ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

நேரிசை ஆசிரியப்பா எழுதுவோம்


பா வகைகளில் மிக எளிதாக எழுதப்படுவது ஆசிரியப்பாவே.

சுருக்கமாக, ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் :

ஆசிரியப்பா குறைந்த அளவு மூன்றடி பெற்று வரும். அதிகமாக ஆயிரம் அடிகள் வரை வரலாம் அதற்கு மேல் வரினும் இழுக்கன்று என்று கூறுவர்.

ஈரசைச் சீர்களும் மூவசைச்சீர்களில் காய்ச்சீர்களும் பெற்று வரும்.

இவற்றில், பொதுவாகக் காய்ச்சீர் அருகி (குறைவாக) வரும்.

கனிச்சீர் வரவே வராது.

பொதுவாக நான்கு சீர் கொண்ட அடியும், அடிதோறும் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைந்தும் வரும்.

அடி எதுகை பெற்று வரும்; இரண்டடிக்கு ஒருமுறை எதுகை மாறவேண்டும் என்பது கட்டாயம் இல்லை; இரண்டு முதல் எத்தனை அடிகளிலும் ஒரே எதுகை வரலாம்.

(ஒன்று மூன்றாம் சீர்களில் எதுகை பெற்று வருதலும் உண்டு)

ஏகாரத்தால் முடிவது சிறப்பு. (ஓ, ஈ, ஆய், என், ஐ என்றும் முடியலாம்)


நேரிசை ஆசிரியப்பாவின் சிறப்பு இலக்கணம்:

ஈற்றயலடி என்றழைக்கப்படும் ஈற்றடிக்கு முன் அடி மூன்று சீர் பெற்று வரும்.
ஏனைய அடிகள் நான்கு சீர் பெற்று வரும்.

இனி, ஒரு நேரிசை ஆசிரியப்பாவைப் பார்ப்போம்:

சிந்தா மணியும் சிலம்பும் சாத்தனார் ----------------- நாற்சீரடி

ந்தமே கலையும் மிழ்த்தாய் ------------------முச்சீரடி (ஈற்றயலடி)

ந்தமார் மேனிக் ணிகலம் ஆமே. ------நாற்சீரடி(ஏகாரத்தால் முடிந்துள்ளது)


பச்சை வண்ணம் - மோனையைக் காட்டுதற்கு
சிவப்பு வண்ணம் - எதுகையைக்காட்டுதற்கு
கருப்பு - ஏகாரம் காட்ட

இன்னொரு பாடல் :

ன்றே போதும் என்றே இராமையால்

நூறு கோடியாய் ஏறி இருக்கிறோம்


ப்பைக் குறைத்தோம் மருத்துவ வலிமையால்

பிப்பைக் குறைக்க விருப்பம் கொளாமையால்

சென்றது சிறப்புறு வளமை

ந்தன பஞ்சமும் றுமையும் இன்றே. - புதுவை அரங்க. நடராசனார்


சிவப்பு வண்ணம் அடி எதுகையைக்காட்டுகிறது.
பச்சை மோனையைக் காட்டுகிறது.

இயன்றவரை மோனை எதுகை அமைத்து எழுதுதல் சிறப்பு

எளிதாக நேரிசை ஆசிரியப்பா எல்லாரும் எழுதலாம்.

ஐயங்கள் எழுந்தால் உடனே கேட்டு எழுதுங்கள்.

இனி, எழுதுவோம்.

ஆசிரியப்பாவும் அதன் இனமும்! (2)

3.நிலைமண்டில ஆசிரியப்பா

எல்லா அடிகளும் அளவடியாக வரும். அதாவது எல்லா அடிகளும் நான்குசீர்களைக் கொண்டிருக்கும்.

வள்ளுவன் மொழிந்த வாய்மொழிப் படியாம்
உள்ளுவ வுள்ளி உவர்ப்ப உவர்த்துக்
கற்றறிந் தாங்கு முற்றுற நின்றே
யாமுறு மின்பம் யாவரு முறவே
நன்கினி துரைத்துப் பொன்கனி போல
இருநிலம் புகழ இனிதுவாழ் குவமே!


