதுபோன்ற நிகழ்வுகளைச் சிந்தித்து பாவடிக்க முன்வரவில்லை. நான் கருதியிருந்தேன். ஆயினும் அப்பொழுது எனக்கு மிகுந்த பணிகள் இருந்தமையால் அத்தலைப்பிற்கு என்னால் பாவியற்ற முடியவில்லை.
சென்ற பாடத்தில் நாம் கற்ற எண்சீர் மண்டில வகையில் இப்பொழுது நித்யானந்தா சார்ந்த பாவை இயற்றி அளிக்க அனைவரையும் வேண்டுகிறேன்.
ஓரடியில் எட்டு சீர்களைக் கொண்டது எண்சீர் மண்டிலமாகும். முதல் மற்றும் ஐந்தாம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும். முதல் அறையடி முறையே காய் + + காய் + மா + தேமா என அமையவேண்டும். இவ்வாறே அடுத்த அறையடியும், மற்ற அடிகளும் அமைதல் வேண்டும்.
அறுசிர் மண்டிலம் பற்றி நம் ஆசிரியர் தமிழ நம்பி அவர்கள் அழகுறவும், தெளிவுறவும் நமக்குப் பயிற்றுவித்தார். நாமும் சிறந்த பயிற்சி பெற்று அழகுற பற்பல பாக்கள் புனைந்து நம் ஆற்றலை வெளிப்படுத்தினோம். மேலும் கொடுக்கப்பட்ட தலைப்புகளுக்கும் பாக்கள் தீட்டி அவரவர் தம் ஆற்றலை வெளிப்படுத்தினோம்.
அந்த வகையில் வசந்த், அவனடியார், உமா, சிக்கிமுக்கி, திகழ், அண்ணாமலையார், அப்பாதுரையார் ஆகிய அனைவருக்கும் எனது உளங்கனிந்த நன்றிகளையும், வணக்கங்களையும் காணிக்கையாக்குகின்றேன். ஒவ்வொருவரும் தங்களின் பாத்திறத்தால் என் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்துவிட்டீர்கள் என்றால் அது மிகையாகாது. தங்கள் அனைவரையும் வாழ்க என வாழ்த்தி,
எழுசீர் மண்டிலம் பற்றி இப்பகுதியில் அறியவிருக்கிறோம்.
எழுசீர் மண்டிலம் என்பது ஏழு சீர்களைக் கொண்டிருக்கும் என்பதை அனைவரும் அறிவீர்கள். அவற்றின் வரைமுறைகளைக் காண்போம்.
1. அனைத்து சீர்களும் இயற்சீர்களாக வரவேண்டும்.
2. ஒன்றாம், மூன்றாம், ஐந்தாம், ஆறாம் சீர்கள் ---விளச்சீர்களாக வரவேண்டும். (கருவிளம், கூவிளம்)
3. இரண்டாம், நான்காம், ஏழாம் சீர்கள் மாச்சீர்களாக வரவேண்டும். (தேமா, புளிமா)
4. ஒன்றாம், ஐந்தாம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.
5. நான்கடிகளும் ஓரெதுகை பெறவேண்டும்.
கங்கை முடிமேல் அமர்ந்திருக்க கண்டம் நீலம் ஆனவனே மங்கை உமையாள் ஒருபாகம் மாலன் தங்கை மீனாட்சி செங்கை தன்னில் திரிசூலம் சிவந்த நெற்றிக் கண்ணோடும் எங்கும் உடலில் வெந்நீறு; எழிலாய்க் காட்சி அளிப்பவனே!
மங்கை ஆசை மண்ணாசை மயக்கும் பொன்னின் மேலாசை தங்காப் புகழைத் தான்தேடித் தாவும் மனத்தை நானடக்கி எங்கும் நிறைந்த நின்னருளை எண்ணம் தன்னில் நிறைத்திருக்கக் கங்கா தரனே! கைலாசா! கடையன் எனக்கே அருள்வாயே!
கண்ணன் என் குழந்தை- தாலாட்டு
மா மா மா மா மா மா
வெண்ணெய் உண்ட வாயும் விண்ணை அளந்தக் காலும் குன்றைப் பிடித்தக் கையும் கொஞ்சம் வலிக்கும் என்றே அன்னை என்றன் மடியில் அணைத்தேன் கண்ணை மூடி கண்ணா நீயும் தூங்கு கருணைக் கடலே தூங்கு!
