திங்கள், 8 மார்ச், 2010

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்- 7

அடுத்து, இயற்சீரால் (ஈரசைச் சீரால்) அமையும் அறுசீர் மண்டிலங்கள் எழுதப் பழகுவோம்.

இயற்சீரால் அமையும் அறுசீர் மண்டிலங்களில் இரண்டு வகைகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

அ. முதல்வகை :

இவ் வகையில் -

1. பாடல் முழுதும் ஈரசைச் சீர்களே வரவேண்டும்.
விளச் சீர்கள் வருமிடங்களில் மாங்காய்ச் சீர்கள் அருகி வரலாம்.

2. அரையடி ஈற்றுச் சீரும் (3ஆம் சீர்) அடியீற்றுச் சீரும் (6ஆம்சீர்) மாச் சீராக (தேமா அல்லது புளிமா) அமைந்திருக்க வேண்டும்.

3. ஒவ்வோர் அரை அடியும் வெண்டளை கொண்டிருக்க வேண்டும்.
( அரையடி இறுதியும் அடுத்த அரையடி முதலும் இணையும் இடத்தில் வெண்டளை வரவேண்டிய கட்டாயம் இல்லை.)

3.முதல் சீர், நான்காம் சீரில் மோனை வரவேண்டும்.

எடுத்துக்காட்டுப் பாடல் :

உன்னை யுகப்பன் குயிலே
.....உன்துணைத் தோழியு மாவன்
பொன்னை யழித்தநன் மேனிப்
.....புகழிற் றிகழு மழகன்
மன்னன் பரிமிசை வந்த

......வள்ளல் பெருந்துறை மேய
தென்னவன் சேரவன் சோழன்
.....சீர்ப்புயங் கன்வரக் கூவாய்! - திருவாசகம் (குயிற் பத்து)

ஆ. இரண்டாம் வகை :


1. ஓரடியில் உள்ள ஆறு சீர்களும் மாச்சீர்களாகவே அமைந்திருக்க வேண்டும்.

2. நான்கு அடிகளும் ஓர் எதுகை பெற்றிருக்க வேண்டும்.

3. முதல் சீர், நான்காம் சீரில் மோனை வரவேண்டும்.

4. ஓர் அடியை மூன்று மூன்றுச் சீராக மடித் தெழுதுவது மரபு.

5. தளை பற்றிக் கருத்துச் செலுத்துதல் வேண்டா.

எடுத்துக்காட்டுப் பாடல் :

கருநா டகத்தார் செயலால்

.....கடற்கா விரியும் வறண்டு

ஒருவாய்த் தண்ணீர் இன்றி

.....உலர்ந்து தளர்ந்து போனாள்

திருவாழ் நிலங்கள் காய்ந்து

.....சீரும் சிறப்பும் மாறிக்

கரிந்த புல்லும் சருகும்

.....காணக் கண்கள் கூசும்.

இனி, இரண்டு வகையிலும் எழுதிப் பழகுவோம்.

குறிப்பு : அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலங்களில் இக்காலத்தில் வழங்குவன நாம் படித்த ஏழு வகைகளே. வேறு வகைகள் பல இருந்தன வேனும், அவை கம்பர் காலத்திற்கு முன்னரே இறந்தன. கம்பர் காலத்தில் வழங்கிய மண்டிலங்களையே நம் முன்னோர், ஆயிர மாண்டுகளாக் கையாண்டு வந்தனராதலால், அவர்கள் சென்ற வழியில் செல்வதே மரபு.

36 கருத்துகள்:

  1. புதல்வர் வேண்டிப் பூசைகள் பலவும்
    புரியும் தாய்மாரே!
    மதலை அழுதால் வயிற்றுப் பசிக்கு
    மடிப்பால் தந்தீரோ?
    முதன்மை அழகென முலைப்பால் தவிர்த்தல்
    முறைகே டாகாதோ?
    புதுமை நோக்கில் புட்டிப் பால்தரல்
    புகழைப் போக்காதோ?

    ஆவின் பாலை அதன்கன் றிற்கே
    அளிக்க மறுக்கின்றீர்
    தாவிச் சென்றதைத் தட்டிப் பறித்துத்
    தன்சேய்க் களிக்கின்றீர்
    ஆவின் கன்றிற் கதன்தாய்ப் பாலே
    அமுதம் ஆகாதோ
    தாவின் றித்தன் தகைமை காக்க
    தாய்ப்பால் தருவீரே!

