
சென்ற இடுகையில் பாடலாசிரியர் அறிவுமதி அவர்களின் (மேலுள்ள) குறுங்கவிதையை வெண்பாவாக்க முயலுமாறு கோரிக்கை விடுத்திருந்தேன். உடன்பிறப்புக்கள் யாரும் அப்பணியைச் செய்ய முன்வரவில்லை. கரணியம் யான்றியேன்.
கவிஞர்கள் யாரும் முன்வராக் கரணியத்தால் அப்பணி என்தலைமேல் ஏறிக்கொண்டதால், மனதில் பெரும் அச்சம் தொற்றிக்கொண்டது. “இப்பணியைச் செவ்வனே என்னால் செய்துமுடிக்க முடியுமா?” என்று.
எனினும் முயன்றுபார்த்தேன். அப்பாவைப் பார்க்குமுன் ஓர் தெளிவு:-
பொதுவாக புதுக்கவிதைகள் தோன்றுவதற்கும், தோன்றிப் பெருவளர்ச்சிக் காண்பதற்கும் முழுமுதற் கரணியம் ஒப்பனை இன்மை எனலாம். எதையும் சுற்றிவளைத்துச் சொல்லாது, அம்புபொல் நேரடியாகத் தைக்க வேண்டும் என்பதே புதுக்கவிதையாளர்களின் போற்குரல்.
இப்படிப் போற்குரல் எழுந்தகாலத்தில் மரபுக்கவிதை தன்னைப் புதுப்பித்துக்கொண்டுள்ளது. புதுக்கவிதையாளர்களின் கருத்தை, எதிர்பார்ப்பை ஓரளவிற்கு நிறைவு செய்தும் வந்துள்ளது. இருப்பினும் முழுமையாக நிறைவுசெய்ய வில்லை. கரணியம் யாதெனில் மென்மேலும் மரபை எளிமைப் படுத்தும்போழ்து அதன் மூலத்தன்மை கெட்டுவிடுகிறது. அதனை உணர்ந்தமையால் ஓரளவிற்கு எளிமைப்படுத்துவதோடு நிறுத்திக்கொண்டனர் எனலாம்.
சரி. மேலுள்ள குறுங்கவிதைக்கான வெண்பாவைக் காணும் முன்னம் மேலும் ஓர் விளக்கம்:-
பொதுவாக ஓர் வடிவத்தில் உள்ள கவிதையை அல்லது ஓர் மொழியில் உள்ள கவிதையை, வடிவ மாற்றமோ, மொழிமாற்றமோ செய்யும் போது, மாற்றம் செய்யப்படுவதன் மூலவடிவம் என்ன சொல்கிறதோ அதை அப்படியே பதிவுசெய்யாது, மாற்றம் செய்பவர் தனது கருத்தையும் இடையிடையே ஏற்றுவதால் மூலத்தன்மைக் கெட்டு வேறோர் தோற்றத்தைக் கொண்டுவிடுகிறது.
இம்முறையில் எழுதப்புகுவது முழுக்க முழுக்க தவறேயாகும். இக் குற்றச் சாட்டிற்குக் காட்டாக மேலுள்ள குறுங்கவிதையையே எடுத்துக்கொள்ளலாம்.
அவனடிமை அவர்கள் முந்தைய இடுகையின் மறுமொழியில் உரைத்தமைப்போல, பற்பல கருத்துக்களை உள்ளடக்கியதே “செய்திகளால் கடவுளாக்கப் பட்டவனை வரலாறு மனிதனாக்கும்” கவிதை வரிகளாகும்.