4.அடிமறி மண்டில ஆசிரியப்பா

இப்பாவில் வரும் எந்த அடியை முதலில் வைத்துப் பொருள்கொண்டாலும் பொருள் மாறுபடாதிருப்பது. அதாவது ஒவ்வொரு அடியிலும் பொருள் முற்றுப்பெற்றுவிடுவது.

தாய்மொழி வளர்த்தல் தமிழர்தங் கடனே!
வாய்மொழி புரத்தல் மற்றவர் கடனே!
காய்மொழி தவிர்த்தல் கற்றவர் கடனே!
ஆய்மொழி யுரைத்தல் அறிஞர்தங் கடனே!



குறிப்பு:-

அடிகளை முன்னும் பின்னும் மறித்து (மாற்றி) ப் பொருள் கொள்ளுமாறு நிற்றலால் இப்பா அடிமறி மண்டில ஆசிரியப்பாவாகும்.

இனி நாம் பயிற்சிப் பாக்கள் எழுதுவதற்கான பாடங்களை, பாவலர் தமிழநம்பி அவர்கள் பற்பல விளக்கங்களோடு வழங்க வருமாறு வேண்டுகிறேன்.

அகரம் அமுதா

வியாழன், 27 ஆகஸ்ட், 2009

ஆசிரியப்பாவும் அதன் இனமும்! (1)

ஆசிரியப்பா நான்கு வகைப்படும். அவை:-

1.நேரிசை ஆசிரியப்பா
2.இணைக்குறள் ஆசிரியப்பா
3.நிலைமண்டில ஆசிரியப்பா
4.அடிமறிமண்டில ஆசிரியப்பா

ஆசிரியப்பாவின் இனம் மூன்று வகைப்படும். அவை:-

1.ஆசிரியத்தாழிசை
2.ஆசிரியத்துறை
3.ஆசிரிய விருத்தம்

வகைகள்:-

1.நேரிசையாசிரியப்பா

ஏல்லா அடிகளும் அளவடியாக வந்து, ஈற்றியலடி சிந்தடியாக வருவது நேரிசையாசிரியப்பாவாகும்.

குறிப்பு:-
ஈற்றியலடி – ஈற்றடிக்கும் முன்னுள்ள அடியாகும்.

காட்டு:-

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறக்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெந் நிலவில்
வென்றெறி முரசின் வேந்தரெம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே!
–பாரிமகளிர்

இப்பாவின் ஈற்றியலடி சிந்தடியானமையால் நேரிசையாசிரியப்பாவாயிற்று.

2. இணைக்குற ளாசிரியப்பா

நேரிசையாசிரியப்பாவின் இடையிடையே குறளடியும் சிந்தடியும் வருவது இணைக்குற ளாசிரியப்பாவாகும்.

குறிப்பு:-
நேரிசையாசிரியப்பாவின் ஈற்றியலடி சிந்தடியாக வரும் என்பது அறிந்ததே. ஈற்றியலடிமட்டுமல்லாது மற்ற ஓரிரு அடிகள் அல்லது பலவடிகள் சிந்தடியாகவும் குறளடியாகவும் வரின் அது இணைக்குறளாசிரியப்பாவாகும்.

காட்டு:-

நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து
தீரத் தீர்ந்து
சாரல் நாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல் லாதே!


இப்பாவில் முறையே இரண்டாம் மூன்றாம் அடிகள் குறளடிகளாகவும், நான்காம் மற்றும் ஈற்றியலடி சிந்தடியாகவும் வந்து இணைக்குறளாசிரியப்பாவானமை காண்க.

தொடரும்...
அகரம் அமுதா

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

அகவற்பா அல்லது ஆசிரியப்பா ஓர் அறிமுகம்!

அகவற்பாவின் ஓசை அகவலோசையாகும். சுருங்கச்சொல்வதென்றால் கூட்டத்தின் மத்தியினின்று உரையாற்றுவது போன்றது. இவ்வகவற் பாவிற்கு மற்றொரு பெயரும் உண்டு. ஆசிரியப்பா என்பதே அதன் மற்றொரு பெயர். நான்கு பாவகைகளுள் முதலில் தோன்றிய பா, ஆசிரிய (அ) அகவற்பாவாகும். ஆசிரியப்பாவின் தோன்றலுக்குப் பிறகே மற்ற பாக்கள் தோற்றங்கண்டன.

