இயற்கையைப் பாடுவேன்!
நேசக் கையை
......நீட்டி யழைத்து
......நிற்குது கவின்மாலை! -நெஞ்சை
......நிறைப்பது கவிமாலை!
வாசம் பரப்பி
......வண்டை அழைப்பது
......வண்ண மலர்சோலை! -என்னை
......வடிப்பது கவிச்சோலை!
மாலை வந்தபின்
......மதியும் வந்தே
......மங்கல வானெழுதும்! -விண்மீன்
......வாழ்த்திசைப் பண்ணெழுதும்!
சோலை வந்தபின்
......சில்வண் டெல்லாம்
......சொக்கியா நின்றுவிடும்? -பூக்கள்
......வெட்கத்தை வென்றுவிடும்!
உருகும் மேகம்
......உயர்த்திப் பிடித்த
......உறுவில் மையெழுத்து! -மின்னல்
......ஒளியோ கையெழுத்து!
அருவிக் குழந்தை
......ஆறே மங்கை
......ஆழி மூப்பாகும்! -கரைக்கு
......அலையே சீப்பாகும்!
கயற்கண் காரிகை
......கயமை சமூகம்
......கண்டிடு கவிதையிலே -அவைதான்
......கவிதைகள் என்பவனே!
இயற்கைக் கவிஞன்
......எழுதாக் கவிதைகள்
......எழுதுதல் என்பொறுப்பு! -இதிலேன்
......இடுகிறாய் பிடிநெருப்பு!
இயற்சீர் + இயற்சீர்
......இயற்சீர் + இயற்சீர்
......இயற்சீர் + காய்ச்சீர் =தனிச்சொல்
......இயற்சீர் + காய்ச்சீர்!
இயற்சீர் + இயற்சீர்
......இயற்சீர் + இயற்சீர்
......இயற்சீர் + காய்ச்சீர் =தனிச்சொல்
......இயற்சீர் + காய்ச்சீர்!
தனிச்சொல்லுக்கு முன்னுள்ள சீரும், அதற்கு நேர் கீழ் உள்ள சீரும் இழைபுத்தொடை அமைதல் வேண்டும்.
ஒன்றாம், மூன்றாம், ஐந்தாம், எட்டாம் சீர்கள் மோனை அமைதல் சிறப்பு.
ஒன்றாம் மற்றும் பத்தாம் சீர்களில் எதுகை அமைதல் வேண்டும்.