    சேயின் உடல்நலம் பேணக் கண்டதைத்
    தின்னக் கொடுக்காதீர்
    தாயின் பாலே சேய்நலம் காக்கத்
    தக்க மருந்தாகும்
    நோயின் பிடியில் தாயும் விழுவாள்
    தாய்ப்பால் கொடுக்காக்கால்
    தாயிதை உணர்ந்தால் தன்முலைப் புற்றைத்
    தவிர்த்திட லாமன்றோ!

    பதிலளிநீக்கு
  2. அய்யா, இங்கு கொடுத்துள்ள இரண்டாம் வகையும் [மாச்சீரைந்து மாங்காயொன்று வரும் வகை] அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம் 4 ல் உள்ள ஐந்து மாச்சீர் ஒரு மாங்காய்ச் சீர் என்பதும் ஒன்றல்லவா?
    எவ்வகையில் வேறுபட்டுள்ளன. அருள் கூர்ந்து விளக்கவும்.

    பதிலளிநீக்கு
  3. உமா,
    மிகச் சரியாகக் கண்டுபிடித்து நினைவூட்டினீர்கள்.
    நன்றி.
    நாம் முன்னரே பயின்ற வகையே அது.
    அறுசீர் மண்டிலம் -7 ஆகக் குறித்துள்ள பகுதியில்
    இரண்டு வகை மட்டுமே!
    எனவே, அதை நீக்கிவிட்டேன்.
    மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அன்பார்ந்த அ.அ.,
    மறதியாக அறுசீர் மண்டிலம்- 4 இல் (ஐந்து மாச்சீரும் ஒரு காய்ச்சீரும்)பயின்றதையே மீண்டும் எழுதி விட்டேன்.
    எனவே அந்த வகைப் பாடலை அ.சீ.ம.-4இல் பதிவிடும்படிக் கேட்டுக் கொள்கின்றேன்.
    உமா கண்டுபிடித்து நினைவூட்டிய பின்பே கவனித்தேன்.
    தொல்லைக்குப் பொறுத்தாற்றுக.

    பதிலளிநீக்கு
  5. அனபுள்ள அ.அ.,
    பாடல்கள் அருமை.
    மேற்குறித்த இரண்டு வகைகளில் எந்த வகை என்று குறிப்பிட்டுச் சரிபார்க்க வேண்டுகிறேன்.
    அறுசீர் மண்டிலம் -4இல் படித்ததை மீண்டும் எழுதியதால் என்னால் குழப்பம் நேர்ந்தது.
    இப்போது அதை நீக்கிச் சரிசெய்து விட்டேன்.

    எனவே, இப்பகுதியில் எழுதும் பாடல் எந்த வகை என்று குறிப்பிடுமாறு எல்லாரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  6. முதல் வகை பா. [வெண்தளை ஏற்றது]

    பெண் குழந்தையை வரவேற்று வாழ்த்தல்.

    தங்கச் சிலையே, தமிழே,
    தாவு மரையே,அழகே
    நங்கையர் நாடு நலனே
    நவ்வார் நிலைகுலைக்கச் செய்வார்
    இங்கவர் எண்ணம் இழிய
    இடியென் றெழுந்த எழிலே
    பொங்கு புகழொடு பெண்மை
    பொலிந்திட வந்தனை வாழி!

    பதிலளிநீக்கு
  7. உமாவின் பாடல் அருமை.

    தாவு மரையே! தாவு என்றால் குற்றம் என்றும் பொருள்படும். குற்றமுடைய மானே! எனப்பொருள்கொண்டால் பிழையாகிவிடுமல்லவா?
    ஆதலால்

    ''''தாமரை யே!நல் அழகே!'''' ---எனமாற்றலாமா? தாமரை என்னும்போது இருபொருள்படுமாறு அமையும். தாமரையென்றால் மலரையும், தாவுகின்ற மானையும் குறிப்பதாக அமையும்.

    பதிலளிநீக்கு
  8. போக்கிலி ஆரியக் கூட்டம்
    பூந்தமிழ் நூல்களைப் போட்டுத்
    தீக்கிரை யாக்கிய போதும்
    சிதைந்திடாச் செந்தமிழ்த் தாயே!
    மாக்கடல் பேரலை யோடும்
    மண்ணதிர் உற்ற பொழுதும்
    தாக்குப் பிடித்துநீ வாழ்ந்து
    தழைத்தனை பார்மிசை மீதில்.

