வெள்ளி, 23 ஏப்ரல், 2010

எண்சீர் மண்டிலம்! 3

அடிதோறும் எட்டுச்சீர்களைக் கொண்டிருக்க வேண்டும்.

முதல் அரையடி சீரமைப்பு முறையே = குறிலீற்றுமா + கூவிளம் + விளம் + மா –என்று அமைந்திருக்க வேண்டும். அடுத்த அரையடியும் அவ்வாரே அமைந்திருக்க வேண்டும்.

குறிலீற்றுமா என்பது, குறில் ஒற்று ஈற்றுமாவாகவும் வரலாம்.

இவ்வாறான நான்கடிகள் ஓரெதுகை பெற்றுவர வேண்டும்.

1,5 ஆம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.

ஒழிந்து போனது பரிசெனும் சீட்டு
ஒழிந்து போனது பஞ்சையர் துயரம்
பிழிந்து ழைப்பினால் பெறும்பொருள் எல்லாம்
பிடுங்கி வாழ்ந்தனர் பரிசெனும் சீட்டால்
கழிந்த நாட்களில் கள்வரைப் போலக்
கவர்ந்த செல்வமோ கணக்கில வாகும்
விழுந்த ஏழையர் வாழ்வெலாம் உயர
விதித்த ஓர்தடைக் கொப்புயர் வுண்டொ?

--- புலவர் அரங்க. நடராசன்

அகரம் அமுதா

சனி, 17 ஏப்ரல், 2010

எண்சீர் மண்டிலம்! 2

அடிதோறும் எட்டு சீர்களைக் கொண்டிருக்க வேண்டும்.

முதல் அறையடி முறையே காய் + காய் + காய் + மா என அமைந்திருக்க வேண்டும். அடுத்த அறையடியும் அப்படியே அமைந்திருத்தல் வேண்டும்.

இவ்வாறாக நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.

1 ஆம் 5 ஆம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.


காட்டு!

அருகமர்ந்து தன்மனையாள் அகம்விரும்பி நல்ல
அறுசுவையும் நிறைஉணவை அருங்கணவர்க் கூட்ட
விருப்பின்றிச் செல்வத்துச் செருக்கேறி நின்று
வெறுத்தாற்போல் முன்கவளம் உணமறுத்துப் பின்னர்
அருந்தியவர் பிறிதோர்நாள் பெருவறியர் ஆகி
அயலார்முன் போய்உணவை இரந்துண்பார் அஃதால்
பெருஞ்செல்வம் நிலைத்ததெனக் கருத்தினிலே எண்ணிப்
பேணுகின்ற நற்றன்மை உடையதன்று காண்பீர்!

--- கவிமாமணி இறையரசன்.

மரணமே முழுமையாய்!

வித்தொன்றில் உருவாகி விளையாடும் கூடு!
விரும்பிநீ கைப்பற்ற விரைந்தோடும் காடு!
புத்திக்கும் தோன்றாத புதிரினைப் போலே
சித்துவிளை யாட்டாடும் மரணமே!நீ எங்கே?
தித்திக்கும் அமுதமா நஞ்சாஉன் வீடு?
திக்குறங்கும் இரவிலாநன் பகலிலாஉன் பாடு?
நத்தியுனைக் கூப்பிட்டோர்க் கொத்துழைக்க மாட்டாய்!
விட்டுவிடென் போரையும்நீ விட்டுவிட மாட்டாய்!

பத்திலொன்று குறைவாகப் பெருந்துளைகள் கொண்டும்
அத்துளைகள் வழிபுறத்தில்; வெளியேறாக் காற்றை
எத்துளையின் வழிபுகுந்து நீயெடுக்கக் கூடும்?
அத்துளையை நானறிய ஆசைமிகக் கொண்டேன்!
நித்திரையும் உனக்கான ஒத்திகையே போலும்!
ஒத்திகைவிட் டென்றுடலம் அரங்கேற்றம் காணும்?
அத்தினத்தை மனமெண்ணி அன்றாடம் ஏங்கும்;!
ஒத்துழைத்து நீவந்தால் முழுமையுறும் வாழ்வும்!


