திங்கள், 4 ஆகஸ்ட், 2008

பாடம்17 சவலை வெண்பா!

இக்கிழமைக்கான ஈற்றடியைப் பாடத்தின் இறுதியில் (கீழே) காணலாம்.
பொதுவாக (அளவியல் வெண்பாவைப் போருத்தவரை) 15சீர்கள் அமையப்பெறுதல் வேண்டும். 15சீர்கள் கொண்ட அளவியல் வெண்பாவில் ஒருசீர் குறைந்து 14சீர்களாகவோ ஒருசீர் கூடி 16சீர்களாகவோ வரின் அவ்வெண்பாவைச் சவலை (ஊனம்) வெண்பா என்பர்.

மாமுன் நிரையும் விளமுன் நேரும் காய்முன் நேரும் வருதல் வெண்பா வகுப்புமுறையாகும் (விதி). இவ்வகுப்பு முறைக்கு மாறாய்த் தளைகொள்ளும் வெண்பாக்களையும் சவலை வெண்பா என்பதே சரியாகும்.

காட்டு:-

அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவல்ல
நட்டாலும் நண்பல்லர் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு
சுட்டாலும் வெண்மை தரும்!

அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன்
நிகரில் குரவர் இவர்இவரைத்
தேவரைப் போலத் தொழுக என்பதே
யாவரும் கண்ட நெறி!

இவ்விரு வெண்பாக்களையும் உற்று நோக்குங்கால் இடையில் விடுபட்ட இடத்தில் எவ்வொரு சொல்லையும் இட்டுநிரப்ப முடியாதாகையால் அவை சவலை வெண்பாக்கள் எனப்படும்.

சொற்செறிவு பொருட்செறிவு கரணியமாய் இதுபோன்ற வரையறையை மீறியவற்றையும் ஏற்றுக் கொள்ளப் பட்டது. ஆனால் தற்காலத்தில் இதுபோன்ற சவலை வெண்பாக்கள் புனைவது வழக்கொழிந்து போனதால் இதுபோன்ற வற்றை முயலவேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- இட்டவடி நோவும் இவட்கு!

குறிப்பு:-

"இட்டவடி நோகும் இவட்கு!" என எழுதுதல் வழுவாகும். "இட்டவடி நோவும் இவட்கு!" எனும் ஈற்றடிக்கு எழுத அனைவரையும் அழைக்கிறேன்.

அகரம்.அமுதா

17 கருத்துகள்:

  1. மெல்லினமே மின்னுமொளி மேகலையே தந்தேனே
    உன்னிடமே உள்ளம் உணர்வாய்நல் -பொன்னினமே
    திட்டவடி மேலழகி தின்ன இடையழகி
    இட்டவடி நோவும் இவட்கு!

    பதிலளிநீக்கு
  2. மெல்லினமே மின்னுமொளி மேகலையே தந்தேனே
    உன்னிடமே உள்ளம் உணர்வாய்நல் -பொன்னினமே
    திட்டவடி மேலழகி தின்ன இடையழகி
    இட்டவடி நோவும் இவட்கு!

    பதிலளிநீக்கு
  3. தொட்டால் துவண்டிடும் விட்டால் வருந்திடும்
    ஒட்டாதொ துங்கிடில் திட்டிடும் - கிட்டவே
    எட்டாத மொட்டாக பட்டான சிட்டவள்
    இட்டவடி நோவும் இவட்கு

    பதிலளிநீக்கு
  4. அழகிய வெண்பா செய்தளித்துள்ளீர்கள். தங்களை வருகவருக என வரவேற்கிறேன். தொடர்ந்து ஆதரவுதருமாறும் வேண்டுகிறேன். நன்றி. நன்றி நன்றி

    பதிலளிநீக்கு
  5. கையளவில் தைத்தவுடை; கற்பறையின் வாய்மூட
    நெய்யளந்த வாழை நெடுந்தூணால் -பையநலங்
    கெட்டால் துடிக்காத கீழ்மை மகளி(ர்)மனை
    இட்டவடி நோவும் இவட்கு!

    பட்டஅடி நூறு படப்போவ தைநூறு
    சுட்டவடுக் கண்டால் சுடுநெருப்பின் -பட்டறிவு
    விட்டு விடாதென்றும் வெல்லறிவார் முன்வஞ்சம்
    இட்டவடி நோவும் இவட்கு!

    பாத்தென்றல்.முருகடியான்!

    பதிலளிநீக்கு
  6. இராஜகுருவைத் தொடர்ந்து மிக அருமையாகத் தன் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு அழகிய வெண்பாவை வழங்கியிருக்கியார் நண்பர் இரத்தினகிரி. அவருக்கு நம் வாழ்த்துகள்.

    என்னாசான் பாத்தென்றலாரும் அழகிய வெண்பாக்களை அருளியிருக்கிறார். அவரைத்தொடர்ந்து நாமும் ஓர் வெண்பாவைப் பதிவுசெய்கிறோம்.

    இட்டஅடி நோகப்போகும் அந்தப்பெண் யாரென்பது தெரிந்தவர் சொல்வீர்களாக!

    சீர்பதி னைந்தும் அகவையாம் சேர்மோனை
    மாராம் வழங்கெதுகை பின்னழகே நேர்தனிச்சீர்
    கட்டழகுக் கூந்தல் கருதுதளை தட்டிவிடின்
    இட்டவடி நோவும் அவட்கு!