    தொல்காப் பியமாய்ப் பிறந்து
    திருக்குற ளாகத் தவழ்ந்து
    ஒல்காச் சிலம்பாய் வளர்ந்தாய்
    உயர்கம் பனாலே உயர்ந்தாய்
    பல்காப் பியமும் பிறங்கப்
    பைந்தமி ழாகிச் சிறந்த
    தொல்தமிழ் அன்னாய்!வாழி!
    தூநறைச் சுவையே வாழி!

    பதிலளிநீக்கு
  9. திரு.அமுதா அவர்களுக்கு மிக்க நன்றி.இன்னும் கவனமாக எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. இரண்டாவது வகை

    கண்ணே மணியே வாவா
    கனவின் வடிவே வாவா
    அன்பே வாழ்வின் வேராம்
    அறிவே மூச்சுக் காற்றாம்
    பண்பாய் வாழப் பழகு
    பசியைப் பிணியை விரட்டு
    உண்மை நேர்மை உழைப்பு
    உன்னில் இருந்தால் சிறப்பு.


    பண்ணும் இனிமைத் தமிழில்
    படிக்க பேச விரும்பு
    மண்ணைப் பெண்ணை மாற்றார்
    மனதை மதிக்க பழகு
    எண்ணந் தன்னில் இரக்கம்
    ஈகை பொறுமை இருந்தால்
    வண்ணங் கலந்து வாழ்வும்
    வளமாய் நிறைவாய் விளங்கும்.

    பதிலளிநீக்கு
  11. மயக்கும் மழலை
    ----------------

    சிட்டுக் குருவிக் கூட்டம்
    சிரிக்கும் சின்னத் தோட்டம்
    பட்டப் பகலில் நிலவு
    படிக்க வந்த தோற்றம்
    கொட்டி விட்ட மணிபோல்
    குலுங்க சிரிக்கும் அழகை
    எட்டிப் பார்க்கும் இறைவா
    எனக்கும் மீட்டுத் தாதா

    பதிலளிநீக்கு
  12. அ.அ. ஐயா,
    முதலில் எழுதியுள்ள மூன்று மண்டிலப் பாடல்களிலும்
    ஈற்றுச்சீர் மாங்காய்ச்சீராக உள்ளனவே!

    அ.சீ.ம - 4 பாடலா?

    பதிலளிநீக்கு
  13. **********
    தங்கச் சிலையே, தமிழே,
    தாவும் மரையே,அழகே
    நங்கையர் நாடு நலனே
    நயனில் நிலையினர் உள்ளார்
    இங்கவர் எண்ணம் இழிய
    இடியென் றெழுந்த எழிலே
    பொங்கு புகழொடு பெண்மை
    பொலிந்திட வந்தனை வாழி
    *************
    சரியாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  14. ****
    போக்கிலி ஆரியக் கூட்டம்
    பூந்தமிழ் நூல்களைப் போட்டுத்
    தீக்கிரை யாக்கிய போதும்
    சிதைந்திடாச் செந்தமிழ்த் தாயே!
    மாக்கடல் பேரலை யோடும்
    மண்ணதிர் உற்ற பொழுதும்
    தாக்குப் பிடித்துநீ வாழ்ந்து
    தழைத்தனை பார்மிசை மீதில்.

    தொல்காப் பியமாய்ப் பிறந்து
    திருக்குற ளாகத் தவழ்ந்து
    ஒல்காச் சிலம்பாய் வளர்ந்தாய்
    உயர்கம் பனாலே உயர்ந்தாய்
    பல்காப் பியமும் பிறங்கப்
    பைந்தமி ழாகிச் சிறந்த
    தொல்தமிழ் அன்னாய்!வாழி!
    தூநறைச் சுவையே வாழி!
    ***********
    மிசை, மீதில் இரண்டும் கருத்தால் ஒன்றாக உள்ளதால், பார்மிசை நன்றே - என்று மாற்றலாம்
    அல்லது விருப்பப்படி வேறுவகையிலும் மாற்றலாம்.

    வெண்டளைக் கட்டுப்பாட்டைக் கவனிக்க!
    அன்னாய்!வாழி
    தூநறைச் சுவையே வாழி!

