செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

குறள் தாழிசை!

குறள் வெண்பாவிற்கு உரிய ஓசை செப்பலோசையாகும். அச்செப்பலோசையிலிருந்து மாறுபட்ட வேறு தளைகளைக் கொண்டு அமைவது குறள் தாழிசையாகும். அதாவது மாமுன் நிரையசைக்குப் பதிலாக நேரசையே அமைதல், நிரையசையைத் தொடர்ந்து நேரசைக்குப் பதிலாக நிரையசையே அமைதல், காய்முன் நிரையமைதல் அல்லது வெண்பாவிற்கு முற்றிலும் வேறுபட்ட கனிச்சீர் வருதல் போன்ற இவையாவும் குறள் வெண்பாவில் அமைந்துவரின் அதைக் குறள் தாழிசை என்பர். அதாவது குறளின் இசையிலிந்து தாழ்ந்து ஒலிப்பதால் தாழிசை ஆயிற்று.

ஒருவனுக்(கு) ஒருத்தியென்ற ஒப்பில் மொழியைக்
கருத்தில் நிறுத்திநெறி காண்!

ஒருவனுக் + கொருத்தியென்ற

ஊர்தியை ஓட்டுகையில் ஒருவரொடும் பேசாதே!
நேர்ச்சிக்கு வழிகோளாய் நீ!

ஓட்டுகையில் + ஒருவரொடும், நேர்ச்சிக்கு + வழிகோளாய்

விரைவாய்த் துள்ளுந்தை ஓட்டுதல் நேர்ச்சிக்(கு)
இரையாக்கும் நம்மையெளி தில்!

விரைவாய்த் + துள்ளுந்தை

குறள் வெண்பாவிலிருந்து சிதைந்த வடிவிலான குறள் தாழிசைகளைப் படைக்க வருவீராக.

அகரம் அமுதா

17 கருத்துகள்:

  1. என்னங்க நெம்ப நாளாச்சு? மறந்திட்டீங்களா?

    பதிலளிநீக்கு
  2. வருக லதானந்த் அவர்களே! மறக்கக் கூடிய ஆளா நீங்கள். தற்பொழுது தமிழகத்தில் உள்ளதால் அடிக்கடி இணைய பக்கம் உலவ முடியவில்லை அவ்வளவே!

    பதிலளிநீக்கு
  3. /விரைவாய்த் துள்ளுந்தை ஓட்டுதல் நேர்ச்சிக்(கு)
    இரையாக்கும் நம்மையெளி தில்!/

    அருமை

    பதிலளிநீக்கு
  4. "அழகுதான் போங்கள்" என்பாள் பாயில்
    பழகும் போதுபம் மினால்.

    காக்கைக்கும் தன்மட்டு மின்றி யாருடை
    யாக்கைக்கும் அதுவே பொன்.

    பெருவான் புள்ளிகள் சிந்தும் ஒளித்துளி
    கருந்துளை கவ்வும் விடாது.

    பதிலளிநீக்கு
  5. நன்றிகள் திகழ் அவர்களே!

    வசந்த் அவர்களின் பாக்கள் மூன்றும் அருமை. குறள் தாழிசை அழகாக அமைத்துப் பாடியுள்ளீர்கள். வாழ்க.

    பதிலளிநீக்கு
  6. காலை எழுந்து கண்மூடி தியானத்தில்
    கருத்தை இருத்தல் நலம்.

    நடையும் ஓட்டமும் தினம்பயில வாழ்வில்
    அடையும் நன்மை பல

    சீராய் அருந்தி சிரித்திருந்தால் உடலும்
    நேராய் இருக்கும் உணர்.

    உடலும் மனமும் ஓய்ந்திருந்தால் வாழ்வில்
    கடலாய் பெருகும் கடன்.

    அளவாய் தூக்கம் அறுசுவை உணவு
    நலமாய் வாழும் நிலை.

    ஆட்டமும் ஓட்டமும் நன்றாம் சிருவர்க்கு
    நாட்டம் அதிலே நிறுத்து.

    பதிலளிநீக்கு
  7. நல்லபல கருத்துக்களை அழகாக வழங்கியுள்ளீர்கள். வாழ்க!

    === === === ===

    சில திருத்தங்கள்
    நடையும் ஓட்டமும் நாளும் பழகனால்
    அடையும் நன்மை பல!

