திங்கள், 22 டிசம்பர், 2008

33.வேற்றுப்பொருள் வைப்பணி!

கவிஞன் தான் கூறவிரும்பும் சிறப்புப் பொருளை உலகமறிந்த பொதுப்பொருளைக் கொண்டு விளக்கிக் கூறுவது வேற்றுப்பொருள் வைப்பணியாம்.

பராவரும் புதல்வரைப் பயத்த யாவரும்
உராவரும் துயரைவிட் டுறுதி காண்பரால்
விராவரும் புவிக்கெலாம் வேதமே அன்ன
இராமனைப் பயந்தஎற் கிடருண்டோ? என்றாள்!

பொருள்:-



வணங்கத்தக்க சிறந்த புதல்வரைப் பெற்ற யாவரும் துன்பம் நீங்கி நன்மை பெருவர் என்பது உலகறிநந்த பொதுப்பொருள். அப்பொதுப்பொருளைக் கொண்டு பாரெலாம் வேதமெனப் போற்றும் இராமனைப் பிள்ளையாகப் பெற்ற எனக்குத் துன்பம் உண்டோ? (இல்லை)எனும் சிறப்புப் பொருளைக் கைகேயி மந்தரையிடம் விளக்குகிறாள்.

ஆகவே இப்பாடல் வேற்றுப்பொருள் வைப்பணி.

ஒற்றுமிகுமிடங்கள்!

16.இரண்டாம் வேற்றுமை விரியில் வலிமிகும்.

இரண்டாம் வேற்றுமை உருபு:- ஐ

கண்ணனை திட்டினேன் - கண்ணனைத்திட்டினேன்.

கந்தனை பார்த்தேன் -கந்தனைப்பார்த்தேன்.

விலக்கம்:-
உருபுதெரிய எழுதுவது வேற்றுமைவிரி எனப்படும். உருபு மறைய எழுதுவது வேற்றுமைத்தொகையாகும்.

காட்டு:-

வீடு கட்டினேன் -வேற்றுமைத் தொகை
வீட்டைக் கட்டினேன் -வேற்றுமைவிரி

17.இரண்டாம் வேற்றுமைத் தொகையில் மிக அருகி சிறுபான்மையாக வலிமிகும்.

காட்டு:-

மக பெற்றான் -மகப்பெற்றான். மகவைப் பெற்றான் என வேற்றுமைவிரியிலும் தொகையிலும் வலிமிகுந்தது காண்க.

பாட்டு கேட்டான் -பாட்டுக் கேட்டான். பாட்டைக் கேட்டான்
பூ தொடுத்தான் -பூத்தொடுத்தான். பூவைத்தொடுத்தான்.

18.இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையின் முன் வலிமிகும்.

காட்டு:-

தயிர்ப்பானை -தயிரை உடைய பானை எனப்பொருள்படும். இத்தொடரில் தயிரை எனும்பொழுது "ஐ" உருபும் "உடைய" என்ற பயனும் உருசேரத்தொக்கி வருவதால் இஃது உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆகும்.

சொறி தவளை -சொறித்தவளை
சென்னை கடற்கரை -சென்னைக் கடற்கரை

19.மூன்றாம் வேற்றுமைத் தொகையில் வலிமிகும்.

சுறா பாயப்பட்டான் -சுறாப்பாயப்பட்டான். இத்தொடரில் சுறாவால் பாயப்பட்டான் என்பது பொருள். ஆல் எனும் மூன்றாம் வேற்றுமை உருபு தொகையில் உள்ளது.

20.மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வலிமிகும்.

பட்டு துணி -பட்டுத்துணி. பட்டினால் நெய்த துணி என்பது பொருள். ஆல் எனும் உருபும் நெய்த எனும் பயனும் தொகையாதலால் வலிமிகுந்தது.

இக்கிழமைக்கான ஈற்றடி:- நங்கைக்கு நாணம் நயம்!

அகரம்.அமுதா

திங்கள், 15 டிசம்பர், 2008

32.வேற்றுமையணி!

இருபொருள்களின் ஒற்றுமையைக் கூறியபின் அவற்றை வேற்றுமைப் படுத்திக் கூறுவது வேற்றுமையணியாம்.

காட்டு:-
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு!


தீபட்டால் பிறரது உடலில் புண்ஏற்படும். அதுபோலவே நாவும் பிறரைச் சொல்லால் சுடும். சுடும்தன்மையால் தீயும் நாவும் ஒருதன்மையுடையதே. ஆயினும் தீவடு ஆறிவிடும். நாவடு ஆறா.

தீ மற்றும் நாவின் செயல்கள் ஒருதன்மையதே யாயினும் அதனால் விளையும் வினைகளில் மாறுபாடுடையமையால் இவ்வணி வேற்றுமையணியாம்.


வலிமிகும் இடங்கள்!

11.நெடில்தொடர் உயிர்த்தொடர் குற்றியலுகரங்களின் அடுத்து டற சொற்கள் இரட்டித்தால் வலிமிகும்.

காட்டு:-
வீடு பாடம் -வீட்டுப்பாடம்
காடு புலி –காட்டுப்புலி
மாறு கருவி –மாற்றுக்கருவி
சோறு பயல் -சோற்றுப்பயல்

குறிப்பு:-
இதில் மெல்லினத்திற்கும் இடையினத்திற்கும் முன்னால் சொற்கள் இருக்குமானால் வலிமிகா.

காட்டு:-
எருது மாடு –எருத்துமாடு
நாடு மரம் நாட்டுமரம்
வீடு நாய் -வீட்டுநாய்

12.அகர இகர ஆய் போய் முதலிய வினையெச்சங்களை அடுத்தும் வலிமிகும்.

காட்டு:-
வர போனார் –வரப்போனார்.
விளக்கம்:- ர் அ-ர இது அகர வினையெச்சம் என நினைவிற் கொள்க.

உலாவ சொன்னான் -உலாவச்சொன்னான்
தேட சொன்னேன் -தேடச்சொன்னேன்.

வாடி போனான் -வாடிப்போனான்.

ட் இ-டி இது இகர வினையெச்சமென்பதை நினைவிற்கொள்க.

கூறி சென்றான் -கூறிச்சென்றான்
கூடி செல்வோம் -கூடிச்செல்வோம்.

ஆய் எனமுடியும் வினையெச்சத்தை அடுத்து வலிமிகும்.

வந்ததாய் சொல் -வந்ததாய்ச்சொல்.
பரிவாய் பார் –பரிவாய்ப்பார்.

பரிவு ஆய் பார்-ஆய் வருமிடங்களில் வலிமிகுவதைக் காண்க.

போய் என்னும் வினையெச்சத்தின் பின்னும் வலிமிகும்.

போய் சொல் -போய்ச்சொல்
போய் பார் –போய்ப்பார்.

13.எட்டு பத்து என்னும் எண்ணுப்பெயரை அடுத்து வரும் சொற்களின் வலிமிகும்.

காட்டு:-
பத்து பாட்டு –பத்துப்பாட்டு.
எட்டு தொகை –எட்டுத்தொகை.

14. ண்டு ந்து ம்பு எனவரும் மென்தொடர்க் குற்றியலுகரத்தின் முன்வலிமிகும்.

காட்டு:-
குண்டு பையன் -குண்டுப்பையன்.
தண்டு கீரை –தண்டுக்கீரை
உணர்ந்து பார் –உணர்ந்துப்பார்.
நடந்து செல் -நடந்துச்செல்
பாம்பு பல் -பாம்புப்பல்.

15. ஒரெழுத்தொருமொழி அஃறிணைப் பெயர்மென் வல்லினம் வந்தால் வலிமிகும்.

காட்டு:-
ஆ சொல் -ஆச்சொல்
கோ பாய்ந்தது –கோப்பாய்ந்தது.
ஈ கடித்தது -ஈக்கடித்தது.

இக்கிழமைக்கான ஈற்றடி: - தண்ணென மாறும் தழல்!

ஆகரம்.அமுதா

திங்கள், 8 டிசம்பர், 2008

31.பிறிது மொழிதல் அணி!

உவமானத்தைக் கூறி விட்டு உவமேயத்தைக் கூறாமல் விட்டுவிடுவது பிறிது மொழிதல் அணியாகும்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுந்துப் பெயின்!


உவமானம்:-
மென்மையான மயிலிறகு ஏற்றப்பட்ட வண்டியே யாயினும் இறகினை அளவிற்கு அதிகமாக ஏற்றினால் அவ்வண்டியின் வலிய அச்சும்முறிந்துவிடும்.

உவமேயம்:-
எத்துணை வலிமையான போற்படையை உடைய மன்னனாக இருப்பினும் எதிரிகளை வென்றுவிடலாம் என்று ஒன்றன்பின் ஒன்றாய்த் தொடர்ச்சியாகப் போர்நடத்துவானாயின் அது அவனுக்குத் தோல்வியிலேயே முடியும்.

பாடலில் உவமானம் குறிப்பிடப்பட்டு உவமேயம் கூறப்படாமல் மறைக்கப்பட்டுள்ளது.

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்படை
நாகம் உயிர்ப்பக் கெடும்!

உவமானம்:-
எலிகளான பகை கூடிக் கடல்போல் ஒலியெழுப்பினாலும் என்ன தீமை உண்டாகும்? பாம்பானது மூச்சுவிட்ட அளவில் அவையெல்லாம் அழிந்துவிடும்.

உவமேயம்:-
நெஞ்சுரமற்ற போற்பயிற்சியற்ற பெரும்படையானது திரண்டு வந்து போரிடினும் நெஞ்சுரம் மிக்க சிறுபடையிடம் தோற்றழிந்துவிடும்.


சிறப்புப்பாடம் - ஒற்று மிகுமிடங்கள்!

6) அத்துணை இத்துணை எத்துணை- எனவரும் அளவுகுறிக்கும் சொல்லுடன் கூடிய சுட்டுவினாக்களின் முன்னம் வலிமிகும்;

காட்டு:-
அத்துணை +பெரியது – அத்துணைப்பெரியது
இத்துணை +சிறியது - இத்துணைச்சிறியது
எத்துணை +செலவு – எத்துணைச்செலவு

7) என இனி ஆக போல விட ஆய் மற்ற மற்றை – போன்ற அகர இகர ஐகார ஈற்று வினை எச்சங்களின் பின் வலிமிகும்.

காட்டு:-
நன்றென +சொன்னாள் - நன்றெனச்சொன்னாள்
இனி +செல் - இனிச்செல்
அவனாக +பேசினான் - அவனாகப் பேசினான்
புலிபோல +பாய்ந்தான் - புலிபோலப் பாய்ந்தான்
நஞ்சைவிட +கொடியது – நஞ்சைவிடக்கொடியது
போவதாய் +சொன்னான் - போவதாய்ச்சொன்னான்
உருவமற்ற +கதை – உருவமற்றக்கதை
மற்றை +பொருள் - மற்றைப்பொருள்

8) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின்பின் வலிமிகும்
காட்டு:-
அறியா +பிள்ளை – அறியாப்பிள்ளை
காணா +பொருள் - காணாப்பொருள்
(குறிப்பு:- காணாத அறியாத த- ஈறுகெட்டது)

9) வன்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்துவரும் வேற்றுமைப் புணர்ச்சியிலும் அல்வலிப் புணர்ச்சியிலும் வலிமிகும்.

காட்டு:-
வேற்றுமைப்புணர்ச்சி:-
மாட்டின் +கொம்பு - இன் உருபு கெட்டு மாட்டுக்கொம்பு எனவரும்.
கொக்குத்தலை – கொக்கின் +தலை
ஆட்டின் +காம்பு –ஆட்டுக்காம்பு

அல்வலிப் புணர்ச்சி:-
பருப்பு +உடைய +சட்டி –என்பது பருப்புச்சட்டி எனவரும்
காய்கறிக்கடை – கய்கறிகளை உடைய கடை
கிழக்குத்திசை –கிழக்காகியதிசை

க்கு ச்சு ட்டு த்து ப்பு ற்று –என வல்லினம் இரட்டுறும் சொற்களையடுத்து வரும் கசதப எழுத்துகளையுடைய வினைச்சொற்களின் முன்வலிமிகும்.

செத்து +போ – செத்துப்போ
கற்று +தா – கற்றுத்தா
விட்டு +தா – விட்டுத்தா
இச்சு +தா - இச்சுத்தா
ஏற்று +கொள் - ஏற்றுக்கொள்

10) தனிக்குறிலைச் சார்ந்து வரும் முற்றியலுகரத்தின் பின் வலிமிகும்;

காட்டு:-
திரு +குறள் - திருக்குறள்
திரு +புகழ் - திருப்புகழ்
தெரு +கோடி – தெருக்கோடி

இக்கிழமைக்கான ஈற்றடி:- வன்முறையை வேரறுப்போம் வா!

அகரம்.அமுதா

செவ்வாய், 2 டிசம்பர், 2008

30. தற்குறிப்பேற்றணி!

உலகில் நிகழும் இயல்பான நிகழ்வைக் கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் குறிப்பிடுவதே தற்குறிப்பேற்றணியாம்.

இருநோக்(கு) இவளுண்கண் உள்ள(து) ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து!


பொருள்:- இவளுடைய மையுண்ட கண்களுக்கு இருவகையான பார்வைத்தன்மைகள் உண்டு. ஒன்று நோய் செய்யும். மற்றொன்று அந்நோய்க்கு மருந்தாகும்.

கண்கள் அனைத்துயிர்களுக்கும் பொதுவானவை. அதில் பார்வை என்பது இன்றியமையாதது. அப்பார்வை நோய்செய்வதாயும் நோய்க்கு மருந்தாவதாயும் உரைப்பது தற்குறிப்பேற்றணி வகையாகும்.

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்!


பொருள்:- அனிச்சம் பூவும் அன்னப்பறவையின் இறகும் பெண்ணின் தாள்களுக்கு முள்ளுடன் கூடிய நெருஞ்சிப் பழம் போல வருத்தும்.

பெண்ணின் தாள்கள் மென்மை பொருந்தியவையே. ஆயினும் அனிச்சமும் அன்னத்தின் இறகும் அதனினும் மென்மை வாய்ந்தன என்று யாவரும் அறிவர். ஆயினும் கவிஞன் இயற்கைக்கு மாறாக தன்குறிப்பை ஏற்றி உரைக்கிறார்.

மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற
மாட்டா திடையென்று வாய்விட்டு -நாட்டேன்
அலம்புவார் கோதை அடியிணையில் வீழ்ந்து
புலம்புமாம் நூபுரங்கள் பூண்டு!

பொருள்:-அவளின் நுண்ணிய இடையானது பருத்துயர்ந்த அவளது இளங்கொங்கைகளை முற்றவும் சுமந்து நிற்கும் வலிமையுடையது ஆகமாட்டாதென்று அவளுடைய காலிலே விளங்கும் நூபுரங்கள் புதிய தேன் அலம்பிக் கொண்டிருக்கும் நீண்ட கூந்தலுடைய அவளின் இருகழல்களிலும் தாழ்ந்து கிடந்து எந்நோரமும் வாய்விட்டுப் புலம்பிக் கொண்டேயிருக்கும்.

பெண்கள் நடந்து செல்கையில் நீண்ட நெடிய கூந்தல் இடையின் பின்புறத்தில் ஆடிஅசைவது இயல்பே. அக்காட்சியைக் கண்ட கவிஞன் கொங்கைகளின் சுமைதாங்காமல் இடைநுடங்குவதாகக் கால்கொலுசினிடம் புலம்புகிறது என்று தன்குறிப்பை ஏற்றிப் பாடுகிறான். ஆதலால் இப்பாடல் தற்குறிப்பேற்றணி வகையாம்.

மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கரும்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப -முல்லையெனும்
மென்மாலைத் தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது.


பொருள்:- மல்லிகை அரும்புகளையே வெண்சங்காக எண்ணிக் கொண்டு வண்டினம் ஊதிஊதி முழக்குகின்றனவாம். சிறந்த கரும்பினாலான வில்லை உடைய மன்மதன் தன் மலர்க்கணைகளை ஆராயந்து எடுத்துவந்து தன்னைப் பற்றிய உண்மையினைப் பேணுதற்குத் தொடங்கினான். இப்படியாக முல்லை மலர்என்னும் மென்மையான மாலையானது தோளிலே கிடந்து அசைய புல்லிய மாலைப்பொழுதானது அசைந்து நடந்து வந்தது.