இவ்வாரான இலக்கண அமைப்பில் "பிளாஸ்டிக்கு" என்ற தலைப்பில் பாவியற்ற வேண்டுகிறேன்.

அகரம் அமுதா

புதன், 14 ஏப்ரல், 2010

எண்சீர் மண்டிலம்!

அவனடியார் சொன்னது…

////”நண்பர்களே: எப்போதும் காதல், காமம், தமிழ், தமிழரினம், புரட்சி, அறிவுரை, இயற்கை என இவைகளை மட்டுமே பாடிக் கொண்டிருந்தால் போதுமா? வேறு எவ்வளவோ சுவையான, சிந்தனைக்குரிய செய்திகள், நிகழ்வுகள் உள்ளனவே!” ////

அவனடியாரின் இச்சொல் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. எண்ணிப்பார்ப்போமானால் சிறிது காலங்களாக அவர் உரைத்துள்ளதுபோல் குறிப்பிட்ட சில தலைப்புகளிலேயே பாவியற்றி வருகின்றோம் என்பது உண்மையே! கவிஞன் என்பவன் தான் வாழும் காலத்தோடு ஒன்றி அவன் வாழ்ந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளையும், அக்காலத்திற் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றியும் பாடுதல் இன்றியமையாத ஒன்றாகும். அதன் அடிப்படையை மனதில் வைத்துக்கொண்டுதான் தமிழநம்பி அவர்கள் நான்கு தலைப்புகள் வழங்கிய போது, இறை சார்ந்த தலைப்பொன்றை வழங்க வேண்டினேன். காரணம் இன்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் நித்யானந்தாவின் அந்தரங்க கூத்துகளின் வெளிப்பாடும் ஒர் காரணமாகும். இருப்பினும் தாங்கள் யாரும் இதுபோன்ற நிகழ்வுகளைச் சிந்தித்து பாவடிக்க முன்வரவில்லை. நான் கருதியிருந்தேன். ஆயினும் அப்பொழுது எனக்கு மிகுந்த பணிகள் இருந்தமையால் அத்தலைப்பிற்கு என்னால் பாவியற்ற முடியவில்லை.

சென்ற பாடத்தில் நாம் கற்ற எண்சீர் மண்டில வகையில் இப்பொழுது நித்யானந்தா சார்ந்த பாவை இயற்றி அளிக்க அனைவரையும் வேண்டுகிறேன்.

காய் + காய் + மா + தேமா
காய் + காய் + மா + தேமா - என்ற வரையறையிலான எண்சீர் மண்டிலத்தில் பாவியற்ற வேண்டுகின்றேன்.

அகரம் அமுதா

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

எண்சீர் மண்டிலம்! 1

ஓரடியில் எட்டு சீர்களைக் கொண்டது எண்சீர் மண்டிலமாகும். முதல் மற்றும் ஐந்தாம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும். முதல் அறையடி முறையே காய் + + காய் + மா + தேமா என அமையவேண்டும். இவ்வாறே அடுத்த அறையடியும், மற்ற அடிகளும் அமைதல் வேண்டும்.

கண்ணன்பால் மிகவன்பால் வேலைக் காரி
கையிற்பால் செம்போடு தெருவில் சென்றாள்
திண்ணன்பால் வாங்கென்றான் கரிய னும்பால்
தீங்கற்ற பாலேயென் பால்வாங் கென்றான்
திண்ணன்பால் கரியன்பால் வெறுப்பால் பெண்பால்
சீயென்பாள் நில்லாதீர் போவீர் அப்பால்
கண்ணன்பால் தான்கொண்ட களிப்பால் அன்னார்
கலப்பாலே இனிப்பதென்று கசப்பால் சொன்னாள்!

---பாரதி தாசன்.

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!