    அகரம்.அமுதா

    பதிலளிநீக்கு
  7. நாணத்தோ டிட்ட நறுந்தா மரையடியும்
    மானத்தைப் போற்றும் மரபடியும் -தேனொத்துத்
    திட்டமிடத் தெரிந்த திருமக்கள் மேல்துன்பம்
    இட்டவடி நோவும் இவட்கு!

    அன்பே!என் ஆருயிரே! ஆற்றல் மிகுந்தோழா!
    முன்பேநம் மொழிந்ததையே -பின்பொருவன்
    தட்டேந்தச் சொல்லித் தருவான் அதையுண்பான்
    இட்டவடி நோவும் இவட்கு!

    பாத்தென்றல்.முருகடியான்!

    பதிலளிநீக்கு
  8. உள்ளதைக் கொண்டுண் டொழுங்குடன் வாழாமல்
    அல்லதைத் தேடி அலைவார்!கால் -முள்ளாகிப்
    பட்டவிட மெல்லாம் பழுதாகும் அக்கயவர்
    இட்டவடி நோவும் இவட்கு!

    முயலுக்குக் கால்மூன்று முட்டாளுக் கேழறிவு
    கயலுக்குக் கால்தேடிக் காட்டுவார்! -செயலூக்கிச்
    சுட்டெடுக்குஞ் சூதர் சுருட்டுப் புகைவிடுவார்
    இட்டவடி நோவும் இவட்கு!

    பாத்தென்றல்.முருகடியான்.

    பதிலளிநீக்கு
  9. நூலாடை யால்மேனி நோகும் எனத்தெரிந்தே
    பாலாடை கட்டிவிட்டுப் பார்த்திருத்தேன்! -பாலாடை
    பட்டவிடம் நோகப் பரப்பியப்பூ மெத்தையிலே
    இட்டவடி நோகும் இவட்கு!

    அகரம்.அமுதா

    பதிலளிநீக்கு
  10. அதனாலென்ன? குழப்பமில்லை. முயற்சித் திருவினையாக்கும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. அன்புள்ள அமுதா!
    வெண்பாக்கள் அருமை! அருமை!!

    மா முன் நிரையும்,விள முன் நேரும்(இயற்சீர் வெண்டளை)
    காய் முன் நேரும் (வெண்சீர் வெண்டளை).இவையே
    வெண்பாவில் பயிலும் தளைகள்.
    நீங்கள் வெண்பாவின் விதியாக எழுதியிருப்ப்தை
    கவனியுங்கள்.
    அன்புடன்,
    தங்கமணி.

    பதிலளிநீக்கு
  12. மன்னிக்கவும் தங்கமணி அவர்களே! சிறு தவறு நேர்ந்துவிட்டது. திருத்திவிட்டேன். நன்றி நன்றி நன்றி

    பதிலளிநீக்கு
  13. நாணத்தோ டிட்ட நறுந்தா மரையடியும்
    மானத்தைப் போற்றும் மரபடியும் -தேனொத்துத்
    திட்டமிடத் தெரிந்த திருமக்கள் மேல்துன்பம்
    இட்டவடி நோவும் இவட்கு!

    அன்பே!என் ஆருயிரே! ஆற்றல் மிகுந்தோழா!
    முன்பேநம் மொழிந்ததையே -பின்பொருவன்
    தட்டேந்தச் சொல்லித் தருவான் அதையுண்பான்
    இட்டவடி நோவும் இவட்கு!


    மேற்கண்ட இரு பாடல்களிலும் தளை தவறு தெரிகிறதே!

    முதற்பாடலில், மூன்றாம் அடியில்
    காய் முன் நிரை கலித்தளை வருகிறது

    இரண்டாம் பாடலில், இரண்டாம் அடியில் மூன்று சீர்களே உள.

    சவலை வெண்பாவா எழுதச்சொன்னீர்கள்?

    இவையிருக்க,

    இன்னொன்று,
    அகரம் அமுதா ஆணா பெண்ணா?

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் (தோழர்?) சிக்கி முக்கி அவர்களே.

    கற்றுந் தெளியாமல் கற்றோர்ப்பின் போகாமல்
    நற்றமிழ்ப் பாப்புனையும் நாட்டமுற்றேன் -சற்றே
    கருத்தவுடல் நேர்வழியில் சிந்தனைகள் காளைப்
    பருவமியற் பேர்சுதாகர் பார்!

    தளைதட்டுமாறு எழுதிய வெண்பாக்களை உரியவருக்கு அனுப்பியுள்ளேன். அவர்திருத்தி மறுமொழியில் இடுவார் என எதிர்பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  15. அன்பே அமுதா! அறிந்தே னுனைமகிழ்ச்சி!
    உன்பேருந் தந்தாய்! உயர்பண்புங் கூறிவிட்டாய்!
    என்றுமுன் நன்னோக்கம் ஏற்றம் பெறவெல்லும்!
    பொன்றா முயற்சிதனைப் போற்று!

    ஓருழற்சி இன்னிசை வெண்பா
    சரியாக உள்ளதா?

    பதிலளிநீக்கு
  16. சிக்கிமுக்கி செய்தளித்த சீர்மிகு வெண்பாவில்
    தொக்கிநிர்க்கும் மேன்மைதனைச் சொல்லவா! -புக்கிருக்கும்
    தாமரையும் வாழ்த்தத் தமிழும் வழுத்தஅம்
    மாமறையும் வாழ்த்துமே வந்து!

    வணக்கம்தோழரே! இயற்பெயர் யாதோ? தங்களை இவ்வலையில் ஈற்றடிக்கு வெண்பா எழுத பணிவோடு அன்பழைப்புவிடுக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com