அந்தியின் வருகையை ஓர் பேரூர்வலமாக (ராஜபவனி) கவிஞன் உயர்த்திக் (உயர்வுநவிற்சி அணி) கூறியிருப்பதோடு வண்டானது இயல்பாக அமர்ந்து தேனெடுப்பதை மலரை சங்காக எண்ணிக்கொண்டு ஊதி முயங்குகின்றது என்று தன்குறிப்பை ஏற்றிக் கூறியமையால் தற்குறிப்பேற்றணியாகும்.

சிறப்புப் பாடம்! வலிமிகுமிடங்கள்

குறிப்பு:- சங்கர் இராஜகுரு போன்ற நண்பர்களின் வேண்டுதலுக்கிணங்கி இச்சிறப்புப் பாடத்தைத் தருகிறேன்.

சொல்லியங்களைப் பிழையின்றி அமைக்க முகாமையாகத் தெரிந்துகொள்ள வேண்டியவற்றுள் வலிமிகுமிடங்கள் மற்றும் வலிமிகாவிடங்கள் ஆகியவை அடங்கும். இப்பாடத்தில் வலிமிகுமிடங்களைப் பற்றிப் பார்ப்போம்.

வலி என்பது வல்லெழுத்துகளாம். அவ் வல்லெழுத்துகள் எங்கெல்லாம் மிகுந்து வரும் என்பதை அறிந்து எழுதப்பழகுவோம்.

சற்றேறக் குறைய வலிமிகுமிடங்கள் இருபத்தாறு அல்லது இருபத்தேழு இடங்களாகும். அவ்விடங்களை அறிவோம்.

1) அ இ உ - என்னும் சுட்டெழுத்துகளின் முன் வலிமிகும்.

காட்டு:-
அ+பையன் - அப்பையன்
இ+ பொருள் - இப்பொருள்
உ+ பக்கம் - உப்பக்கம்

2) அந்த இந்த உந்த என்னும் இடைச்சொற்களின் முன் வலிமிகும்.

காட்டு:-
அந்த+ பூனை - அந்தப்பூனை
இந்த + பை - இந்தப்பை
உந்த+ பக்கம் - உந்தப்பக்கம்.

3) எ-என்ற வினா எழுத்தின் முன்னும் எந்த- என்ற வினா இடைச்சொல்லின் முன்னும் வலி மிகும்.

காட்டு:-
எ+ பொழுது - எப்பொழுது
எந்த +திசை - எந்தத்திசை

4) அங்கு இங்கு எங்கு ஆங்கு ஈங்கு யாங்கு ஆண்டு ஈண்டு யாண்டு -எனும் இடப்பொருள் உணர்த்தும் மென்தொடர் குற்றியல் உகர இடைச்சொற்களின் முன் வலிமிகும்.

காட்டு:-
அங்கு + போ - அங்குப்போ
இங்கு + தா - இங்குத்தா
எங்கு + கொடுத்தாய் - எங்குக்கொடுத்தாய்
ஆங்கு + பார் - ஆங்குப்பார்
ஈங்கு + செய் - ஈங்குச் செய்
யாண்கு + பேசினான் - யாண்குப்பேசினான்
ஆண்டு + தாவினான் - ஆண்டுத்தாவினான்
ஈண்டு + கூடினர் - ஈண்டுக் கூடினர்
யாண்டு + சென்றான் - யாண்டுச்சென்றான்.

5) அப்படி இப்படி எப்படி எனும் இடைச்சொற்களின் முன் வலிமிகும்.

காட்டு:-
அப்படி + சொல் - அப்படிச்சொல்
இப்படி + கூறு - இப்படிக்கூறு
எப்படி + தந்தாய் - எப்படித்தந்தாய்

இக்கிழமைக்கான ஈற்றடி:- பூவைமேல் எத்தனை பூ!

அகரம்.அமுதா

திங்கள், 3 நவம்பர், 2008

29.சொற்பொருள் பின்வரு நிலையணி!


செய்யுளுள் முன்வந்த அதே சொல் மீண்டும் மீண்டும் வந்து வேறுபொருளைத்தராமல் அதே பொருளைத்தருமானால் அதற்குச் சொற்பொருட்பின்வரு நிலையணி என்று பெயர்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு!


இக்குறளில் விளக்கு எனுஞ்சொல் பலமுறை வந்து தந்தபொருளையே மீண்டும் மீண்டும் தந்துநின்றமையால் சொற்பொருட் பின்வரு நிலையணியாம்.

செல்வத்துட் செல்வம் செவிச்செல்லம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை!


செல்வமென்ற சொல் பன்முறை வந்து தந்தபொருளையே தந்தமையால் சொற்பொருட் பின்வரு நிலையணியாம்.

இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
கிடும்பை படாஅ தவர்!

சொல்லுக சொல்லிற் பயனுடைய செல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்!

அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள!

இப்பாடல்களில் ஒருசொல் பன்முறை தோன்றி ஒருபொருளிலேயே நின்றமையான் இவையாவும் சொற்பொருட் பின்வரு நிலையணியாகும்.

இக்கிழமைக்கான ஈற்றடி:-

அகரம்.அமுதா

திங்கள், 27 அக்டோபர், 2008

28. ஏகதேச உருவக அணி!

தொடர்புடைய இருபோருட்களுள் ஒன்றைமட்டும் உருவகம் செய்து மற்றொன்றை உருவகம் செய்யாமல் விட்டுவிடுவது ஏகதேச உருவக அணியாம்.

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று!


பொருளைப் பொய்யா விளக்கு என உருவகப் படுத்திவிட்டு பகையை இருளென உருவகம் செய்யாமையால் ஏகதேச உருவக அணியாம்.

இக்கிழமைக்கான ஈற்றடி:-

அகரம்.அமுதா

திங்கள், 20 அக்டோபர், 2008

27. உருவக அணி!

உவமானம் வேறு, உவமேயம் வேறு எனத்தோன்றா வண்ணம் உவமையின் தன்மையை உவமேயத்தில் ஏற்றயுரைத்தல் உருவக அணியாம்.

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்!

காமக் கடல்- இதில் உவமையெது உவமேயமெது எனத்தோன்றாவண்ணம் அமைந்தமையால் உருவக அணியாகும்.

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்!

காமக் கடும்புனல் - இதில் உவமையெது உவமேயமெது எனத்தோன்றாவண்ணம் அமைந்தமையால் உருவக அணியாகும்.

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்ந்த கதவு!

காமக் கணிச்சி - காமமாகிய கோடரி

இன்பவெள்ளம், கண்கயல், கைமலர், விழிவாள், பல்முத்தம், போன்றவையும் அப்படியே. உவமையெது உவமேயமெது எனத்தோன்றாமையால் உருவகமாயின.

இக்கிழமைக்கான ஈற்றடி:-

அகரம்.அமுதா

திங்கள், 13 அக்டோபர், 2008

பாடம் 26 இல்பொருள் உவமையணி!

இயற்கையில் இல்லாத ஒன்றை (ஒருபொருளை) இருப்பது போலக் கற்பனை செய்துகொண்டு அக்கற்பனைப் பொருளை உவமையாக்குவதே இல்பொருள் உவமையணியாம்.

அன்பகத் தில்லார் உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று!


பாலையில் நீரின்றிக் காய்ந்து வரண்டுபோன வற்றல் மரம் மீண்டும் தளிர்த்தல் இயற்கையில் நிகழாத ஒன்று. உள்ளத்தில் அன்பற்ற உயிர்வாழ்வுக்கு இதனை உவமையாக்கியமையால் இஃது இல்லைபொருள் உவமையணியாகும்.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்!


மழலை தன் சிறுகையால் அளாவிய கூழை அமிழ்தினும் இன்சுவை உடையது என்கிறார் வள்ளுவர். அமிழ்து என்பது கற்பனையான பொருள். அமிழ்தினைக் கண்டவர்யார்? உண்டவர்யார்? கூழுக்கு உலகில் இல்லாத அமிழ்தை உவமையாக்கியதால் இல்பொருள் உவமையணியாகும்.

ஆக இல்லாத ஒன்றை இருக்கின்ற ஒன்றிற்கு உவமையாக்குதல் இல்பொருள் உவமையணியாம்.

இக்கிழமைக்கான ஈற்றடி:-

அகரம்.அமுதா

திங்கள், 6 அக்டோபர், 2008

பாடம் 25 எடுத்துக்காட்டு உவமையணி!

உவமைக்கும் உவமேயத்திற்றும் இடையில் போல போன்று என்ற பொருள்தரும் உவமையுருபுகள் தொகைநிலையில் வருவதே எடுத்துக்காட்டு உவமையணி யாகும்.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து!

உவமானம்:-

நுகர்வதால் அனிச்சமலர் வாடிவிடும்.

உவமேயம்:-

விருந்து படைக்கையில் நம்முகத்தில் சிறுகுறி தென்படினும் விருந்தினர் முகம் வாடிவிடும். போல, அதுபோல என்பன போன்ற உவமையுருபுகள் தொகை நிலையாதல் காண்க.


பகல்வெல்லும் கூகையைக் காகம் இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது!

உவமானம்:-

வலியில் குறைவலிபடைத்த காகமும் பகல்வேளையில் வலிபடைத்த கூகையை எளிதில் வென்றுவிடும்.

உவமேயம்:-

இவ்விகலாகக் கருதும் மன்னவன் தன்பகைமுடிக்க வேளைகருதிச் செயல்பட வேண்டும். உவமையுருபு தொகைநிலை.


துன்பத்தைக் கண்டு துவண்டு மருளாதே
இன்னல் விலகலாம் எக்கணமும் -அன்புள்ளாய்!
தோயும் இருள்விலக்கித் தோன்றுவான் ஆதவன்
காயில் இருக்கும் கனி!

உவமானம்:-

1.சூழ்ந்துள்ள இருள் சூரியன் தோன்றக் கெடும்.2.இன்சுவை பொருந்திய கனியானது துவர்ப்பும் புளிப்பும் கூடிய காயில் ஒளிந்துகிடக்கிறது.

உவமேயம்:-

துன்பம் வருதல் கண்டு மயங்காதே. அதையோர் பொருட்டாக் கருதாக்கால் மறைந்துவிடும். அதுபோல உவமையுருபு தொகைநலையாதல் காண்க.

இக்கிழமைக்கான ஈற்றடி:- "கருவிழி இல்லாத கண்!"

அகரம்.அமுதா

திங்கள், 29 செப்டம்பர், 2008

பாடம் 24 உவமையணி!

உவமை உருபுகள்:- போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர, நிகர, அன்ன, இன்ன போன்றவை உவமை உருபுகளாகும்.

உவமானத்திற்கம் உவமேயத்திற்கும் இடையே போல என்ற பொருள் தரும் உவமை உருபுகள் வெளிப்படையாக வருவது உவமையணியாகும்.

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு!

உவமை:-

சுடுவதால் பொன்னானது மிகுதியான ஒளிசிந்தும்.

உவமேயம்:-

துன்பம் என்ற நெருப்பு சுடுவதனால் அறிவொளி மிகுந்து காணப்படும். இதில் போல என்ற உவமை உருபு வெளிப்படை.

கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று!

உவமானம்:-

கூட்டாடும் அவைக்கு மக்கள் கூட்டம் நிறையும். கூத்தாட்டம் முடிந்தால் வற்றிவிடும்.

உவமேயம்:-

செல்வத்தின் நிலையும் அப்படியே. அற்று என்ற உவமையுருபு வெளிப்படை.
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும்!
போல என்ற உவமை உருபு வெளிப்படையானது காண்க.

ஒருவர் உடலில் ஒருவர் ஒடுங்கி
இருவரெனும் தோற்றம் இன்றிப் -பொருவங்
கனற்கேயும் வேலானும் காரிகையும் சேர்ந்தார்
புனற்கே புனல்கலந்தாற் போன்று!

வெள்ள நீரில் மேலும் வெள்ளநீர் சேர்ந்தால் இரண்டிற்கும் எவ்வாறு வேறுபாடு காணமுடியாதோ அதுபொல இருவரும் ஒருவரில் ஒருவர் இணைந்தனர். இப்பாடலில் போன்று என்ற உருபு வெளிப்படையானதால் உவமையணியாம்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- மந்திரத்தால் மாங்காய் விழும்!

அகரம்.அமுதா

திங்கள், 22 செப்டம்பர், 2008

பாடம் 23 உயர்வு நவிற்சியணி!

கவிஞன் தான் கூறப்புகும் கருத்தை மிகைப்படுத்தி உயர்த்திக் கூறுவதே உயர்வு நவிற்சியணியாகும்.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்!

பசியோடிருப்பவனுக்கு கூழ் இன்சுவை கூட்டுவதுதான். ஆயினும் அக்கூழுள் தன் சிறுகுழந்தையின் பிஞ்சுவிரல்கள் பட்டவுடன் அதன்சுவை அமிழ்தைவிடக் கூடிவிடுகிறது எனக் கூறுவது தான் கூறவந்த கருத்தின் முகாமையை விளக்குவதற்காக கவிஞன் மிகைப்படுத்துவதாகும். கூழின் சுவையை உள்ளது உள்ளபடி கூறாமல் அமிழ்தைவிட உயர்ந்த சுவைமிக்கது எனக் கூறுவது உயர்வு நவிற்சி அணியாகும்.


குழலினிதி யாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்!

இசைக்கு மயங்காதோர் யாருமிலர். ஆயினும் வள்ளுவர் ஈன்றசேயின் முகாமையையும் சிறப்பையும் எடுத்துரைக்க அதன் குரல் குழல் யாழைவிட இனியது என்கிறார்.

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது!

நாம் ஒருவர்க்கு உதவிசெய்யாதபோதும் நமக்குத் தேவைப்படுங்கால் நாம் அழைக்காமல் தானாய்வந்து உதவி செய்பவரின் உதவி சிறந்ததுதான். அவ்வுதவியின் தன்மையை உயர்த்திக் கூற நினைத்த வள்ளுவர் வையகத்தை வழங்கினாலும் ஏன் வானகத்தையே வழங்கினாலும் அவ்வுதவிக்கு ஈடாகாது என்கிறார்.

கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென்(று)
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் -மெத்த
வெறும்பந் தயங்கூற வேண்டாம் புலவீர்!
எறும்புந்தன் கையாலெண் சாண்!

கல்வியின் சிறப்பை யாவரும் உணரவேண்டும் என்பதற்காக இதுவரை நாம் கற்றுமுடித்திருப்பது கையளவு. கற்காமல் விட்டிருப்பது உலகளவு என உயர்த்திக் கூறப்பட்டிருப்பதால் இப்பாடல் உயர்வு நவிற்சியணியாகும். (எறும்பும் தன்கையால் எண்சான் என்ற உவமை எவ்வுயிரும் அதனதன் கைகளால் எண்சாண் உயரம்தான் என்பதை உணர்த்த எடுத்துக்காட்டப் பட்டிருப்பதால் இவ்வீற்றடி எடுத்துக்காட்டு உவமையணியாகும்.)

ஆக உள்ளது உள்ளபடி உரையாமல் மிகைப்படுத்திக் கூறுவனயாவும் உயர்வு நவிற்சியணியாகும்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- "சோம்புவதால் உய்வுண்டோ சொல்!"

அகரம்.அமுதா

திங்கள், 15 செப்டம்பர், 2008

பாடம் 22 இயல்பு நவிற்சியணி!

ஓர் மங்கைக்கு சிறப்பு சேர்ப்பது அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு போன்ற குணங்கள் என்பர் ஆன்றோர். அதுவே அழகுமாகும். அவ்வழகை மென்மேலும் மெருகேற்றுவது அகத்தூய்மையும் புறத்தூய்மையும் ஆடை அணிகலன்களுமாகும். அதுபோல மரபுப்பாக்களுக்கு பெருமையும் சிறப்பும் சேர்ப்பன இலக்கண அமைப்பும் அழகிய வடிவமுமாகும். அவ்வழகை மென்மேலும் மெருகேற்ற நம்முன்னோர்கள் மரபுப்பா என்ற மங்கைக்கு அணிகளைப் பூட்டி அழகுபார்த்தனர். அவ்வழகைத்தான் அணியிலக்கணம் என்கிறோம்.