    பதிலளிநீக்கு
  15. **********
    கண்ணே மணியே வாவா
    கனவின் வடிவே வாவா
    அன்பே வாழ்வின் வேராம்
    அறிவே மூச்சுக் காற்றாம்
    பண்பாய் வாழப் பழகு
    பசியைப் பிணியை விரட்டு
    உண்மை நேர்மை உழைப்பு
    உன்னில் இருந்தால் சிறப்பு.


    பண்ணும் இனிமைத் தமிழில்
    படிக்க பேச விரும்பு
    மண்ணைப் பெண்ணை மாற்றார்
    மனத்தை மதிக்கப் பழகு
    எண்ணந் தன்னில் ஈரம்
    ஈகை பொறுமை இருந்தால்
    வண்ணங் கலந்து வாழ்வும்
    வளமாய் நிறைவாய் விளங்கும்.
    ***************
    இரண்டு பாடல்களும் அருமை!
    முதல் பாடல் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  16. *********
    சிட்டுக் குருவிக் கூட்டம்
    சிரிக்கும் சின்னத் தோட்டம்
    பட்டப் பகலில் நிலவு
    படிக்க வந்த தோற்றம்
    கொட்டி விட்ட மணிபோல்
    குலுங்கச் சிரிக்கும் அழகை
    எட்டிப் பார்க்கும் இறைவா
    எனக்கும் மீட்டுத் தாதா!
    **********
    அருமை.

    பதிலளிநீக்கு
  17. தமிழநம்பி சொன்னது…

    ///// அ.அ. ஐயா,
    முதலில் எழுதியுள்ள மூன்று மண்டிலப் பாடல்களிலும்
    ஈற்றுச்சீர் மாங்காய்ச்சீராக உள்ளனவே!

    அ.சீ.ம - 4 பாடலா?////


    ஆம் அய்யா! தாங்கள் முந்தைய மறுமடலில் கேட்டுக்கொண்டதற்கிணங்க அ.சீ.ம -4ல் மறுமொழிப்பகுதியில் இட்டுவிட்டேன். இங்கிருந்துநீக்கி விடுகிறேன். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  18. தமிழநம்பி சொன்னது…

    /////மிசை, மீதில் இரண்டும் கருத்தால் ஒன்றாக உள்ளதால், பார்மிசை நன்றே - என்று மாற்றலாம்
    அல்லது விருப்பப்படி வேறுவகையிலும் மாற்றலாம்.

    வெண்டளைக் கட்டுப்பாட்டைக் கவனிக்க!
    அன்னாய்!வாழி
    தூநறைச் சுவையே வாழி!//////



    தவறுகளைச் சுட்டியமைக்கு நன்றிகள் அய்யா! தளைகளைச் சரிசெய்து விடுகின்றேன். 'பார்மிசை நன்றே' என்பதே சிறப்பாக உள்ளமையால் அப்படியே குறித்துக்கொள்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  19. போக்கிலி ஆரியக் கூட்டம்
    பூந்தமிழ் நூல்களைப் போட்டுத்
    தீக்கிரை யாக்கிய போதும்
    சிதைந்திடாச் செந்தமிழ்த் தாயே!
    மாக்கடல் பேரலை யோடும்
    மண்ணதிர் உற்ற பொழுதும்
    தாக்குப் பிடித்துநீ வாழ்ந்து
    தழைத்தனை பார்மிசை நன்றே.

    தொல்காப் பியமாய்ப் பிறந்து
    திருக்குற ளாகத் தவழ்ந்து
    ஒல்காச் சிலம்பாய் வளர்ந்தாய்
    உயர்கம் பனாலே உயர்ந்தாய்
    பல்காப் பியமும் பிறங்கப்
    பைந்தமி ழாகிச் சிறந்த
    தொல்தமிழ் அன்னாயே!வாழி!
    தூநறைச் சுவையென வாழி!

    பதிலளிநீக்கு
  20. தோழி உமா அவர்களின் பாக்கள் பொன்னென, வைரமென மின்னுகின்றன. பாட்டோடு பொருளும், பொருளோடு பாட்டும் இழைந்துவர அவர்பாடும் திறன்கண்டு வியக்கிறேன். வாழ்க.

