திங்கள், 21 ஜூன், 2010

கலிமண்டிலம்! 7

நான்கடிகள் கொண்ட பாடல்.

சீரமைப்பு முறையே- காய் + காய் + காய் + காய்

நான்கடிகளும் ஓரெதுகை பெற்று, ஒன்றாம் மூன்றாம் சீர்களில் மோனை அமையுமாறு வருதல் வேண்டும்.

இவ்வகைப் பாவைத் தரவுக் கொச்சகக் கலிப்பா என்று வழங்குவதும் உண்டு.

காட்டுப்பா

சீராரும் ஓர்மகனே! தேசுடைய என்மகனே!
பாராள வந்தவனே! பாசத்தின் பைங்கொடியே!
ஆராரோ! ஆராரோ! ஆராரோ! ஆராரோ!
ஆராரோ! ஆராரோ! ஆராரோ! ஆராரோ!

தீராத சாதிகளைத் தீர்க்கஉரு வானவனே!
பேராத மதவெறியைப் பேர்க்கவந்த மாவீரா!
வாராத ஒற்றுமையை வரவழைக்க வந்தவனே!
போராடுங் கண்மூடப் பொன்னேநீ கண்ணுறங்கு!

தாய்மொழியைக் காக்கவந்த தன்மானப் போராளா!
தாயழிவைப் போக்கஒரு தண்டெடுக்குந் தலைமகனே!
தாயகத்தைச் சீராக்கத் தயங்காத பகுத்தறிவால்
தாயமுதப் பாலருந்தித் தங்கமக னேஉறங்கு!
புலவர் அரங்க. நடராசன்

அகரம் அமுதன்

புதன், 9 ஜூன், 2010

கலிமண்டிலம்! 6

1. ஓரெதுகை பெற்ற நான்கடிகளைக் கொண்ட பாடல்.
2. சீறமைப்பு முறையே = விளம் + மா + விளம் + மா – என்றமைதல் வேண்டும்.
3. விளச்சீருக்குப் பதில் மாங்காய்ச்சீர் அருகி வருவதும் உண்டு.
4. பொழிப்பு மோனை சிறப்பு.

காட்டுப்பா

இலவயம் இன்றி எப்பொருள் இன்று
விலைகொளும் பொருளாய் விற்கிறார் கடையில்?
அலைந்திடும் மாந்தர் அவாவினைக் கண்டு
மலிந்தன காணீர் மாசுடைப் பொருளே! --- புலவர் அரங்க. நடராசன்

ஓம்புக மனதை ஓம்புக உடலை
ஓம்புக அறிவை ஓம்புவ தாலே
தீம்புகள் அனுகா! திருவதே தொடரும்
நாம்நலம் பெற்றால் நலம்பெறும் நாடே! --- அகரம் அமுதன்

ஐயிரு திங்கள் அறுசுவை தவிர்த்துப்
பையுதை மகவால் மெய்வலி பொறுத்துப்
பையந டந்து பெற்றதன் மகவைக்
கையினில் ஏந்திக் களித்திருப் பாளே! --- அகரம் அமுதன்

வெள்ளி, 4 ஜூன், 2010

கலிமண்டிலம்! 5

1. ஓரெதுகை பெற்ற நான்கடிகள் அமைந்த பாடல்.
2. சீர்கள் முறையே = கருவிளம் + கருவிளம் + கருவிளம் + புளிமா
3. ஒன்றாம் மூன்றாம் சீர்களில் மோனை
4. கருவிளத்திற்குப் பதில் கூவிளமும் அருகி வருவதுண்டு. புளிமாவுக்குப் பதில் தேமாவும் அருகி வருவதுண்டும்.

காட்டுப்பா

சிவந்தெழு கதிரவன் சிதறிடும் ஒளியில்
நிவந்தெழுங் கடலலை நிகழ்த்திடும் சதிரில்
உவந்திசை எழுப்பிடும் ஒலிக்குயில் அலகில்
கவர்ந்திருந் தொளிருவாள் கவியெனும் அழகே! --- புலவர் அரங்க. நடராசன்.


களிதரும் மதுவெனக் கரங்கொளும் எவரும்
ஒளியிழந் தறிவினொ டுடலமும் மெலிய
நளிமிகுந் துழளுவர் நவைவழி நகர்வர்
விளிவினில் நமனிடம் விழைகுவர் மடிந்தே!

குணங்கெடும், குடிகெடும் குடியினை விரும்பாய்;
பணங்கொடுத் தழிவெனும் படுகுழி விழுவாய்;
மனைதனை, மகவினை மனத்தினில் நினைந்தால்
துணையென மதுவினைத் தொடர்ந்திட ஒணுமோ? --- அகரம் அமுதன்