ஓர் பெண்ணிற்கு பொட்டு பூ போன்ற அணிகலன்கள் எத்துணை முகாமையோ அத்துணை முகாமையானது பாக்களுக்கு அணிஇலக்கணம். பெண் அணியும் அணிகளின் வகைகளைத் தெரிந்துகொண்டோமானால் அவற்றை எங்கெங்கு அணிய வேண்டும் என்பதும் தெரிந்து விடும். எடுத்துக்காட்டிற்கு மூக்கணி. இதை மூக்கணி என்று அறிவோமானால் அதை எங்கணிவது என்பதும் தெரிந்துவிடும். அதுபோல் பாக்களுள் கையாளப்படும் அணிவகைகளைத் தெரிந்துகொண்டோமானால் அவற்றைக் நம்கருத்தாழத்திற்கேற்ப தேவைக்கேற்ப கையாளத் தெரிந்தவர்களாகி விடுவோம்.

ஓர் கவிஞனை சிறந்த இலக்கியவாதி என இனம்காட்டுவது அவன் கருத்துகளைக் கையாளும் முறையே. அக்கருத்தைச் செறிவூட்டுவது அணியாகும். ஆக நாம் நம் கருத்துகளை அனைவரும் விரும்பும் விதமாக எடுத்துரைப்பதற்கு அணிவகைகளை ஆழமாகக் கற்பது முகாமையாகிறது.

அணிவகைகள் மொத்தம் முப்பத்தைந்து வகைப்படும். அவற்றுள்:- 1.இயல்பு நவிற்சியணி 2.உயர்வு நவிற்சியணி 3.உவமையணி 4.எடுத்துக்காட்டு உவமையணி 5.இல்பொருள் உவமையணி 6.உருவகஅணி 7.ஏகதேச உருவகஅணி 8.சொற்பொருட் பின்வரு நிலையணி 9.தற்குறிப் பேற்றணி 10.பிறிதுமொழிதலணி 11.வேற்றுமையணி 12.வேற்றுப்பொருள் வைப்பணி 13.வஞ்சப்புகழ்ச்சியணி 14.நிரல்நிறையணி 15.மடக்கணி 16.இரட்டுற மொழிதலணி. 17.எதிர்நிலை உவமையணி. 18.ஐய அணி. 19.ஒருபொருள் வேற்றுமையணி.

இயல்பு நவிற்சியணி:-நாம் கூறவரும் கருத்தை எவ்வகை உவமை ஏற்றியும் உரைக்காமல் மிகைப்படுத்தாமல் உள்ளது உள்ளவாறே உரைப்பது உயர்வு நவிற்சியணி யாகும்.

காட்டு:-

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல(து)
அன்றே மறப்பது நன்று!

ஒருவர் நமக்கு செய்த உதவிக்கு நாம் என்றும் நன்றியுடன் நன்றிமறவாதிருக்கிறோம். நன்றிதனை மறப்பது நன்றல்ல என்பதை உணர்த்த வந்த வள்ளுவர் எவ்வுவமையையும் பயன்படுத்தாது உள்ளதை உள்ளவாரே உரைத்திருக்கிறார். உரைக்கவந்த கருத்தை உள்ளது உள்ளவாரே உரைத்துள்ளமையால் இப்பாடல் இயல்பு நவிற்சியணியாகிறது.

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக!

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவ தென்ப திழுக்கு!

வையகம் பகலிழப்ப வானம் ஒளியிழப்ப
பொய்கையும் நீள்கழியும் புள்ளிழப்ப -பையவே
செவ்வாய் அன்றில் துணையிழப்பச் சென்றடைந்தான்
வெவ்வாய் விரிகதிரோன் வெற்பு!

கதிர்சாயுங்கால் பாரில் பகல்வேளை நீங்கி இரவு பிறப்பதும் வானம் ஒளியிழந்து இருள்சூழ்வதும் குளங்களிலும் மற்ற நீர்நிலைகளிலும் இரைதேடும் பறவைகள் அவற்றை நீங்கித்தன் கூட்டையடைவதும் இயல்புதானே. ஆக கதிர்மறையும் மாலைப்பொழுதை அப்படியே உள்ளது உள்ளவாறே படம்பிடித்தாற்போல் காட்டியுள்ளமையால் இப்பாடல் இயல்பு நவிற்சியணியாகும்.

கூறப்புகுங் கருத்தை எவற்றோடும் ஒப்புமைப் படுத்தாமல் இயல்பாக நவில்வது இயல்பு நவிற்சியாகும்.

இயல்பு நவிற்சியணியைப் பயன்படுத்தி இக்கிழமைக்கான ஈற்றடிக்கு வேண்பா எழுத அழைக்கிறேன்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- "தீயிற் கொடியதோ தீ!"

அகரம்.அமுதா

திங்கள், 8 செப்டம்பர், 2008

பாடம் 21!

மூவாயிரம் நான்காயிரம் ஆண்டுகளாகக் கோலோச்சி வந்த மரபுக் கவிதை வடிவிற்கு இருபதாம் நூற்றாண்டு ஓர் மாபெரும் பின்னடைவை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. புதுக்கவிதை வடிவும் அதற்குப் பின்வந்த நவீன, பின்நவீன வடிவங்களும் மரபின் சல்லிவேர்களை செற்கள்போல் அரித்தன என்றால் அது மிகையாகாது.

இச்சிக்கல்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டு எதிர்நீச்சலிட்டு முன்னேற மரபு தன்நோக்கையும் போக்கையும் மாற்றிப் புதுப்பொலிவுடன் வலம்வந்து கொண்டிருப்பதும் கண்கூடு.

இருபதாம் நூற்றாண்டில் மரபுக் கவிதை பெரும் பின்னடைவைக் கண்டதெனினும் மரபுவடிவான வெண்பாவிற்குச் சிறிதும் பின்னடைவில்லை என்றே கூறலாம். கரணியம் அதன் வடிவ அமைப்பும் எதையும் எளிதிற் பொட்டிலடித்தாற்போல் கூறும் துணிவுமிக்க ஆற்றலும்தான்.

இருபதாம் நூற்றாண்டில் புதுமைப் பித்தர்கள் தோன்றிப் புதுக்கவிதைக்குக் கொடிபிடிக்குங்கால் வெண்பா ஓசைபடாமல் தன்போக்கையும் நோக்கையும் மாற்றிக்கொண்டு பேச்சிவழக்குச் சொற்களைக் கொண்டு, "கருத்து, உணர்ச்சி, கற்பனை, அழகியவடிவம்" என்ற இலக்கியத்திற்குத் தேவையான நான்கு அணிகளையும் களைந்துவிட்டு எளியமுறையில் மிகமிக எளியமுறையில் தளைகள்மட்டும் மாறாமல் தன்னைப் புதுப்பித்துக்கொண்டது.

இவ்வெளியமுறை வெண்பாக்களை முதன்முதலில் கையாண்டவர் புதுமைப்பித்தன் எனலாம்.

பண்ணாத ரௌசெல்லாம் பண்ணிவெச்சி இன்னிக்குக்
கண்ணால முன்னா கசக்குதா -அண்ணாத்தே
ஆத்தாவந் தாலுன்னை அடுப்பில் முறிச்சிவெப்பா
போயோன் தொலைஞ்சிபோ யேன்!

இவரைத் தொடர்ந்து வெகுசிலரே இவ்வெளியமுறை வெண்பாக்களைச் செய்திருக்கிறார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஆகாசம்பட்டு சேசாசலம்.

தோணிக்குக் கீழ தொளையா இருப்பதிலும்
பானைக்குக் கீழ இருப்பதிலும் - நாணயமா
புல்லாங் குழல்துளையா என்னை இருக்கவிடேன்
எல்லாமும் வல்லஇறை வா!

சேசாசலம் அவர்கள் தன் வெண்பாத்திறத்தால் மிகமிக எளிய நிகழ்வுகளையும் வெண்பாவாக்கியுள்ளார். காலைக்கடன் கழிப்பது பற்றிக்கூட பாடியுள்ளார் என்றால் பாருங்களேன்.

பாதையோரம் பட்ட பகலில் பழுத்தபழம்
வீதியில ராவுல பொம்பளைங்க! - நாதியில்லா
ஒத்தயடிப் பாதையில ஒக்காரும் வாண்டுக
மத்ததுக தோப்பு தொரவு!

தாமிரக் காசுகளைத் தண்டவாளத் தில்வெச்சி
நாம பதுங்க ரயில்நசுக்கும் - ராமய்யா!
கால ரயிலோட நாமெல்லாங் காசானோம்
வாலிபம்போய் ஆச்சே வயசு!

அவரைத்தொடர்ந்து தஞ்சை இனியனும் எளியவழக்குச்சொல் வெண்பாக்களைப் புனைந்துள்ளார்.

பங்கலா கார்கனவில் பட்டினிகள் போக்கிடலாம்
மங்கலான ஆடைபோதும் வாழ்ந்திடலாம் - அங்கங்கே
சிங்கிய டிக்கின்ற செந்தமிழா! படித்து
சிங்கார சென்னைவந்து சேர்!

ஏரிகளே சென்னை இருதயங்கள் நீர்சப்ளை
லாரிகளே செங்குருதி நாளங்கள் -நீரின்றிப்
பூண்டி புயலேரி பொய்த்துவிட்டால் ஆலயத்தில்
ஆண்டவன் கூட அழுக்கு!

இம்முறையில் நானும் பல முயற்சிகளைச் செய்துபார்த்துள்ளேன்.

ஹோம்வொர்க்கைச் செய்து முடித்தவுடன் ஓடிப்போய்
கேம்ஆட டி.விரிமோட் கேட்டாக்கா -வீம்போட
சீரியல் பார்க்கணுண்ணு சீறுகிறாள் என்மம்மி
போரடிக்குதே வாழ்க்கை போ!

குட்டைப்பா வாடை கொழுத்த தொடைகாட்ட
வட்டணிந்த மார்பின் வளங்காட்டி -வட்டுடைகீழ்
ஆதார மில்லா அரும்பாகம் காட்டுமவள்
சேதார மில்லா சிலை!

வீட்டைவைத் தேனும் விதைநெல்லை வித்தேனும்
காட்டைவைத் தேனும் கடஞ்சொல்லி -ஏட்டில்கை
நாட்டைவைத் தேனும் வெளிநாடு போயென்றன்
பாட்டைக் குறைப்பதற்குப் பார்!

எம்.ஏ படிச்சதற்(கு) ஏற்றவேலை வேண்டுமென்று
சும்மாத் திரிந்தால் சுகப்படுமா? -பம்மாத்துக்
காட்டாமல் கைக்குக் கிடைத்தவேலை பார்த்தால்தான்
வீட்டில் கிடைக்கும் மதிப்பு!

நேர்பிடித்து ‘கீவில்’ நிதமுமே நிண்ணாலும்
நீர்வருமோ கார்ப்பரே ஷன்குழாயில்? -பார்த்தாக்கா
காத்துவரும்; காத்தோட சத்த(ம்)வரும் நீர்க்குமிழி
பூத்துவரும் பாத்துட்டு போ!

வாராத நீர்க்கு வரிசையிலே நிண்ணுப்பா(ள்);
தேராத வார்த்தைகளால் திட்டிப்பா(ள்); -நேராய்
அடிச்சிப்பா(ள்); மண்டை உடைச்சிப்பா(ள்); சிண்டைப்
பிடிச்சிப்பா(ள்) கொத்தாகப் பிய்த்து!

இப்படிப் பலமுயற்சிகள். அனைத்தையும் காண விரும்புவோர் எனது தமிங்கிலிஷ்.காம் -இல் காணலாம்.

மேலும் சிற்சிலர் இம்முறையில் வெண்பாக்கள் செய்துள்ளனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சுசாதா அவர்கள் தம் கற்றதும் பெற்றதும் தொடரில் குறிப்பிட்டு எழுதியும் வந்துள்ளார்.

நீங்களும் இவைபோன்ற வற்றை முயன்று பார்க்கலாம். சிறப்பாக வருபவற்றை மறுமொழியில் இடவும்.

இவ்வாரத்திற்கான ஈற்றடி:- "அச்சமடம் நாணம் பயிற்பு!"

அகரம்.அமுதா

திங்கள், 25 ஆகஸ்ட், 2008

பாடம்20 நிரல்படுத்து வெண்பாக்கள்!

பொருளின் பெயர்களையோ நூலின் பெயர்களையோ ஏனைய பெயர்ச்சொற்களையோ மக்களின் நினைவில் நிற்பதற்கென்று சில வழிமுறைகளைக் கையாள்கிறோம். அவற்றுள் ஒன்று வெண்பாவில் தொகைபடுத்துதல்.

ஓரின நூல்களை நினைவுகொள்ளவும் ஒன்றைப் படித்தபின் அடுத்ததைப் படிக்கவும் நூலகங்களில் இன நூல்களை வரிசைபடுத்தி அடுக்கவும் இப்பட்டியல் செய்யப்பட்ட வெண்பாக்கள் பயன்படும். பழநூல்கள் அழியாமல் பாதுகாக்கவும் நூல்பற்றிய ஆராய்ச்சிக்கும் இவ்வகை வெண்பாக்கள் பெரிதும் பயன்படுகின்றன.

காட்டு:-

தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பருதி பரிமே லழகர் –திருமலையர்
மல்லர் பரிப்பெருமால் காளிங்கர் வள்ளுவர்நூற்
கெல்லையுரை செய்தா ரிவர்! -பழம்பாடல்

இப்பாடலைப் பாருங்கள்:- வள்ளுவரின் திருக்குறளுக்கு முற்காலத்தில் யார்யார் உரைகண்டிருக்கிறார்கள் என்பதைப் பட்டியலிட்டிருக்கிறது.

சக்கரவா கம்கிளிஆந் தைநாரை அன்னம்க
ரிக்குருவி கௌதாரி காடைஅன்றில் -கொக்கு
குயில்கருடன் காக்கைபுறா கோழிஇரா சாளி
மயில்கழுகு கோட்டான்வெள வால்! -அழகிய சொக்கநாத பிள்ளை

இப்பாடலில் பறவைகளின் பெயர்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

வெங்காயம் தக்காளி வெள்ளரி பீக்கம்ப
ரங்கி புடலைவெண்டி அத்திமு -ருங்கைவாழை
கொத்தவரை கோசு குடைமிளகு பூசுணை
கத்தரி பீன்ஸ்பாகற் காய்! -அகரம்.அமுதா

தென்னை விளாமுருங்கை தேக்கு பலாமூங்கில்
புன்னை அகில்களா பூவரசு -வன்னிகொன்றை
ஆலரசு பாக்கிலந்தை ஆத்தி கமுகுகரு
வேலம்மா வாழைபனை வேம்பு! -அகரம்.அமுதா

முன்னிரு வெண்பாக்களில் காய்கறிப் பெயர்களையும் மரங்களின் பெயர்களும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

ஆத்திசேர் கொன்றை அழகுதமிழ் மூதுரை
பாத்திசேர் நல்வழி பண்புலகம் -பூத்த
நறுந்தொகை நன்னெறி ஏழும் குழந்தைக்
குறுந்தமிழ் என்றறிந்து கொள்! -வ.சுப.மாணிக்கனார்

இவற்றைப்போல் நிரல்படுத்த வெண்பாக்களை நீங்களும் செய்துபார்க்களாம். சிறப்பாக வரும் வெண்பாவைப் பின்னூட்டத்தில் இடுமாறும் கோருகிறேன்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- "நாளை நமதென்றே நம்பு!"

அகரம்.அமுதா

திங்கள், 18 ஆகஸ்ட், 2008

பாடம்19 அசைச்சீர்!

பொதுவாக வெண்பாவின் ஈற்றடியின் இறுதிச்சீர் நாள்மலர் காசு பிறப்பு என்னும் நான்குள் ஒன்றைப்பெற்று இறும். இதுவே வகுப்புமுறையாகும்(விதி).

காட்டு:-

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
அங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
அங்கண் உலகளித்த லான்!