அகவற்பா என்றோர் பெயரிருக்க எதற்காக ஆசிரியப்பா என்ற மற்றொரு பெயர் தோன்றிற்று? எனது எண்ணத்தில் தோன்றிய கருத்து இது:-

மனிதன் முதலில் தோன்றினானா? மதம்முதலில் தோன்றியதா? என்றால், மனிதன்தான் முதலில் தோன்றினான் என்பதைப்போல, இலக்கியம் முதலில் தோன்றியதா? இலக்கணம் முதலில் தோன்றியதா? என்றால், இலக்கியமே முதலில் தோன்றியிருக்க முடியும். இலக்கியத்திற்காகவே இலக்கணம் வகுக்கப்பட்டது. இலக்கணம் தோன்றுதற்குமுன் மனிதன் தன் எண்ணங்களை எழுத்துக்களில் சொல்லக்கருதியபோது, அக்கருத்திற்கேற்றாற்போல் வரிவடிவமமைத்துச் சொல்லியிருக்கக்கூடும். பின்னாளில் கூறியவற்றுள் எவை எழுமையான வடிவம் எனக்கருதினானோ, அதனை முதன்மைப்படுத்தி இலக்கணம் கற்பித்துக்கொண்டிருக்க வேண்டும். இலக்கணம் கற்பித்துக்கொண்டபின், முன்பே (இலக்கணம் கற்பிக்கப்படாததற்கு முன்பு) வரையப்பட்ட இலக்கணம் தப்பிய பாக்களை மீண்டும் குற்றம் (ஆசு) நீக்கி இலக்கணத்திற்கு உட்பட்ட எழுதமுற்பட்டிருக்கலாம்.

இலக்கணம் கற்பிப்பதற்கு முன்பு எழுதப்பட்ட இலக்கண ஆசுடைய பாக்களை ஒழுங்குபடுத்தவேண்டிப் பின்னாளில் இலக்கண ஆசு இரியப் பாடியிருக்கலாம். அதாவது இலக்கணம் கற்பிக்கப்படுவதற்குமுன்பு எழுதப்பட்ட இலக்கணமற்ற பாக்களை (அல்லது அப்பாக்களின் உள்ளீடுகளை (கருத்துக்களை)) குற்றங்களை நீக்கி இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதமுயன்றிருக்கலாம். அதன்பயனாக, பெயர்க்காரணமாக ஆசிரியப்பா என்ற பெயர் தோன்றியிருக்க வாய்ப்புள்ளது.

நால்வகைப் பாக்களுள் முன்தோன்றிய பா இது என்பதால் இதன் இலக்கணம் அத்துணைக் கடினமில்லை. மிகமிக எளிது. ஆனால் பாநயத்தோடு எழுதுதல் சற்றே கடினமானதும்கூட. ஆசிரியப்பாவில் கனிச்சீர் ஒழிய எனைய எட்டுச்சீர்களும் வரும்.
அவையாவன:- தேமா, புளிமா, கருவிளம், கூவிளம், தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய்.

இருவகை வஞ்சித்தளைகள் அல்லாத ஏனைய ஐந்து தளைகளும் வரும். அவையாவன:-

1.மாமுன் +++ நேர் === நேரொன்றாசிரியத்தளை
2.விளமுன் +++ நிரை === நிரையொன்றாசிரியத்தளை

இவ்விரண்டையும் தொல்காப்பியன் கீழ்வருமாறு குறிப்பான்:-

மாமுன் நேரும் விளமுன் நிரையும்
வருவ தாசிரி யத்தளை யாமே!


