வெள்ளி, 26 ஜூன், 2009

ஈற்றெடுப்பு!

பொதுவாக, பண்டு புலவர்கள் பாக்களுள் பற்பல ஆய்வு முயற்சிகளைச் செய்து பார்த்ததுண்டு. அவற்றுள் ஒன்றே ஈற்றெடுப்பு. 'அதென்ன ஈற்றெடுப்பு?' என்கிறீர்களா? இதைத்தான் வடமொழியாளர்கள் 'அந்தாதி' என்கின்றனர்.

இவ் 'அந்தாதி' என்ற வடமொழிப் பெயருக்கு என்ன தமிழ்ப் பெயர் அமைக்கலாம் என முகவை மகனாரோடு ஆய்வுரை நிகழ்த்தியபோது 'அடிதொடர்' என்ற பெயர் 'அந்தாதி' என்ற வட சொல்லிற்கு நேர்ப்பொருளாக அமையும். ஆக 'அடி தொடர்' எனப் பெயர் சூட்டிவிடலாம் என்றார். மேலும் பற்பல சோற்களைப் பொறுத்திப் பார்த்தோம். அவற்றில் குறிப்பிடத் தக்கவை - 'அடிதொடர், அடிமுதல், அடிமுதலி போன்றவை.

இருப்பினும் அடி என்கின்ற சொல் 'வரி' -அதாவது பாவின் ஓரடியைக் குறிக்கும் ஆதலால் பாவின் இறுதிச்சொல்லைக் குறிப்பதற்கு 'ஈறு' அல்லது 'ஈற்றுச்சொல்' என வழங்கப் படுவதறிந்து நானும் எனதாசான் பாத்தென்றல் முருகடியான் அவர்களும் எண்ணிப்பார்த்து அலவலாவியபோது 'ஈற்று முதலி' அல்லது ஈற்றெடுப்பு' என அழைப்பதே சாலச்சிறந்ததாகும் எனவும், அது நேரடி வடமொழியின் மொழிபெயற்பாக இல்லாமல் முழுக்க முழுக்க தமிழுக்குறிய சொல்லாட்சியாக அமையும் எனமுடிவெடுத்து அமைக்கப் பட்டதே 'ஈற்றெடுப்பு; (அ) ஈறுமுதலி) என்னும் இப்பெயர்கள்.

இதன் இலக்கணத்தைப் பார்ப்போம். வெண்பா மற்றும் கட்டளைக் கலித்துறை போன்றவற்றில் இம்முறையைப் பின்பற்றி எழுதுவதுண்டு. எழுதப்படும் பாடலின் இறுதிச்சீரை, தொடரும் பாடலின் முதற்சீராக அமைத்தெழுதுதல் ஈற்றெடுப்பாகும்.

காட்டுகள்-

யாவர்க்கும் நல்லாளா! ஈழத் தலைமகனே!
காவலாய் வாய்த்த கதிர்க்கையா! -ஆவலாய்
எந்தமிழ் மக்களை ஏற்றணைந்து காத்தவனே!
தந்தையே தாள்பணிந்தேன் தாழ்ந்து.

தாழும் எமதினத்தைத் தாங்கித் தலைநிமிர்ந்து
வாழும் இனமாய் வகைசெய்தாய்! -பாழும்
அரியை விரட்டி அடித்த புலியே!
எரியை நிகர்ந்தாய் எழுந்து.

எழுந்த கதிர்க்கைய! ஈழத்தில் ஆடும்
உழுவக் கொடியிற் குரியோய்! -அழுந்த
விதைத்தாய் விடுதலை வேட்கையை; நாமும்
அதைத்தான் விரும்பினோம் ஆங்கு.

ஆங்கே எமதினம் ஆளும் எனுங்கருத்தைத்
தாங்கி மறப்போர் தழுவினாய்! –ஈங்குன்
புகழைப் புகலப் பொருவில் தமிழை
அகழ புகுந்தேன் அணைந்து. ---அகரம் அமுதா ---

முதற் பாவின் ஈற்றுச்சீராகிய 'தாழ்தல்' எனும் பொருளுடைய, 'தாழ்ந்து' எனுஞ்சொல் இரண்டாம் வெண்பாவின் முதல் சொல்லாய் வந்து நின்றமை நோக்குக. இப்படி நிலைப்பாடலின் இறுதிச் சொல்லும் வரும் பாடலின் முதற்சொல்லும் ஒன்றாதல் 'ஈற்றெடுப்பு' ஆகும். மேலும் நிலைப்பாடலின் இறுதி சொல் மட்டுமன்றி, இறுதிச்சீரின் முதல் எழுத்தோ அல்லது இறுதி எழுத்தோ, ஒன்றப்பாடுவதும் ஈற்றெடுப்பே ஆகும்.

காட்டுகள் -

தவறுணர்ந்து பேணத் தலைப்படு; தாயை
எவருன்போல் கொன்றார் இயம்பு!

புட்டிப்பால் ஆகும் பிரவெல்லாம் பூந்தமிழே
முட்டிப்பால் உண்ணும் முலை!


மேலிரண்டுப் பாடல்களும் தமிழைச் சீரழிக்கும் நோக்கில் மொழிக்கலப்புச் செய்வோரையும் தமிழைப் பேணாரையும் சாடி நான் எழுதிய ஈற்றெடுப்பின் இடைப்பட்ட இரண்டுப் பாடல்கள். அவற்றை உற்று நோக்குக. 'இயம்பு' என்ற முதல் குறளின் ஈற்றுச்சொல்லின் ஈற்றெழுத்தாகிய 'பு' அடுத்த பாடலின் முதல் சொல்லின் முதல் எழுத்தாகி ஈற்றெடுப்பானதை நோக்குக.