கன்னம் சிவந்த சிறுவர் கனவில் காணத் தூங்கு மண்ணில் மாந்தம் வாழ மழையைத் தந்தே தூங்கு கண்ணை மூடிக் கொண்டால் காணும் இருளைப் போல எண்ணம் கொண்டோர் நெஞ்சை எரித்தே நீயும் தூங்கு.
கண்ணா அருள்வாயா?
குறிலீற்று மா + விளம் + மா விளம் + விளம் + மா
கண்டு களித்திட வேண்டும் கார்முகில் வண்ணனை நேராய் அன்று அவன்குழல் இசையில் அழகிய ஆய்ச்சியர் மயங்கக் கன்றை மறந்தது ஆவும் காலமும் நின்றது, மண்ணை உண்ட வாயினில் உலகம் உருண்டிடக் கண்டனள் அன்னை!
பண்டு பூமியில் நேர்மைப்
பாதையாம் கீதையைத் தந்தாய்
குன்றைக் குடையெனப் பிடித்துக்
கோபியர் குலத்தைநீ காத்தாய்
நன்று நினைப்பவர் நாடும்
நன்னிலை ஏய்திடச் செய்தாய்
என்று என்னுளே கருவாய்
என்மனம் குளிர்ந்திட அருள்வாய்?
(குறிலீற்றுமா கூவிளம் விளம் விளம் விளம் மாங்காய்)
பாடி உன்புகழ் பரப்பிடும் வகையினைப் பாவிநான் அறிந்தில்லேன் தேடி நின்னருள் பெற்றிடக் கோவிலைச் சேர்ந்திடல் செய்தில்லேன் கோடிக் குன்றினைச் சுற்றியே யானுனைக் கும்பிடும் வழியில்லேன் நாடி நாமமே நெஞ்சினில் நினைப்பதே நானறி நெறியாமே!
காவி உடுத்த சாமிக்கு ...எதற்குக் காசு பணமெல்லாம் கூவி அழைத்து விற்பாரே ...கூறு போட்டு ஆண்டவனைப் பாவி யாக்க பார்ப்பாரே ...பார்த்து நடந்து கொள்ளுங்கள் ஆவி அடங்கும் முன்னாலே ...ஆசை செய்யும் ஆட்டமடா!
இத் தலைப்பிலும் ஐவர் மண்டிலங்கள் எழுதியுள்ளனர். 1. திருவமை. உமா எழுதியவை :
(மா மா மா மா மா காய்)
மயிலும் தோகை விரித்து ஆடும் வானில் கார்மேகம் குயிலும் சேர்ந்து கூவி அழைக்கும் குரலில் தேனூறும் ஒயிலாய் நடந்தே மழையைத் தருமே உலகில் கார்காலம் வெயிலும் வந்து வேனிற் தோன்ற விரைந்து தானேகும்! சொட்ட நனைந்தே நகரும் சற்றே சுடரால் சூடாகும் நட்ட மரத்தின் நிழலில் நிற்க நாடும் உயிரெல்லாம் வெட்ட வெளிதான் சிறுவர் விருப்பம் வீட்டில் இருப்பாரோ பட்டப் பகல்போல் இரவும் சுடுமே பாரீர் வேனில்தான்.
(‘வேனில்தான்’ அல்லது ‘வேனிற்றான்’ என்று எழுதுவதே சரி; ‘வேனிற் தான்’ – என்று வராது.)
காற்று இயற் சீராலானது வெண்தளை ஏற்றது. மெல்ல விசிறிடுங் காற்று மீட்டும் உயிரினைத் தொட்டுச் சொல்ல வருமொரு சொல்லும் சோலை மலர்களின் வாசம்! நெல்லினைச் சோறாய்ச் சமைக்க நெருப்பினைத் தந்திடுங் காற்றே செல்லும் துளையைக் கடந்து செவியில் இசையாய் நுழைந்தே! சில்லென வீசிடுந் தென்றல் சீறிப் புயலென வீசப் புல்லென வீழும் மரமும் பொங்கும் கடலும் பெரிதாய்க் கொல்லவும் கூடுமிக் காற்று கூறையைப் பிய்த்திடும் வேறாய் மெல்லென வீசிடப் பெண்ணே மீறிடும் போதினில் பேயாம்!
