வெள்ளி, 31 ஜூலை, 2009

என்றும் நிகழ்காலம் எங்கள் எதிர்காலம்! (2)


சென்ற இடுகையில் பாடலாசிரியர் அறிவுமதி அவர்களின் (மேலுள்ள) குறுங்கவிதையை வெண்பாவாக்க முயலுமாறு கோரிக்கை விடுத்திருந்தேன். உடன்பிறப்புக்கள் யாரும் அப்பணியைச் செய்ய முன்வரவில்லை. கரணியம் யான்றியேன்.

கவிஞர்கள் யாரும் முன்வராக் கரணியத்தால் அப்பணி என்தலைமேல் ஏறிக்கொண்டதால், மனதில் பெரும் அச்சம் தொற்றிக்கொண்டது. “இப்பணியைச் செவ்வனே என்னால் செய்துமுடிக்க முடியுமா?” என்று.

எனினும் முயன்றுபார்த்தேன். அப்பாவைப் பார்க்குமுன் ஓர் தெளிவு:-

பொதுவாக புதுக்கவிதைகள் தோன்றுவதற்கும், தோன்றிப் பெருவளர்ச்சிக் காண்பதற்கும் முழுமுதற் கரணியம் ஒப்பனை இன்மை எனலாம். எதையும் சுற்றிவளைத்துச் சொல்லாது, அம்புபொல் நேரடியாகத் தைக்க வேண்டும் என்பதே புதுக்கவிதையாளர்களின் போற்குரல்.

இப்படிப் போற்குரல் எழுந்தகாலத்தில் மரபுக்கவிதை தன்னைப் புதுப்பித்துக்கொண்டுள்ளது. புதுக்கவிதையாளர்களின் கருத்தை, எதிர்பார்ப்பை ஓரளவிற்கு நிறைவு செய்தும் வந்துள்ளது. இருப்பினும் முழுமையாக நிறைவுசெய்ய வில்லை. கரணியம் யாதெனில் மென்மேலும் மரபை எளிமைப் படுத்தும்போழ்து அதன் மூலத்தன்மை கெட்டுவிடுகிறது. அதனை உணர்ந்தமையால் ஓரளவிற்கு எளிமைப்படுத்துவதோடு நிறுத்திக்கொண்டனர் எனலாம்.

சரி. மேலுள்ள குறுங்கவிதைக்கான வெண்பாவைக் காணும் முன்னம் மேலும் ஓர் விளக்கம்:-

பொதுவாக ஓர் வடிவத்தில் உள்ள கவிதையை அல்லது ஓர் மொழியில் உள்ள கவிதையை, வடிவ மாற்றமோ, மொழிமாற்றமோ செய்யும் போது, மாற்றம் செய்யப்படுவதன் மூலவடிவம் என்ன சொல்கிறதோ அதை அப்படியே பதிவுசெய்யாது, மாற்றம் செய்பவர் தனது கருத்தையும் இடையிடையே ஏற்றுவதால் மூலத்தன்மைக் கெட்டு வேறோர் தோற்றத்தைக் கொண்டுவிடுகிறது.

இம்முறையில் எழுதப்புகுவது முழுக்க முழுக்க தவறேயாகும். இக் குற்றச் சாட்டிற்குக் காட்டாக மேலுள்ள குறுங்கவிதையையே எடுத்துக்கொள்ளலாம்.

அவனடிமை அவர்கள் முந்தைய இடுகையின் மறுமொழியில் உரைத்தமைப்போல, பற்பல கருத்துக்களை உள்ளடக்கியதே “செய்திகளால் கடவுளாக்கப் பட்டவனை வரலாறு மனிதனாக்கும்” கவிதை வரிகளாகும்.

