ஓர் ஒலி ஒழுங்கிற்குட்பட்டு எழுதும் பாவை இசைப்பா என்றால் அது மிகையாகாது. குறிப்பாக இவ்வகைப் பாக்கள் எழுதும் போது தளைகளைப் பற்றிக் கவலைப் படத்தேவையில்லை. ஓசை ஒழுங்கிருந்தால் போதும். சிந்து, நொண்டிச் சிந்து போன்றவை இசைப்பாக்களே!
இப்பகுதியில் மிகவும் எளிமையான முறையில் எழுதப்படும் இசைப்பாடல்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
மதியுரை!
தேய்ந்து தேய்ந்து
தொலைந்த நிலாவும்
தோன்றி வளர்வது கண்டாயா? -அது
தேய்ந்து தொலைந்தும்
தோன்றி வளர்ந்தும்
தரும்மதி யுரைதனைக் கொண்டாயா?
வளரும் போதும்
மதியிழந் தேசிறு
வழியும் மாறிச் செல்வதில்லை -அது
தளரும் போதும்
தன்னை மறந்து
தடத்தை மாற்றிக் கொள்வதில்லை!
கொடுக்கக் கொடுக்கக்
குன்றும் குறையும்
கோள நிலாவும் குறைகிறது -தனை
எடுத்துக் கொடுத்த
இளைய நிலாவின்
இசையே பிறையாய் நிறைகிறது!
முயன்றால் நிச்சயம்
ஏற்ற மென்பதே
பிறைவளர்ந் துணர்த்தும் மதியுரைகாண் -நாம்
முயலா விட்டால்
வீழ்ச்சி யென்பதை
முழுமதி தேய்ந்தே உரைப்பதுகாண்!
இல்லை என்னும்
இருளை ஓட்ட
இளைய நிலாபோல் ஈந்துவிடு -நீ
தொல்லை காணா
திருக்க வேண்டின்
ஈயும் போதே ஆய்ந்துகொடு! -அகரம் அமுதன்.
இப்பாடல்,
இயற்சீர் +இயற்சீர் இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர் + காய் =ஓரசைச்சொல்,
இயற்சீர் +இயற்சீர் இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர் + காய்!
ஈற்றுச்சீர் (7-ஆம் சீர்) இழைபுத்தொடை அமைதல் சிறப்பு. இப்படியே அனைத்து வரிகளையும் இயற்றுதல் ஒருவகை இசைப்பாவே. முயலுக.
அகரம் அமுதன்