திங்கள், 3 ஆகஸ்ட், 2009

பின்வரு நிலையணி!

.......... .... .... .. .... ... ... ... ... ... ... ... .. மலேசிய பேச்சாளர் பாண்டித்துரை --- அகரம் அமுதா
.
அணிவகைகளைப் பற்றி நிறையவே நான் முந்தைய பாடங்களிற் பார்த்திருக்கிறோம் ஆயினும், அவ்வவ்வணிகளுக் கேற்றாற்போல் பாப்புனைந்தோமா? என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நமது வெண்பா எழுதலாம் வலையின் நோக்கம், புதிதாக எழுதுபவர்களை ஊக்கப் படுத்துவதும், முன்பிருந்தே எழுதுபவர்களை மென்மேலும் மெருகேற்றுவதுமேயாகும்.

அந்த வகையில் நம் “வெண்பா எழுதலாம் வாங்க” –வலையின் உயிர்த்துடிப்புக்களான, உமா, வசந்த், அவனடிமையார், திகழ், இராஜகுரு, சவுக்கடியார் யாவரும் எக்கருத்தையும் எளிதிற் சொல்லும் ஆற்றலை இயல்பாகக் கைவரப்பெற்று விளங்குவது கண்டு வியக்கிறேன். இத்தகைய ஆற்றலை நாம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது இன்றியமையாக் கடமையாகிறது. ஆக அணிகள் பற்பலவெனினும் இலகுவாக எளிதாக உள்ள அணிவகைகளுக்கு உட்பட்டு முதற்கட்ட முயற்சிகளைச் செய்யத் தொடங்குதல் சிறப்பெனக் கருதுகிறேன்.

அந்த வகையில் இப்பாடத்திற் காணவிருக்கும் அணி –பின்வரு நிலையணி!

இப்பின் வருநிலையணி மூன்று வகைப்படும். 1.சொல்பின்வரு நிலையணி 2.பொருள்பின்வரு நிலையணி 3.சொற்பொருட்பின்வரு நிலையணி 4.உவமைப்பொருள் பின்வரு நிலையணி.

1.சொற்பின்வரு நிலையணி –ஒருசொல் பலபொருளைத் தருதல்.
2.பொருள்பின்வரு நிலையணி –பலசொல் ஒருபொருளைத் தருதல்.
3.சொற்பொருள் பின்வரு நிலையணி –பலமுறை வந்தும் ஒருசொல் ஒரேபொருளைத் தருதல்.
4.உவமைப்பின்வரு நிலையணி –ஒருபொருளைத் தரும் பலசொல் உவமையாகி நிற்றல்.

இப்பின்வரு நிலையணிகளுக்கான காட்டுகளைப் பின்வரும் பாடங்களில் காண்போம்.

இக்கிழமைக்கு ஈற்றடி வழங்கப்போவதில்லை. மாறாக, தனிச்சொல் தரவிருக்கிறேன்.

இக்கிழமைக்கான தனிச்சொல்:- கோமணம்!

அகரம் அமுதா

44 கருத்துகள்:

  1. 'எ/நி/எ/எ (2)' பாடத்தில் என் குறள் வெண்பாவுக்கு மறுமொழி இடுகையில் எழுதினீர்:

    ///
    //
    பாவுக்குப் பாவை பலவகையில் ஈந்தகரம்*
    பாவையாய்** ஆக்கினா னென்னை.

    * ஈந்தகரம் - ஈந்து அகரம்
    ** பாவை போல் சமைந்து நின்றேன்
    //

    தப்பாமல் உம்மைஇளந் தாமரை மீதலரும்
    அப்பாவை போல்நன்றாய் ஆக்கியதாய் –இப்பாவில்
    செப்பினீர்; ஆயின் திரள்நாணம் விட்டென்னை
    அப்பாவாய் ஆக்க அணை!

    ஃகீ… ஃகீ… ஃகீ… தப்பா நினைக்காதீங்கோ! சும்மா……!!!!
    ///

    "** பாவை போல் சமைந்து நின்றேன்" என்றால் - "பதுமை போல் சிலையாகி நின்றேன்" என்ற பொருளிலேயே சொன்னேன். ;-) இது புரிந்தோ புரியாமலோ கொஞ்சம் வழிந்திருக்கிறீர், இதோ பிடியும்:

    'பாவை சமைந்தன' ளென்றவென் சொற்றொடர்'பெண்
    பாவை தயாரெ'னக் கொண்டீரே - பாவலரே!
    பாவம் இதழோரம் நீரை வழித்தெடும்
    பாவை யொருபொம்மை அன்றோ!