2.திரு. இரா.வசந்தகுமார் எழுதியவை :
(விளம் - மா - தேமா & காய் - மா - தேமா) தடவிடக் குளிரும் தென்றல் தழுவிடச் சிலிர்க்கும் மங்கை படர்ந்திட மணக்கும் பாகல் பழுத்திடச் சிவக்கும் கொய்யா தடங்களில் பதியும் தாரை தணிந்திட புகையும் சாம்பல் கடந்திடக் கனக்கும் காட்சி கனிந்திடக் கழலும் ஞானம் மலர்ந்திடச் சிரிக்கும் பூக்கள் மறைந்திடச் சிவக்கும் மாலை உலர்ந்திட இனிக்கும் இச்சை உகுத்திட மயக்கும் ஓசை தளர்த்திடத் தடுக்கும் கைகள் தயங்கிட நடுங்கும் மேனி வளர்ந்திட குறுகும் தூரம் வழங்கிடக் குறையும் பாரம் வெண்ணொலித்த மின்னல் கோடு வேகவைத்த கன்னல் சாறு மண்ணொளித்த கடலை வாசம் மழையிறக்கும் வானின் அம்பு தண்ணென்று தாவும் ஆறு தமிழிலொரு குயிலாய்க் கூறு விண்கீழ்மேல் தனிமை இல்லை வியப்பேன்நான் இனிமை கொள்ளை.
( விளம்+மா+தேமா) தழுவிடும் தென்றல் துள்ளிக் ...குதித்திடும் வண்ண மீன்கள் அழகுமான் குளிக்கத் தூண்டும் ...அருவிகள் மின்னும் விண்மீன் எழில்தரும் பச்சைப் புற்கள் ...மணம்தரும் வண்ணப் பூக்கள், மழைதரும் மேகம் இன்னும் ...எத்தனை யம்மா சொல்ல! எத்தனை கோடி இன்பம்... காணக்கண் கோடி வேண்டும் பித்தனாய் நானும் ஆனேன் ...இயற்கையின் அழகைக் கண்டு சத்தமாய்ச் சொல்ல வேண்டும்... இறைவனின் புகழை என்றும் சுத்தமாய் வைத்துக் கொள்வோம்... சுற்றிடும் உலகைக் கொஞ்சம்!
விண்ணக மின்னல் போலே வீசிளந் தென்றல் போலே கண்களில் நிற்கும் பெண்ணே காதல்செய் வோமா என்றேன் மண்ணுக்குள் ஆண்கள் மேலே மங்கையெற் காசை யில்லை பெண்ணுக்குள் காதல் தேடும் பெண்ணிவ ளறிவீ ரென்றாள்! தங்கத்தை வைரம் சேரும் தாமரையை வண்டே நாடும் இங்கிவையி யற்கை அஃதே இனிமையு மாகு மென்றேன் கடலுக்குள் கங்கை கூடிக் கலப்பதி யற்கை யாயின் மங்கையரை மங்கை நாடி மகிழ்வதுமி யற்கை யென்றாள்!
அன்பார்ந்த அப்பாதுரை அவர்களுக்கு, இயற்கையோ டியைந்த வாழ்க்கையே இனிமை தருவது; இயற்கை யிகந்த வாழ்க்கை இன்னல் தருவதே! பண்டைத் தமிழர் இயற்கையோ டியைந்த வாழ்க்கையையே தேர்ந்தனர்; வாழ்ந்தனர். பிறரிடமிருந்து நாம் ஏற்பது நல்லவையாக மட்டுமே இருக்கட்டுமே! இன்னல் தருவதாக இருக்க வேண்டாவே! வள்ளுவர் அறியாத பாலறிவா? முப்பால் உணர்த்தாத காமத்துப் பாலா? எண்ணிப் பார்த்து ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அவனடிமை ஐயாவின்,
பாலியல் பொல்லாங்கே அப்பா துரைப்பாவின் பாலியல் பாவிற்றுப் பார்.
- என்ற கவலை ஞாயமானதே. 5. திரு. அண்ணாமலை எழுதியவை : குறிலீற்றுமா + விளம் + மா+விளம் + விளம் + மா
முன்பந் நாட்களி லுரைத்த ....முன்னவர் மூடரு மல்லர். பின்ன வரிவரில் யாரும் ....பெரிதொரு அறிஞரு மல்லர். தென்ன வர்குடி நாளும் ....தழைத்திடத் தாங்கியே நிற்பீர் அன்ன வர்வழி நடந்து ....அறத்தினைக் காத்திடப் புகுவீர்!
அருமையான பாடல்களை இயற்றிய பாவலர்க்கு நன்றி. சில பாடல்கள் மோனை அமையா துள்ளன. மோனை பற்றி மீண்டும் ஒருமுறை படித்து, மோனை அமைத்துப் பாடல் எழுதப் பயிலல் சிறப்பு. நன்றி.