லான் -நாள்

கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் -மணங்கொண்டீண்
டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே
டொண்டொண்டொண் ணென்னும் பறை!

பறை -மலர்

கன்னின்றான் எந்தை கணவன் களப்பட்டான்
முன்னின்று மொய்யவிந்தார் என்னையர் -பின்னின்று
கைபோய்க் கணைஉதைப்பக் காவலன் மேலோடி
எய்போல் கிடந்தானென் ஏறு!

ஏறு -காசு

அள்ளற் பழனத் தரக்காம்பல் வாயவிழ
வெள்ளந்தீப் பட்ட தெனவெரீஇப் -புள்ளினம்தம்
கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேற் கோக்கோதை நாடு!

நாடு -காசு

கழலெடுத்து வாய்மடித்துக் கண்சுழன்று மாற்றார்
அழலெடுத்த சிந்தையராய் அஞ்சத் -தழலெடுத்த
போராழி ஏந்தினான் பொன்மலர்ச் சேவடியை
ஓராழி நெஞ்சே! உவந்து!

உவந்து -பிறப்பு

ஆனால் இவ்விதியை மீறும் விதமாக ஈற்றடியின் ஈற்றுச்சீரில் தனிக்குறிலை நேரசையாக சீராக்கிப் புதுமைசெய்தனர்.

காட்டு:-

கையொத்து நேர்கூப்பு க!
பூப்பெய்தேன் என்னவியப் பு!
கல்லாற்சொற் றேறலொழி க!
குக்கலிச்சிக் குங்கலைச்சிக் கு!

இவ்வீற்றடிகள் அனைத்தையும் நோக்குக. தனி குறில் ஈற்றுச்சீராகி நாள்வாய்பாடெடுத்தமை.

பிற்காலத்தில் இன்னோர் வழக்கமும் மேலோங்கத்துவங்கியது. அது:- காசு பிறப்பு வாய்பாட்டைத் தேமா புளிமாபோல் (உகரப் புனர்ச்சியை நீக்கி) கொள்வது.

சின்னஞ் சிறுவயதில் தேர்ந்த உணர்வினுக்கே
என்னபொருள் என்றேநான் இன்றுணர்ந்தேன் -அந்நாளில்
முத்தென்று சொல்லுதிர்த்த மோகக் கவிதையெழில்
சித்திரத்தாள் பாராமல் சென்றாள்! -கண்ணதாசன்

வெண்பாவிதிப்படி சென்று என்றே முடிக்கவேண்டும். சென்று எனமுடிக்கப்படின் பொருள் முற்றுப்பெறாது என்பதால் சென்றாள் எனமுடிக்கப்பட்டமை காண்க.

பல்லாண்டு நீர்வாழப் பண்பார்ந்த பைந்தமிழின்
சொல்லாண்டு பாடுகிறேன் தூயவரே! -இல்லாண்டு
செய்யும் தொழிலாண்டு சேரும் புகழாண்டு
வையத்துள் வாழ்வாங்கு வாழ்க! -அகரம்.அமுதா

வாழ் அல்லது வாழ்வு என இறவேண்டும் என்பதே விதி. தமிழர்தம் பண்புப்படி வாழ்க என்று வாழ்த்துவதே மரபாகும். தன்னைவிடச் சிறியவரையும் வாழ்த்தும் போழ்து வாழ்க என்பரேயன்றி வாழ் என்று வாழ்த்தும் மரபு தமிழரிடமில்லை. ஆதலால் வெண்பாவின் விதி (பண்பாடு கரணியமாக) தளர்த்தப்பட்டிருக்கிறது.

இக்கிழமைக்கான ஈற்றடி:- உள்ளிருள் நீக்கும் ஒளி!

அகரம்.அமுதா

திங்கள், 11 ஆகஸ்ட், 2008

பாடம்18 முடுகியல்!

பாவகை நான்கினுள் வெண்பா எழுதுதல் மிகக்கடினாகும். அதுபோல வண்ணப் பாடல்கள் செய்வதும் மிகக்கடினமாகும். புதுமையோடும் செழுமையோடும் வீறுநடைபோட்டு வரும் வெண்பாவில் புதுமை நோக்கோடு நம் பழம்புலவர்கள் வண்ணத்தைப் புகுத்தி வெண்பா இயற்ற முற்பட்டனர். இவ்வாறு வெண்பாவுள் வண்ண யாப்பு பயிலும் பாக்களை முடுகியல் வெண்பாக்கள் என்றழைத்தனர்.

முடுகியல் வெண்பாக்கள் இருவகைப்படும். அவையாவன 1- முற்றுமுடுகியல் வெண்பா 2- பின்முடுகியல் வெண்பா.

முற்றுமுடுகியல்:-

மேகநிற மான்மருக வீறுதணி கேசவிது
வாகடின மேவுமிவ ளாவியருள் -வாகுவளை
நத்தத்தத் திற்பற்றி நச்சுப்பைக் குட்டத்து
நிர்த்தத்திற் கிச்சித்த நீர்! -யாரோ

இவ்வெண்பா முழுமுடுகு வெண்பாவாக அமைந்துள்ளமை நோக்குக.
தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன தானதன –தானதன
தத்தத்தத் தத்தத்த தத்தத்தத் தத்தத்த
தத்தத்தத் தத்தத்த தா!

என்னும் வண்ணத்தைக் கொண்டியன்றது அப்பாடல்.

முற்றுமுடுகியல் வெண்பாவைக் காட்டிலும் பலராலும் பின்முடுகியல் வெண்பாக்களே அதிகம் பாடப்பட்டு வந்துள்ளது.

காட்டு:-
நடையூறு சொன்மடந்தை நல்குவதும் நம்மேல்
இடையூறு நீங்குவதும் எல்லாம் -புடையூறும்
சேனைமுகத் தாளிரியச் சீறுமுகத் தூறுமதத்
தானைமுகத் தானைநினைத் தால்! -புறப்பொருள் வெண்பா மாலை!

இவ்வெண்பாவை நன்கு உற்று நோக்குக. இறுதி இரண்டுவரிகள்
தானதனத் தானதனத் தானதனத் தானதனத்
தானதனத் தானதனத் தா! –என்னும் வண்ணத்தோடு முடிந்துள்ளமை காண்க.

இப்பிறப்பை நம்பி இருப்பாரோ? நெஞ்சகமே!
வைப்பிருக்க வாயில் மனையிருக்கச் -சொப்பனம்போல்
விக்கிப்பற் கிட்டக்கண் மெத்தப்பஞ் சிட்டப்பைக்
கக்கிச்செத் துக்கொட்டக் கண்டு!

இப்பட்டினத்தார் பாடலை நோக்குக. இறுதி இருவரிகள் வல்லெழுத்துகள் மிகுந்து வண்ணத்துடன் அமைந்திருத்தல் காண்க.

அரங்கநாதக் கவிராயர் என்போர் பின்முடுகியலில் வேறோர் புதுமையையும் செய்துள்ளார். வெண்பாவில் முகன்மையாகப் பயின்றுவரும் வெண்டளையை நீக்கி வண்ணத்தோடு செய்திருப்பதே அது.

மையல்கொண் டாளுன்மீது வந்தணைவாய் இப்போதே
செய்யவள்சேர் திண்புயவி நாயகனே! -தொய்யில்
முலைபசத்து குழலவிழ்ந்து மொழிமறந்து விடவயர்ந்து
மலைவுகொண்டு நிலைமயங்கி மான்!

இவ்வெண்பாவை நன்கு நோக்குக. இறுதி இருவரிகளில் வண்ணம் பயிலலால் வெண்டளை நெகிழ்தலை.

இதுவோர் புறமிருக்க காளமேகப் புலவர் மேலுமோர் புதுமையைச் செய்துள்ளார்.வெண்பா முழுவதும் வல்லினம் மிகப் பாடுவதுதான் அப்புதுமை.

காட்டு:-
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க -கைகைக்குக்
காக்கைக்கு கைக்கைக்கா கா!

தத்தித்தா தாதுதி தாதூதி தத்துதி
துத்தித் துதைதி துதைத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது!

இவ்விரு வெண்பாவும் முழுக்க முழுக்க வல்லினம் மிகுந்து வந்தமை காண்க. இதுபோல் மெல்லினம் இடையினம் மிகவும் பாடி அசத்தியுள்ளார்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- மெய்யடா மெய்யடா மெய்!

அகரம்.அமுதா

திங்கள், 4 ஆகஸ்ட், 2008

பாடம்17 சவலை வெண்பா!

இக்கிழமைக்கான ஈற்றடியைப் பாடத்தின் இறுதியில் (கீழே) காணலாம்.
பொதுவாக (அளவியல் வெண்பாவைப் போருத்தவரை) 15சீர்கள் அமையப்பெறுதல் வேண்டும். 15சீர்கள் கொண்ட அளவியல் வெண்பாவில் ஒருசீர் குறைந்து 14சீர்களாகவோ ஒருசீர் கூடி 16சீர்களாகவோ வரின் அவ்வெண்பாவைச் சவலை (ஊனம்) வெண்பா என்பர்.

மாமுன் நிரையும் விளமுன் நேரும் காய்முன் நேரும் வருதல் வெண்பா வகுப்புமுறையாகும் (விதி). இவ்வகுப்பு முறைக்கு மாறாய்த் தளைகொள்ளும் வெண்பாக்களையும் சவலை வெண்பா என்பதே சரியாகும்.

காட்டு:-

அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவல்ல
நட்டாலும் நண்பல்லர் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு
சுட்டாலும் வெண்மை தரும்!

அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன்
நிகரில் குரவர் இவர்இவரைத்
தேவரைப் போலத் தொழுக என்பதே
யாவரும் கண்ட நெறி!

இவ்விரு வெண்பாக்களையும் உற்று நோக்குங்கால் இடையில் விடுபட்ட இடத்தில் எவ்வொரு சொல்லையும் இட்டுநிரப்ப முடியாதாகையால் அவை சவலை வெண்பாக்கள் எனப்படும்.

சொற்செறிவு பொருட்செறிவு கரணியமாய் இதுபோன்ற வரையறையை மீறியவற்றையும் ஏற்றுக் கொள்ளப் பட்டது. ஆனால் தற்காலத்தில் இதுபோன்ற சவலை வெண்பாக்கள் புனைவது வழக்கொழிந்து போனதால் இதுபோன்ற வற்றை முயலவேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- இட்டவடி நோவும் இவட்கு!

குறிப்பு:-

"இட்டவடி நோகும் இவட்கு!" என எழுதுதல் வழுவாகும். "இட்டவடி நோவும் இவட்கு!" எனும் ஈற்றடிக்கு எழுத அனைவரையும் அழைக்கிறேன்.

அகரம்.அமுதா

திங்கள், 28 ஜூலை, 2008

பாடம்16 தலையாகு எதுகை!

இக்கிழமைக்கான ஈற்றடியைப் பாடத்தின் இறுதியில் (கீழே) காண்க!

பொதுவாய் வெண்பாவின் அடிதோறும் முதற்சொல்லின் முதலெழுத்தாம் மோனைக்கு அடுத்த எழுத்தாகிய எதுகை அமைந்தால் போதும் என்பது விதி. மோனை எதுகை என்பது செய்யுளின் நயத்திற்காகச் செய்யப்படுவது. அந்நயத்தை மேலும் மெருகேற்ற தலையாகெதுகை பயன்படுகிறது.

அடிதோறும் முதற்சொல்லின் முதலெழுத்தைத் தவிர பின்வரும் அனைத்து எழுத்துகளும் ஒன்றிவருவதைத் தலையாகு எதுகைஎன்பர். இத்தலையாகு எதுகை செய்யுளின் நயத்தை மென்மேலும் இனிமையாக்கும்.

பொதுவாக மொழிவளமும் ஆளுமையும் தலையாகு எதுகை அமைப்பதற்கு இன்றியமையாததாகிறது. ஆகையால் தலையாகு எதுகை அமைப்பதில் அதிக கவனம் தேவை.

காட்டு:-

சட்டம் இயற்றிச் சதுராடி வேற்றுமொழிக்
கொட்டம் அடக்கத்தான் கூறுகிறேன் -திட்டம்
வகுக்கத்தான் வேண்டும் வளர்தமிழின் மாண்பைப்
தொகுக்கத்தான் வேண்டும் தொடர்ந்து! -அகரம்.அமுதா

இவ்வெண்பாவை நன்கு கவனிக்கவும். முதலடியின் முதற்சீரும் இரண்டாமடியின் முதற்கடைச் சீர்கள் முதலெழுத்தொழிய ஏனைய எழுத்துகள் ஒன்றிவந்தமை காண்க. மேலும் மூன்றாமடியின் முதற்சீரும் நான்காமடியின் முதற்சீரும் அஃதேபோல் ஒன்றிவந்தமை காண்க.

குறிப்பு:-

இவ்வெண்பாவின் மூன்றாம் நான்காம் அடிகளை நன்கு கவனிக்கவும். மூன்றாம் நான்காம் அடிகளின் முதற்சீர்கள் மட்டுமல்லாது அதற்கடுத்த சீர்களும் ஒன்றிவந்துள்ளது அல்லவா? அப்படி வருதல் செய்யுளுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும்.

மதுக்கடைகள் மூடி வளம்சேர் தமிழ
முதுக்கடைகள் செய்ய முனைவீர் -புதுக்கடையால்
தாழும் பிறமொழிகள் தங்கத் தமிழ்நாட்டில்
வாழும் தமிழ்மொழியும் வந்து! -அகரம்.அமுதா

இவ்வெண்பாவில் அடிதோறும் தலையாகெதுகை நன்கமைந்தமை காண்க.

சொன்முன் னெழுத்தொழிய ஏனை எழுத்தெலாம்
நன்கொத்து நின்று நடந்தால் அதனைத்
தலையா(கு) எதுகையெனச் சாற்று! -அகரம்.அமுதா

இக்கிழமைக்கான ஈற்றடிக்குத் தலையாகு எதுகையை ஓரிடத்திலாவது அமைக்க முயலுக.

இக்கிழமைக்கான ஈற்றடி:- உழவின்றி உய்யா(து) உலகு!

அகரம்.அமுதா

திங்கள், 21 ஜூலை, 2008

பாடம்15 எதுகை!

இக்கிழமைக்கான ஈற்றடியைப் பாடஇறுதியில் (கீழே) காணலாம்.

பொதுவாக வெண்பாவில் இரண்டடிக்கு ஒரு எதுகையிட்டு எழுதுவது வழக்கம். ஆற்றல் மிக்கவர்கள் வெண்பாவின் அடிதோறும் ஒரே எதுகையைக் கையாண்டு முடிப்பதும் உண்டு. எதுகையைக்கையாண்டு எழுதுவதால் பாடல் இன்னிசையோடு விளங்குவதால் எதுகையைச் சிறப்பிக்க ஓரெதுகை வெண்பா(ஒரு விகர்ப்ப வெண்பா) ஈரெதுகை வெண்பா (இருவிகர்ப்ப வெண்பா) என்றும் வகைப்பிரித்து வழங்குவர்.

1-ஓருறழ்ச்சி வெண்பா (ஒரு விகர்ப்ப வெண்பா), (உறழ்ச்சி -வேறுபாடு)

வெண்பாவில் வரும் அடிகள் முழுவதும் ஒரே அடியெதுகையைக் கொண்டு முடியுமானால் அதை ஓருறழ்ச்சி(ஒருவிகர்ப்ப) வெண்பா என்றழைப்பர்.

காட்டு:-

பூக்காடு நேர்தமிழைப் போற்றிப்பாத் தென்றல்செய்
பாக்காடு தான்காடு மற்றெல்லாம் -சாக்காடு;
சீக்காடு; முட்காடு; தீக்காடு; முக்காடு;
நோக்காடு மற்றரைவேக் காடு! -அகரம்.அமுதா

இவ்வெண்பாவை நன்கு நோக்குக. அடிதோறும் அமைந்துள்ள எதுகை க்-என்ற ஒரே எழுத்தை எதுகையாகக் கொண்டமைந்தமையால் இவ்வெண்பா ஓரெதுகை(ஒருவிகர்ப்ப) வெண்பா எனப்படும்.