    இதில் 'பாவை' எப்பின்வரு நிலையணி வகையாக வரும் ?

    பதிலளிநீக்கு
  2. /////"** பாவை போல் சமைந்து நின்றேன்" என்றால் - "பதுமை போல் சிலையாகி நின்றேன்" என்ற பொருளிலேயே சொன்னேன். ;-) இது புரிந்தோ புரியாமலோ கொஞ்சம் வழிந்திருக்கிறீர், இதோ பிடியும்:

    'பாவை சமைந்தன' ளென்றவென் சொற்றொடர்'பெண்
    பாவை தயாரெ'னக் கொண்டீரே - பாவலரே!
    பாவம் இதழோரம் நீரை வழித்தெடும்
    பாவை யொருபொம்மை அன்றோ!/////




    "சமைந்தேன்" எனஉரைத்த சத்தான சொற்கேட்(டு)
    அமைந்தறிவு நீங்கினேன் அய்யா! -உமையொரு
    பாவை எனக்கருதிப் பார்த்தேன் பரமன்நான்;
    தேவை எனக்கிந்த திட்டு!

    1.உமையொரு பாவை எனக்கருதி-உங்களை ஒரு பெண் எனக்கருதி;

    2.உமையொரு பாவை எனக்கருதி - உமையாளாகிய பார்வதியைப் பெண்ணெனக் கருதி;

    பரமன் நான் -பரம்பொருளாகிய சிவன் (மேலே உமை((உமையாள்) என்றதற்கும் இங்குப் பரமன் என்றதற்கும் ஒப்பிட்டு நோக்குக. உமையாள் சிவனுக்கு உரிமையானவள் என்பதால் தழுவத்துடித்ததுபோல, உங்களைப் பெண்எனக்கருதித் தழுவத்துடித்தேன் எனக்கொள்க)

    திட்டு -வசைச்சொல்.




    /////இதில் 'பாவை' எப்பின்வரு நிலையணி வகையாக வரும் ? /////

    சொல்பின்வருநிலையணி.

    பதிலளிநீக்கு
  3. தனிச்சொல்லாகிய "கோமண" -த்திற்கு எனது வெண்பா:-

    "பாமணம் வீசநீ பாடலாம்; பாவையர்க்குப்
    பூமணத்தால் அன்றிப் புயற்சடைக் -கோமணம்?
    இல்லை!" எனவுரைத் தீசனிடம் சூடுற்றான்
    நல்லதமிழ் நக்கீர னார்!

    பதிலளிநீக்கு
  4. தனிச்சொல்லாகிய "கோமண" -த்திற்கு எனது வெண்பா:-

    "பாமணம் வீசநீ பாடலாம்; பாவையர்க்குப்
    பூமணத்தால் அன்றிப் புயற்சடைக் -கோமணம்?
    இல்லை!" எனவுரைத் தீசனிடம் சூடுற்றான்
    நல்லதமிழ் நக்கீர னார்!

    புயல் -முகில்.

    பதிலளிநீக்கு
  5. //
    ...
    தேவை எனக்கிந்த திட்டு!//

    தேராதோ தேருமோ என்றே வலையினில்
    மாற்றான் தோட்டத்து மல்லிகை சூடிடும்
    காரிகை கூட்டத்தில் கன்னியைத் தேடுவார்
    போற்றியே பாத்தொடுப் பார்.

    :-)

    பதிலளிநீக்கு
  6. பாவும் தமிழையும் கற்கவரும் பெண்டிரை
    பாவும்* மணத்திலே பாபுனையச் செய்யாமல்
    பாவின் கணைதொடுத்து பாட்டால் துரத்திடும்
    பாயும் மனத்தினைப் பார்.

    * பாவும் - பரவும்

    பதிலளிநீக்கு
  7. அய்யய்யோ! இந்த விளையாட்டிற்கு நான் வரவில்லை. ஆளை விடுங்கள்.

    பதிலளிநீக்கு
  8. அய்யா! அவனடியாரே! ஒற்றுப் பிழைகள் மலிந்துகிடக்கின்றன.