இவ்வரிகளை, பேருயிரி (மகாத்மா) என அழைக்கப்படுகிற காந்திக்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். இந்துமத தலைவர் எனச்சொல்லித்திரிகிற சங்கராச்சாரியாருக்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். முத்தமிழ் அறிஞன் எனத் தன்னைச் சொல்லித்திரிபவருக்கும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். தமிழினத் தலைவர் எனத்திரிவோருக்கும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். இவ்வளவு ஏன்? எனக்கும், உங்களுக்கும், நம் அனைவருக்கும் பொருத்துப் பார்த்துக்கொள்ளும் படியான வரிகளே மேலுள்ளவை. (கவிஞர் எண்ணிச் செய்தது ஈழத்தலைவனை மனதில் எண்ணியே என்பதறிக)
இக்குறுங்கவிதைக்குப் பொருளுரைக்கப் புகுவோர், எக்கருத்தோடு அக்கவிதையைத் தொடர்பு படுத்துகிறார்களோ, அக்கருத்துக்குள் அக்கவிதை முடங்கிவிடுகிறது. பிரிதொருவன் பொருளுரைக்கப் புகும் போது, அவன் உரைக்கப் புகும் கருத்து என்கிற கட்டத்துக்கள் அடைப்பட்டுவிடுகிறது. இப்படிப் பற்பல கருத்துக்களோடு தொடர்புபட, இக்குறுங்கவிதை விளங்குவதற்குக் கரணியம் எக்கருத்தையும் வெளிப்படையாகப் பேசாது, பொதுப்படையாகப் பேசுகின்ற அத்தன்மையே!
இக்கவிதையை வெண்பா என்ற வடிவத்தில் திணிக்கும் போது, ஓர் குறிப்பிட்ட கருத்தை முதன்மைப் படுத்தி, அக்கருத்து வெளிப்படையாதல் போல் வெண்பா வார்ப்போமாயின், மூலக்கவிதையின் நேரடித் தரவிறக்கமாகாது. ஆக, மூலக்கவிதை பேசப் புகும் பொதுத்தன்மையை அப்படியே உள்வாங்கின் கொண்டு, வடிக்க விருக்கும் வெண்பாவும் பொதுத்தன்மை பேசுவதாக அமைவதே சாலச் சிறந்தது எனும் கட்டளையை மனதிற் பிறப்பித்துக் கொண்டு, பிறகே வடிவ மாற்றம் செய்யப் புகுந்தேன். குறிப்பாக புதுக்கவிதை வெறுத்தொதுக்கும் ஒப்பனை என்ற அணியை அகற்றிவிட்டு, மூலகவிஞன் எச்சொற்களைப் பெய்து கவிதை செய்தானோ? அச்சொற்களைக் கொண்டே வடிவமாற்றம் செய்வதே முறைமை எனப்பட்டதாலும், அதுவே புதுக்கவிதையாளர்களையும் மரபை விரும்ப வழிவகுக்கும் என்பதாலும் எனது மொழிநடையைச் சற்றே விலக்கி வைத்துவிட்டு மூலகவிஞனின் சொற்களைக் கொண்டே வெண்பா என்ற வடிவத்திற்குள் நுழைக்க முற்றட்டிருக்கிறேன்.
மீண்டும் மேலுள்ள குறுங்கவிதையைப் படித்தபின் கீழுள்ள குறள் வெண்பாவைக் காணவும்:-
வரலாறு மாற்றும் மனிதனாய்; செய்தித்
துறைஇறையாய்ச் செய்தவ னை!
மேலுள்ள வெண்பாவை மூலக்கவிதையின் பொதுத்தன்மையைத் தனதாக்கிக் கொண்டு, அப்பொதுத்தன்மையினின்று விலகாமல், வடிவமாற்றம் செய்ய வேண்டும் என்கிற அக்கறையால் எதுகை மோனை பொன்றவற்றை விட்டுச் சற்றே விலகியும் வந்துள்ளேன். இருப்பினும் ஓரளவேனும் வெண்பாவின் தன்மை கெடாது தோற்றங்காட்டுவதால் யாவருக்கும் விருந்தாக்கியிருக்கிறேன்.