தரும்வெண்பா தன்னில் தனிச்சீர் முதலாய்
இரு(ம்)அடிகள் ஒத்த எதுகை -பெறின்அஃதை
ஓருறழ்ச்சி என்றே உணர்! -அகரம்.அமுதா

குறிப்பு:-

தரும்வெண்பா தன்னில் தனிச்சீர் முதலாய் - நேரிசை வெண்பாவில் மட்டுமே தனிச்சீரையும் சேர்த்து ஒருறழ்ச்சியா, ஈருறழ்ச்சியா என்பதைக் கணக்கிடவேண்டும். இன்னிசை வெண்பாவெனில் அடிதோறும் வரும் எதுகைகளை மட்டும் மனதில் கொண்டு ஒருறழ்ச்சியா ஈருறழ்ச்சியா எனக் கண்டால் போதும்.

2-ஈருறழ்ச்சி வெண்பா (இருவிகர்ப்ப வெண்பா)

இரண்டடிக்கு ஓரெதுகை என்ற விகிதத்தில் வெவ்வேறு எதுகைகளைக் கொண்டுவருவது ஈருறழ்ச்சி வெண்பா எனப்படும்.

பெண்டகை யாட்றன் பிறங்கும் அழகையெல்லாம்
கொண்டகையாற் றொட்டுக் குதுகளித்தேன்! -கொண்டலைப்போற்
கூத்தாடும் நுன்னிடையில் கூத்தாடக் கட்டில்மேல்
பூத்தாடிற் றின்பம் புலர்ந்து! -அகரம்.அமுதா

இவ்வெண்பாவை நன்கு கவனிக்கவும். முதல் இரண்டடியில் ண் -எதுகையாகவும் அடுத்த இரண்டடிகளுக்கு த் -எதுகையாகவும் வந்தமையால் இவ்வெண்பா ஈருறழ்ச்சி வெண்பா எனப்படும்.

குறிப்பு:-

ஈருறழ்ச்சி வெண்பா என்பது சிந்தியல் அளவியல் (நேரிசை, இன்னிசை) வெண்பாக்களுக்கு மட்டுமே பொருந்தும். பஃறொடை மற்றும் கலிவெண்பாக்களில் இரண்டிரண்டு அடிகளுக்கு ஓருறழ்ச்சி வருமானால் அதை பல உறழ்ச்சி (பலவிகர்ப்பம்) என்பதே சரியாகும்.

வருமடிகள் நான்காய் வளரும்வெண் பாவில்
இருவடிகட் கோரெதுகை ஏற்று -வரின்அஃதை
ஈருறழ்ச்சி என்றே இயம்பு! -அகரம்.அமுதா

ஈற்றடி வழங்கும் நேரம்:-

திரு முகவை மைந்தன் இராம்குமார் அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவர் சொன்னார்:- கற்பனைத் திறத்தையும் புலமைத்திறத்தையும் காட்டுவதற்காக ஈற்றடி வழங்குவதை விட்டுவிட்டு அன்றாடம் நாட்டில் நடந்தேறும் முகன்மை நிகழ்வுகளை வெண்பாவாக்கும் விதமாக ஈற்றடி வழங்கலாம் அல்லவா? என்றார்.

அவர் கூற்று எனக்கும் சரிஎன்றே பட்டது. நீங்களே ஒரு நிகழ்வைச் சொல்லுங்களேன் என்றேன்.

அணுவாற்றல் ஒப்பந்தம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அதற்கேற்றாற்போல் ஈற்றடி வழங்கலாமே என்றார்.

ஈற்றடி உண்டேல் இயம்பு! என்றேன் நான். அவர் நல்கிய ஈற்றடிகள் இதோ:-

அணுவாற்றல் வேண்டாம் அகற்று!

அணுவாற்றல் வேண்டும் அறி!

நாம் இவ்விடம் இரண்டு ஈற்றடிகளைப் பதிவு செய்கிறோம். அமெரிக்காவுடன் அணுஒப்பந்தம் நல்லதே எனக்கருதுபவர்கள், ''அணுவாற்றல் வேண்டும் அறி!'' என்ற ஈற்றடிக்கும் வேண்டாம் எனக்கருதுபவர்கள், ''அணுவாற்றல் வேண்டாம் அகற்று'' என்ற ஈற்றடிகளுக்கும் வெண்பா வடிக்க வாரீர் வாரீர் என வரவேற்கிறேன்.

அகரம்.அமுதா

திங்கள், 14 ஜூலை, 2008

பாடம்14 ஓசை!

இவ்வார ஈற்றடியைக் காண்பதற்குமுன் வெண்பாவின் ஓசை வகைகளைக் காண்போம்.

வெண்பா செப்பலோசையை அடிப்படையாகக் கொண்டது என்பது யாவரும் அறிந்த ஒன்றே. அச்செப்பலோசையின் உட்பிரிவாக "ஏந்திசைச் செப்பலோசை", "தூங்கிசைச் செப்பலோசை", "ஒழுகிசைச் செப்பலோசை" என மூன்று வகையுள்ளது.

1-ஏந்திசைச் செப்பலோசை:-

முழுக்க முழுக்க வெண்சீர் வெண்டளையான் இயன்ற வெண்பா ஏந்திசைச் செப்பலோசையாகும். (ஈற்றுசீர் கணக்கில் கொள்ளக்கூடாது ஆதலால் ஈற்றுச்சீரொழிய ஏனைய 14-சீர்களும் வெண்சீர் வெண்டளை கொள்ளுமாயின் அவ்வெண்பாவின் ஓசையை ஏந்திசைச் செப்பலோசை என் நம் பழம்புலவர்கள் வகைபிரித்துள்ளனர்)

பட்டுப்போல் பூவிழிகள் பார்த்திருந்தேன் பாவையவள்
சட்டென்றே தன்விழிகள் சாய்த்திருந்தாள் -எட்டிநின்றே
என்னெழிலை உள்வாங்கிப் புன்னகைப்பாள் யானவளைக்
கண்கொண்டுக் காணாதக் கால்! -அகரம்.அமுதா

செத்துவிடப் போகின்றாய் சேர்ந்தவர்கள் உன்னுடலை
மொய்த்துவிடப் போகின்றாய் மொய்த்தாலும் சற்றழுவார்
சுட்டுவிடப் போகின்றார் சூழ்நிலைக்குத் தக்கனவாய்
நட்டமென்ன வாழ்ந்துவிடு நன்கு! -புரட்சி தாசன்

குறிப்பு!

வெண்பாவைப் பொருத்தவரை இன்னிசையை வழங்கக் கூடிய சீர் காய்ச்சீரே ஆகும் என்பது பழம் புலவர்களின் கூற்று. வெண்பாவின் சில இடங்களில் ஓசை நன்கமையப் பெறுவதற்காக அளபெடையைக் கையாள்வர். தளை தட்டாவிடத்து அளபெடுத்தலால் அவ்வளபெடையை இன்னிசையளபெடை என்பர். கவனிக்க:-

கெடுப்பதூவும் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூவும் எல்லாம் மழை! திருக்குறள்

கெடுப்பதும் எனக்கொள்கினும் தளைதட்டாதாயினும் செய்யுளின் ஓசை நன்கமையப்பெற வேண்டும் என்பதற்காக உயிர் அளபெடுத்து வந்தது.

2-தூங்கிசைச் செப்பலோசை:-

இயற்சீர் வெண்டளை மட்டும் பயின்றுவரும் வெண்பா (மாமுன் நிரை விளமுன் நேர்) தூங்கிசைச் செப்பலோசை எனப்படும்.

பூட்டிய வீட்டில் புகையிலைக் குஞ்சிகள்
ஓட்டை வழியே உதிர்ந்தன -ஈட்டும்
குரலின் மொழியில் இருமல் முழக்கம்
விரலின் இடையில் விரல்! -பாடலாசிரியர் கபிலன்

கனிவாய் மெதுவாய்க் கனிவாய்; உணவாய்
உனையே தருவாய் உயிரே! -இனிநம்
இருவாய் ஒருவாய் எனவாக் கிடுவாய்
வருவாய் வரம்தரு வாய்! -அகரம். அமுதா

குறிப்பு:-

இம்முறை சற்றே கடினமானது என்பதால் இம்முறையைப் பலரும் கையாள்வதில்லை. (புதிதாய் வெண்பா எழுதுபவர்கள் யாரும் இம்முறையைக் கையாள வேண்டாம். பொருட்சிதைவு ஏற்படும் வாய்ப்புள்ளது.)

3-ஒழுகிசைச் செப்பலோசை:-

இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை ஆகிய இரு வெண்டளைகளும் கலந்துவரின் அவ்வெண்பாவின் ஓசை ஒழுகிசைச் செப்பலோசை ஆகும்.

காதல் புரிகின்ற காதலரோ(டு) ஒப்பிடுங்கால்
காதல் கவிதைகளே காசினியில் ஏராளம்
ஆதலினால் அஃதை அகற்றிக் குமுகாயப்
பேதமையைப் பாசெய் பெரிது! -அகரம்.அமுதா

நண்பர்களே! வெண்பாவில் பயின்றுவரும் செப்பலோசையின் உட்பிரிவுகளைக் கண்டோம். இம்மூன்றுவகைகளிலும் பயிற்சி மேற்கொண்டு பாடல் இயற்றிப் பார்க்கவும்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- "கண்ணுற்றே நன்நெறியைக் காண்!"

ஏந்திசைச் செப்பலோசை அமையுமாறு அனைவரையும் பாடஅழைக்கிறேன்.

அகரம். அமுதா

திங்கள், 7 ஜூலை, 2008

ஈற்றடிக்கு வெண்பா எழுது!

அன்பன்என் பேரமுதா! ஆர்ப்பதெல்லாம் சீர்மரபே!
இன்னுமிரு பத்தெட்டை எட்டவில்லை; -மன்னும்
குணத்தமிழர் மாமரபு குன்றா துமக்கு
வணக்கங்கள் வைக்கின்றேன் வந்து!

என்னைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே சுட்டவும்!

நாம், இவ்வெண்பாப் பகுதியைத் தொடங்கி நடத்திவருவதன் நோக்கம் வெண்பா பயில இயற்ற வேண்டும் என்னும் விருப்பமிருந்தும் இலக்கணம் அறியாக் காரணத்தால் தங்கள் கனவு நிறைவேறாதிருக்கும் வலைப்பதிவர்களுக்கு வெண்பா பயிலவும் இயற்றவும் இலகுதமிழில் வேற்றுமொழி கலவா வெல்தமிழில் பயிற்றுவிப்பதே.

மரபை அறியும் மனமுடை யோர்க்காய்க்
குறையில்வெண் பாவைக் குறிப்பாய் -அறியத்
தருவ(து) அவாஎன் றனுக்கு!

விரித்தேன் வலையை விழும்மீன்என் றல்ல;
விரும்பித் தமிழை விரைந்தே -பருகும்
வலைப்பதி வாளர்க்காய் வந்து!

நம் "வெண்பா எழுதலாம் வாங்க!" வலைக்கு வந்துசெல்லும் அன்பர்களுக்கும் இனி வரவிருக்கும் அன்பர்களுக்கும் ஓர் நற்செய்தி! சற்றேறக் குறைய நம் வெண்பாப் பாடம் முடிவடையும் நிலையில் உள்ளது.

வெண்பாவின் இலக்கணத்தைக் கற்றுக்கொண்ட நாம் இனிவரும் பாடங்களில் வெண்பாவின் நுணுக்கங்கள் பலவற்றையும் பார்க்கவிருக்கிறோம்.

அவற்றைப் பாடமாகத் தருவதில் எப்பயனும் இல்லை. பாடமாகக் கொடுக்கப்படினும் அவ்வளவு எளிதில் மனதில் பதியாதாதலால் ஒவ்வொரு நுண்ணிய உட்பிரிவையும் விளக்கும் பாடத்துடன் அதுசார்ந்த ஈற்றடியையும் அப்பாடத்துடன் இணைக்கலாம் எனக்கருதுகிறேன்.

நான் அளிக்கும் நுட்பங்களை அவ்வீற்றடி கொண்டு நீங்கள் வெண்பாவாக்கும் போழ்து எளிதில் மனதில் பதிவதாயிருக்கும் எனக்கருதுகிறேன். இதற்கத் தங்களின் பேராதரவை எதிர்பார்க்கிறேன்.

"வெண்பா எழுதலாம் வாங்க" எனும்என்றன்
பண்பாய நல்வலையில் பங்கேற்க -நண்ப!உமை
அன்போ டழைத்தேன்; அழைப்புத் தனைஏற்றே
என்னீற் றடிக்குவெண்பா ஈ!

ஈற்றடிக்கு வெண்பா இயற்றும் விளையாட்டை
ஏற்று நடாத்துகிறேன் என்வலையில் -பாற்றொடுக்க
வாரீர் அலைகடலாய் வந்தேஉம் ஆதரவைத்
தாரீர் எனஅழைத்தேன் தாழ்ந்து!

வெண்பா எழுதத் துவங்கும் புதிதில் எதையெழுதுவது? எப்படி எழுதுவது? அப்படியே எழுதத்துவங்கினும் வெண்பா எழுத அதிகநேரம் பிடிப்பதோடு பொருட்சிதைவும் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற குழப்பங்களைத் தவிற்கவும் புதுப்புதுக் கருத்துக்களைக் கையாள எற்றவகையிலும் தங்களுக்கு எளிமைபடுத்தவே நாம் இப்பகுதியைத் துவங்கியிருக்கிறோம்.இதனையே அழைப்பாக ஏற்று அனைவரும் வாரீர். ஆதரவு தாரீர்.

பாவிற் சிறந்தவெண் பாவின் தளையறிந்தே
தாவின்றித் தீட்டத் தலைப்படுவோம் -கூவி
வருகவென் றார்ப்பரித்தேன்; வந்தா தரிப்பீர்;
வருந்தகையார் எல்லாரும் வந்து!

நாம் வெவ்வேறாயினும் ஒருவர் முகம் ஒருவர் அறிந்ததில்லை எனினும் நாம் ஒருமுகமாய்ச் செயல் படுவதால் நம் எழுத்துக்களில் நாளடைவில் சொற்சுவையும் பொருட்சுவையும் அமையப்பெருதலைக் கண்கூடாகக் காணலாம். நம் சொல்லாட்சியில் பாவுள் பொருளாட்சி செய்தலைக் காண்போம். நாம் என்பதே நன்மை.

நானென் றுரைத்தோர் நளிவுற்றுச் சீரயிந்துப்
போன திசையறியோம் பொய்யில்லை; -நானற்ற
நாமன்றோ நன்மை நவில்!

ஊற்றெடுக்கும் கற்பனையை ஒண்டமிழின் பாவகையுள்
ஏற்றமுறும் வெண்பாவில் ஏற்றிவைப்போம் -ஆற்றலுறும்
ஈற்றடியை யானளிப்பேன் ஈற்றடிக் கேற்றபடி
சாற்றிடுவீர் அன்பனெனைச் சார்ந்து!

இசைமிகு இன்றமிழில் ஏறார் நடைசெய்
வசையில்வெண் பாக்கள் வடித்து -நசையறு
நாற்றிசைக்கும் நம்புகழை நாமெடுத்துச் செல்வோம்என்
ஈற்றடிக்கு வெண்பா எழுது!

ஈற்றடியை வழங்குவதற்குமுன் வெண்பாவில் இடம்பெற வேண்டிய அடிப்படைத் தகுதிகளைச் சுருக்கமாகக் குறிப்பிடுதல் நலம் எனக்கருதுகிறேன்.

1-ஓரடிக்குள் மோனை நன்கமையப் பெறுதல்.
(பொழிப்புமோனை அமைத்தல் நன்று. அது முடியாத போது இணைமோனையோ ஒரூஉ மோனையோ அமைக்கலாம்) மேலும் மோனையைப் பற்றித் தெரிந்து கொள்ள இங்கே சுட்டவும்.

2-அடிதோறும் எதுகை அமைத்தல்.
(1,5,8-ம் சீர்களில் ஒத்த எதுகையும் 9மற்றும் 13-ம் சீர்களில் ஒத்த எதுகையும் அமைதல் வேண்டும்) எதுகையைப் பற்றி அறிய இங்கு சுட்டவும்.