---உலக நாதன்

ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே கேளாய்!
உண்மையாய் ஐயரையும் அரையும் கேட்டேன்
இருநான்கும் மூன்றுடனே ஒன்றும் சொல்வாய்
இம்மொழியைக் கேட்டபடி ஈந்தா யாயின்
பெருநான்கும் அறுநான்கும் பெறுவாய் பெண்ணே!
சரிநான்கும் பத்துமொரு பதினைந் தாலே
சகிக்கமுடி யாதினியென் சகியே! மானே!

---விவேக சிந்தாமணி.

இம்முறையிற் பாப்புனைய வேண்டுகிறேன்.

அகரம் அமுதா

திங்கள், 5 ஏப்ரல், 2010

எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்

அறுசிர் மண்டிலம் பற்றி நம் ஆசிரியர் தமிழ நம்பி அவர்கள் அழகுறவும், தெளிவுறவும் நமக்குப் பயிற்றுவித்தார். நாமும் சிறந்த பயிற்சி பெற்று அழகுற பற்பல பாக்கள் புனைந்து நம் ஆற்றலை வெளிப்படுத்தினோம். மேலும் கொடுக்கப்பட்ட தலைப்புகளுக்கும் பாக்கள் தீட்டி அவரவர் தம் ஆற்றலை வெளிப்படுத்தினோம்.

அந்த வகையில் வசந்த், அவனடியார், உமா, சிக்கிமுக்கி, திகழ், அண்ணாமலையார், அப்பாதுரையார் ஆகிய அனைவருக்கும் எனது உளங்கனிந்த நன்றிகளையும், வணக்கங்களையும் காணிக்கையாக்குகின்றேன். ஒவ்வொருவரும் தங்களின் பாத்திறத்தால் என் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்துவிட்டீர்கள் என்றால் அது மிகையாகாது. தங்கள் அனைவரையும் வாழ்க என வாழ்த்தி,

எழுசீர் மண்டிலம் பற்றி இப்பகுதியில் அறியவிருக்கிறோம்.

எழுசீர் மண்டிலம் என்பது ஏழு சீர்களைக் கொண்டிருக்கும் என்பதை அனைவரும் அறிவீர்கள். அவற்றின் வரைமுறைகளைக் காண்போம்.

1. அனைத்து சீர்களும் இயற்சீர்களாக வரவேண்டும்.
2. ஒன்றாம், மூன்றாம், ஐந்தாம், ஆறாம் சீர்கள் ---விளச்சீர்களாக வரவேண்டும். (கருவிளம், கூவிளம்)
3. இரண்டாம், நான்காம், ஏழாம் சீர்கள் மாச்சீர்களாக வரவேண்டும். (தேமா, புளிமா)
4. ஒன்றாம், ஐந்தாம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.
5. நான்கடிகளும் ஓரெதுகை பெறவேண்டும்.


விளம் + மா + விளம் + மா
விளம் + விளம் + மா =இதுவே நாம் எளிமையாகப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பாடு.

காட்டு-

­வையகம் முழுதும் ஆண்டுவந் தனரே

வண்டமிழ் பேசிடும் மக்கள்

பையகம் நஞ்சைப் பதுக்கிடும் பாம்பாய்ப்

பண்பினில் சூழ்ச்சியை வைத்துப்

பொய்யகம் படைத்த ஆரியர் வரவால்

புகழ்நிலம் அற்றனர் இன்றோ

கையக நிலமும் காடையர் பரிக்கக்

கவினழிந் திடர்பல உற்றார்!


நாவலந் திவு நம்மவர் வாழ்ந்த

நன்னிலம் ‘இந்தியா’ ஆச்சு

தீவெனத் திகழும் இலங்கைநன் னாடும்

சிங்கள தேயமாய்ப் போச்சு

பாவளங் கொழித்த பசுந்தமிழ் ஆட்சி

பாரினில் எங்கனும் இல்லை

நாவலம் படைத்த நற்றமிழ் மக்கள்

நலிவகல் நாளு(ம்)வந் திடுமோ?


இம்முறையில் பாக்கள் புனைந்து வருக என அனைவரையும் அழைக்கிறேன்.


அகரம் அமுதா