    /////தேராதோ தேருமோ என்றே வலையினில்
    மாற்றான் தோட்டத்து மல்லிகை சூடிடும்
    காரிகைக் கூட்டத்தில் கன்னியைத் தேடுவார்
    போற்றியே பாத்தொடுப் பார்.//////


    //////பாவும் தமிழையும் கற்கவரும் பெண்டிரைப்
    பாவும்* மணத்திலே பாபுனையச் செய்யாமல்
    பாவின் கணைதொடுத்துப் பாட்டால் துரத்திடப்
    பாயும் மனத்தினைப் பார்.//////

    பதிலளிநீக்கு
  9. அறுசுவையுண் டிக்கோ மணம்நாவுக் கோமணம்
    காற்றுக்கோ மணம்நாசிக் கோமன மாசைத்
    துடைத்தொரு கோமணங்கட் டும்ரமண ருக்கோ
    மணமுண் டறிவாய் மதி.
    தனிச்சொல்லாக அமையவில்லை ஆனாலும்

    நாம் ஐம்புலங்ககளால் உணர்வதெல்லாம் உண்மையானதல்ல, மன மாசைத்ததுடைத்து ரமணர் காட்டும் உண்மை பொருளுக்ககே மணம் உண்டு.

    பதிலளிநீக்கு
  10. நல்லமுயற்சி! வாழ்த்துக்கள். பின்வரு நிலையணிகொண்டு பிண்ணியெடுத்துள்ளீர்கள். வாழ்க.

    பதிலளிநீக்கு
  11. காமனை கண்ணால் எரித்தவன் மைந்தனே
    நாமெலா முய்ய குருவானான் - கோமணம்
    கொண்டுள்ளில் நானாரென் றாய்ந்திடு நாநானென்
    றொன்றுன்னுள் தோன்றிடு மென்றான்.


    பதம் பிரித்து:

    காமனை கண்ணால் எரித்தவன் மைந்தனே - சிவன் மகன் முருகனே
    நாமெலா முய்ய குருவானான் - நாம் எல்லோரும் விடுதலை பெற குருவாகத் தோன்றினான்
    கோமணம் கொண்டு - கோமணம் உடுத்து
    உள்ளில் - உள்ளத்தே
    நானாரென்றாய்ந்திடு - 'நான் யார்' என்று ஆராய்ந்திடு
    நாநானென்றொன்று - நான் நான் என்று ஒன்று - 'நான் நான்' என்று ஒருமையாகிய ஒரு உணர்வு
    உன்னுள் - உனக்குள்ளே
    தோன்றிடும் என்றான் - தெரியவரும் என்று உபதேசித்தான்

    வேறு விதமாக
    'கோ' - மன்னவன்
    மணம் - வாசனை (scent) என்று பிரித்து பொருள் கொள்வோமானால்:

    "நாமெலா முய்ய குருவானான் கோ" -
    "குருவானான் (நம்) 'மன்னவன்'" என்று எடுத்துக் கொள்ளலாம்
    (குரு நம்மை முழுவதுமாக ஆள்வதால், நாம் அவனது அடிமையாக உணர்ந்து, அவனை நமது மன்னவனாகவும் காண்கிறோம்)

    தொடர்ந்து...
    "மணம் கொண்டுள்ளில் 'நான் யார்' என்று ஆய்ந்திடு" என்பதை
    "நான் யார்' என்று மணம் (scent) கொண்டு உள்ளில் விசாரி' என்று மாற்றியும் பொருள் கொள்ளலாம்

    பதிலளிநீக்கு
  12. //
    அறுசுவையுண் டிக்கோ மணம்நாவுக் கோமணம்
    காற்றுக்கோ மணம்நாசிக் கோமன மாசைத்
    துடைத்தொரு கோமணங்கட் டும்ரமண ருக்கோ
    மணமுண் டறிவாய் மதி.
    //

    ஆஹா, அற்புதமாக இருக்கிறது உங்கள் இன்னிசை வெண்பா.

    சடலத்துக்கு இல்லாத மணத்தை, உறங்கும்போது உயிரிருந்தும், புலனுறுப்புக்கள் இருந்தும் அறியாத மணத்தை, விழித்ததும் எப்படி அறிகிறோம்? உள்ளே 'நான்' எனும் உணர்வாக ஒளிரும் பகவானுக்கே மணம் என்பதை தெளிவாக படம் பிடித்து காட்டிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  13. அவனடிமை அவர்களின் வெண்பா அருமை வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. கல்லையும் மண்ணையும் ஆண்டவனாய்க் காணும்
    உலகமடா ! அன்னையும் தந்தையும் முன்னிருந்தும்
    ஆலயம் செல்லும் அவலமடா ! கோமணத்தான்
    வேலன் கதையிது வே!