3-அளவியல் வெண்பாவிற்கு மொத்தம் 15சீர்கள் வரும். ஒவ்வொரு சீரையும் தனித்தனிச் சொற்களைக் கொண்டு நிறப்புதல் வேண்டும்.

4-நேரிசை வெண்பா எனில் கட்டாயம் எதுகை எடுத்த தனிச்சீர் அமையப்பெறுதல் வேண்டும்.

5-இன்னிசை வெண்பா எனில் தனிச்சீர் ஒழிய அடிதோறும் எதுகை யமைத்தல் வேண்டும். (பெருவாரியாகத் தற்காலத்தில் இன்னிசை வெண்பாவில் இம்முறையையே கையாள்கிறார்கள்.)

மேற்கூறிய வெண்பாவிற்கான விதிமுறைகளை மனதில் ஏற்றிக்கொண்டு நம் வெண்பா எழுதலாம் வாங்க எனும் ஆடுதளத்தில் புகுந்து விளையாடிக் கலக்குவீர்களாக!

விளையாட்டைத் துவங்குமுன் தங்கள் அனைவரின் சார்பாகவும் தமிழ்வணக்கமும், கணபதி வணக்கமும் செய்துவடுகிறேன்.

சொற்சிலம்பம் ஆடத் துணிந்தோம்; புடம்பொட்டப்
பொற்சிலை போன்றவளே பூத்துவா! -மற்சிலம்பம்
ஆடிப் பகைவளர்க்கும் ஆசை எமக்கில்லை
பாடித் தமிழ்வளர்ப்போம் பார்!


கால்குலேட்டர் கைபோன் கணினிகடி காரமிவை
நாலும் உனக்களித்து நான்மகிழ்வேன்! -கோலக்
கணபதியே! வெண்பாக் கலக்க(ல்)விளை யாட்டில்
பிணக்கின்றிக் காப்பாய் பெரிது!


சரி. கணபதியையும் வணங்கியாகி விட்டது. இப்பொழுது வெண்பா விளையாட்டைத் துவங்குவோமா?

உமக்கான ஈற்றடி:- "வெண்பா விரித்தேன் விரைந்து!" -கலக்குங்க-

அகரம்.அமுதா

வியாழன், 3 ஜூலை, 2008

பாடம்13 பஃறொடை மற்றும் கலிவெண்பா!


பஃறொடை வெண்பா:-

பஃறொடை வெண்பாவிலும் நேரிசை இன்னிசை என இருவகையுண்டு. பல தொடைகளாலும் ஆனமையால் பல்தொடை எனும்பேர் பெற்றுப் புணர்ச்சியின் காரணமாய் பஃறொடை வெண்பாவானது. இது நான்கடிகளுக்கு மிகுந்தும் பன்னிரண்டடிகளுக்கு மிகாமலும் வரும். பன்னிரண்டடிகளுக்கு மிகுமாயின் அது கலிவெண்பாவாகிவிடும்.

நேரிசைப் பஃறொடை வெண்பா:-

அளவடி வெண்பாவில் நாம்கண்டது போன்றுதான் எதுகையமைப்பு. ஒவ்வொரு இரண்டடிகளுக்கும் ஒரு தனிச்சீர் பெற்று வரும்.

காட்டு:-

ஆய்ந்தறிந்து கல்லதான் கல்வியும் ஆறறிவில்
தோய்ந்தறிந்து சொல்லாதான் சொற்பெருக்கும் -தீந்தமிழின்
சொல்லிருக்க வன்கடுஞ்சொற் சொல்வதூஉம் தன்மனையால்
இல்லிருக்க வேறில் இரப்பதூஉம் -நெல்லிருக்கக்
கற்கறித்து மண்டின்று காய்த்துக் களத்தடித்த
புற்கறித்து வாழ்வதனைப் போன்று!

நன்கு நோக்கவும். இரண்டடிகளுக்கு ஒருமுறை தனிச்சீர் பெற்றுவந்தமையால் இது நேரிசைப் பஃறொடை வெண்பா.

இன்னிசைப் பஃறொடை வெண்பா:-

இன்னிசைப் பஃறொடை பலவாறாய் வரும்.

1-அடியெதுகை பெறாமல் வரும்.
2-தனியெதுகை பெறாமல் வரும்.
3-எல்லா அடிகளிலும் தனிச்சீர் பெற்றுவரும்.
4-சிலஅடிகளில் தனிச்சீர் பெற்றம் பெறாமலும் வரும்.
5-சில அடிகளில் அடியெதுகை பெற்றும் பெறாமலும் வரும்.

இப்படிப் பலவாறாய்க் கூறலாம். ஆக இரண்டிரண்டு அடிகளுக்கோர் தனிச்சீர் பெறா பஃறொடை இன்னிசைப் பஃறொடையாகும்.

காட்டு:-

வையகம் எல்லாம் கழனியாம் -வையகத்துச்
செய்யகமே நாற்றிசையின் தேயங்கள் -செய்யகத்து
வான்கரும்பே தொண்டை வளநாடு –வான்கரும்பின்
சாறேயந் நாட்டுத் தலையூர்கள் -சாறற்ற
கட்டியே கச்சிப் புறமெல்லாம் -கட்டியுள்
தானேற்ற மான சக்கரை –மாமணியே
ஆனேற்றான் கச்சி யகம்!

அடிதோறும் எதுகை பெற்று இன்னிசையானமைகாண்க.

கலிவெண்பா:-

கலிவெண்பாவிலும் நேரிசைக் கலிவெண்பா இன்னிசைக் கலிவெண்பா என இருவகையுண்டு. பஃறொடை மிக்கது கலிவெண்பா ஆகும். அதாவது பன்னிரண்டடிகளுக்கு மிக்கது. பன்னிரண்டடிகளுக்கு மேல் எத்தனை அடிகாறும் வேண்டுமானாலும் செல்லலாம். வரையறை என்பதில்லை.

நேரிசைக் கலிவெண்பா:-

மற்ற நேரிசைவெண்பாக்களுக்குப் பார்த்த விதியே இதற்கும் பொருந்தும். இரண்டிரண்டு அடிகளுக்கோர் தனியெதுகை பெற்றுவரும்.

இன்னிசைக் கலிவெண்பா:-

நேரிசை வெண்பாவின் விதியாகிய இரண்டடிக்கோர் தனியெதுகை எடுத்தலை மீறிவிடின் அது இன்னிசைக் கலிவெண்பாவாகிவிடும்.

அகரம்.அமுதா

திங்கள், 30 ஜூன், 2008

பாடம்12 அளவியல் வெண்பா!

நான்கடிகளைக் கொண்டது அளவியல் வெண்பாவாகும். மூவடி முக்கால் அளவியல் வெண்பா என்கிறது தொல்காப்பியம்.

சிந்தியல் வெண்பா முதற்கொண்டு பின்வரும் அனைத்துவெண்பா வகைகளும் நேரிசை இன்னிசை என இருவகைப்படும்.

நேரிசை அளவியல் வெண்பா:-

நாலடி வெண்பாவில் முதல் இரண்டடிகளின் எதுகை பெற்ற தனிச்சீரை இரண்டாமடியின் ஈற்றில் (அதாவது 8ம் சீரில்) பெற்று வருவது நேரிசை வெண்பாவாகும். (ஆக நேரிசைக்கு இவ்வோர் விதியைத் தவிர வேறு விதிகள் கிடையாது.ஆதலால் இவ்விதியை மீறும் ஏனைய வடிவங்கள் இன்னிசையாக் கொள்ளப்படும்)

காட்டு:-

கோடிக் கவிஞருள் கோமகளே! நீயென்னைத்
தேடிக் களைப்புறவுஞ் செய்வேனோ? -நாடியெனைக்
கோத்தள்ளிக் கொஞ்சக் குறிப்பொன் றுரைப்பதெனில்
பாத்தென்றல் மாணாக்கன் பார்! -அகரம்.அமுதா

இவ்வெண்பாவைக் கவனித்தீரா? கோடி தேடி என்னும் அடியெதுகைக்குத் தனியெதுகை நாடி என வந்தமையால் இது நேரிசை வெண்பா.

(1,5,8ம் சீர்களில் எதுகையெடுத்து வந்தால் மட்டும் பொதாது. 9மற்றும் 13ம் சீர்களிலும் எதுகையமைய வேண்டும். 1,5,8 ம் சீர்களில் வந்த எதுகையே 9மற்றும்13ம் சீர்களில் வரவேண்டும் என்பதில்லை. வேறெதுகையும் பெற்றும் வரலாம். எதுகை பெற்று வரவேண்டும் என்பதே விதி.)

(1,5,8ல் எதுகை பெற்று 9மற்றும் 13ல் எதுகைபெற வில்லையெனில் அது இன்னிசைவெண்பாவெனக் கொள்ளப்படும்.)

இன்னிசை அளவியல் வெண்பா!

இன்னிசை வெண்பாக்கள் பலவகைப்படும்.

1-நாலடியிலும் ஒரேயெதுகையைப் பெற்று வருதல் (தனிச்சொல் மட்டும் இரா)
2-பல எதுகைகளைப் பெற்று வருதல்
3-அடிதோறும் தனிச்சீர் பெற்று வருதல்
4-இரண்டாமடியிலும் மூன்றாமடியிலும் தனிச்சீர் பெற்று வருதல்
5-மூன்றாம் அடியில் தனிச்சீர் பெற்று வருதல்

போன்றவை இன்னிசை வெண்பாக்களாகும்.

காட்டு:-

இன்னாமை வேண்டின் இரவெழுக -இந்நிலத்து
மன்னுதல் வேண்டின் இசைநடுக -தன்னொடு
செல்லவது வேண்டின் அறஞ்செய்க -வெல்வது
வேண்டின் வெகுளி விடல். -நான்மணிக்கடிகை.

இது அடிதோறும் தனிச்சீர் பெற்றமையால் இன்னிசையானது.

கள்வமென் பார்க்குத் துயிலில்லை காதலிமாட்
டுள்ளம்வைப் பார்க்குந் துயிலில்லை ஒண்பொருள்
செய்வமென் பார்க்குந் துயிலில்லை அப்பொருள்
காப்பவர்க்கும் இல்லை துயில்! -நான்மணிக்கடிகை.

பல எதுகை பெற்று வந்தமையால் இன்னிசையானது.

மேலும் பல இன்னிசை அளவியல் வெண்பாக்களை அறிய இவ்விடம் கிளிக் செய்க!

குறிப்பு:-

1,5,8ம் சீர்களில் ஓரெதுகையும் 9மற்றும்13ல் ஓரெதுகையும் பெற்றோ அல்லது 1,5,8,9மற்றும்13ம் சீர்கள் ஒரே எதுகையான் அமைந்தோ வருவது நேரிசையாகும். இவ்விதிக்கு மாறுபட்ட யாவும் இன்னிசை வெண்பா வகை என்றே அறுதியிட்டுச் சொல்லிவிடலாம். ஆகையால் நேரிசை வெண்பாவிற்கான விதியை நன்கு தெரிந்து நினைவில் கொள்க.

ஒன்றைந்தோ டெட்டாம்சீர் உற்ற எதுகையெடுத்
தொன்பதாம் சீரும் பதின்மூன்றும் -நன்கெதுகை
கொண்டுவரின் நேரிசையாம்; கொள்ளாக்கால் மற்றவை
இன்னிசை என்றே இயம்பு! -அகரம்.அமுதா

நேரிசையென் பாரிதையே நேரிழையே! ஈற்றினில்
ஓரசையோ நாள்பிறப்போ ஓடிவரும் -ஓரடியில்
மோனை வரவேண்டும் மூன்றிரண்டில் நல்லெதுகை
தானமையச் சாற்றுதல்வேண் டும்! -பாரதிதாசன்

ஒன்றைந்தெட் டாகியசீர் ஒத்த எதுகையாய்
நின்றபதி மூன்றொன்பா னேரொத்து -நன்றியலு
நீடுசீர் மூவைந்தா நேரிசைவெண் பாவென்பர்
நாடுசீர் நாப்புலவர் நன்கு! -வீரசோழியம்

அகரம்.அமுதா

வெள்ளி, 27 ஜூன், 2008

பாடம்11 சிந்தியல் வெண்பா!

மூன்று அடிகளைக் கொண்டது சிந்தியல் வெண்பாவாகும். ஈரடி முக்கால் சிந்தியல் வெண்பா என்கிறது தொல்காப்பியம்.

சிந்தியல் வெண்பாக்கள் இருவகைப்படும். அவை:- 1-நேரிசைச் சிந்தியல் வெண்பா 2-இன்னிசைச் சிந்தியல் வெண்பா ஆகும்.

1-நேரிசைச் சிந்தியல் வெண்பா:-

முதல் அடியின் முதற்சீரிலும் இரண்டாம் அடியின் முதற்சீர் மற்றும் நான்காம் சீர்லும் எதுகையமையப் பாடுவது.

காட்டு:-

நல்லார் உறவால் நலம்பெருகும் நாடோறும்
அல்லார் உறவால் அறந்தேயும் -பொல்லார்
தொடர்விடுதல் மேலாந் துணை!

இச்சிந்தியலில் முதற்சீர் ஐந்தாம்சீர் மற்றும் எட்டாம் சீர் எதுகையெடுத்து வந்தமை காண்க. அதாவது இரண்டாமடியின் கடைசிச் சீரில் எதுகையெடுத்துவருவது. ஆகையால் இது நேரிசைச் சிந்தியல் வெண்பா!

ஈரடியும் முக்காலும் ஏற்றுவரின் சிந்தியலாம்;
கூறடி மூன்று(ள்)தனிச் சீர்பெறலே -நேரிசையாம்;
ஊர்க்கிதை ஓதிடுவீர் ஓர்ந்து! -அகரம்.அமுதா

இன்னிசைச் சிந்தியல் வெண்பா:-

தனிச்சீர் பெறாமையும் அடியேதுகை பெறாமையும் இன்னிசை வெண்பாவாகும்.

அன்புற் றெவர்க்கும் அறனல்ல செய்யாது
தென்புற்று நன்குஞற்றுஞ் செம்மைத் திருவுடையார்
இன்புற்று வாழ்வ ரினது!

இச்சிந்தியலைக்கவனிக்க:- மூன்றடிகளிலும் எதுகை எடுத்து வந்திருப்பினும் தனிச்சொல் பெறாமையால் இன்னிசையானது. (தனிச்சொல் -இரண்டாமடியின் நான்காம் சீரில் எதுகையெடுத்தல். இதை இப்படியும் சொல்லலாம் வெண்பாவின் எட்டாம்சீர் எதுகைபெறாமை)

முன்புவெண் பாவுரைப்பேன் முப்பாவும் -பின்புரைப்பேன்
பூவிற் சிறந்தது தாமரை பொன்மயிலே!
பாவிற் சிறந்ததுவெண் பா! –பாரதி தாசன்.

இச்சிந்தியலை நன்கு கவனிக்கவும். முதற்சீர் (முன்பு -ன்) -எதுகையெடுத்துவந்து இரண்டாமடியின் முதற்சீரில் (ன்) -எதுகையின்மையால் இன்னிசையானது. மேலும் முதலடியின் முதற்சீரும் நான்காம் சீரும் எதுகையெடுத்து வந்துள்ளது. அப்படிவரின் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப் படாது.

மேலும் முதற்சீரிலும் எட்டாம் சீரிலும் எதுகைபெற்றிருந்தும் ஐந்தாம் சீரில் எதுகை பெறாமையால் இன்னிசையுள் அடங்கிவிடுகிறது. (அனைத்து அடிகளிலும் எதுகையெடுத்து வராதவையும் இன்னிசைச் சிந்தியலேயாகும்.)

மேலும் இன்னிசைச் சிந்தியல் வெண்பாக்களை அறிய இவ்விடம் கிளிக் செய்க!

நேரிசைச் சிந்தியல் வெண்பாவின் இலக்கணம் 1,5,8-ம் சீர் எதுகை யெடுத்துவருவது கட்டாய விதி. இவ்விதியை மீறின் அது இன்னிசைச் சிந்தியலில் வைக்கப்படும்.

அகரம்.அமுதா

திங்கள், 23 ஜூன், 2008

பாடம்10 குறள்வெண்பா!