பாலை, கலத்தில் ஊற்றிவைத்தாலும், பானையில் ஊற்றிவைத்தாலும், கோப்பையின் ஊற்றி வைத்தாலும், தேங்கிநிற்கப் பயன்படும் பொருட்கேற்ப வடிவம் மாறுபடுமே அல்லால் தன்மையால் மாறுபடாதல்லவா? அஃதேபோல் மூலம் சிதையாமல் வடிவமாற்றம் செய்தலே மூலத்தைக் காயப்படுத்தாமலும், மூலப்படைப்பாளனைக் காயப்படுத்தாமலும் இருக்க, சிறந்த வழிமுறையாகும்.
இச்சட்டத்திற்கு உட்பட்டு மேலும் ஓர் குறுங்கவிதையை வடிவமாற்றம் செய்துள்ளேன்.
கவிதையின் கருப்பொருள் இதுவே:- (நாளேட்டில் வந்த செய்தி) ஓர்திருடன் ஓர் வீட்டுள் புகுந்து பொன்பொருளைக் கொள்ளையடிக்கிறான். திருடன் திருடிய வேளையின் திருடனின் மகன் இறந்துவிடுகிறான். தான் திருடிய கரணியத்தால் ஆண்டவன், தன் மகனின் இறப்பின் மூலமாகத் தன்னை ஒறுத்துவிட்டதாக (தண்டித்துவிட்டதாக) எண்ணிக்கொண்டு, இனி அக்குற்றச்செயலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பாது, திருடிய பொருளை மூட்டையாகக் கட்டி, கூடவே ஓர் மடலையும் எழுதி (மேலுள்ள செய்தியை) காவல் நிலையத்தின் அருகில் போட்டுச் சென்றுவிட்டுச் சென்றுவிடுகிறான். இக்கருத்தை உள்ளடக்கியதாகப் பேசுகிறது கீழ்காணும் ஹைக்கூ:-
கொள்ளை மனதை
வெள்ளை மனதாக்கியது
பிள்ளை மரணம்!
மேலுள்ள குறுங்கவிதையின் படைப்பாளர் எனதருமை நண்பர் கோ. கண்ணன் ஆவார்.
இக் ஹைக்கூ உணர்த்தவரும் கருத்தை, எச்சொற்களைக் கொண்டு உணர்த்தி நிற்கிறதோ?! அச்சொற்களின் துணைகொண்டே வெண்பா என்கிற வடிவத்திற்குள் நுழைத்துக் காட்ட முடியுமா? என்கிற வேட்கையோடு உரைக்கப் புகுந்தேன். அது இப்படி உருப்பெற்றது.
பிள்ளை மரணத்தால் வெள்ளை மனமுற்றான்
கொள்ளைக் குணங்கொண்ட வன்!
கவிதைக்குறிய எக்கருப்பொருளையும் எந்த வடிவத்திற்குள்ளும் அடக்கிவிட முடியும். அது அவ்வடிவத்தைக் கையாளுபவனின் ஆற்றலைப் பொருத்தது. மேலுள்ள இரு குறுங்கவிதைகளையும், ஏறக்குறைய அவ்வக் கவிஞர்களின் சொற்களைக் கொண்டே மரபுக்குள் புகுத்த முயன்றிருக்கிறேன். வெற்றி பெற்றானா என்பது தெரியாது. முயன்றிருக்கிறேன் அவ்வளவே!
இவ்வலையில் வெண்பாப் பயிலும் நண்பர்களே! நான் வழங்கும் குறுங்கவிதையை வெண்பாவாக்க முடியவில்லை என நினைக்கத்தால் தங்களால் வெண்பா வாக்க முடியும் எனக் கருதுகிற குறுங்கவிதையில் ஒன்றை எடுத்துக்கொண்டு வடிவ மாற்றம் செய்துபார்க்கவும். ஓர் குறுங்கவிதையை அளவடி வெண்பாவாக்குகிற போது, நிறைய சொற்களை இட்டு நிறப்ப வேண்டிய கட்டாயம் இருக்கும். ஆதலால் குறள்வெண்பாவாகவோ, சிந்தியல் வெண்பாவாகவோ வழங்கமுற்படுவது சாலச் சிறந்தது.