    ...............
    கோமணத்தான் :

    1.பழம் கிடைக்காதமையால் கோவம் கொண்டான்
    ( கோ ‍- கோவம், மணம் ‍ - குணம், தன்மை )
    2.பழம் கிடைக்காதமையால் ஆண்டிக் கோலம் கொண்டான்.

    .................

    பதிலளிநீக்கு
  15. நன்றி திரு.அவனடிமையாரே. தங்களின் மேலான கருத்தை எதிபார்த்தே காத்திருந்தேன். மிகத்தெளிவாக கருத்தை எடுத்துரத்தமைக்கும் நன்றி.உங்கள் அனுமதியுடன் தங்களின் விளக்கத்தையும் சேர்த்தே எனது பதிவில் இட்டுக்கொள்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  16. உம்ம்ம்ம்ம்... வெண்பா அருமை திகழ். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. உமா அவர்களே:
    ஆஹா. கேட்கவேண்டிய அவசியமே இல்லை. தாராளமாக இட்டுக் கொள்ளலாம். உரிமை இருந்தால் தானே அனுமதி கொடுக்க முடியும்.
    நன்றி....

    பதிலளிநீக்கு
  18. அவனடிமை அவர்களே! தங்கள் "பார்" வெண்பாவைப் பார்த்துப்பார்த்துக் களித்தேன். ஆகையால்தான். உம்வெண்பா ஆயிரம் மலர்களில் அமர்ந்த "அளி" அளித்"தேன்".

    பதிலளிநீக்கு
  19. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  20. புகழ்த்தாய் தகப்பன் தனையனைப் பாடிப்
    புகழ்மிளி ருற்றீர் திகழ்.

    பதிலளிநீக்கு
  21. திகழ் பாட்டை படித்ததும், சிவவாக்கிய சித்தர் பாட்டு என்றோ படித்தது நினைவுக்கு வந்தது, இவரைவிட புரட்சிகரமாகவும், நகைச்சுவையாகவும் ஒருவர் பாடமுடியுமா என்று வியக்கவைக்கும் நடை, பொருள்; இதோ ஒரு காட்டு:

    சிவவாக்கியர்:
    "
    நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
    சுற்றி வந்து முணுமுணென்று சொல்லு மந்த்ரம் ஏதடா!
    நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்!
    சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவையை அறியுமோ?
    "

    கடைசி வரியில் டணாலென்று விஷயத்தை சுருக்கமாக - அதே சமயம் மறைமுகமாக - கொடுக்கும் அழகைப் பாருங்கள்.

    இந்த எண்ணங்களையும், சிவவாக்கியர் நினைவையும் கொண்டு வர உதவிய திகழ்மிளிர் அவர்களுக்கு நன்றி.

    இது போல பல மகான்களை கொடுத்தது நம் தமிழ் மண் என்று நினைக்கும் போது மனம் பணிவுடன் அவர்களுக்கு வணக்கம் சொல்வதில் என்ன வியப்பு?

    பதிலளிநீக்கு
  22. /அன்னையும் தந்தையும் ஆசையி லாக்கிய
    துன்னையா இல்லை உடம்பையா? - தன்மனத்தி
    னுண்மையைப் பாரென் றறிவார் அறிவாவார்
    மண்கல்லைத் தன்னுள்பார்ப் பார்./

    அற்புத‌மான‌ க‌ருத்து

    அவனடிமை அவர்களே!

    த‌ங்க‌ளின் பாவிற்கும் பாராட்டுக்கும் மிக்க‌ ந‌ன்றிங்க‌

    அன்புட‌ன்

    திக‌ழ்

    பதிலளிநீக்கு
  23. /நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
    சுற்றி வந்து முணுமுணென்று சொல்லு மந்த்ரம் ஏதடா!
    நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்!
    சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவையை அறியுமோ?/

    உண்மை தான்

    /இது போல பல மகான்களை கொடுத்தது நம் தமிழ் மண் என்று நினைக்கும் போது மனம் பணிவுடன் அவர்களுக்கு வணக்கம் சொல்வதில் என்ன வியப்பு?/

    அப்படிப் பட்ட மண்ணில் பிறந்ததற்கு ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும்