    இப்படி இருத்தல் நலம் எனக்கருதுகிறேன்.

    === === === ===

    சீராய் அருந்தி சிரித்திருந்தால் உடலும்
    நேராய் இருக்கும் உணர்! ??????????????

    பொருளென்ன??? எதைச்சீராய் அருந்தினால்????? இன்றைக்கு அரசுக்கடைகளில் விற்கப்படும் மதுநீரை என எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு உண்டல்லவா!

    ஆட்டமும் ஓட்டமும் நன்றாம் சிறுவர்க்கு
    நாட்டம் அதிலே நிறுத்து!

    அருமை. இதையே சற்று மாற்றி முதியவர்களுக்குச் சொன்னால் நலமெனத்தோன்றுகிறது எனக்கு……

    அடைந்து கிடப்பதும் அழகா? முதுமைக்கு
    நடையும் ஓட்டமும் நலம்!

    பதிலளிநீக்கு
  8. நன்றிகள் ஜெரி ஈசானந்தா அவர்களே! வருக ஒத்துழைப்பைத் தருக.

    பதிலளிநீக்கு
  9. ??????????????
    ஐயோ! இனி கருத்து தெளிவாய் எழுதுகிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  10. நமைப்பிடித் தாட்டும் வாழ்வெனும் பாட்டை
    உமைநகைத் துருவாக்கி னாள் !


    இக்குறள், நமக்கு சில வாழ்வு நெறிகளுடன் கூடிய குறள் தாழிசை பாட்டுக்களை (இன்முறுவலுடன்) அளித்த உமா அவர்களையும் குறிக்கும், நம்மை தன் மாயா விலாசத்தால் வாழ்வு எனும் (கஷ்டப்) பாட்டில் போட்டு ஆட்டி முறுவலிக்கும் அன்னை உமாவையும் குறிக்கும்..

    பி.கு: ஆசான்மார்களே! இப்போதெல்லாம் முன்போல் பாவெழுத முடியவும் இல்லை, நேரமும் கிட்டாத ஒரு சூழ்நிலை; ஆனால் தினமும் பதிவர்களின் பாக்களை படித்து ரசிக்கிறேன். - உங்கள் தொண்டுக்கு வழக்கம் போல் நன்றிகள் - வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. //"அழகுதான் போங்கள்" என்பாள் பாயில்
    பழகும் போதுபம் மினால்.
    //

    வசந்தரின் வெக்கை விருந்தாகும் மனதைத்தன்
    வசந்தனில் வைத்தால் வரும்.


    தாழிட்டு, தளுக்கி ’தா’வென்றால் தமிழ்க்குறள்
    தாழிசை தருவா ரிவர்.

    பதிலளிநீக்கு
  12. அவனடியாரை வருக வருக என வரவேற்கிறேன். தங்கள் உமையாள் பா அருமை அருமை.
    =======
    தாழிட்டு தளுக்கி தாவென்றால் தமிழ்க்குறள்
    தாழிசை தருவா ரிவர்
    =======
    அருமை அருமை.

    பதிலளிநீக்கு
  13. அன்பு அவனடிமை ஐயா...

    //வசந்தரின் வெக்கை விருந்தாகும் மனதைத்தன்
    வசந்தனில் வைத்தால் வரும்.

    நீங்க ஓட்டறீங்களா இல்லை பாராட்டறீங்களா..? :)

    //தாழிட்டு, தளுக்கி ’தா’வென்றால் தமிழ்க்குறள்
    தாழிசை தருவா ரிவர்.

    ஆஹா..! கலக்கியிருக்கீங்க. ஒரே வெட்க வெட்கமா வருதுங்க..!!! :)

    பதிலளிநீக்கு
  14. ஆஹா..! கலக்கியிருக்கீங்க. ஒரே வெட்க வெட்கமா வருதுங்க..!!! :)

    வெட்கப்பட்டா எப்படி வசந்த்?

    பதிலளிநீக்கு
  15. தாழிசை தந்தவென் தலைவா நின்மனத்
    தாழிசை யருளொடு தா.

    //ஆஹா..! கலக்கியிருக்கீங்க. ஒரே வெட்க வெட்கமா வருதுங்க..!!! :) //

    நுட்பமாய் நுண்ணறிவு நையாண்டி நற்பாவை^
    வெட்கம் விலக்கிப் படி.

    ^ - ;-)

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com