இவ்வரிகளை, பேருயிரி (மகாத்மா) என அழைக்கப்படுகிற காந்திக்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். இந்துமத தலைவர் எனச்சொல்லித்திரிகிற சங்கராச்சாரியாருக்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். முத்தமிழ் அறிஞன் எனத் தன்னைச் சொல்லித்திரிபவருக்கும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். தமிழினத் தலைவர் எனத்திரிவோருக்கும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். இவ்வளவு ஏன்? எனக்கும், உங்களுக்கும், நம் அனைவருக்கும் பொருத்துப் பார்த்துக்கொள்ளும் படியான வரிகளே மேலுள்ளவை. (கவிஞர் எண்ணிச் செய்தது ஈழத்தலைவனை மனதில் எண்ணியே என்பதறிக)

இக்குறுங்கவிதைக்குப் பொருளுரைக்கப் புகுவோர், எக்கருத்தோடு அக்கவிதையைத் தொடர்பு படுத்துகிறார்களோ, அக்கருத்துக்குள் அக்கவிதை முடங்கிவிடுகிறது. பிரிதொருவன் பொருளுரைக்கப் புகும் போது, அவன் உரைக்கப் புகும் கருத்து என்கிற கட்டத்துக்கள் அடைப்பட்டுவிடுகிறது. இப்படிப் பற்பல கருத்துக்களோடு தொடர்புபட, இக்குறுங்கவிதை விளங்குவதற்குக் கரணியம் எக்கருத்தையும் வெளிப்படையாகப் பேசாது, பொதுப்படையாகப் பேசுகின்ற அத்தன்மையே!

இக்கவிதையை வெண்பா என்ற வடிவத்தில் திணிக்கும் போது, ஓர் குறிப்பிட்ட கருத்தை முதன்மைப் படுத்தி, அக்கருத்து வெளிப்படையாதல் போல் வெண்பா வார்ப்போமாயின், மூலக்கவிதையின் நேரடித் தரவிறக்கமாகாது. ஆக, மூலக்கவிதை பேசப் புகும் பொதுத்தன்மையை அப்படியே உள்வாங்கின் கொண்டு, வடிக்க விருக்கும் வெண்பாவும் பொதுத்தன்மை பேசுவதாக அமைவதே சாலச் சிறந்தது எனும் கட்டளையை மனதிற் பிறப்பித்துக் கொண்டு, பிறகே வடிவ மாற்றம் செய்யப் புகுந்தேன். குறிப்பாக புதுக்கவிதை வெறுத்தொதுக்கும் ஒப்பனை என்ற அணியை அகற்றிவிட்டு, மூலகவிஞன் எச்சொற்களைப் பெய்து கவிதை செய்தானோ? அச்சொற்களைக் கொண்டே வடிவமாற்றம் செய்வதே முறைமை எனப்பட்டதாலும், அதுவே புதுக்கவிதையாளர்களையும் மரபை விரும்ப வழிவகுக்கும் என்பதாலும் எனது மொழிநடையைச் சற்றே விலக்கி வைத்துவிட்டு மூலகவிஞனின் சொற்களைக் கொண்டே வெண்பா என்ற வடிவத்திற்குள் நுழைக்க முற்றட்டிருக்கிறேன்.

மீண்டும் மேலுள்ள குறுங்கவிதையைப் படித்தபின் கீழுள்ள குறள் வெண்பாவைக் காணவும்:-

வரலாறு மாற்றும் மனிதனாய்; செய்தித்
துறைஇறையாய்ச் செய்தவ னை!


மேலுள்ள வெண்பாவை மூலக்கவிதையின் பொதுத்தன்மையைத் தனதாக்கிக் கொண்டு, அப்பொதுத்தன்மையினின்று விலகாமல், வடிவமாற்றம் செய்ய வேண்டும் என்கிற அக்கறையால் எதுகை மோனை பொன்றவற்றை விட்டுச் சற்றே விலகியும் வந்துள்ளேன். இருப்பினும் ஓரளவேனும் வெண்பாவின் தன்மை கெடாது தோற்றங்காட்டுவதால் யாவருக்கும் விருந்தாக்கியிருக்கிறேன்.

பாலை, கலத்தில் ஊற்றிவைத்தாலும், பானையில் ஊற்றிவைத்தாலும், கோப்பையின் ஊற்றி வைத்தாலும், தேங்கிநிற்கப் பயன்படும் பொருட்கேற்ப வடிவம் மாறுபடுமே அல்லால் தன்மையால் மாறுபடாதல்லவா? அஃதேபோல் மூலம் சிதையாமல் வடிவமாற்றம் செய்தலே மூலத்தைக் காயப்படுத்தாமலும், மூலப்படைப்பாளனைக் காயப்படுத்தாமலும் இருக்க, சிறந்த வழிமுறையாகும்.