ஒன்றே முக்கால் அடிகள் அதாவது ஏழு சீர்களைக் கொண்டது குறள் வெண்பா!

குறள்வெண்பா எழுதுகிற போழ்து கவனிக்க வேண்டியவை:-

வெண்பாவிற்கு மோனை எதுகைத்தொடைகள் முக்கியம் எனினும் குறள்வெண்பா இரண்டே அடிகளைக்கொண்டதால் நாம் குறிக்கவரும் கருத்தைத் தொடைகள் பொறுத்திக் கூறல் கடினம். ஆதலால் சில விதி தளர்த்தல்கள் உள்ளன. அவற்றை முதலில் காண்போம்.

1-குறள்வெண்பாவின் முதல் அடியில் பொழிப்புமோனையோ அல்லது ஒரூஉ மோனையோ அமைந்தால் நலம்.

2-இரண்டாமடியாகிய ஈற்றடியில் பொழிப்புமோனை அமையத்தான் வேண்டும் என்பதில்லை. அமையப்பெறின் நலம் அவ்வளவே.

விண்தேடும் வள்ளுவனார் வேட்ட குறள்முடியை;
மண்தேடும் தாளின் அடி! -அகரம்.அமுதா

இக்குறள்வெண்பாவை நன்கு கவனிக்க. இரண்டாமடியில் கூறவந்த பொருள் கருதி பொழிப்பு மோனை அமையப்பெறாது செந்தொடையான் இயன்றமை காண்க.

குறிப்பு:-

இதனால் பொழிப்பு மோனையின்றியே பாடவேண்டும் என்பதில்லை. பொருட்செறிவு குன்ற வலிந்து மோனை அமைக்கத் தேவையில்லை. அவ்வளவே.

3-முதலடியின் முதற்சீரிலும் இரண்டாமடியின் முதற்சீரிலும் எதுகை அமையத்தான் வேண்டும் என்பதில்லை. அமையப்பெறின் நலம்.

4-முதலடியின் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் ஒரூஉ எதுகை அமையபாடுவது.

வேய்ங்குழலோ? கிள்ளை மொழிதானோ? சேய்தன்
குரலோ? இதுயாழோ? கூறு! -அகரம்.அமுதா

இக்குறளை நன்கு கவனிக்க. முதலடியின் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் எதுகை பெற்றமையால் அடியெதுகை அமையாது வந்தமை அறிக.

5-வெண்பாவில் பொதுவாக நேரிசை இன்னிசை என இருவகை உண்டெனினும் குறள்வெண்பா இரண்டே அடிகளைக்கொண்டமையால் இன்னிசை நேரிசை என்னும் பாகுபாடு கிடையாது.

6-மிகுந்த பொருட்செறிவுடன் கூடிய கருத்துக்களை எடுத்துவைக்கும் போது தொடைகள் பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை.

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குறிய னாகச் செயல்! திருக்குறள்.

இக்குறள் வெண்பாவை நோக்குக. முதலடியில் மோனைத்தொடையோ எதுகைத்தொடையோ அமையப்பெறவில்லை. அடியெதுகையும் அமையவில்லை. இரண்டாமடியின் முதற்சீரும் இரண்டாம் சீரும் மோனைபெற்று இணைமோனை மட்டுமே வந்துள்ளது.

குறிப்பு:-

இவைபோன்று இன்னும் பன்முறைகள் இருப்பினும் தற்காலத்தில் குறள்வெண்பாவிலும் பொழிப்புமோனை அடியெதுகை இரண்டும் அமையப்பாடுவதே சிறப்பாகக் கொள்ளப் படுகிறது.

காட்டு:-

சீரடி மூன்றால்பார் தீரஅளந் திட்டான்மால்;
ஈரடி போதும் இவர்க்கு! -அகரம்.அமுதா

ஆக குறள் வெண்பாவில் மோனை எதுகை அமையப் பாடிவிடின் அளவியல் வெண்பாவில் மோனைஎதுகை அமைத்துப் பாடுவது மிக எளிதாகிவிடும். இப்பாடத்தைப் படிப்போர் குறள்வெண்பாவில் உள்ள சந்துபொந்துகளில் நுழைய முற்படாமல் முடிந்தவரை மோனை எதுகை அமையப்பாட வேண்டுகிறேன்.

அகரம்.அமுதா

செவ்வாய், 17 ஜூன், 2008

பாடம்9 வெண்பா ஓர் அறிமுகம்!


ஓசை:-

பழம் புலவர்கள் ஓசை வேறுபாடு கொண்டே பா வேறுபாடு கண்டனர். செப்பலோசை அகவலோசை துள்ளலோசை தூங்கலோசை என செய்யுலோசை நான்கு வகைப் படும்.

வெண்பாவில் பயின்றுவரும் ஓசை செப்பலோசை. இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை ஆகிய இருதளைகளாலும் அமையப்பெருவது செப்பலோசையாகும்.

செப்பலோசை -இருவர் உரையாடல் போன்ற ஓசை!

வெண்பாவும் அதன் இனமும்:-

1-குறள்வெண்பா -இரண்டு அடிகளைக்கொண்டது.
2-சிந்தியல் வெண்பா -மூன்று அடிகளைக்கொண்டது.
3-அளவியல் வெண்பா -நான்கு அடிகளைக்கொண்டது.
4-பஃறொடை வெண்பா -5அடியிலிருந்து 12அடிகளைக்கொண்டது.
5-கலிவெண்பா -12அடிகளுக்கு மேற்பட்ட அடிகளைக்கொண்டது.

-என வெண்பா 5 வகைப்படும்.

ஓரடி முக்கால் குறள்வெண் பாவே
ஈரடி முக்கால் சிந்தியல் வெண்பா
மூவடி முக்கால் அளவியல் வெண்பா
பலவடி முக்கால் பஃறொடை வெண்பா
பஃறொடை மிக்கது கலிவெண் பாவே!

-தொல்காப்பியம்!

வெண்பா எழுதும் போது கவனிக்கவேண்டியவை:-

வெண்பாவில் இயற்சீர் நான்கும் (தேமா புளிமா கருவிளம் கூவிளம்) வெண்சீர் நான்கும் (தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய்) மட்டும் வரும்.

ஈற்றடி சிந்தடியாகவும் (மூன்று சீர்கள் கொண்டது சிந்தடி) மற்ற அடிகள் அளவடிகளாகவும் (நான்கு சீர்கள் கொண்டது அளவடி) வரவேண்டும்.

வெண்பாவின் அளவடிகளில் பொழிப்ப மோனை வரவேண்டும். சிறுபான்மை ஒரூஉ மோனையும் வரலாம். சிந்தடியாகிய ஈற்றடியிலும் பொழிப்பு மோனை வரவேண்டும்.

ஈற்றடியின் இறுதிச்சீர் நாள் மலர் காசு பிறப்பு இவற்றிலொன்றைப் பெற்று முடிதல் வேண்டும்.

குறிப்பு:-

நாம் அடுத்தடுத்த பாடத்தில் 5வகை வெண்பாக்களைப் பற்றியும் தனித்தனியாக அறிய விருக்கிறோம். ஆகையால் கண்ணில் படும் வெண்பாக்களையெல்லாம் இதுவரை நாம் கற்ற இலக்கணத்தின் படி இருக்கிறதா? என்பதை உற்று நோக்குக! ஐயமிருப்பின் கேள்விகளைக் கேட்கத் தயங்காதீர்கள்.

நாளும் ஓர் வெண்பா வீதம் மனனம் செய்வீர்களே யானால் வெண்பா எழுதுவது மிக இலகுவாகி விடும்.

பொருட்செறிவுமிக்க அழகிய வெண்பா தருகிறேன். முடிந்தவரை படித்து மனனம் செய்யவும்.
மனனவெண்பா!

அறம்தகளி; ஆன்ற பொருள்திரி; இன்பு
சிறந்தநெய்; செஞ்சொல்தீ; தண்டு -குறும்பாவா
வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்
உள்ளிருள் நீக்கும் விளக்கு! -நப்பாலனார்.

அகரம்.அமுதா

சனி, 14 ஜூன், 2008

பாடம்8 வினாவிடை!

நமது அருமைத் தோழர் ஜுவா அவர்கள் நமது பாடம்7- தொடைச் சிறப்பைப் படித்துவிட்டுப் பின்னூட்டில் சில கேள்விக் கணைகளைத் தொடுத்திருந்தார். பின் சற்று நேரத்தில் (உறழ்ச்சித் தொடையைப் படித்துவிட்டு) அதில் பல கேள்விகளுக்கு உறழ்ச்சித் தொடையிலேயே பதிலிருப்பதாகவும் மீண்டும் ஓர் பின்னூட்டிட்டிருந்தார்.

அவருக்குப் புரிந்திருப்பினும் அக்கேள்விகளுக்கு நாம் பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். கேள்விகளும் பதில்களும் பின்வருமாறு:-

1-ஒன்றாம் மூன்றாம் சீரினை (பொழிப்பு மோனை) மோனைத் தொடையாக ஒத்து நோக்குவதைப் போல இரண்டாம் மற்றம் நான்காம் சீர்களையும் நோக்கலாமா?

ஆம். முதல் மூன்றாம் சீர்களில் மோனையமையாதக்கால் முதலிரு சீரிலோ அல்லது முதல் மற்றும் நான்காம் சீரிலோ மோனை அமையலாம். முதல் மற்றும் நான்காம் சீர்களில் மோனையமையப் பெறின் அதைப் “பின்மோனை” என்பர்.

2-குறிப்பிட்ட சில உயிர்மெய்யெழுத்துக்களைத் தவிர இதர எழுத்துக்களுக்கு இனம் கிடையாதா?

ம-வ த-ச ஞ-ந வைத்தவிர மற்ற உயிர்மெய்யெழுத்துக்களுக்கு வந்த எழுத்துக்களே மோனையாக அமையவேண்டும். ஆயினும் அவ்வுயிர்மெய் (எதுகை விதியிலுள்ளதைப் போல) குறிலுக்குக் குறிலோ நெடிலுக்கு நெடிலோ வரவேண்டும் என்ற அவசியமில்லை.

எ.காட்டு:-க-என்ற எழுத்து மோனையாக அமைகிறது என்று வைத்துக்கொள்வோம். உயிரினமான (அஆஐஒள) ஆகிய எழுத்துக்களோடு புணர்ந்துவந்த (அதாவது) க கா கை கௌ இவற்றிலொன்றே மோனையாக அமைய வேண்டும். மாறாக -விற்கு மோனையாக கி-யோ கூ-வோ அமையக்கூடாது.

மோனையாகிய -விற்கு மோனையாக க கா கை கௌ இவற்றிலொன்றை மோனையாக அமைக்கமுடியவில்லையா? குழப்பமில்லை. அதற்கும் நம் பெரியோர்கள் வழிவகை செய்திருக்கிறார்கள். -என்பது வல்லின எழுத்தல்லவா? ஆக வல்லின எழுத்துக்களாகிய க ச ட த ப ற -இவற்றுள் க ச த ப இவை நான்கும் சொல்லின் முதலில் வருமல்லவா? -விற்கு மோனையாக (ச சா சை சௌ த தா தை தௌ ப பா பை பௌ) இவற்றை மோனையாக அமைக்கலாம். இதற்கு வல்லினமோனை என்று பெயர். (இதுவே மெல்லினம் மற்றும் இடையின எழுத்துக்களுக்கும் பொருந்தும்)

3-ஒரு சீரை ஈரசைச் சீராகப் பிரிப்பதா அல்லது மூவசைச் சீராகப்பிரிப்பதா என்பதை முடிவுசெய்ய இந்த தொடைகள் கைகொடுக்கும் போலத் தெரிகிறது. சரியா?

இல்லை. சீர்களைப் பிரிப்பதற்குப் பெரிதும் துணையாயிருப்பது ஒற்றுக்களே!

எ.காட்டு:-
காலத்தின் மாற்றமேற் கத்தக்க தென்பதனால்
நேர்நேர்நேர் நேர்நிரை நேர்நேர் நேர்நிரைநேர்

காலத்தின் மாற்றம் ஏற்கத்தக்கது –என்றெழுதினால் தளை தட்டும்.

ஆகையால் அப்படிப் பிரித்து எழுதியுள்ளேன். இதையே:-

காலத்தின் மாற்றமேற்கத் தக்க தென்பதனால்
நேர்நேர்நேர் நேர்நிரைநேர் நேர்நேர் நேர்நிரைநேர்

இதில் பாருங்கள் மூன்றாம்சீர் வரை தளைதட்டவில்லை.மேலும் கா-விற்குப் பொழிப்பு மோனையாக -வந்து வல்லின மோனையானமை காண்க. நான்காம் சீர் மாமுன் நேர் வந்துத் தளைதட்டுகிறது. ஆகையால்தான் “மாற்றமேற் கத்தக்க” என்று பிரித்தெழுதியுள்ளேன் என்பதறிக.

4-உயிரெழுத்துக்களில் இனமோனை நன்றாகப் புரிகிறது. ம-வ மற்றும் த-ச கூட்டணி ஒரே ஓசைநயம் இல்லாததுபோல் இருக்கிறதே?

ஆம். ஒத்த ஓசை இல்லைதான்.

5-முதல்சீரையும் இரண்டாம் சீரையும் ஏன் மோனைத்தொடையாக ஒத்துக்கொள்வதில்லை. “தங்கச் சொம்பு” “சந்தம் தங்கும்” போன்றவை மோனைத்தொடைகள் இல்லையா?

ஆம். பார்க்கலாம். இதற்கு முன் இணைமோனை என்று பெயர். “சந்தம் தங்கும்” என்பது சரி. “தங்கச் சொம்பு” என்பதில் மோனையில்லை. -என்ற அகரப் புணர்ச்சிக்கு சொ-என்ற ஒகரப் புணர்ச்சி எப்படி மோனையாகும். மாறாக தங்கக் காசு என்று வருமானால் சரியே. ஏனென்றால் -வுக்கு மோனையாக கா-என்ற வல்லினமோனை வருகிறதல்லவா?

அகரம்.அமுதா

ஞாயிறு, 8 ஜூன், 2008

பாடம்7 தொடைச் சிறப்பு!

1-மோனைத்தொடை:-

முதலெழுத்து ஒன்றி வருதலாகிய மோனைக்கு முதலெழுத்து வந்த எழுத்தே வருதலன்றி இனவெழுத்தும் வரும். இதை இனமோனை அல்லது கிளைமோனை என்பர்.

இனவெழுத்துகள்:-

1-உயிர்:-
அஆஐஒள -ஓரினம்
இஈஎஏ -ஓரினம்
உஊஒஓ -ஓரினம்

2-மெய்:-
ஞ்-ந் -ஓரினம்
ம்-வ் -ஓரினம்
த்-ச் -ஓரினம்

அகரமோ டாகாரம் ஐகாரம் ஒளகான்
இகரமோ டீகா ர(ம்)எஏ –உகரமோ
டூகா ர(ம்)ஒஓ ஞநமவ தச்சகரம்
தோகாய் கிளையெழுத்தாச் சொல்!

இவ்வெண்பாவை நன்கு மனனம் செய்யவும்.

மொழிக்கு முதலில் மெய்யெழுத்து வராதல்லவா? ஆகையால் மேற்கூறிய மெய்களை (ஞ்ந்ம்வ்த்ச்) உயிர்மெய்களாகக் கொள்ளவும்.ஞநமவதச -என்னும் ஆறு எழுத்துக்களல்லாத மற்ற மெய்கள் அதற்கதுவேதான் வரவேண்டும்.மெய்யெழுத்துக்கள் இனமாக வருவதோடு அம்மெய்யெழுத்துக்களின் மேல் ஏறிய உயிர்களும் அஆஐஒள –என இனமாகவே வரவேண்டும். மாறி வரக்கூடாது.

எ.காட்டு:-

மிழ்க்குடியைப் பாரறியத் க்க வழிகண்(டு)
மிழ்தினிய முப்பால் ளித்தார் –நமதினிய
தேன்தமிழ்ச் சொல்லெடுத்து செய்யுள் பலசெய்து
வான்புகழ் வள்ளுவரை வாழ்த்து! ---அகரம்.அமுதா

இவ்வெண்பாவின் மூன்றாமடியில் தே-என்ற மோனைக்கு செ-என்ற இனமோனை வந்தமை காண்க. மற்றவரிகளில் அதற்கதுவே வந்தமையும் காண்க.

