Follow me on Twitter RSS FEED

கலிமண்டிலம்! 6

1. ஓரெதுகை பெற்ற நான்கடிகளைக் கொண்ட பாடல்.
2. சீறமைப்பு முறையே = விளம் + மா + விளம் + மா – என்றமைதல் வேண்டும்.
3. விளச்சீருக்குப் பதில் மாங்காய்ச்சீர் அருகி வருவதும் உண்டு.
4. பொழிப்பு மோனை சிறப்பு.

காட்டுப்பா

இலவயம் இன்றி எப்பொருள் இன்று
விலைகொளும் பொருளாய் விற்கிறார் கடையில்?
அலைந்திடும் மாந்தர் அவாவினைக் கண்டு
மலிந்தன காணீர் மாசுடைப் பொருளே! --- புலவர் அரங்க. நடராசன்

ஓம்புக மனதை ஓம்புக உடலை
ஓம்புக அறிவை ஓம்புவ தாலே
தீம்புகள் அனுகா! திருவதே தொடரும்
நாம்நலம் பெற்றால் நலம்பெறும் நாடே! --- அகரம் அமுதன்

ஐயிரு திங்கள் அறுசுவை தவிர்த்துப்
பையுதை மகவால் மெய்வலி பொறுத்துப்
பையந டந்து பெற்றதன் மகவைக்
கையினில் ஏந்திக் களித்திருப் பாளே! --- அகரம் அமுதன்

22 கருத்துரைகள்:

இரா. வசந்த குமார். சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
இரா. வசந்த குமார். சொன்னது…

நாதன் தாள் வாழ்க!

பனிமுடி மீதில் பிறைமதி ஒளிர
நனிநதி பொங்கி நழுவழி சடையில்
துணியிடை அங்கித் தோலுடை மிளிரத்
தனியெனத் திகழும் தென்திசை குருவே!

ஒருவிழி முகத்தில் ஒளிதர திறந்து
இருவிழி பெருக்கும் இமைநிறை அருளே!
திருமொழி யாவும் திகட்டிட கலந்த
கரும்பிழிச் சாறில் கனிந்திடும் செவியே!

நான்மறை பொழியும் நாதனின் செவ்வாய்
தானுரை செய்தல், தேனுறை பாலில்
வான்திரை விலகி வாடிய பயிர்க்கு
ஊன்நிறை மாமழை ஊற்றினாற் போலே!

விண்ணவர் கடைந்த விடத்தினை எடுத்து
உண்டதும் இடத்து உமைகரம் தடுக்க
கண்டமேல் படர்ந்த கருநிற இடத்தை
கண்டதும் கழலும் கண்களின் பாவமே!

அணிவதும் அரவம்; அருள்வதும் அன்பே;
பணிவதுன் பாதம்; பதிப்பதும் பட்டை;
தணிவதும் தாபம்; தருநிழல் தருவே;
கனிவதும் மனமே; கரம்விடாய் இறையே;

அவனடிமை சொன்னது…

நாதனின் தாள்வாழ்த்தி நம்மைக் கடைந்தேற்றி
வேதனை தீர்த்தார் வசந்த்.

அவனடிமை சொன்னது…

பாகுடன் பருப்பும் பழங்களும் தரும்நற்
சாகுப டிக்கேற் றறிவுரை கிட்டும்
பாகுபா டின்றி பலதுறை ஆய்வும்
கூகுளை நம்ப குதிர்ந்திடும் விடைகள்

அவனடிமை சொன்னது…

//1. ஓரெது பெற்ற நான்கடிகளைக்....//
//2. சிறமைப்பு முறையே = விளம்.....//
//தீம்புகள் அனுகா திருவதே தொடரும்//

பட்டென்று பாங்காய்ப் பலப்பா புனைபவர்
தட்டச்சில் திண்டாடு வார் ?

அவனடிமை சொன்னது…

மேலே உள்ள பா கூகுள் விளம்பரம் போல் உள்ளது, சிறிய திருத்தத்துடன் இதோ:

பாகுடன் பருப்பும் பழங்களும் தரும்நற்
சாகுப டிக்கேற் றறிவுரை கிட்டும்
பாகுபா டின்றி பலதுறை ஆய்வும்
ஆகுமே வலையில் அறிந்திடு அதனை

அகரம் அமுதன் சொன்னது…

வசந்தின் பாக்கள் இனிமையாக உள்ளன. வாழ்க.