இச்சட்டத்திற்கு உட்பட்டு மேலும் ஓர் குறுங்கவிதையை வடிவமாற்றம் செய்துள்ளேன்.
கவிதையின் கருப்பொருள் இதுவே:- (நாளேட்டில் வந்த செய்தி) ஓர்திருடன் ஓர் வீட்டுள் புகுந்து பொன்பொருளைக் கொள்ளையடிக்கிறான். திருடன் திருடிய வேளையின் திருடனின் மகன் இறந்துவிடுகிறான். தான் திருடிய கரணியத்தால் ஆண்டவன், தன் மகனின் இறப்பின் மூலமாகத் தன்னை ஒறுத்துவிட்டதாக (தண்டித்துவிட்டதாக) எண்ணிக்கொண்டு, இனி அக்குற்றச்செயலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பாது, திருடிய பொருளை மூட்டையாகக் கட்டி, கூடவே ஓர் மடலையும் எழுதி (மேலுள்ள செய்தியை) காவல் நிலையத்தின் அருகில் போட்டுச் சென்றுவிட்டுச் சென்றுவிடுகிறான். இக்கருத்தை உள்ளடக்கியதாகப் பேசுகிறது கீழ்காணும் ஹைக்கூ:-

கொள்ளை மனதை
வெள்ளை மனதாக்கியது
பிள்ளை மரணம்!

மேலுள்ள குறுங்கவிதையின் படைப்பாளர் எனதருமை நண்பர் கோ. கண்ணன் ஆவார்.

இக் ஹைக்கூ உணர்த்தவரும் கருத்தை, எச்சொற்களைக் கொண்டு உணர்த்தி நிற்கிறதோ?! அச்சொற்களின் துணைகொண்டே வெண்பா என்கிற வடிவத்திற்குள் நுழைத்துக் காட்ட முடியுமா? என்கிற வேட்கையோடு உரைக்கப் புகுந்தேன். அது இப்படி உருப்பெற்றது.

பிள்ளை மரணத்தால் வெள்ளை மனமுற்றான்
கொள்ளைக் குணங்கொண்ட வன்!


கவிதைக்குறிய எக்கருப்பொருளையும் எந்த வடிவத்திற்குள்ளும் அடக்கிவிட முடியும். அது அவ்வடிவத்தைக் கையாளுபவனின் ஆற்றலைப் பொருத்தது. மேலுள்ள இரு குறுங்கவிதைகளையும், ஏறக்குறைய அவ்வக் கவிஞர்களின் சொற்களைக் கொண்டே மரபுக்குள் புகுத்த முயன்றிருக்கிறேன். வெற்றி பெற்றானா என்பது தெரியாது. முயன்றிருக்கிறேன் அவ்வளவே!

இவ்வலையில் வெண்பாப் பயிலும் நண்பர்களே! நான் வழங்கும் குறுங்கவிதையை வெண்பாவாக்க முடியவில்லை என நினைக்கத்தால் தங்களால் வெண்பா வாக்க முடியும் எனக் கருதுகிற குறுங்கவிதையில் ஒன்றை எடுத்துக்கொண்டு வடிவ மாற்றம் செய்துபார்க்கவும். ஓர் குறுங்கவிதையை அளவடி வெண்பாவாக்குகிற போது, நிறைய சொற்களை இட்டு நிறப்ப வேண்டிய கட்டாயம் இருக்கும். ஆதலால் குறள்வெண்பாவாகவோ, சிந்தியல் வெண்பாவாகவோ வழங்கமுற்படுவது சாலச் சிறந்தது.

இக்கிழமைக்கான ஈற்றடி:- பாவும் தமிழுமினிப் பாழ்!


அகரம் அமுதா

44 கருத்துகள்:

  1. பிழைபட்ட பாட்டு; பிறமொழிகள் கூட்டு
    களைசுட்டிச் சொன்னால் கடுப்பு! -மலைமுட்டிச்
    சாவுங் குருவிகளே! சத்துணவுத் தேடாவும்
    பாவும் தமிழுமினிப் பாழ்!