    ......குலுங்கச் சிரிக்கும் அழகை
    எட்டிப் பார்க்கும் இறைவா
    எனக்கும் மீட்டுத் தா!தா!........


    அழகிய ஏக்கம். எனக்கும் மீட்டுத்தர வேண்டிக்கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  21. முழுதும் மாச்சீரால் இயன்ற இரண்டாம் வகைப் பா!


    பாலைப் போன்ற நெஞ்சம்;
    பளிங்கு போன்ற மேனி;
    சேலை ஒக்கும் கண்கள்;
    சிலந்தி வலையாய்ப் பார்வை;
    மாலை வானின் மஞ்சல்
    மங்கை மேனி வண்ணம்;
    நூலை ஒத்த இடைமேல்
    நுங்கு (இ)ரண்டு தங்கும்!

    சோலை என்ற ஒன்றைச்
    சுழலும் இடையில் வைத்துச்
    சேலை சுற்றிய தென்றல்;
    தெருவில் நடக்கும் மின்னல்;
    காலை தோன்றும் நிலவு;
    கண்முன் உலவும் கனவு;
    ஆளைக் கொல்லும் அழகி;
    அவள்தான் என்றன் மனைவி!

    பூமன் வடிக்க ஒன்னாப்
    பூவை அவளை என்றன்
    மாமன் வடித்தான் நன்றாய்;
    மலரம் பேந்தி நிற்கும்
    காமன் என்னும் கள்வன்
    கரும்பு வில்லை உடைக்க
    மாமன் எனக்குத் துணையாய்
    மஞ்சம் சேர்ந்தாள் மங்கை;

    தேடிக் காற்றும் தோற்கும்
    சேரும் உடலிற் பிளவை;
    நாடிக் காமன் நிற்பான்
    நங்கை மலர்க்கண் அம்பை;
    ஆடிக் காற்றாய் நானும்
    ஆடும் போது நாணம்
    கூடிக் கண்கள் மூடும்;
    கூந்தல் போர்வை ஆகும்!

    இதழில் இதழைச் சேர்ப்பாள்;
    இன்பத் தேனை வார்ப்பாள்;
    குதலை மொழியால் என்னைக்
    கொஞ்சம் கொன்று தீர்ப்பாள்;
    எதையோ சொல்லும் கண்கள்
    என்னைத் தின்று தீர்க்கப்
    புதிதாய்ப் பிறந்தேன் நானும்
    பூக்கும் இன்பத் தாலே!

    பதிலளிநீக்கு
  22. ஆன்பார்ந்த அ.அ.,

    அருமையான மாச்சீர் மண்டிலங்கள்.

    பதிலளிநீக்கு
  23. //அழகிய ஏக்கம். எனக்கும் மீட்டுத்தர வேண்டிக்கொள்ளுங்கள்.
    ஆமாம். குழந்தைகளின் கள்ளமில்லா குதூகலத்தை அனைவருக்கும் அருள இறைவனை வேண்டுவோம்.

    பாராட்டுக்கு நன்றி திரு.அமுதா.

    பதிலளிநீக்கு
  24. தங்கள் பாக்கள் மிக அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  25. மிக்க நன்றிகள் தமிழநம்பி அய்யா மற்றும் தோழி உமா அவர்களே!

    பதிலளிநீக்கு
  26. தமிழாள்!

    உணர்வி லூறுந் தமிழாம்!
    உரமாய் ஏகிய‌ தமிழாம்!
    அணங்கு மவளே தமிழாம்!
    அன்னை நிகராம் தமிழாம்!
    கணப்பு உலைகள் போலே
    கொடுமை காணக் கொதித்துப்
    பிணக்கு நீக்கிக் க‌ல‌க‌ப்
    பிணியைப் போக்கும் ம‌ருந்தாம்!

    பாவடிக்கும் அனைவருக்கும் நன்றிகள்.!

    பதிலளிநீக்கு
  27. 1. நித்தம் கருவிழி எண்ணம்
    நீங்கிடா நெஞ்சில் அடங்காச்
    சத்தம் அலைபோல் எழும்பிச்
    சகாரா மணலில் மணந்த
    மொத்த மலர்களும் கட்டி
    முடித்த பரிசினை வாங்கிக்
    கொத்தாய்க் கொடுத்தேன், இதழில்
    கன்னம் பதித்து இனிப்பாய்.