இக்கிழமைக்கான ஈற்றடி:- பாவும் தமிழுமினிப் பாழ்!
கவிஞர்கள் யாரும் முன்வராக் கரணியத்தால் அப்பணி என்தலைமேல் ஏறிக்கொண்டதால், மனதில் பெரும் அச்சம் தொற்றிக்கொண்டது. “இப்பணியைச் செவ்வனே என்னால் செய்துமுடிக்க முடியுமா?” என்று.
எனினும் முயன்றுபார்த்தேன். அப்பாவைப் பார்க்குமுன் ஓர் தெளிவு:-
பொதுவாக புதுக்கவிதைகள் தோன்றுவதற்கும், தோன்றிப் பெருவளர்ச்சிக் காண்பதற்கும் முழுமுதற் கரணியம் ஒப்பனை இன்மை எனலாம். எதையும் சுற்றிவளைத்துச் சொல்லாது, அம்புபொல் நேரடியாகத் தைக்க வேண்டும் என்பதே புதுக்கவிதையாளர்களின் போற்குரல்.
இப்படிப் போற்குரல் எழுந்தகாலத்தில் மரபுக்கவிதை தன்னைப் புதுப்பித்துக்கொண்டுள்ளது. புதுக்கவிதையாளர்களின் கருத்தை, எதிர்பார்ப்பை ஓரளவிற்கு நிறைவு செய்தும் வந்துள்ளது. இருப்பினும் முழுமையாக நிறைவுசெய்ய வில்லை. கரணியம் யாதெனில் மென்மேலும் மரபை எளிமைப் படுத்தும்போழ்து அதன் மூலத்தன்மை கெட்டுவிடுகிறது. அதனை உணர்ந்தமையால் ஓரளவிற்கு எளிமைப்படுத்துவதோடு நிறுத்திக்கொண்டனர் எனலாம்.
சரி. மேலுள்ள குறுங்கவிதைக்கான வெண்பாவைக் காணும் முன்னம் மேலும் ஓர் விளக்கம்:-
பொதுவாக ஓர் வடிவத்தில் உள்ள கவிதையை அல்லது ஓர் மொழியில் உள்ள கவிதையை, வடிவ மாற்றமோ, மொழிமாற்றமோ செய்யும் போது, மாற்றம் செய்யப்படுவதன் மூலவடிவம் என்ன சொல்கிறதோ அதை அப்படியே பதிவுசெய்யாது, மாற்றம் செய்பவர் தனது கருத்தையும் இடையிடையே ஏற்றுவதால் மூலத்தன்மைக் கெட்டு வேறோர் தோற்றத்தைக் கொண்டுவிடுகிறது.
இம்முறையில் எழுதப்புகுவது முழுக்க முழுக்க தவறேயாகும். இக் குற்றச் சாட்டிற்குக் காட்டாக மேலுள்ள குறுங்கவிதையையே எடுத்துக்கொள்ளலாம்.
அவனடிமை அவர்கள் முந்தைய இடுகையின் மறுமொழியில் உரைத்தமைப்போல, பற்பல கருத்துக்களை உள்ளடக்கியதே “செய்திகளால் கடவுளாக்கப் பட்டவனை வரலாறு மனிதனாக்கும்” கவிதை வரிகளாகும்.