    பதிலளிநீக்கு
  2. இரு குறும்பாக்களும் குறள் வெண்பாக்களும் அருமை -

    //ஏறக்குறைய அவ்வக் கவிஞர்களின் சொற்களைக் கொண்டே மரபுக்குள் புகுத்த முயன்றிருக்கிறேன். வெற்றி பெற்றானா என்பது தெரியாது. முயன்றிருக்கிறேன் அவ்வளவே!//

    அன்பின் அகரம் அமுதா - இமாலய வெற்றி பெற்றிருக்கிறீர்கள் - ஐயமே இல்லை = பொருள் மாற வில்லை- சிந்தனை மாற வில்லை - வேறென்ன வேண்டும்

    நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. மறுமொழி மட்டுறுத்தப்படுகிறதா - ஒரு சோத்னை - ஏற்கனவே மறு மொழி இட்டேன் -- வரவில்லையே - அதனால்

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றிகள் சீனா அவர்களே! வருக! ஆதரவு தருக!

    பதிலளிநீக்கு
  5. ////cheena (சீனா) கூறியது...
    மறுமொழி மட்டுறுத்தப்படுகிறதா - ஒரு சோத்னை - ஏற்கனவே மறு மொழி இட்டேன் -- வரவில்லையே - அதனால்/////



    ஆம் சீனா அவர்களே! அடியேனின் மட்டுறுத்தலுக்காகக் காத்திருப்பில் இட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. கிட்டத்தட்ட அதே 'பொதுப்படையான' பொருளில், ஒரு குறள்:

    ஞாலம் மயங்கி கடவுளென் றேத்திட
    காலம் மனிதனாக் கும்

    பதிலளிநீக்கு
  7. சரி, பிடியுங்கள் ஒரு வெண்பா. மறுபடியும் கிட்டத்தட்ட அதே பொதுப்படையான பொருளையே தர முயற்சித்துள்ளேன்:

    ஆரையும் தூக்கி கடவுளென்று போற்றி
    உறைத்திடலாஞ் செய்திகள் சொற்திறனால் - தேரில்
    திருவாகி நின்றோர் மனிதராய்ப் போவர்
    சரித்திரமே சாற்றிடு முண்மை.

    தேரில் - ஆராய்ந்தால்

    பதிலளிநீக்கு
  8. அவனடிமை அவர்களின் இரு வெண்பாக்களும் சிறப்பு. வாழ்த்துக்கள். அளவியல் வெண்பாவில் சிறு மாற்றம்.

    ஆரையும் தூக்கி கடவுளெனப் போற்றி
    உறைத்திடலாஞ் செய்திகள் சொற்திறனால் - தேரின்
    திருவாகி நின்றோர் மனிதராய்ப் போவர்
    சரித்திரஞ் சாற்றுமுண் மை!

    பதிலளிநீக்கு
  9. அவனடிமை அவர்களுக்கு!

    சற்று நுட்பமாகத் தங்கள் நாலடி வெண்பாவை நோக்கவும். குறுங்கவிதை கூறவரும் பொருளைத் தங்கள் குறல்வெண்பா நேரடியாக உணர்த்துவதுபோல் நேர்ப்பொருளாக வாராமல் எதிர்மறையான கருத்தை உணர்த்திவிடுவதைக் கவனிக்கவும்.

    ////ஆரையும் தூக்கி கடவுளெனப் போற்றி
    உறைத்திடலாஞ் செய்திகள் சொற்திறனால் - தேரின்
    திருவாகி நின்றோர் மனிதராய்ப் போவர்
    சரித்திரஞ் சாற்றுமுண் மை!/////

    பதிலளிநீக்கு
  10. ஒப்பில் இறையென் றுலகமிது நம்புவதாய்ச்
    செப்ப விழைந்திடலாம் செய்திகள் -தப்பெனச்
    சாற்றும் வரலாறு தன்திறத்தால் கண்டறிந்(து)
    ஏற்றும் மனிதனென் றீண்டு!

    ஈண்டு -இவ்விடம்

    பதிலளிநீக்கு
  11. //எதிர்மறையான கருத்தை உணர்த்திவிடுவ//தாகக் சொல்வது புரியவில்லை.