ரச்சில் ன்றி ழலுதலால்; கொண்டபொருள்
கூரச்சால் தாக்கிக் குலைத்தலால்; -பாரப்பா!
சாட்டைக்கே சுற்றுதலால் சாய்ந்தாடும் பம்பரம்
காட்டுமரச் செக்கின்நேர் காண்! ---அகரம்.அமுதா

இவ்வெண்பாவில் முதல் ஓரடியைத் தவிர மற்ற மூன்றடிகளும் அதற்கதுவே மோனையாக வந்தமை காண்க.முதல்வரியில் ஓஊஉ-என இனமோனைகள் அமைந்தமை காண்க.இரண்டாமடியில் கூ-என்ற மோனைக்கு கு-குறில் மோனையாக அமைதலும் காண்க.

ஒன்றிருப்பின் ஒன்றிரா ஒற்றுமையால்; உற்றவர்க்கே
நன்றாய்ப் பெருமைபல நல்குதலால்; -என்றும்
மனிதர் ஒருசிலர்க்கே வாய்க்கும் வகையால்
தனம்குணம்ஒன் றென்றால் தகும்! ---அகரம்.அமுதா

இவ்வெண்பாவின் முதலடியில் ஒஒஒஉ எனமோனை(உ-இனமோனை) எடுத்தமை காண்க.

இரண்டாமடியில் 'நந' மூன்றாமடியில் 'மவா' நான்காமடியில் 'தத'-என மோனை எடுத்தமை காண்க.

குறிப்பு:-

யா-என்கிற ஓரெழுத்து மட்டும் பல இனவெழுத்துக்களோடு சோடிசேரும். யா-வின் இனவெழுத்துக்கள் அஆஐஒள இஈஎஏஒ ஆகிய உயிர் எழுத்துக்களோடு மட்டுமே இனவெழுத்தாக யா-வரும்.

யானையோடு வீழ்ந்தான் அவன். இவ்வடியில் யா-அ என இனமோனை அமைதல் காண்க.

2-எதுகைத்தொடை:-

எதுகைக்கு மெய்யெழுத்து வந்ததே வரவேண்டும். உயிர்மெய்யெழுத்தாயின் வேறு உயிரெழுத்துக்கள் புணர்ந்த உயிர்மெய்கள் வரலாம். இனவெழுத்துத் தான் வரவேண்டும் என்பதில்லை. ஆனால் நெடிலுக்கு நெடிலும் குறிலுக்குக் குறிலும் தான் வரவேண்டும்.

காத்தின் மாற்றமேற் கத்தக்க தென்பதனால்
ஞாத்தை யாள்கணினி நற்பயன்மேல் -மாலுற்றே
காணின் கணினியைக் கையாளும் வாணியவள்
வீணை வருடும் விரல்! ---அகரம்.அமுதா

இவ்வெண்பாவை நன்கு கவனிக்கவும்.முதல் இரண்டடியின் முதல் சீர்களில் எதுகை ல,ல எனவருவதும் இரண்டாமடியின் நான்காம் சீரில் லு என்று வேற்று உயிர்ப்புணர்ச்சியோடு கூடி எதுகையாக வந்தமை காண்க.

மூன்றாம் நான்காம் அடிகளின் முதல் சீர்களில் எதுகை ணி,ணை என வந்தமை காண்க. ண் என்ற மெய் மாறாமலும் ண்-ஓடு புணரும் உயிர் மட்டுமே மாறியும் வந்துள்ளது.

சொற்சிலம்பம் ஆடத் துணிந்தேன் புடம்போட்டப்
பொற்சிலம்பம் போன்றவளே பூத்துவா! -மற்சிலம்பம்
ஆடிப் பகைவளர்க்கும் ஆசை எனக்கில்லை
பாடித் தமிழ்வளர்ப்பேன் பார்! ---அகரம்.அமுதா

இவ்வெண்பாவைக் கவனிக்கவும்:-

முதல் இரண்டடியில் ற்-எதுகையாகவும் மூன்றாம் நான்காம் அடிகளில் டி-எதுகையாகவும் வந்தமை. இப்படி அதற்கதே வருதல் சாலச் சிறப்பு.

எழுமீற்றுச் சீர்க்கே எழிலார்ப்பா தன்னைப்
பழுதின்றிப் பாடுகிற பண்போ -டொழுக்க
விழுப்பத்தில் தேர்ந்து விளங்கும்நம் வெண்பாக்
குழுமத்தில் வந்து குதி! ---அகரம்.அமுதா

இவ்வெண்பாவில் எல்லா எதுகைகளும் ழு-வாக வந்தமை காண்க.

3-உறழ்ச்சித் தொடை:-

இரண்டடிகளில் மோனை முதலிய தொடைகள் வருதல்- முதற்றொடையாகும். ஓரடியில் உள்ள சீர்களில் மோனை முதலிய தொடைகள் வருதல் உறழ்ச்சித்தொடையாகும்.

இவ்வுறழ்ச்சித்தொடையை அளவடியிலேயே கொள்ளவேண்டும். அளவடி -நான்குசீர்களைக்கொண்டது.

முதற்றொடை:-அடிகளின் முதற்சீரில் மோனை முதலியன வருவது.1-அடிமோனை 2-அடியெதுகை 3-அடிமுரண் 4-அடியிழைபு 5-அடியளபெடை என்பன.

குறிப்பு:-அடிமோனையும் இழைபுத்தொடையும் நாம் காணும் வெண்பாவிற்குத் தேவையற்றது என்பதை நினைவிற் கொள்க.

உறழ்ச்சித்தொடை:-

1இணை 2பொழிப்பு 3ஒரூவு 4கூழை 5மேற்கெதுவாய் 6கீழ்க்கெதுவாய் 7முற்று 8கடையிணை 9கடைக்கூழை 10இடைப்புணர் 11பின் -எனப் பதினொரு வகைப்படும்.

எ.காட்டு:- மோனை:-

உறழ்ச்சித்தொடை ஓரடியிலுள்ள நான்கு சீர்களில் மட்டுமே பார்க்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்க.

1-இணைமோன -(1-2)முதல் இரண்டு சீர்களில் மோனை எடுத்து வருவது (சீர்-சொல்)

2-பொழிப்புமோனை -(1-3)முதல் மற்றும் மூன்றாம் சீர்களில் மோனை
அமைவது. (பொதுவாக வெண்பாவில் பொழிப்பு மோனையைப் பயன் படுத்தியே பாடப்படுகின்றன என்பதைக் கண்டறிக)

3-ஒரூவுமோனை -(1-4) முதல் மற்றும் நான்காம் சீர் மோனை எடுத்தல்.

4-கூழைமோனை -(1-2-3) முதல் மூன்று சீர்களில் மோனை வருவது.

5-மேற்கெதுவாய் மோனை -(1-3-4) இரண்டாம்சீர் ஒழிந்த ஏனைய மூன்று சீர்களிலும் மோனை அமைவது.

6-கீழ்க்கெதுவாய் -(1-2-4) மூன்றாம் சீர் ஒழிந்த ஏனைய சீர்களிலும் மோனை அமைவது.

7-முற்றுமோனை -(1-2-3-4) நான்கு சீர்களிலும் மோனை அமைந்து வருவது.

8-கடையிணை மோனை -(3-4) மூன்றாம் நான்காம் சீர்களில் மோனை அமைவது.

9-கடைக்கூழைமோனை -(2-3-4) முதற்சீரொந்த ஏனை மூன்றுசீர்களில் மோனை வருவது.

10-இடைப்புணர்மோனை -(2-3) இரண்டாம் மூன்றாம் சீர்களில் மோனை அமைவது.

11-பின்மோனை –(2-4) இரண்டாம் நான்காம் சீர்களில் மோனை அமைவது.

குறிப்பு:-
இவ்வாறே ஏனை எதுகை முதலிய நான்கு தொடைகட்குங் கண்டுகொள்க.

முதலிரு சீரிணை முதலிருந் தொன்றிரண்
டிடையீடு பொழிப்பொரூஉ ஈறிலி கூழை
முதலீ றயலில மேல்கீழ்க் கெதுவாய்
முழுவது முற்றே கடையிரு சீரிணை
கடைமூன்று கூழை இடையிரண் டிடைப்புணர்
இரண்டும் நான்கும் பின்னெனப் படுமே!

இப்பாடலை நன்றாக மனனம் செய்க.

குறிப்பு:-

வெண்பாவைப் பொருத்த வரை பெரும்பாலும் மோனையிலேயே இத்தொடை அமையப்பெறும். சிறுபான்மையாக எதுகை வரும்.

புத்துரதன் புத்திரனின் சத்துருவின் மித்திரனின்
பத்தினியின் கால்வாங்கித் தேய்.

இக் குறட்பாவில் த் முற்றெதுகையாக வந்தமை காண்க. ஓரடியில் எதுகை பெற்றுவருவதை யாரும் அதிகம் பாடுவதில்லை. மோனை அமையாத விடத்து எதுகையமையச் செய்வார்கள்.

அடிபோ டுதலால்; அடிதோறும் நன்றாய்த்
துடிப்போடே சந்தநயம் தோன்றும் -படியாகும்
பண்பதால்; கோல்கொளும் பாங்கதால்; கோற்சிலம்பர்
பண்பாடும் பாவலர்நேர் பார்! -அகரம்.அமுதா

இவ்வெண்பாவின் முதலடியில் டி-என்ற எதுகை பொழிப்பெதுகையாக வந்தமை காண்க.

குறிப்பு:-வெண்பாவில் மோனையைப் பொருத்த வரை உறழ்ச்சி மோனை இன்றியமையாதது. எதுகை அடியெதுகை எடுத்து வருதல் நலம்.

அகரம்.அமுதா

சனி, 7 ஜூன், 2008

பாடம்6 தொடை!


அடிகளை ஒன்றோடொன்று தொடுப்பது தொடைஎனப்படும். இரண்டடிகளிலே யன்றி ஓரடியிலுள்ள சீர்களிலும் இத்தொடை வரும்.

செய்யுலின் ஓசைக்கும் இனிமைக்கும் சிறப்புக்கும் இத்தொடை இன்றியமையாததாகிறது.

அத்தொடை முதற்றொடை உறழ்ச்சித்தொடை என் இருவகைப்படும்.
அடிகளில் வருவது முதற்றொடை ஓரடிகளிலுள்ள சீர்களில் வருவது உறழ்ச்சித் தொடை.

முதற்றொடை ஐந்து வகைப்படும்.

அவை:-
1-மோனைத்தொடை
2-எதுகைத்தொடை
3-முரண்தொடை
4-இழைபுத்தொடை
5-அளபெடைத்தொடை

மோனை யெதுகை முரணியை யளபெடை
எனுமிவை யைந்தும் முதற்றொடை யாமே! -என்பது தொல்காப்பியம்.

1-மோமைத்தொடை

இரண்டு அடிகளின் முதற்சீரின் முதலெழுத்து அல்லது ஓரடியிலுள்ள சீர்களின் முதலெழுத்து ஒன்றே வருவது மோனை எனப்படும்.

முதலெழுத் தொன்றுதல் மோனையாகும் -தொல்காப்பியம்

குறிப்பு:-

அடிகளில் வரும்மோனை அடிமோனை எனப்படும். ஓரடியிலுள்ள சீர்களில் வரும் மோனை சீர்மோனை எனப்படும்.

அடிமோனை:-

டித்தேன் அடடாவோ! பாக்களொவ் வொன்றுமொரு
டித்தேன் எனச்சொல்வேன் பண்பாய் -அடிநான்கில்
சீரேழும் ஒன்றும்பின் சீரேழும் ஒன்றிவர
நூரேழில் மூன்றில்லா நூல்! ---அகரம்.அமுதா

இவ்வெண்பாவில் முதலடியின் முதலெழுத்தாகிய -வும் இரண்டாமடியின் முதல்எழுத்தாகிய -வும் ஒன்றி வருவதால் (ஒன்றிவருதல்-ஓரெழுத்தாதல்) இது அடிமோனை எனப்படும்.

சீர்மோனை:-

ரும்புவி யாங்கும் ருமிலக்கி யத்தில்
திருக்குறட்போ லுண்டோ திரு? ---அகரம்.அமுதா

இக்குறள் வெண்பாவில் வந்துள்ள இஇ ஓரடியிலும் திதி ஓரடியிலும் வந்தமையால் இவை சீர் மோனை எனப்படும்.

2-எதுகைத்தொடை:-

இரண்டாமெழுத்தொன்றுதல் எதுகையாமே! -தொல்காப்பியம்.

அடிதோறும் இரண்டாமெழுத்து ஒன்றிவருவது எதுகை எனப்படும்.

வாட்டி வதைத்து மனத்தின்கண் வீற்றிருந்(து)
ட்டிப் படைத்தே அறிவழிக்கும் -கூட்டினையே
நோயிற் பெருமளவு நோகடிக்கும் வெஞ்சினத்
தீயிற் கொடியதோ தீ? ---அகரம்.அமுதா

இவ்வெண்பாவின் முதலிரண்டு அடிகளின் முதற்சீலரில் இரண்டாமெழுத்து ' ட்' என்றே வந்திருத்தல் எதுகை.மூன்றாம்நான்காம் அடிகளின் முதற்சீர்களின் இரண்டாமெழுத்தும் 'யி' ஒன்றிவந்து அவையும் எதுகையானது காண்க.

3-முரண்தொடை:-

முரணத் தொடுத்தல் முரண்தொடை யாமே –தொல்காப்பியம்

முரணுதல் -மாறுபடுதல். மாறுபட்ட சொற்கள் வருதல் முரண்தொடை எனப்படும்.

விண்தேடும் வள்ளுவனார் வேட்ட குறள்முடியை
மண்தேடும் தாளின் அடி! ---அகரம்.அமுதா

இக்குறள் வெண்பாவில் விண்xமண் என்பது முரண்தொடையாகும்.

குறிப்பு:-

மேல் கீழ்வெண்மை கருமைநீளம் குட்டை -இப்படி எதிர்மறையாக வரும் சொற்கள் முரண்தொடை எனப்படும்.

4-இழைபுத்தொடை:-

குறிப்பு:-இழைபுத்தொடை நமது வெண்பாவில் இடம்பெறாது என்ற காரணத்தால் இழைபுத்தொடைக்கான பாடம் தவிர்க்கப் படுகிறது.

5-அளபெடைத்தொடை:-

அளபெடுத் தொன்றுதல் அளபெடைத் தொடையே! -தொல்காப்பியம்

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்! ---திருக்குறள்

'கடாஅ, படாஅ' என்று அளபெடுத்ததால் இது அளபெடைத்தொடையாகும்.

குறிப்பு:-

செய்யுளின் ஓசை நயத்துக்காகவும் தளை தட்டாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் ஓர் சீரில் வருகிற நெடில் எழுத்தை அந்நெடில் தோன்றுவதற்குக் காரணமான உயிர்நெடிலின் இனமான குறிலை அந்நெடிலோடு இணைத்துக்கொள்வது அளபெடையாகும். அளபெடுக்கும்போது நெடில் மட்டுமே அளபெடுத்து வரும். குறில் அளபெடுக்காது.

எ.காட்டு:-

கடா -இச்சொல்லின் நெடிலெழுத்தாகிய 'டா' தோன்றக்காரணடான உயிரெழுத்து ஆ. ஆவின் குறில் அ அல்லவா? இக்குறிலை 'டா' வென்னும் நெடிலுக்குப் பின் சேர்த்துக்கொள்வது அளபெடை எனப்படும். கடாஅ என்று வந்தமை காண்க.

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை
ஆஅது மென்னு மலர்! -திருக்குறள்

இக்குறளில் ஓதல் எனும் சொல் அளபெடுத்து ஓஒதல் என வந்தமை காண்க.

ஓதல் வேண்டும் என்றுவந்தால் வெண்பா விதிப்படி தளை தட்டும் அல்லவா? ஆகையால் அளபெடுத்தமை அறிக.

அகரம்.அமுதா