    இந்த நேரத்தில் இப்படிப்பட்ட கவிதை எங்களுடன் பகிர்ந்துக் கொண்ட உங்களுக்குத் தான் நன்றியைச் சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  24. அவனடிமையார் அவர்களே, உங்கள் பதிவில் ரமணரின் ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை -அழகாக விளக்ககியுளளீர்கள். ரமணர், சிவவாக்கியார் பற்றியயெல்லாம் மீண்டும் படிக்கும் ஆவலைத் தூண்டிவிட்டீர்கள். பாவிலும் நற்கருத்துக்களை எழுத முயல்கிறேன்.
    உங்கள் அறிமுகம் கிடைத்தில் மிக மகிழ்ச்சி. விளக்கம் கேட்டு கொஞ்சம் தொந்தரவு செய்யலாமா?
    வணக்கத்துடன் உமா.

    பதிலளிநீக்கு
  25. பழையன கற்றுப் பழப்பெருமை பேசும் அதே வேளையில் நம் பங்கிற்கும் ஏதேனும் செய்து வைத்துவிட்டுச் செல்லவேண்டும்.

    ஐயம் தெளியவே இவ்வலை நிறுவப்பட்டுள்ளது. உமா அவர்களின் ஐயங்களை அவ்வப்பொழுது அவனடிமை இவ்வலையின் வழியாகத் தீர்ப்பாராயின் நம் அனைவருக்குமே பயனுடையாதாயிருக்கும்.


    உமா! கேள்வியைக்கூடக் கவிதையிலேயே கேட்க வேண்டும். அப்பொழுதுதான் அவனடிமை அவர்கள் பதில் வழங்குவார். (என்ன அவனடிமையவர்களே! நான் சொல்வது சரியா?)

    பதிலளிநீக்கு
  26. //////அவனடிமை கூறியது...


    திகழ் பாட்டை படித்ததும், சிவவாக்கிய சித்தர் பாட்டு என்றோ படித்தது நினைவுக்கு வந்தது, இவரைவிட புரட்சிகரமாகவும், நகைச்சுவையாகவும் ஒருவர் பாடமுடியுமா என்று வியக்கவைக்கும் நடை, பொருள்; இதோ ஒரு காட்டு:

    சிவவாக்கியர்:
    "
    நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
    சுற்றி வந்து முணுமுணென்று சொல்லு மந்த்ரம் ஏதடா!
    நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்!
    சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவையை அறியுமோ?
    "

    கடைசி வரியில் டணாலென்று விஷயத்தை சுருக்கமாக - அதே சமயம் மறைமுகமாக - கொடுக்கும் அழகைப் பாருங்கள்.

    இந்த எண்ணங்களையும், சிவவாக்கியர் நினைவையும் கொண்டு வர உதவிய திகழ்மிளிர் அவர்களுக்கு நன்றி.

    இது போல பல மகான்களை கொடுத்தது நம் தமிழ் மண் என்று நினைக்கும் போது மனம் பணிவுடன் அவர்களுக்கு வணக்கம் சொல்வதில் என்ன வியப்பு?/////

    கருத்தும் விளக்கமும் பாவும் அவருமை அவனடிமை அவர்களே! சித்தர்களின் பாக்கள் எனக்குமிகவும் பிடித்தமானவை. காளமேகத்தின் நையாண்டிக் கவிதைகளைப் படித்திருக்கிறீர்களா? அவனது ஒவ்வொரு பாட்டும் என்னை வியக்க வைக்கின்றது

    பதிலளிநீக்கு
  27. //////அவனடிமை கூறியது...


    திகழ் பாட்டை படித்ததும், சிவவாக்கிய சித்தர் பாட்டு என்றோ படித்தது நினைவுக்கு வந்தது, இவரைவிட புரட்சிகரமாகவும், நகைச்சுவையாகவும் ஒருவர் பாடமுடியுமா என்று வியக்கவைக்கும் நடை, பொருள்; இதோ ஒரு காட்டு:

    சிவவாக்கியர்:
    "
    நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
    சுற்றி வந்து முணுமுணென்று சொல்லு மந்த்ரம் ஏதடா!
    நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்!
    சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவையை அறியுமோ?
    "

    கடைசி வரியில் டணாலென்று விஷயத்தை சுருக்கமாக - அதே சமயம் மறைமுகமாக - கொடுக்கும் அழகைப் பாருங்கள்.