அகரம் அமுதன் சொன்னது…

அவனடியரின் பாக்கள் அருமை. இப்படியா என்னை வாங்கு வாங்கென்று வாங்குவது? தவறுகளைச் சுட்டத்தானே வேண்டும்! வாழ்க

அவனடிமை சொன்னது…

உமா, திகழ், சவுக்கடி, அண்ணாமலை, அப்பாதுரை அப்புறம் நம் தமிழநம்பி அய்யா.. எல்லோரும் எங்கே?

அவனடிமை சொன்னது…

//ஐயிரு திங்கள் அறுசுவை தவிர்த்துப்
பையுதை மகவால் மெய்வலி பொறுத்துப்
பையந டந்து பெற்றதன் மகவைக்
கையினில் ஏந்திக் களித்திருப் பாளே!//

பா நல்லாத்தான் இருக்கு. ஆனா களிப்பு நீடிக்குமா ?

களிக்குமோ குழவி கன்னிமை யெய்த
களிப்புடன் ஒளிப்பாள் காதலை அவளும்
வலிக்குமே நெஞ்சம் வாஞ்சையில் பெற்றோர்க்
களிக்குமே அவளின் அகந்தையும் அழலை.


மன்னிக்கவும், இளந்தாயின் மகிழ்ச்சியில் மண்ணைப் போடவில்லை; பல குடும்பகளில் நடப்பதைத் தான் சொல்கிறேன்.

அவனடிமை சொன்னது…

நெகுதி உணர்வோடு விட மனம் இடங்கொடுக்கவில்லை, அதனால் இன்னுமொரு பா:

அழலினை அணைக்க அவளைநீ அணைத்து
மழலையை மறந்து மகள்மனம் மதிக்க
விழைவது வீணாய் விரக்தியா காமல்
பழையபண் பாட்டை பரிவுடன் புகட்டு


(ஐயம்: நெகுதி என்றால் ‘negative' என்பது சரியா?)

அவனடிமை சொன்னது…

இளம் வயதினருக்கு ‘புகட்டு’வதெல்லாம் பிடிக்காதல்லவா, அதனால், பாவை இப்படி மாற்றிக் கொள்ளலாம்:

மழலையை மறப்பாய் மகள்தனி யொருத்தி
அழலினை அணைக்க அவள்மனம் மதித்து
விழைவது வீணாய் விரக்தியா காமல்
பழையபண் பாடாம் பரிவுகாட் டிடுவாய்

அகரம் அமுதன் சொன்னது…

அவனடியாரின் பாக்கள் அழகு. முதல் மற்றும் மூன்றாம் பாக்கள் அருமை. வாழ்க

(ஐயம்: நெகுதி என்றால் ‘negative' என்பது சரியா?)

எனக்குத் தெரியவில்லை. பேராசிரியர் அருளி அவர்களின் இவைதமிழல்ல அகராதியைப் பார்த்துச் சொல்கிறேன். நேர்மறை என்றோர் சொல் இருக்கிறதல்லவா?

அண்ணாமலை..!! சொன்னது…

கனிவெனக் கலந்து காற்றினில் புகுந்து
வினைப்பயன் துடைக்கும் உயர்வடி வேலோய்
கனவிலும் புகுந்து கடிமலர் எறிந்து
நினைவினில் நுழைந்து நிதமருள் வாயே!

சினமென வருகும் சிற்றுயர் யாவும்
கணமதன் பொழுதில் காற்றினில் புகையாய்
உனைநிதந் தொழவே ஓடியே மறையத்
தனந்தரு வேலோய் தந்தருள் வாயே!



தாமதமாக வந்தமைக்கு வருந்துகிறேன்!
திரு.அவனடிமை ஐயா, திரு.அகரம் அமுதா ஐயா , திரு.வசந்த் ஐயா மற்ற அனைத்துக் கவிஞர்களின் நலத்தையும் இறைவனிடம் வேண்டுகிறேன்!
நன்றிகள்!

உமா சொன்னது…

அனைவருக்கும் வணக்கம். சில நாட்கள் விடுமுறை எடுத்து வெளியூர் சென்றதால் வலைப்பக்கம் வரயியலவில்லை. தொடர்ந்து எழுதும் போது என்பாக்களில் சலிப்புத் தட்டிவிடுவதாக உணர்வதால் சற்றே நிதானமாக எழுதுகிறேன். கண்டிப்பாக பாடங்களை படித்துவருகின்றேன்.

