வியாழன், 29 மே, 2008

பாடம் 4 தளை!

சீர்கள் ஒன்றோடொன்று கூடும் கூட்டத்திற்குத் தளை என்று பெயர். அத்தளைகள் 7வகைப் படும். ஆயினும் நம் வெண்பாவிற்கு இரண்டே தளைகள் தான் வேண்டும் என்பதால் அவற்றை மட்டும் பார்ப்போம்.

1 இயற்சீர் வெண்டளை 2 வெண்சீர் வெண்டளை

தளை கொள்ளும்போது நின்றசீர் இன்னசீர் என்றும் (அதாவது) மாச்சீரா? விளச்சீரா? காய்ச்சீரா? என்றும் வரும்சீரின் முதலசை நேரசையா? நிரையசையா? என்றும் பார்க்கவேண்டும்.

குறிப்பு:-வருஞ்சீரின் முதலசை நேரசையா? நிரையசையா? என்று பார்க்கவேண்டுமே தவிர வருஞ்சீர் இன்னசீர் என்று பார்க்கவேண்டிய தில்லை.
நின்றசீர்-முதலில் உள்ள சீர்
வருஞ்சீர்-அந்நின்ற சீரோடு வந்து சேரும்சீர்.

எ.காட்டு:-

அமுதெனவே ஆனவளே! அன்னாய்!உன் சேய்நான்
அமுதா எனும்பேர்கொண் டார்த்தேன்! -குமுகாயம்
காணயெனைக் கையோடு கூட்டிப்போய்க் காட்டம்மா!
பேணுகிறேன் உன்னை பெரிது! -அகரம்.அமுதா

-இவ்வெண்பாவில்அமுதெனவே- நின்றசீர் (அதாவது முதற்சீர்)ஆனவளே- வருஞ்சீர் (அதாவது அடுத்தசீர்)

1.மாமுன் நிரையும் விளமுன் நேரும் வருவ தியற்சீர் வெண்டளை யாகும்
2.காய்முன் நேர்வருவது வெண்சீர் வெண்டளை
-என்பது தொல்காப்பியம்.

அமுதெனவே -அமு/தென/வே -நிரை/நிரை/நேர் -காய்ச்சீர்.-இக் காய்ச்சீர் முன் நேர் வரவேண்டும் அல்லவா?ஆனவளே- ஆ/னவ/ளே –நேர் நிரை நேர் –முதலசை நேரசை வந்துள்ளதல்லவா?

அடுத்து பாருங்கள். சேய்நான் -சேய்/நான் -நேர்/நேர் என்னும் தேமாமுன் நிரையசை வரவேண்டும் அல்லவா? வரும்சீர் அமுதா -அமு/தா நிரை/நேர் எனவந்து முதலசை நிரையசையானதைக் கவனிக்கவும்.

மேலும் சில எ.காட்டுக்களைப் பார்ப்போம்.

சொற்சிலம்பம் ஆடத் துணிந்தேன் புடம்போட்டப்
பொற்சிலம்பம் போன்றவளே பூத்துவா! -மற்சிலம்பம்
ஆடிப் பகைவளர்க்கும் ஆசை எனக்கில்லை
பாடித் தமிழ்வளர்ப்பேன் பார்! - அகரம்.அமுதா

சொற்/சிலம்/பம் ஆ/டத் துணிந்/தேன் புடம்/போட்/ட
நேர்/நிரை/நேர் நேர்/நேர் நிரை/நேர் நிரை/நேர்/நேர்
கூவிளங்காய் தேமா புளிமா புளிமாங்காய்

பொற்/சிலம்/பம் போன்/றவ/ளே பூத்/துவா! -மற்/சிலம்/பம்
நேர்/நிரை/நேர் நேர்/நிரை/நேர் நேர்/நிரை -நேர்/நிரை/நேர்
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளம் -கூவிளங்காய்

ஆ/டிப் பகை/வளர்க்/கும் ஆ/சை எனக்/கில்/லை
நேர்/நேர் நிரை/நிரை/நேர் நேர்/நேர் நிரை/நேர்/நேர்
தேமா கருவிளங்காய் தேமா புளிமாங்காய்

பாடித் தமிழ்வளர்ப்பேன் பார்!
தேமா கருவிளங்காய் நாள் -(நாள் வாய்பாடு-வெண்பாவின் ஈற்றில் வந்தமை காண்க)-இவ் எ.காட்டில் இரு இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் வந்தமை காண்க.

நின்றசீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதலசையும் ஒன்றாமை தளை எனப்படும்.
அதாவது:- நேர்முன் நிரையும் நிரைமுன் நேரும் காய்முன் நேரும் வருவது.
இஃதேபோல் சில வெண்பாக்களைப் பிரித்துப் பார்க்கவும்.

அகரம்.அமுதா

7 கருத்துகள்:

  1. இனிது இனிது இலக்கணம் இனிது.

    சொற்சிலம்பெடுத்து சுழன்றடிக்கிறீர்களே!

    தொடரட்டும் பயிற்சி. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. இப்போதுதான் பார்த்தேன், பாடங்கள் எளிமையாக இருக்கிறது.
    இதுபோல சில பதிவு முயற்சிகள் ஏற்கனவே ஏற்பட்டிருந்தாலும், அவ்வளவாக தொடர்ந்ததாகத் தெரியவில்லை.
    தங்கள் முயற்சி நன்கு தொடர்ந்து, பயன் தர வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி ஜீவா அவர்களே! -அகரம்.அமுதா

    பதிலளிநீக்கு
  4. அருமையாக சொல்லித் தருகிறீர்கள் அம்மா, மிக்க நன்றிகள்.!

    ஓர் ஐயம்.

    //
    நின்றசீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதலசையும் ஒன்றாமை தளை எனப்படும்.
    அதாவது:- நேர்முன் நிரையும் நிரைமுன் நேரும் காய்முன் நேரும் வருவது.
    //

    என்று சொல்லியுள்ளீர்கள்.

    ஆனல் காய்ச்சீரின் ஈற்றசை நேர் தானே. அப்படி இருக்கையில், காய் முன் நேர் வருவது எப்படி ஒவ்வாமை ஆகும்?

    கொஞ்சம் விளக்குங்களேன்.

    பதிலளிநீக்கு
  5. நல்ல வினா தோழரே! பொதுவாக வெண்பாத் தளைகளைச் சொல்லும் போது மாமுன் நிரையும் விளமுன் நேரும் காமுன் நேரும் என்றுதான் சொல்வதுண்டு. ஆகையினால் நான் அப்படிக் குறிப்பிட்டு விட்டேன்.

    அசைப்படி பார்த்தால் காய்ச்சீரின் ஈற்றசை நேர். அந்நேர் முன் நேர் வருவது ஒன்றுந் தளையே. இது ஒன்றாத்தளையாகாதுதான். நன்றி!

    ஈற்றடி விளையாட்டில் கலந்துகொள்ளத் தங்களை அன்போடு அழைக்கிறேன்.

    அகரம்.அமுதா

    பதிலளிநீக்கு
  6. நானும் உங்கள் பாடங்களை பயின்று வருகிறேன்,
    நன்றி.

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com