இவ்வரிகளை, பேருயிரி (மகாத்மா) என அழைக்கப்படுகிற காந்திக்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். இந்துமத தலைவர் எனச்சொல்லித்திரிகிற சங்கராச்சாரியாருக்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். முத்தமிழ் அறிஞன் எனத் தன்னைச் சொல்லித்திரிபவருக்கும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். தமிழினத் தலைவர் எனத்திரிவோருக்கும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். இவ்வளவு ஏன்? எனக்கும், உங்களுக்கும், நம் அனைவருக்கும் பொருத்துப் பார்த்துக்கொள்ளும் படியான வரிகளே மேலுள்ளவை. (கவிஞர் எண்ணிச் செய்தது ஈழத்தலைவனை மனதில் எண்ணியே என்பதறிக)
இக்குறுங்கவிதைக்குப் பொருளுரைக்கப் புகுவோர், எக்கருத்தோடு அக்கவிதையைத் தொடர்பு படுத்துகிறார்களோ, அக்கருத்துக்குள் அக்கவிதை முடங்கிவிடுகிறது. பிரிதொருவன் பொருளுரைக்கப் புகும் போது, அவன் உரைக்கப் புகும் கருத்து என்கிற கட்டத்துக்கள் அடைப்பட்டுவிடுகிறது. இப்படிப் பற்பல கருத்துக்களோடு தொடர்புபட, இக்குறுங்கவிதை விளங்குவதற்குக் கரணியம் எக்கருத்தையும் வெளிப்படையாகப் பேசாது, பொதுப்படையாகப் பேசுகின்ற அத்தன்மையே!
இக்கவிதையை வெண்பா என்ற வடிவத்தில் திணிக்கும் போது, ஓர் குறிப்பிட்ட கருத்தை முதன்மைப் படுத்தி, அக்கருத்து வெளிப்படையாதல் போல் வெண்பா வார்ப்போமாயின், மூலக்கவிதையின் நேரடித் தரவிறக்கமாகாது. ஆக, மூலக்கவிதை பேசப் புகும் பொதுத்தன்மையை அப்படியே உள்வாங்கின் கொண்டு, வடிக்க விருக்கும் வெண்பாவும் பொதுத்தன்மை பேசுவதாக அமைவதே சாலச் சிறந்தது எனும் கட்டளையை மனதிற் பிறப்பித்துக் கொண்டு, பிறகே வடிவ மாற்றம் செய்யப் புகுந்தேன். குறிப்பாக புதுக்கவிதை வெறுத்தொதுக்கும் ஒப்பனை என்ற அணியை அகற்றிவிட்டு, மூலகவிஞன் எச்சொற்களைப் பெய்து கவிதை செய்தானோ? அச்சொற்களைக் கொண்டே வடிவமாற்றம் செய்வதே முறைமை எனப்பட்டதாலும், அதுவே புதுக்கவிதையாளர்களையும் மரபை விரும்ப வழிவகுக்கும் என்பதாலும் எனது மொழிநடையைச் சற்றே விலக்கி வைத்துவிட்டு மூலகவிஞனின் சொற்களைக் கொண்டே வெண்பா என்ற வடிவத்திற்குள் நுழைக்க முற்றட்டிருக்கிறேன்.
மீண்டும் மேலுள்ள குறுங்கவிதையைப் படித்தபின் கீழுள்ள குறள் வெண்பாவைக் காணவும்:-
வரலாறு மாற்றும் மனிதனாய்; செய்தித்
துறைஇறையாய்ச் செய்தவ னை!
மேலுள்ள வெண்பாவை மூலக்கவிதையின் பொதுத்தன்மையைத் தனதாக்கிக் கொண்டு, அப்பொதுத்தன்மையினின்று விலகாமல், வடிவமாற்றம் செய்ய வேண்டும் என்கிற அக்கறையால் எதுகை மோனை பொன்றவற்றை விட்டுச் சற்றே விலகியும் வந்துள்ளேன். இருப்பினும் ஓரளவேனும் வெண்பாவின் தன்மை கெடாது தோற்றங்காட்டுவதால் யாவருக்கும் விருந்தாக்கியிருக்கிறேன்.
பாலை, கலத்தில் ஊற்றிவைத்தாலும், பானையில் ஊற்றிவைத்தாலும், கோப்பையின் ஊற்றி வைத்தாலும், தேங்கிநிற்கப் பயன்படும் பொருட்கேற்ப வடிவம் மாறுபடுமே அல்லால் தன்மையால் மாறுபடாதல்லவா? அஃதேபோல் மூலம் சிதையாமல் வடிவமாற்றம் செய்தலே மூலத்தைக் காயப்படுத்தாமலும், மூலப்படைப்பாளனைக் காயப்படுத்தாமலும் இருக்க, சிறந்த வழிமுறையாகும்.
