ஆசிரிய மண்டிலங்களில் எண்சீர் மண்டிலம் வரை பார்த்தோம். அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்ட ஆசிரிய மண்டிலங்கள் தற்காலத்தில் பாடப்படவில்லை. அல்லது போற்றப்பட வில்லை எனலாம். ஆதலால் அடுத்த படியாக நாம் கலிமண்டிலம் பற்றி அறிந்துகொள்ளலாம் எனக்கருதுகின்றேன்.
கலிப்பா பற்றி முன்பே படித்திருக்கின்றோம். ஆதலால், நேரடியாக கலிமண்டிலம் பற்றி அறியப்புகலாம்.
கலிமண்டிலம் எழுதுவதற்கான விதிகள்-1.நாற்சீரடிகள் கொண்ட நான்கடிப் பாடல்.
2.நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
3.சீரமைப்பு 1ஆம் சீர் முதல் 4ஆம் சீர் வரை முறையே
குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம்
4. 2ஆம் 3ஆம் தளைகள் மாமுன் நிறை, விளமுன் நேர் என வெண்டளையாகவும் வரும், மாங்காய்ச்சீரும் அருகிவரும்.
5.ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை அமைதல் சிறப்பு. (நேரால் தொடங்கும் இவ்வகைப் பாடலில் ஒற்று நீங்கலாக 11 எழுத்துக்களும், நிரையால் தொடங்கும் பாடலில் 12 எழுத்துக்களும் இருக்கும் என்பதை உணரலாம்.)
6.கூவிளம் வரும் இடங்களில் மாங்காய்ச்சீர் அருகிவருவதும் உண்டு.
7.குறில் ஈற்றுமா என்பது குறில் ஒற்று ஈற்று மாவாகவும் வரலாம். அதாவது – ‘காலம்’, ‘மாதம்’, ‘வணக்கம்’ – இவற்றிலுள்ள ‘லம்’, ‘தம்’, ‘கம்’ போன்றவற்றைக் கவனிக்க.
காட்டுகாவி யோகய லோஎனும் கண்ணினைத்
தேவி யோதிரு மங்கையின் செல்வியாள்
பாவி யேனையும் பார்க்குங்கொ லோஎனும்
ஆவி யோயினும் ஆசையின் ஓய்விலாள்.
-கம்பராமாயணம்.மேலுள்ள பாடலில் மூன்றாமடியின் மூன்றாம் சீரை நோக்குக. ‘பார்க்குங்கொல்’ எனக் காய்ச்சீராக அருகி வரந்துள்ளது.
==== ==== ==== ==== ==== ====
==== ==== ==== ==== ==== ====
கணவன் வீட்டுளார் காட்டிடும் தீங்கினால்
மனைவி யானநீ மாயநி னைப்பதோ?
உனக்கும் கையிரண் டுள்ளன சொந்தமாய்
நினைத்துப் பாரடி நீஇவண் வாழலாம்!
புலவர் அரங்க. நடராசன்.இப்பாடலின் மூன்றாம் நான்காம் அடியின் முதற்சீர்கள், குறிலொற்று மாவாக வந்துள்ளமையையும் நோக்குக.
==== ==== ==== ==== ==== ====
==== ==== ==== ==== ==== ====முனிவர் வந்து முறைமுறை மொய்ப்புற
இனிய சிந்தை இராமனும் ஏகினான்
அனிய வெஞ்சமத்(து) ஆருயிர் போகத்தான்
தனியி ருந்த உடலன்ன தையல்பால்.
கம்பராமாயணம்.மேலுள்ள பாவின் முதலடியின் இரண்டாம் மூன்றாம் சீர்களின் தளையை நோக்குக. 'வந்து முறைமுறை' - மாமுன் நிறை (கருவிளம்) வந்திருக்கிறது. இரண்டாம் சீர் கூவிளமாக அமையாமல் தேமாவாக அமைந்ததால் மூன்றாம் சீர் கூவிளமாக அமையாமல் கருவிளமாக அமைந்திருக்கிறது. அதுபோலு காய்ச்சீர்கள் 3 வந்திருப்பதையும் நோக்குக.
==== ==== ==== ==== ==== ====
==== ==== ==== ==== ==== ====விண்ணின் நீங்கிய வெய்யவர் மேனியில்
புண்ணின் நீரும் பொடிகளும் போயுக
அண்ணல் வீரனைத் தம்பியும் அன்னமும்
கண்ணின் நீரினில் பாதம் கழுவினார்.
கம்பராமாயணம்.இப்பாடலின் நான்காமடியின் மூன்றாம் சீர் கூவிளமாக அமையாமல் தேமாவாக அமைந்தமையால் இறுதிச்சீரும் கூவிளமாக அமையாமல் கருவிளமாக அமைந்ததை நோக்குக.
அகரம் அமுதா