    இந்த எண்ணங்களையும், சிவவாக்கியர் நினைவையும் கொண்டு வர உதவிய திகழ்மிளிர் அவர்களுக்கு நன்றி.

    இது போல பல மகான்களை கொடுத்தது நம் தமிழ் மண் என்று நினைக்கும் போது மனம் பணிவுடன் அவர்களுக்கு வணக்கம் சொல்வதில் என்ன வியப்பு?/////

    கருத்தும் விளக்கமும் பாவும் அருமை அவனடிமை அவர்களே! சித்தர்களின் பாக்கள் எனக்குமிகவும் பிடித்தமானவை. காளமேகத்தின் நையாண்டிக் கவிதைகளைப் படித்திருக்கிறீர்களா? அவனது ஒவ்வொரு பாட்டும் என்னை வியக்க வைக்கின்றது

    பதிலளிநீக்கு
  28. உமா அவர்கள் கூறியது: //விளக்கம் கேட்டு கொஞ்சம் தொந்தரவு செய்யலாமா?//

    தயக்கமில்லாமல் கேளுங்கள். இதில் தொந்தரவு என்ன இருக்கிறது? வெண்பா, தமிழ் கவிதைகள் குறித்த கேள்வியாக இருந்தால், என்னைவிட ஆசான் அகரம் அமுதா அவர்களையே கேட்பதுதான் முறை, சரி.

    வேறு கேள்விகளாக இருந்தால், இது வெண்பாவைக் குறித்த தளம் (blog)-ஆக இருப்பதால், அமுதா கூறுவது போல, பாவிலேயே கேட்க முயற்சிக்கலாமே!

    சரியாகக் கூறப்போனால், அமுதா, வெண்பாவிலிருந்து, கூடிய சீக்கிரம் வேறு வகை பாக்கள், கண்ணிகள், சந்தப் பாடல்கள், மற்றும் பலவகை இதர விருத்தங்களின் இலக்கணங்களையும், அழகையும் ஆராய்ந்து, தானும் யாத்து வழங்குவார் என்று நினைக்கிறேன், ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அவராலும், அவருடைய சக-கவிஞர்களாலும் நிச்சயம் முடியும் என்பது இங்குள்ளோர் எல்லோருக்கும் ஒருமித்த கருத்தாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    இதே வலைத்தளத்தின் நோக்கத்தை வெண்பா மட்டும் அலசுவதிலிருந்து விரிவுப்படுத்தியோ, இல்லை வேறு வலைத்தளத்திலோ இதை செய்து
    அவரும் தமிழை மேலும் ருசித்து மகிழ்ந்து, நம் எல்லோரையும் மகிழ்விக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று தோன்றுகிறது..

    எந்த நேரத்திலும் என்னை மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம்: manof68@yahoo.com

    நன்றி.

    பதிலளிநீக்கு
  29. அகரம் அமுதா அவர்கள் கூறியது: //காளமேகத்தின் நையாண்டிக் கவிதைகளைப் படித்திருக்கிறீர்களா? அவனது ஒவ்வொரு பாட்டும் என்னை வியக்க வைக்கின்றது//

    இல்லை, கவி காளமேகம் படித்ததில்லை. வலையில் எங்காவது இருக்கிறதா ?

    நன்றி.

    பதிலளிநீக்கு
  30. உமா அவர்கள்:
    //தொந்தரவு செய்யலாமா?//

    'தொந்தரவு' என்ற சொல் திருமூலரை நினைவுபடுத்தி, தொந்தரவு செய்ய, அவர் பாணியில்:

    தொந்தரவு தீண்டியவர் தீராத் துயுருறுவர்
    தொந்துறவு தேயாம லையமு மாறாது
    தொந்தரவு, தொல்லை தினமுந் துரத்தும்
    மனந்துறந்து மாயை யறு
    .

    தொந்தரவு - தொந்தம் + அரவு
    தொந்துறவு - தொந்தம் + உறவு
    தொந்தரவு - இடைஞ்சல்

    முந்நாளில், வடமொழி 'த்வந்தத்தை', 'தொந்தம்' என்று தமிழாக்கி உபயோகித்தனர். இதற்கு இணையான தமிழ்ச்சொல் இருக்கிறதா தெரியவில்லை.

