சனி, 29 மே, 2010

கலிமண்டிலம்! 4

1.நாற்சீரடிகள் கொண்ட நான்கடிப் பாடல்.

2.நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.

3.சீரமைப்பு – மா + புளிமா + புளிமா + புளிமா

4.ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை அமைதல் சிறப்பு.

5. ஒவ்வொரு சீரும் இறுதி அசை நெடிலாதல் வேண்டும். அல்லது குறிலொற்றெடுத்தும் வரலாம்.

காட்டுப் பாடல்கள்!

வரும்புண் டரம்வா ளியின்மார் புருவிப்
பெரும்புண் திறவா வகையே ருதிநீ
இடும்புண் டநீர்மீள் கினுமென் னுழையில்
கரும்புண் டசொல்மீள் கிலள்கா ணுதியால்! --- கம்பரா...

செஞ்சே வகனார் நிலைநீர் தெரிவீர்
மஞ்சே பொழிலே வனதே வதைகாள்
அஞ்சேல் எனநல் குதிரேல் அடியேன்
உஞ்சால் அதுதான் இழிபோ உரையீர்! --- கம்பரா...

அகரம் அமுதா

செவ்வாய், 25 மே, 2010

எழுசீர் ஆசிரிய மண்டிலம்! 2

(முன்பு வழங்காமல் விடுபட்டுப் போன எழுசீர் ஆசிரிய மண்டிலம் 2 -ஐ இப்பகுதியில் காண்போம்)

1. அடிதோறும் ஏழு சீர்களைக் கொண்டிருக்க வேண்டும்.

2. நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.

3. 1 ஆம் 5 ஆம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும். அல்லது 1 ஆம் 7 ஆம் சீர்களில் மோனை அமையலாம்.

4. தேமா, புளிமா ஆகிய மாச்சீர்கள் இரண்டும், தேமாங்காய், புளிமாங்காய் ஆகிய மாங்காய்ச்சீர்கள் இரண்டும் மட்டுமே இப்பாவில் பெற்றுவரும். இதில் தேமாங்காய் அடியின் முதற்சீரில் மட்டுமே வரும். இடையில் எங்கும் வராது.

5. சீர்கள் முறையே—
தேமாங்காய் + தேமா + புளிமாங்காய் + தேமா + புளிமாங்காய் + தேமா + புளிமா

(அல்லது)

தேமா + புளிமா + புளிமா + புளிமா + புளிமா + புளிமா + புளிமா

6. இவ்வகைப்பா முழுக்க முழுக்க வெண்டளையான் இயன்றது என்பதறிக.

7. 1ஆம் 3ஆம் 5ஆம் சீர்கள் ஈரசைச் சீர்களாகவும், மூவசைச்சீர்களாகவும் வரலாம். 2ஆம் 4ஆம் 6ஆம் 7ஆம் சீர்கள் கட்டாயம் இயற்சீர்களாகவே (தேமா, புளிமா) வர வேண்டும்.

8. ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிதல் சிறப்பு. இல்லையாயினும் குறையில்லை.

காட்டுப் பாடல்கள்!

புன்சொற்கள் தந்த பகுவாய் அரக்கன்
உரைபொய் எனாது புலர்வாள்
ன்சொற் கடந்து மடமங்கை ஏவ
நிலைதேர வந்த ருளே
ன்சொற் கடந்து தளர்கின்ற நெஞ்சம்
உடையேன் மருங்கு னியே
ன்சொற் கடந்து மனமும் தளர்ந்த
ளவீரன் வந்த இயல்பே! --- கம்பரா…

பச்சை - மோனையைக் குறிக்கிறது.
மஞ்சல் - காய்ச்சீர்களைக் குறிக்கிறது.

அகரம் அமுதா

சனி, 22 மே, 2010

கலிமண்டிலம்! 3

நான்கடிகள் கொண்ட பாடல் முறையே – குறிலீற்றுமா + கூவிளம் + குறிலீற்றுமா + கூவிளம். ஒன்றாம் மூன்றாம் சீர்களின் மோனை அமைதல் வேண்டும்.

காட்டுப் பாடல்கள்!

ஒழுக்கம் என்பதை உரியின் மேலதாய்
வழுக்கல் இன்றியே காத்து வாழ்பவர்
தழைக்கும் ஓர்புகழ் தாங்கு வாரவர்
இழுக்கம் ஏற்படின் ஈவர் தம்முயிர்! --- புலவர் அரங்க. நடராசன்

நெஞ்சில் மாசினை நிறைத்து வைத்திடல்
நஞ்சைப் பாலினில் நயந்து சேர்ப்பதாம்
நெஞ்சில் நல்லதே நிறைந்து நிற்பதால்
எஞ்சும் இன்பினுக் கெல்லை இல்லையே! --- அகரம் அமுதா

உன்னில் மிக்கவர் ஊரில் ஆயிரம்
உன்னை மேலென உள்ளல் தப்படா!
எண்ணிப் பார்த்திடின் யாரும் யார்க்குமே
சின்ன வர்இலர் சிந்தித் துய்கவே! --- அகரம் அமுதா

அகரம் அமுதா

ஞாயிறு, 16 மே, 2010

கலி மண்டிலம்! 2

இப்பாடத்தில் கலிமண்டிலத்தின் இரண்டாம் வகையைப் பற்றி அறியவிருக்கின்றோம். மண்டிலங்களைப் பொருத்தவரை நான்கடிகளே வர வேண்டும் என்பது நாம் அறிந்ததே! இவ்வகை, நான்கடிகளும் ஓரெதுகை பெற்று வர வேண்டும்.