3.மாமுன் +++ நிரை === இயற்சீர் வெண்டளை
விளமுன் +++ நேர் === இயற்சீர் வெண்டளை

4.காய்முன் +++ நேர் === வெண்சீர் வெண்டளை

5.காய்முன் +++ நிரை === கலித்தளை

நெடிலடியும், கழிநெடிலடியும் அல்லாத ஏனைய மூன்றடிகளே வரும். அதாவது ஓர் அடிக்கு:- இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு சீர்களே வரும். அதற்குமேல் மிகா.

ஆசிரியப்பாவின் இறுதிச்சீரின் இறுதியசை:- (ஏ, ஓ, என், ஈ, ஆய், அய்) ஆகிய இவற்றிலொன்றைக் கொண்டு இறவேண்டும்.

தொடரும்...
அகரம் அமுதா

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

ஒழுகிசைச் செப்பலோசை வெண்பா!

ஏந்திசைச் செப்பலோசை வெண்பா, தூங்கிசைச் செப்பலோசை வெணபா அறிந்தோம்.

இனி, ஒழுகிசைச் செப்பலோசை வெண்பா அறிந்திடுவோம்.

இதில், ஈரசைச் சீர்களும் மூவசைச் சீர்களில் வழக்கம்போல் காய்ச்சீரும் வரவேண்டும்.

இறுதிச் சீர் வழக்கம்போல் ஓரசைச் சீர். நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளில் ஒன்றால் முடிந்திருக்க வேண்டும்.

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கு மாங்கேப் பொசியுமாம் - தொல்லுலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை.

- வாக்குண்டாம்

நீங்கள் விரும்பும் பொருளில், ஒழுகிசைச் செப்பலோசை வெண்பா எழுதுக.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

தூங்கிசைச் செப்பலோசை வெண்பா

வெண்பாவிற்கு உரியது செப்பலோசை.

வெண்பாவில் மூன்றசைச்சீர் அதாவது காய்ச்சீர் மட்டும் இடம்பெற்றால், அது
ஏந்திசைச் செப்பலோசை வெண்பா. (எப்போதும் போல் ஈற்றுச்சீர் ஓரசைச்சீர்)

ஏந்திசைச் செப்பலோசையில் வெண்பா எழுதினோம்.

அடுத்து, தூங்கிசைச் செப்பலோசை கொண்ட வெண்பா அறிவோம்.

இது, நான்கடிப் பாடல்.

இதில் ஈரசைச்சீர்கள் மட்டுமே இடம்பெறும்.

இயற்சீர் வெண்டளை பெற்று வரும். (மா முன் நிரை, விளம் முன் நேர்)

வழக்கம் போல் நான்காம் அடியின் மூன்றாம் சீர் (இறுதிச்சீர்) ஓரசைச்சீராக இருக்கும்.

எங்கள் இனத்தினர் ஈழத் தமிழரைப்

பொங்கும் சினத்தினால் பூண்டற - எங்கும்

இற்றிடச் செய்யும் இராசபக் சேயுயிர்

வற்றிடும் நன்னாள் வரும்.

- புதுவை சந்தப்பாமணி அரங்க.நடராசனார்

தூங்கிசைச் செப்பலோசை அமைய, விருப்பமான கருத்தை வெளிப்படுத்தும் வெண்பா எழுதுவோம்.

புதன், 12 ஆகஸ்ட், 2009

சொற்பொருள் பின்வரு நிலை அணி


3.சொற்பொருள் பின்வரு நிலை அணி:-

பாவுள் கையாளப்படும் ஒருசொல் பலமுறை வந்து ஒரே பொருளைத் தருமாயின் அப்பா, சொற்பொருள் பின்வரு நிலையணியாகும்.

காட்டு:-

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூவும் மழை!


மேலுள்ள பாவில் “துப்பு” எனுஞ்சொல் உணவு எனும் ஒரே பொருளைத் தந்து நின்றமையான் அப்பா, சொற்பொருள் பின்வரு நிலையணி ஆயிற்று.

காட்டு:-

சொல்லுக சொல்லைப் பிரிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து!