    வெண்பா "செய்திகள் 'பொய்யாக' கடவுளாக்கப் பட்டவரை சரித்திரம் 'உண்மையாக' மனிதராக்கிவிடும்' என்கிறபடியால் குறுங்கவிதையின் கருத்தை கூட்டலும் கழித்தலும் இல்லாமல் அப்படியே காண்பிக்கவில்லை என்று ஒப்புக்கொள்கிறேன்.

    ஆனால் எதிர்மறையான கருத்து எப்படி வருகிறது என்பது புரியவில்லை. அது போகட்டும்.

    முக்கியமாக இதைச் சொல்ல வேண்டும்: யாரையும் புண்படுத்தும் எண்ணத்தோடு எழுதப்பட்ட வெண்பா இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அறிவுமதியின் 'என்றும் நிகழ்காலம், எங்கள் எதிர்காலம்' என்ற தலைப்பின் தாக்கம் (குறுங்கவிதையின் அல்ல) வேறு ஒரு வெண்பாவை உண்டாக்கியது. குறுங்கவிதைக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்பதால் இடவில்லை.

    தங்கள் வெண்பாத் திறனை எண்ணி இதோ முதுகில் ஒரு ஷொட்டு:

    எந்தக் கருத்தையும் வெண்பா அமுதாக்கி்த்
    தந்திடுவார் சிங்கை யமுதா.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  12. இந்த வெண்பா எழுதலாம் வாங்க!
    என்னும் வலைப்பதிவிலே படித்த‌
    இடுகையில் மிகவும் சிறந்த இடுகையை
    இது என்பேன்.

    பதிலளிநீக்கு
  13. /வரலாறு மாற்றும் மனிதனாய்; செய்தித்
    துறைஇறையாய்ச் செய்தவ னை!/

    /பிள்ளை மரணத்தால் வெள்ளை மனமுற்றான்
    கொள்ளைக் குணங்கொண்ட வன்!/

    இது தான் மொழியாக்கத்தின்
    இயல்பு, இனிமை என்பது........

    சொல்லிய‌ எண்ணத்தை
    சிதையாமல் எழுதுவது

    பதிலளிநீக்கு
  14. /
    கவிதைக்குறிய எக்கருப்பொருளையும் எந்த வடிவத்திற்குள்ளும் அடக்கிவிட முடியும். அது அவ்வடிவத்தைக் கையாளுபவனின் ஆற்றலைப் பொருத்தது. மேலுள்ள இரு குறுங்கவிதைகளையும், ஏறக்குறைய அவ்வக் கவிஞர்களின் சொற்களைக் கொண்டே மரபுக்குள் புகுத்த முயன்றிருக்கிறேன். வெற்றி பெற்றானா என்பது தெரியாது. முயன்றிருக்கிறேன் அவ்வளவே!/

    வெற்றி பெற்றிருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  15. நன்றாக வந்திருக்கிறது அகரத்தாரே!

    எழுத்து நடை எழுந்து நிர்கிறது!

    அருமை! அருமை!

    பதிலளிநீக்கு
  16. ////அவனடிமை சொன்னது…

    //எதிர்மறையான கருத்தை உணர்த்திவிடுவ//தாகக் சொல்வது புரியவில்லை. /////


    மன்னிக்க வேண்டும். பணிமனையில் இருந்தபடி படித்துவிட்டு மறுமொழி இட்டதால் உரைக்க வந்ததை விட்டுவிட்டு எதிர்மறையான பொருளைத் தருகிறது என எழுதிவிட்டேன்.

    நான் உரைக்கப் போந்தது - மூலக்கவிஞனின் கருப்பொருளிலிருந்து சற்றே தங்கள் வெண்பாவின் கருப்பொருள் திசைமாறியிருக்கிறது. அல்லது நுண்ணளவு மிகைப்படுத்தப் பட்டுள்ளது. இதைக்கூற வந்தவன் எதிர்மறையான பொருள் என எழுதிவிட்டேன் மன்னிக்க.

    /////முக்கியமாக இதைச் சொல்ல வேண்டும்: யாரையும் புண்படுத்தும் எண்ணத்தோடு எழுதப்பட்ட வெண்பா இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.//////


    புண்படுத்துவது போன்ற கருத்துக்கள் தங்கள் வெண்பாவில் இல்லை. கவலைகொள்ள வேண்டாம்.