    வாழ்க்கையின் 'இரட்டைகள்' என்று பொருள் (கா.: நன்மை, தீமை; உள்ளவன், இல்லாதவன்; பிடித்தது, பிடிக்காதது; மேல்மட்டம், கீழ்மட்டம்; படித்தவன், படிக்காதவன் - இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
    இந்த இரட்டைகளால் தவிக்கும் மனத்தை துறக்காமல் இவைகளின் தொல்லை நீங்கா என்பது கருத்து)

    பதிலளிநீக்கு
  31. அவனடியார் அவர்களுக்கு! தங்கள் கருத்தில் எனக்கும் விருப்பமுண்டு. நான் துவக்கத்திலேயே அதுபற்றி எண்ணிப்பார்த்திருக்கிறேன். கண்டிப்பாக இனி வரும் பாடங்களில் மற்ற பாவகைகளைப் பற்றியும் ஆராய்வோம்.

    பதிலளிநீக்கு
  32. அவனடியார் அவர்களுக்கு! கவி காளமேகத்தின் கவிதைகள் இணையத்தில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை "மதுரை மின்நூல் திட்டத்தில் இருந்தால்தான் உண்டு! தேடிப்பார்த்துவிட்டுச் சொல்கிறேன்.

    மேலும் தாங்கள் தோழி உமா அவர்களுக்குக் கூறியதுபோல, "இலக்கியம் சார்ந்த எந்த கேள்விபதில்களையும் இங்கே வைத்துக்கொள்ளலாம். யாவருக்கும் பயனுடையதாக இருக்குமல்லவா!!!!!

    பதிலளிநீக்கு
  33. தங்கள் " தொந்தரவு"க் கவிதை தொந்தரவு செய்யாமல் மிக இயல்பாகவும் இனிமையாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  34. மின்னஞ்சல் முகவரியை தவறாகக் கொடுத்துள்ளேன், இதோ சரியான முகவரி: manof678@yahoo.com

    பதிலளிநீக்கு
  35. /தொந்தரவு தீண்டியவர் தீராத் துயுருறுவர்
    தொந்துறவு தேயாம லையமு மாறாது
    தொந்தரவு, தொல்லை தினமுந் துரத்தும்
    மனந்துறந்து மாயை யறு.

    தொந்தரவு - தொந்தம் + அரவு
    தொந்துறவு - தொந்தம் + உறவு
    தொந்தரவு - இடைஞ்சல்/

    அருமை

    பதிலளிநீக்கு
  36. /முந்நாளில், வடமொழி 'த்வந்தத்தை', 'தொந்தம்' என்று தமிழாக்கி உபயோகித்தனர். இதற்கு இணையான தமிழ்ச்சொல் இருக்கிறதா தெரியவில்லை./

    எனக்கு என்னவோ இது உண்மையாக தோன்றவில்லை

    /சொந்து - சொத்து. . சும் - சம் - சந்து = கூட்டு, பொருந்து. . சந்து செய்தல் = இருபகைவரை ஒப்புரவாக்கிக் கூட்டி வைத்தல். ...

    சொந்து - சொந்தம் = தொடர்பு, உடைமை. தும் - துந்து - தொந்து - தொந்தம் = தொடர்பு, தொடுப்பு. தொந்து - தொத்து = வி. ஒட்டு; பெ. கொத்து. .../

    தொந்தம் என்னும் சொல்லுக்கு தமிழில் இப்படி எல்லாம் வேர்கள் இருக்கும்போது இச்சொல்லை வேற்றுமொழி சொல் என்று விளம்புவது சரியல்ல என நினைக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  37. அட... நம் வலையின் சொல்லாய்வாளர் திகழ் அவர்களுக்கென் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  38. /சொந்து - சொத்து. . சும் - சம் - சந்து = கூட்டு, பொருந்து. . சந்து செய்தல் = இருபகைவரை ஒப்புரவாக்கிக் கூட்டி வைத்தல். ...

    சொந்து - சொந்தம் = தொடர்பு, உடைமை. தும் - துந்து - தொந்து - தொந்தம் = தொடர்பு, தொடுப்பு. தொந்து - தொத்து = வி. ஒட்டு; பெ. கொத்து. .../

    அகரம் அமுதா அவர்களே
    இது கண்டிப்பாக என்னுடைய ஆய்வு இல்லை
    நான் படித்தவற்றை தங்களுடன்
    பகிர்ந்து உள்ளேன். அவ்வளவு தான்.

    பதிலளிநீக்கு
  39. /////திகழ்மிளிர் கூறியது...