சீரமைப்பு முறையே

விளம் + விளம் + குறிலீற்றுமா + கூவிளம் -இவ்வாரே நான்கடிகளும் அமைய வேண்டும். குறிலீற்றுமா வின் இடத்தில் சிறுபான்மையாக குறில் ஒற்றீற்று மாவாகவும் வரலாம்.

இவ்வகைப் பாவைப் பொருத்த மட்டில் ஒன்றாம் மூன்றாம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.

காட்டுப் பாடல்

விலங்குகள் யாவுமே விரும்பித் தாம்பெறும்
நிலந்திகழ் குட்டிகள் நாடி உண்டிட
வளந்தரும் தம்மடி மண்டும் பாலினைக்
கலந்ததோர் அன்புடன் ஊட்டக் காண்கிறோம்! --- புலவர் அரங்க. நடராசன்

இப்பாடலை உற்று நோக்குக. முதல் மூன்றடிகளில் மோனை ஒன்றாம் மூன்றாம் சீர்களில் அமைந்திருக்க, நான்காம் அடியில் ஒன்றாம் நான்காம் சீரில் மோனை அமைந்துள்ளது. இவ்வாறும் மோனை அமையலாம்.

மொனை பற்றி நாம் முன்பே அறிந்திருக்கின்றோம்.

முதலிரு சீரிணை, முதலிருந்து ஒன்றிரண்டு
இடையீடு பொழிப்பொரூஉ
ஈறிலி கூழை முதலீ றழலில
மேல்கீழ்க் கெதுவாய் முழுவதும் முற்றே
கடையிரு சீரிணை கடமூன்று கீழை
இடையிரண் டிடைபுனர்
இரண்டும் நான்கும் பின்னெனப் படுமே!

இது தொல்காப்பியம் இப்பாவை நன்கு மனதில் வைத்துக்கொண்டால் மோனை, எதுகைகளை எங்கெங்கு அமைக்கலாம் என்பது பற்றிய தெளிவு கிடைத்துவிடும்.

மலைகளும் மரங்களும் மணிக்கற் பாறையும்
அலைபுனல் நதிகளும் அருவிச் சாரலும்
இலைசெறி பழுவமும் இனிய சூழலும்
நிலைமிகு தடங்களும் இனிது நீங்கினார்! --- கம்பராமாயணம்.

இப்பாவிலும் நான்காம் இடியின் மோனை ஒன்றாம் நான்காம் சீர்களில் அமைவதை நோக்குக.

அகரம் அமுதா

திங்கள், 10 மே, 2010

கலிமண்டிலம் -1

ஆசிரிய மண்டிலங்களில் எண்சீர் மண்டிலம் வரை பார்த்தோம். அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்ட ஆசிரிய மண்டிலங்கள் தற்காலத்தில் பாடப்படவில்லை. அல்லது போற்றப்பட வில்லை எனலாம். ஆதலால் அடுத்த படியாக நாம் கலிமண்டிலம் பற்றி அறிந்துகொள்ளலாம் எனக்கருதுகின்றேன்.

கலிப்பா பற்றி முன்பே படித்திருக்கின்றோம். ஆதலால், நேரடியாக கலிமண்டிலம் பற்றி அறியப்புகலாம்.

கலிமண்டிலம் எழுதுவதற்கான விதிகள்-

1.நாற்சீரடிகள் கொண்ட நான்கடிப் பாடல்.

2.நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.

3.சீரமைப்பு 1ஆம் சீர் முதல் 4ஆம் சீர் வரை முறையே
குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம்

4. 2ஆம் 3ஆம் தளைகள் மாமுன் நிறை, விளமுன் நேர் என வெண்டளையாகவும் வரும், மாங்காய்ச்சீரும் அருகிவரும்.

5.ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை அமைதல் சிறப்பு. (நேரால் தொடங்கும் இவ்வகைப் பாடலில் ஒற்று நீங்கலாக 11 எழுத்துக்களும், நிரையால் தொடங்கும் பாடலில் 12 எழுத்துக்களும் இருக்கும் என்பதை உணரலாம்.)

6.கூவிளம் வரும் இடங்களில் மாங்காய்ச்சீர் அருகிவருவதும் உண்டு.