    ///எந்தக் கருத்தையும் வெண்பா அமுதாக்கி்த்
    தந்திடுவார் சிங்கை யமுதா.////

    வாழ்த்திக் குறள்வெண்பா வார்த்தீர் வணங்கவுமை
    தாழ்ந்து பணிகின்றேன் தாள்!

    பதிலளிநீக்கு
  17. இது திகழ் அவர்களுக்கு......


    திகழமுதச் சொல்லால் திதிக்க உரைசெய்
    திகழ்!நீ திருவாய்த் திகழ்!

    பதிலளிநீக்கு
  18. மிக்க நன்றிகள் அத்திவெட்டியாரே!

    பதிலளிநீக்கு
  19. ////இது திகழ் அவர்களுக்கு......


    திகழமுதச் சொல்லால் திதிக்க உரைசெய்
    திகழ்!நீ திருவாய்த் திகழ்!/////


    இதை இப்படிச் சொல்லலாம் எனக்கருதுகிறேன்.


    திகழமுதச் சொல்லால் திகழுமுரை செய்யும்
    திகழ்!நீ திருவாய்த் திகழ்!


    குறிப்பு:-
    மூன்றாம் திகழை மட்டும் பெயர்சொல்லாக் கொண்டு மற்றவற்றை -விளங்குதல், சிறத்தல் என்னும் பொருளில் காண்க.

    பதிலளிநீக்கு
  20. எழுத முடியாத எம்மையெல்லாம் வெண்பா
    எழுதவும் செய்யவைத் தாய்.

    பதிலளிநீக்கு
  21. அகரம் அமுதாவே! ஐயுறவேன்? உன்னை
    நிகர்த்தவராய்ப் பாவலர்கள் நிறைவர்! - அகத்தினிக்க
    மேவுமவா வெற்றியுறும் மீண்டுமினி கூறாதே
    'பாவும் தமிழுமினிப் பாழ்!'

    பதிலளிநீக்கு
  22. சவுக்கடியாருக்கு! தமிழினி மெல்லச் சாகும் என்றான் பாரதி! நான் நம்பவில்லை. ஆனால் இணையத்தில் இன்று பலர் எழுதும் கட்டுரைகளையும், இடுகைகளையும் பார்த்தால் அவ்வையம் எழுகிறது. தமிழ் பாழ்பட வேண்டும் என்பதா என் எண்ணம்? தமிழை நம்மால் முடிந்த வரை ஒரு படியேனும் உயர்த்திப் பிடிக்க வேண்டுமன்றொ நம்போன்றோர் முயல்கிறோம். இப்படி ஓர் ஈற்றடியைத் தருவதால் வலைப்பதிவர்களிடம் இருந்து எத்தகைய எதிர்வினைகள் எழுகிறது எனப்பார்க்கலாம் என்பதால் வழங்கினேன்.


    பாவும் தமிழுமினிப் பாழெயென்ற ஈற்றடியைத்
    தாவற ஏனிங்கே தந்துநின்றேன்? -மேவும்
    இடுகைகளிற் கண்டவற்றை ஏற்றெழுது கின்றாரம்
    மடையர்தமிழ் வளர்ப்பாரோ? மற்று!

    பதிலளிநீக்கு
  23. பிழை நீக்கிய வெண்பா:

    அகரம் அமுதாவே! ஐயுறவேன்? உன்னை
    நிகர்த்த பலபேர் நிறைவர்! - அகத்தினிக்க
    மேவுமவா தான்நடக்கும் மீண்டுமினி கூறாதே
    "பாவும் தமிழுமினிப் பாழ்!"

    பதிலளிநீக்கு
  24. ////சவுக்கடி சொன்னது…

    அகரம் அமுதாவே! ஐயுறவேன்? உன்னை
    நிகர்த்தவராய்ப் பாவலர்கள் நிறைவர்! - அகத்தினிக்க
    மேவுமவா வெற்றியுறும் மீண்டுமினி கூறாதே
    'பாவும் தமிழுமினிப் பாழ்!'////

    ஆயினும் தங்கள் வெண்பா என் நெஞ்சைப் பிணித்தமையால் இதுபோன்ற தவறுகளை இனிச் செய்யாது பார்த்துக்கொள்கிறேன். வருக ஆதரவு தருக சவுக்கடியாரே!