இச்சட்டத்திற்கு உட்பட்டு மேலும் ஓர் குறுங்கவிதையை வடிவமாற்றம் செய்துள்ளேன்.
கவிதையின் கருப்பொருள் இதுவே:- (நாளேட்டில் வந்த செய்தி) ஓர்திருடன் ஓர் வீட்டுள் புகுந்து பொன்பொருளைக் கொள்ளையடிக்கிறான். திருடன் திருடிய வேளையின் திருடனின் மகன் இறந்துவிடுகிறான். தான் திருடிய கரணியத்தால் ஆண்டவன், தன் மகனின் இறப்பின் மூலமாகத் தன்னை ஒறுத்துவிட்டதாக (தண்டித்துவிட்டதாக) எண்ணிக்கொண்டு, இனி அக்குற்றச்செயலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பாது, திருடிய பொருளை மூட்டையாகக் கட்டி, கூடவே ஓர் மடலையும் எழுதி (மேலுள்ள செய்தியை) காவல் நிலையத்தின் அருகில் போட்டுச் சென்றுவிட்டுச் சென்றுவிடுகிறான். இக்கருத்தை உள்ளடக்கியதாகப் பேசுகிறது கீழ்காணும் ஹைக்கூ:-
கொள்ளை மனதை
வெள்ளை மனதாக்கியது
பிள்ளை மரணம்!
மேலுள்ள குறுங்கவிதையின் படைப்பாளர் எனதருமை நண்பர் கோ. கண்ணன் ஆவார்.
இக் ஹைக்கூ உணர்த்தவரும் கருத்தை, எச்சொற்களைக் கொண்டு உணர்த்தி நிற்கிறதோ?! அச்சொற்களின் துணைகொண்டே வெண்பா என்கிற வடிவத்திற்குள் நுழைத்துக் காட்ட முடியுமா? என்கிற வேட்கையோடு உரைக்கப் புகுந்தேன். அது இப்படி உருப்பெற்றது.
பிள்ளை மரணத்தால் வெள்ளை மனமுற்றான்
கொள்ளைக் குணங்கொண்ட வன்!
கவிதைக்குறிய எக்கருப்பொருளையும் எந்த வடிவத்திற்குள்ளும் அடக்கிவிட முடியும். அது அவ்வடிவத்தைக் கையாளுபவனின் ஆற்றலைப் பொருத்தது. மேலுள்ள இரு குறுங்கவிதைகளையும், ஏறக்குறைய அவ்வக் கவிஞர்களின் சொற்களைக் கொண்டே மரபுக்குள் புகுத்த முயன்றிருக்கிறேன். வெற்றி பெற்றானா என்பது தெரியாது. முயன்றிருக்கிறேன் அவ்வளவே!
இவ்வலையில் வெண்பாப் பயிலும் நண்பர்களே! நான் வழங்கும் குறுங்கவிதையை வெண்பாவாக்க முடியவில்லை என நினைக்கத்தால் தங்களால் வெண்பா வாக்க முடியும் எனக் கருதுகிற குறுங்கவிதையில் ஒன்றை எடுத்துக்கொண்டு வடிவ மாற்றம் செய்துபார்க்கவும். ஓர் குறுங்கவிதையை அளவடி வெண்பாவாக்குகிற போது, நிறைய சொற்களை இட்டு நிறப்ப வேண்டிய கட்டாயம் இருக்கும். ஆதலால் குறள்வெண்பாவாகவோ, சிந்தியல் வெண்பாவாகவோ வழங்கமுற்படுவது சாலச் சிறந்தது.
இக்கிழமைக்கான ஈற்றடி:- பாவும் தமிழுமினிப் பாழ்!
அகரம் அமுதா