திரு.வசந்த குமார்,திரு.அவனடிமையார், திரு.அகரம் அமுதன்[?],திரு.அண்ணாமலையார் அனைவரின் பாக்களும் அருமை அருமை ஆஹா பாராட்ட வார்த்தைகளே இல்லை. பா வுடன் வருகிறேன்.
அன்புடன் உமா.

அகரம் அமுதன் சொன்னது…

வருக வருக அண்ணாமலையாரே! காலம்தாழ்த்தி வந்தாலும் அழகிய பாக்களுடன் வந்துள்ளீர்கள். வாழ்க.

முதற்பா மிக சிறப்பாகவும் அழகாகவும் அமைந்துள்ளது. இரண்டாம் பாவில் சிறுசிறு ஐயங்கள் உள்ளன.


சினமென வருகும் சிற்றுயர் யாவும்
கணமதன் பொழுதில் காற்றினில் புகையாய்
உனைநிதந் தொழவே ஓடியே மறையத்
தனந்தரு வேலோய் தந்தருள் வாயே!

வருகும் = என்ற சொல்லாளுமை சரிதானா என்பதை உறுதி செய்யவும்.

சிற்றுயர் =சிறு துயரைத்தான் அப்படிச் சுட்டுகின்றீர்கள் எனக்கருதுகின்றேன். அது உண்மையானால் 'சிறுதுயர்' என்றே இடுமாறு வேண்டுகின்றேன்.

இரண்டாம் பாவின் கருத்தும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.

அகரம் அமுதன் சொன்னது…

வெளியூர் சென்று திரும்பியிருக்கும் தோழி உமா அவர்களை வருக வருக என வரவேற்கின்றேன்.

திரு.அகரம் அமுதன்[?]

அமுதா என்பது விளிநிலை. அமுதாள் என்பது பெண்பாற் பெயர். அமுதன் என்பது ஆண்பாற் பெயர். அமுதா என்பது இருபாலரையும் விளிக்கும் நிலையில் வழங்கப் படுவது.

மேலும் முன்பு, அமுதா -என நான் பெயர் வைத்துக் கொண்டதன் காரணம் பலரும் அறிந்ததே.

தாய்தந்தை பேர்முன் எழுத்துமென் பேரிடை
வாய்த்த நெடிலுமே யாம்அமுதா -ஆய்ந்ததன்பின்
தொக்கியே நிற்பதெல்லாம் தோன்றியஊர்ப் பேர்பாதி
அக்கரையாற் சேர்த்த தறி!

சுதாகர் என்ற எனது இயற்பெயரை அமுதன் என்றே மாற்றிவிடலாம் என்பதனால் அமுதாவிலிருந்து அமுதனாகி விட்டேன் அவ்வளவே!

அண்ணாமலை..!! சொன்னது…

////
வருகும் = என்ற சொல்லாளுமை சரிதானா என்பதை உறுதி செய்யவும்.

சிற்றுயர் =சிறு துயரைத்தான் அப்படிச் சுட்டுகின்றீர்கள் எனக்கருதுகின்றேன். அது உண்மையானால் 'சிறுதுயர்' என்றே இடுமாறு வேண்டுகின்றேன்.

இரண்டாம் பாவின் கருத்தும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.
/////

'வருகும்' என்றால் 'வந்திடும்' அல்லது 'வரும்' என்று ஏற்கனவே படித்ததுபோல்
நினைவுக்கு வந்ததால் அவ்வாறு எழுதிவிட்டேன்!
இனி திருத்திக் கொள்வேன்!

தங்களின் வாழ்த்துக்களுக்கும்,
திருத்தங்களுக்கு மிக நன்றிகள்!
எம்மை மெருகேற்றுவதற்கு
இவை கண்டிப்பாக உதவும்!
நன்றிகள் திரு. அகரம் அமுதனாரே!

தங்களது பெயர்க்காரணப்பா
அருமை!

அகரம் அமுதன் சொன்னது…

நன்றிகள் அய்யா

அவனடிமை சொன்னது…

வேலோய்வே லோயென விண்டிட வாழ்வினில்
மாலோயும் அண்ணா மலை.

உமா சொன்னது…

பலப்பல நூல்கள் படித்திடுத் தேடி
உளப்பல கலைகள் ஓதிடு விரும்பி
நலம்பல பெறவே நடந்திடு நாளும்
உளமுயர் வுற்றால் உள்ளதாம் உயர்வே!

அகரம் அமுதன் சொன்னது…

உமா அவர்களின் பா அழகுற அமைந்துள்ளது வாழ்க.

கருத்துரையிடுக

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com