    பதிலளிநீக்கு
  25. பிழைநீக்கப் பட்ட வெண்பா....


    பாவும் தமிழுமினிப் பாழெயென்ற ஈற்றடியைத்
    தாவற ஏனிங்கே தந்துநின்றேன்? -மேவும்
    இடுகைகளில் வேற்றுமொழி ஏற்றெழுது கின்ற
    மடைய(ர்)தமிழ் செய்வரோ? மற்று!

    பதிலளிநீக்கு
  26. //தமிழினி மெல்லச் சாகும் என்றான் பாரதி!

    plz check :: http://www.mazhalaigal.com/tamil/bharathi/0711-2_bharathi.html

    பதிலளிநீக்கு
  27. ஆம். வசந்த்! படித்தேன். படித்தேன். பொருளறிந்துகொண்டேன். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  28. அன்னைத் தமிழின் அருமை பெருமை
    இனிமை புதுமை உணராத நாய்களாம்
    பாவிகளின் நச்சு உதடுகள் உச்சரிக்கும்
    பாவும் தமிழுமினிப் பாழ்!

    ................................

    நன்றி அகரம் அமுதா அவர்களே

    .................................

    பதிலளிநீக்கு
  29. வெளுத்துக் கட்டியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  30. திரு.அமுதா, இந்த கட்டுரையைப் படிக்காமலே நான் சில பாகக்ளை எழுதி பின்னூட்டமிட்டுவிட்டேன். [முழுதாக இன்னும் படிக்க இயலவில்லை.காரணம் என் கணிணியில் ஏதோ பிழை.வைரஸ் தாக்கம் போலுள்ளது. தொடர்பு அறுந்துவிடுகிறது. ] இரண்டு நாட்களாய் எதுவும் எழுத முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  31. மன்னிக்கவும் தொடர்பு அறுபடுகிறது, சரி செய்து கொண்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  32. /////உமா கூறியது...

    என் கணிணியில் ஏதோ பிழை.வைரஸ் தாக்கம் போலுள்ளது. தொடர்பு அறுந்துவிடுகிறது./////

    பாழ்செய்யும் அந்தப் பருவரலை நீக்கிட
    ஆழ்ந்தூடித் தேடி அழிக்கும் அருமருந்தைத்
    தேக்கிக் கணினியைத் தெம்பூட்ட இன்றேநீர்
    ஆக்கப் பணிசெய்வீர் ஆங்கு!

    பருவரல் -துன்பம் (இங்கு இச்சொல் வைரஸைக் குறித்து நிற்கிறது)
    அருமருந்து -வைரஸை நீக்கும் ஆண்டிவைரஸைக் குறிக்கிறது.

    பதிலளிநீக்கு
  33. பாவுக்குப் பாவை பலவகையில் ஈந்தகரம்*
    பாவையாய்** ஆக்கினா னென்னை.

    * ஈந்தகரம் - ஈந்து அகரம்
    ** பாவை போல் சமைந்து நின்றேன் என்று கொள்ளலாம்

    பதிலளிநீக்கு
  34. கிருமி இவர்தரும் பாவினம் கேட்டு
    இருமி மடிந்திடும் இன்றே.

    கணினிக் கிருமி நீக்குமிவர் யாத்து
    மணக்குங் கவிதை யறி.

    பதிலளிநீக்கு
  35. அமுதா அவர்களே:
    நீங்கள் முன்பிட்ட இடுகைகளில் பதிவாகும் மறுமொழிகளை விடாமல் படித்திட 'சமீப மறுமொழிகளின் தொகுப்பை' (recent replies) தரமுடியுமா?
    நன்றி

    பதிலளிநீக்கு
  36. ////அவனடிமை கூறியது...


    பாவுக்குப் பாவை பலவகையில் ஈந்தகரம்*
    பாவையாய்** ஆக்கினா னென்னை.

    * ஈந்தகரம் - ஈந்து அகரம்
    ** பாவை போல் சமைந்து நின்றேன் என்று கொள்ளலாம்//////


    தப்பாமல் உம்மைஇளந் தாமரை மீதலரும்
    அப்பாவை போல்நன்றாய் ஆக்கியதாய் –இப்பாவில்
    செப்பினீர்; ஆயின் திரள்நாணம் விட்டென்னை
    அப்பாவாய் ஆக்க அணை!