கடிது தமிழென்பார் கண்ணிலார்; தேடிப்
படித்தயலைக் காப்பார் ரிந்து!

படிக்கா தகலின் பயன்மிகக் குன்றி
விடியா மொழியாய் விடும்!


இவ்விரு பாடல்களை நோக்குக. முதற்பாடலின் ஈற்றுச்சீரின் மதலெழுத்து வரும்பாடலின் முதலெழுத்தாகி ஈற்றெடுப்பானதை நோக்கவும்.

இவ்வகையின் ஈற்றெடுப்பை முயன்று பார்க்குமாறு வேண்டுகிறேன்.

இக்கிழமைக்கான ஈற்றடி - எழுத்துப் பிழைநீக் கியன்று!

அகரம் அமுதா

சனி, 20 ஜூன், 2009

ஐகாரக் குறுக்கம்

வாசகர்களுக்கு வணக்கம்,

வெண்பா எழுதலாம் வாங்க வலைப்பதிவில் நண்பர் திரு. அகரம் அமுதா அவர்களுடன் இனி நானும் இணைகிறேன்.

இவ்வலைப்பதிவில் என் முதல் பதிவு...

வெண்பாவின் ஈற்றடியைத் தந்திட வித்தளத்திற்
கன்புடனே என்னை யழைத்தமைக் காயல்ல
இன்டமிழின் வெண்பாச் சுவையதனை எந்தமிழர்

நன்கறியச் செய்தமைக்காய் ஞாலமுள மட்டும்
சிகரங்கள் தொட்டே சிறந்தோங்கி வாழ்க
அகரம் அமுதாப் புகழ்.
-இராஜகுரு.


"ஐ" என்பது நெடில் எழுத்தே. மாத்திரை அளவில் சொன்னால் 2 மாத்திரை.
ஆனால் ஐகாரம் எல்லா இடங்களிலும் நெடிலெழுதுக்குண்டான 2 மாத்திரை அளவிலேயே ஒலிப்பதில்லை.

ஐகாரம் சொல்லின் இடையிலும் முடிவிலும் வரும் பொழுது நெடிலெழுதுக்குண்டான 2 மாத்திரை அளவிலிருந்து குறைந்து குறிலெழுதுக்குண்டான 1 மாத்திரை அளவில் ஒலிக்கும். சொல்லின் முதலில் வரும்பொழுது 1 1/2 மாத்திரை அளவு ஒளிக்கு. "ஐ" என்று தனித்து ஒலிக்கும் போதே 2 மாத்திரை அளவு ஒலிக்கும்.

இது தெரியாதவர்கள் ஐகாரத்தை இடையில் கொண்ட சொற்களை தவறாக அசை பிரித்து வெண்பாவையும் தவறாக எழுதக்கூடும்.

அதனால், ஐகாரத்தை இடையில் கொண்ட சொற்களில் ஐகாரத்தை குறிலாகவே கொண்டு அசை பிரிக்க வேண்டும்.

எ.கா


1. அகந்தையினால் - அகந் / தையி / னால் ('அகந் / தை / யினால்' என்பது தவறு)
2. அருமையினால் - அரு /மையி /னால் ('அரு / மை / யினால்' என்பது தவறு)

இந்த இரண்டு சொற்களிலுமே ஐகாரம் குறுகுவதை நன்கு கவனிக்கலாம்.

'அகந்தையினால்' என்பதற்கும் 'அகந்தயினால்' என்பதற்கும் உச்சரிப்பு ஒன்றே.
'அருமையினால்' என்பதற்கும் 'அருமயினால்' என்பதற்கும் உச்சரிப்பு ஒன்றே.

இதன் காரணம் ஐகாரம் குறுகுவதே .

ஆக, அசை பிரித்தல் என்பது எழுத்துகளைச் சார்ந்ததல்ல. எழுத்துகளின் கோர்வையினால் எழுகின்ற ஓசையைச் சார்ந்தது.

நாம் இங்கு எடுத்துக்காட்டாக பார்த்த இரண்டு சொற்களுமே ஒரு சரித்திரத்தையே சொல்லக்கூடிய இரண்டு வெண்பாக்களிலிருந்து எடுக்கப்பட்டவை.
அவை,

ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் - மாண்பற்ற
காரதுபோ லுள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்.

ஆண்டி லிளையவனென் றைய, அருமையினால்
ஈண்டின்றென் றன்னைநீ யேந்தினையால் - மாண்புற்ற
காரதுபோ லுள்ளத்தான் காந்திமதி நாதற்குப்

பாரதி சினைப் பயல்.
-மகாகவி பாரதி

இன்னும் பல எடுத்துக்காட்டுகள் இலக்கியத்தில் உண்டு.

முத்துக்
கவிப்பந்தல் முன்னே நிழல்போடப்
பித்தக் கவிதைகளைப் பேசுகிறேன் - முத்தமிழே!
பிள்ளைச் சிறுதூக்கப் பேச்சென்பேன்; என்பாடல்

வெள்ளைக் கனவின் விரிப்பு.
-கவிப்பேரரசு வைரமுத்து

பெற்றெடுத்தப் பிள்ளை பிறப்பளித்த அன்னையென
சுற்றிநிற்கும் சுற்றத்தார் யாவர்க்கும் - மற்றிவ்
வுலகினில் வாழும் உயிர்களனைத் திற்கும்
நலனே நினைப்பதாம் அன்பு.

-இராஜகுரு

இக்கிழமைக்கான ஈற்றடி - "மனம்மயக்கும் மாயத் தமிழ்"

இராஜகுரு