7.குறில் ஈற்றுமா என்பது குறில் ஒற்று ஈற்று மாவாகவும் வரலாம். அதாவது – ‘காலம்’, ‘மாதம்’, ‘வணக்கம்’ – இவற்றிலுள்ள ‘லம்’, ‘தம்’, ‘கம்’ போன்றவற்றைக் கவனிக்க.

காட்டு

காவி யோகய லோஎனும் கண்ணினைத்
தேவி யோதிரு மங்கையின் செல்வியாள்
பாவி யேனையும் பார்க்குங்கொ லோஎனும்
ஆவி யோயினும் ஆசையின் ஓய்விலாள்.

-கம்பராமாயணம்.

மேலுள்ள பாடலில் மூன்றாமடியின் மூன்றாம் சீரை நோக்குக. ‘பார்க்குங்கொல்’ எனக் காய்ச்சீராக அருகி வரந்துள்ளது.

==== ==== ==== ==== ==== ====
==== ==== ==== ==== ==== ====

கணவன் வீட்டுளார் காட்டிடும் தீங்கினால்
மனைவி யானநீ மாயநி னைப்பதோ?
உனக்கும் கையிரண் டுள்ளன சொந்தமாய்
நினைத்துப் பாரடி நீஇவண் வாழலாம்!

புலவர் அரங்க. நடராசன்.

இப்பாடலின் மூன்றாம் நான்காம் அடியின் முதற்சீர்கள், குறிலொற்று மாவாக வந்துள்ளமையையும் நோக்குக.

==== ==== ==== ==== ==== ====
==== ==== ==== ==== ==== ====


முனிவர் வந்து முறைமுறை மொய்ப்புற
இனிய சிந்தை இராமனும் ஏகினான்
அனிய வெஞ்சமத்(து) ஆருயிர் போகத்தான்
தனியி ருந்த உடலன்ன தையல்பால்.

கம்பராமாயணம்.

மேலுள்ள பாவின் முதலடியின் இரண்டாம் மூன்றாம் சீர்களின் தளையை நோக்குக. 'வந்து முறைமுறை' - மாமுன் நிறை (கருவிளம்) வந்திருக்கிறது. இரண்டாம் சீர் கூவிளமாக அமையாமல் தேமாவாக அமைந்ததால் மூன்றாம் சீர் கூவிளமாக அமையாமல் கருவிளமாக அமைந்திருக்கிறது. அதுபோலு காய்ச்சீர்கள் 3 வந்திருப்பதையும் நோக்குக.

==== ==== ==== ==== ==== ====
==== ==== ==== ==== ==== ====


விண்ணின் நீங்கிய வெய்யவர் மேனியில்
புண்ணின் நீரும் பொடிகளும் போயுக
அண்ணல் வீரனைத் தம்பியும் அன்னமும்
கண்ணின் நீரினில் பாதம் கழுவினார்.

கம்பராமாயணம்.

இப்பாடலின் நான்காமடியின் மூன்றாம் சீர் கூவிளமாக அமையாமல் தேமாவாக அமைந்தமையால் இறுதிச்சீரும் கூவிளமாக அமையாமல் கருவிளமாக அமைந்ததை நோக்குக.

அகரம் அமுதா

வெள்ளி, 7 மே, 2010

சங்கத் தமிழனைத்தும் தா!

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி நடைபெறும் உலகளாவிய கவிதைப் போட்டியில் பங்கேற்போர் மின்னஞ்சலிலும் தங்களது கவிதைகளை அனுப்பி வைக்க

ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கோவையில் ஜூன் 23-ம் தேதி தொடங்கவுள்ள, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி "சங்கத் தமிழ் அனைத்தும் தா' என்ற தலைப்பில் உலகளாவிய கவிதைப் போட்டி நடத்தப்படுகிறது.

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையிலான பொது அரங்க நிகழ்ச்சிகள் அமைப்புக் குழு சார்பில், இப்போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரூ.3.2 லட்சம் பரிசு அளிக்கப்படுகிறது.


கவிதைகளை அனுப்ப வயது வரம்பு கிடையாது. ஒரு பக்க அளவில் 24 வரிகளுக்கு மிகாமல் கவிதை இருக்க வேண்டும். கவிதை, மரபுக் கவிதையாகவோ, புதுக் கவிதையாகவோ இருக்கலாம்.


கவிதைகளை மின்னஞ்சலில் அனுப்புவோருக்கு என தனியாக மின்னஞ்சல் முகவரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தபால் மற்றும் மின்னஞ்சலில் அனுப்புவோர் மே 20-ம் தேதிக்குள் கவிதைகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


மின்னஞ்சல் முகவரி: ul​ag​al​aviy​ak​avith​aipotti​@gm​ail.com,​​ pothu​ar​ang​am@ gm​ail.com​


இவ்வாய்ப்பை அனைவரையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகின்றேன். நன்றிகள்