    2. மேகம் திரண்ட மாலை
    மின்னல் தெறித்த வேளை
    மோகம் கிளர்ந்த போது
    மேனி நடுங்கும் நேரம்
    வேகம் கொண்ட மழைநீர்
    வெப்பப் பகலில் படர்ந்துத்
    தாகம் தணிக்கும் கூரைகீழ்த்
    தானும் ததும்பும் காமம்.

    அன்பு தமிழ்நம்பி ஐயா...

    ஆசிரியப்பா மண்டலங்களுக்கு நன்றிகள்.

    தாங்கள் உன்னத நோக்கத்திற்குக் கற்பித்த முறைகளைக் காமம் எழுதப் பயன்படுத்திக் கொண்டமைக்கு வருந்தியிருப்பீர்கள். அதற்குப் பரிகாரமாகக் கண்ணன் பற்றிச் சில வெண்பாக்கள் எழுதி வைத்திருக்கிறேன். அனைவரும் பார்த்துக் கருத்துச் சொன்னால் மகிழ்வேன்.

    கண்ணன் கனியமுது.

    நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  28. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  29. முதல் வகை :

    சின்னஞ் சிறுஅணில் நீயே
    ....சிறுகூ ரொலியில் அலற
    என்ன எதற்கென யாங்கள்
    ....எண்ணி அறிந்திட வந்தால்
    முன்னே மரத்தினில் ஏறி
    ....முகந்தரை பார்த்திட மாறி
    பின்னே மறைந்துநின் றார்ப்பாய்
    ....பெரும்புதிர் உன்றனின் செய்கை!

    இரண்டாம் வகை :

    தன்னந் தனிய னெனினும்
    ....தரையில் அறிவு கொளுத்த
    அன்பு தெளிவு கொண்டே
    ....ஆழ ஆய்ந்து உண்மை
    இன்ன தென்று கண்டே
    ....எடுத்துச் சொல்ல நெஞ்சில்
    முன்னம் உறுதி ஏற்பாய்!
    ....மூடம் ஒழியச் செய்வாய்

    பதிலளிநீக்கு
  30. ****************
    உணர்வி லூறுந் தமிழாம்!
    உரமாய் ஆகும் தமிழாம்!
    சுணக்கம் போக்கும் தமிழாம்!
    தூய அன்னைத் தமிழாம்!
    கணப்பு உலைகள் போலே
    கொடுமை காணக் கொதித்துப்
    பிணக்கு நீக்கிக் க‌ல‌க‌ப்
    பிணியைப் போக்கும் ம‌ருந்தாம்!
    ********************
    அண்ணாமலை ஐயா,
    சரியாக உள்ளது.
    இரண்டாம் வகைப் பாடலும் எழுதிடுக.

    பதிலளிநீக்கு
  31. வசந்த குமார் ஐயா,
    முதல் வகைப்பாடல் அமைப்பு சரியே.

    ///சகாரா மணலில் மணந்த
    மொத்த மலர்களும்///

    கருத்துச் செப்பத்திற்காக மாற்றம் செய்வது நல்லது.

    இரண்டாம் வகைப் பாடலில் ஆறு சீர்களும் மாச்சீராக இருக்க வேண்டுமல்லவா?
    கூரைகீழ்த் - கூவிளம் ஆகிறது. மாற்றிவிடுக.

    அன்பார்ந்த வசந்த குமார்,
    முப்பாலைப் படித்த நான், காமத்துப்பால் எழுதக் கூடாதென்ற கருத்தினன் அல்லன்.
    அதில் மட்டுமே முனைந்து மூழ்க வேண்டா மென்பதே
    என் கருத்து.

    நீங்கள் குறிப்பிட்ட கண்ணன் வெண்பா படித்துப் பின்னூட்டமிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  32. சிக்கிமுக்கி ஐயா,

    உங்கள் பாடல்கள் சரியாக உள்ளன.

    பதிலளிநீக்கு
  33. சிக்கிமுக்கியார், அண்ணாமலையார் மற்றும் (காமக்கவிஞர்)வசந்தகுமார் அவர்களின் பாக்கள் அருமை அருமை.

    சிக்கிமுக்கியாரின் அணில் பாடலும் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. வாழ்த்துக்கள் அய்யா!

    பதிலளிநீக்கு
  34. தமிழ்த்தோட்டத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com