    அகரம் அமுதா அவர்களே
    இது கண்டிப்பாக என்னுடைய ஆய்வு இல்லை
    நான் படித்தவற்றை தங்களுடன்
    பகிர்ந்து உள்ளேன். அவ்வளவு தான்.////

    அதனாலேன்ன திகழ்! வேர்ச்சொல் கிளைச்சொல்லைப் படிக்கும் விருப்பமிகுதி தங்களிடம் உள்ளது கண்டு முன்பிருந்தே வியந்துவருகிறேன். அதன்வெளிப்பாடே, தங்களைச் "சொல்லாய்வர்" என்ற புகழ்ச்சியுரை.

    பதிலளிநீக்கு
  40. /முந்நாளில், வடமொழி 'த்வந்தத்தை', 'தொந்தம்' என்று தமிழாக்கி உபயோகித்தனர். இதற்கு இணையான தமிழ்ச்சொல் இருக்கிறதா தெரியவில்லை./

    //எனக்கு என்னவோ இது உண்மையாக தோன்றவில்லை//

    //தொந்தம் என்னும் சொல்லுக்கு தமிழில் இப்படி எல்லாம் வேர்கள் இருக்கும்போது இச்சொல்லை வேற்றுமொழி சொல் என்று விளம்புவது சரியல்ல என நினைக்கின்றேன்.//

    "இதற்கு இணையான" என்று நான் குறிப்பிட்டது சவாலுக்காக சொன்னதல்ல. 'த்வந்தம்' என்ற வடமொழி வார்த்தைக்கு அதே பொருளைத் ('இரட்டைத்தனம்' ?) தரக்கூடிய சொல் ஏதாவது இருக்கிறதா என்றே கேட்க விழைந்தேன்.

    திகழ் அவர்களின் சொல்லாய்வுக்கு நன்றி (ஆய்வின் விவரங்கள் எனக்கு முழுவதுமாக விளங்கவில்லை என்பதும் உண்மை).

    தொந்தம் என்ற தமிழ் சொல்லுக்கு அதற்கே உரியதான பொருள் தமிழில் இருப்பதாக சொல்ல வருகிறார் என்று மட்டும் புரிந்தது.

    மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  41. /முந்நாளில், வடமொழி 'த்வந்தத்தை', 'தொந்தம்' என்று தமிழாக்கி உபயோகித்தனர்/

    தமிழாக்கி உள்ளார்கள் என்பதைத் தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.தொந்தம் என்பது தமிழ்ச்சொல் தான் என்று விளம்ப‌
    வந்தேன். தங்களின் வெண்பாவைக் கண்டு அக மகிழ்ந்தேன்.
    அவ்வளவு அற்புதமான வெண்பா.

    /தொந்தம் என்ற தமிழ் சொல்லுக்கு அதற்கே உரியதான பொருள் தமிழில் இருப்பதாக சொல்ல வருகிறார் என்று மட்டும் புரிந்தது.

    மீண்டும் நன்றி./

    மிக்க நன்றிங்க‌

    பதிலளிநீக்கு
  42. திரு.அவனடிமையாருக்கெனது நன்றிகள். வெண்பா தவிர மற்ற பாவகைளையும் கற்க முடிந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவோம். உங்கள் 'தொநதரவு' பா மிக மிக அருமை. மினனஞ்சல் முகவரிக்கு மீண்டும் நன்றி.

    அமுதாவிற்கும் நன்றி.

    திகழுக்கு பாராட்டுக்கள். கலைச் சொற்கள் வேற்சொற்க் ஆகியவற்றில் மிக அற்புததமாக படித்தரிந்து சொல்கிரார். பயனுடைய உதவி.
    அன்புடன். உமா.

    [அமுதா உங்கள் பதிவில் எழுதும் போது மட்டும் வெகு தாமதமாக அச்சாகிறதே ஏன் ? மற்ற வலையில் அப்ப்டியாகவில்லை அதுதான்கேட்கிறேன்.]

    பதிலளிநீக்கு
  43. /////உமா கூறியது...

    [அமுதா உங்கள் பதிவில் எழுதும் போது மட்டும் வெகு தாமதமாக அச்சாகிறதே ஏன் ? மற்ற வலையில் அப்ப்டியாகவில்லை அதுதான்கேட்கிறேன்.]//////


    உமா அவர்களுக்கு! இதுவரை இச்சிக்கல் நான் எழுதும் போது வந்ததில்லை. தாங்களே முதன்முதலில் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். கவனிக்கிறேன். நன்றிகள்.

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com