    ஃகீ… ஃகீ… ஃகீ… தப்பா நினைக்காதீங்கோ! சும்மா……!!!!

    பதிலளிநீக்கு
  37. ////அவனடிமை கூறியது...

    அமுதா அவர்களே:
    நீங்கள் முன்பிட்ட இடுகைகளில் பதிவாகும் மறுமொழிகளை விடாமல் படித்திட 'சமீப மறுமொழிகளின் தொகுப்பை' (recent replies) தரமுடியுமா?
    நன்றி////

    அய்யா! இடுகை எழுதவும், எழுதிய இடுகையைப் பதிவிடவுமே அறிந்துவைத்துள்ளேன். ஆங்கில அறிவு அதிகமின்மையால் recent replies எப்படிச் செய்வதெனத் தெரியவில்லை. மேல் செய்திகளைத் (விவரங்களை) தெரியப்படுத்துவீராயின் செய்யக் கடமைப்பட்டுள்ளேன். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  38. அ/அ அவர்களே: எனக்கே எப்படி இடுவது என்று தெரியாது; ஆனால் நீங்களே 'அண்மை மறுமொழிகள்' இட்டுள்ளதைப் பார்க்கிறேன். மிக்க நன்றி;

    அதிலும் ஒவ்வொரு மறுமொழியின் சுருக்கத்திலும் 'இடுகையின் பெயரை' யும் சேர்த்து இடுவதற்கு, காட்டாக
    "[xyz] wrote [mmmmm] in [இடுகை பெயர்]" என்று வருவதற்கு ஒரு வழிமுறை உண்டு என்று நினைக்கிறேன் - வேறு தடவுகளில் பார்த்த நினைவு.

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  39. தங்கள்கூற்றுப்படி மாற்ற முயல்கிறேன் அவனடிமையவர்களே!

    பதிலளிநீக்கு
  40. //கிருமி இவர்தரும் பாவினம் கேட்டு
    இருமி மடிந்திடும் இன்றே.

    கணினிக் கிருமி நீக்குமிவர் யாத்து
    மணக்குங் கவிதை யறி.//

    அவனடியரே மிக அருமை.

    கிருமியல்ல எங்கணிணி தாக்கியதம் மின்சாரக்
    கோளாறே காரண மாம்.

    [power cord ஐ உடைத்து விட்டான் என் மகன்.]

    பதிலளிநீக்கு
  41. நலங்குன்றி நாடோறும் தேயும் தமிழை
    விலக்கியிங்கு வேறு மொழிபேச-இலக்கின்றி
    யாவு மழியும் பிறச்சொல் புகுந்தாலோ
    பாவும் தமிழுமினி பாழ்.

    பிற மொழி கலந்து பேசினால் தமிழ் தேயும். தமிழ் படுத்தாமல் பிறச் சொல்லை பயன்படுத்தினால் தமிழின் தனித்தன்மையும,தமிழில் மிகச் சிறந்ததான பாவின் இனிமையும் குறையும்.

    பதிலளிநீக்கு
  42. //// உமா கூறியது...

    நலங்குன்றி நாடோறும் தேயும் தமிழை
    விலக்கியிங்கு வேறு மொழிபேச-இலக்கின்றி
    யாவு மழியும் பிறச்சொல் புகுந்தாலோ
    பாவும் தமிழுமினி பாழ்.//////


    வாழ்க! வெண்பா அருமை.

    பிறச்சொல்? பிறசொல்?

    நான் நினைக்கிறேன் ஒற்றுமிகாதென்று.

    பதிலளிநீக்கு
  43. கொள்ளையால் அணைந்த பிள்ளை வெள்ளையாய்
    மீட்டியது கயவ னவனை!


    வெள்ளையாய் மீட்டியது கயவ னவனை
    கொள்ளையால் அணைந்த பிள்ளை!


    நண் பா என்னால் முடிந்தது
    தப் பா சரியா தெரியவில்லை..

    பதிலளிநீக்கு
  44. வாழ்த்துக்கள் சங்கர் அவர்களே நல்ல முயற்சி. இன்னும் முன்னேற்றம் தேவை. வாழ்க

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com