மேலுள்ள பாடலை உற்று நோக்குக. சொல் என்ற சொல் பலமுறை வரினும் பொருள் மாறுபடாது ஒரே பொருளைத் தருங்கரணியத்தால் அப்பா “சொற்பொருள் பின்வரு நிலையணி” ஆயிற்று.
மேலுள்ள நிழற்படத்திற்குத் தக்க வெண்பா வரைய அனைவரையும் அழைக்கிறேன்...
அகரம் அமுதா

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

ஏந்திசைச் செப்பலோசை வெண்பா

பெயரைப் பார்த்து மருள வேண்டா!

வெண்பாவிற்கு உரிய ஒசை செப்பலோசை.

இது தெரிந்ததே.

இறுதிச்சீர் தவிர்த்த ஏனைய சீர்கள் மூவசைச் சீர்களாக அமைந்த
வெண்பா ஏந்திசைச் செப்பலோசை உடைய வெண்பா ஆகும்.

(வெண்பாவின் மூவசைச்சீர் காய்ச்சீர் என்பது தெரியும் தானே!)

ஈழத்தில் சிங்களவர் எந்தமிழ மக்களையே

போழ்கின்ற புன்செயலின் கேடடக்கி - வாழ்வளிக்க

எண்ணாநம் நாடாள்வோர் ஏதேதோ கூறுகின்றார்

கண்ணாகக் கொள்ளவில்லை காண்.

-சந்தப்பாமணி புலவர் அரங்க.நடராசன்.

இன்னிசை வெண்பாவாகவோ நேரிசை வெண்பாவாகவோ ஏந்திசைச் செப்பலோசையில் ஒரு வெண்பா எழுதலாமே!

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

பொருள்பின்வரு நிலையணி!

இற்றைப் பாடத்தைப் பார்க்கும் முன்னம் சிற்சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ளலாம் எனக்கருதுகிறேன்.

முதலாவதாக:- கவிஞர். தமிழநம்பி அவர்கள்!

முதலில் அவருக்கெனது வாழ்த்துக்களை வெண்பாவில் வழங்கிவிடுகிறேன்:

பல்லாண்டு நீர்வாழப் பண்பார்ந்த பைந்தமிழிற்
சொல்லாண்டு பாடுகிறேன் தூயவரே! –இல்லாண்டு;
செய்யும் தொழிலாண்டு; சேரும் புகழாண்டு;
வையத்துள் வாழ்வாங்கு வாழ்க!


“ஏன்டா! இந்த ஒரு வெண்பாவை வைச்சிக்கிட்டு இன்னும் எத்தனை பேரைத்தார் வாழ்த்துவே? –என உமா அவர்கள் உரைப்பது கேட்கிறது. ஆகையால புதுசா, சுடச்சுட ஒரு வெண்பா:-

வளமை, பெருவாழ்வு, வன்னந் துளங்கும்
இளமை, குறைபடா இன்பம் –அளவின்றி
மன்னும் புகழும் மதியும் மிகப்படைத்(து)
இன்றுபோல் என்றும் இரும்!


வெண்பா எழுதலாம் வாங்க! வலையின் பெருமைக்குறிய ஆசிரியராக நம்மோடு கைகோர்த்திருக்கிறார் தமிழநம்பி அவர்கள். அவரது வரவு நம் வலையின் எதிர்காலத்தை நல்வழிநடத்த வழிவகுப்பதாவும், நம்மைப் புதிய, அரிய வகையில் எண்ணிக் கவிவடிக்கும் தூண்டிகோலாகும். அவரை நாம் எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதைப்பொருத்தே நம் அடுத்தகட்ட வளர்ச்சி அடங்கியுள்ளது. நமக்கெழும் ஐயங்களை அவ்வப்பொழுது அவர்வழியாக அறிந்துகொண்டு அவரின் கவியறிவை நாமும் அடைவோமாக.

இரண்டாவதாக:-

புதிய அழகுடன் நடைபோடும் நம் வலையில் நாம் மட்டுமே எழுதி வருகிறோம். புதியவர்களை ஈர்க்கும் கமுக்கத்தை (மர்மம்) நாம் அறிந்திருக்க வில்லையோ என்ற ஐயம் எழுகிறது. நம் வலையைப் பலரின் பார்வைக்கும் விரிவுபடுத்துவது இன்றியமையாததாகிறது. யாம்பெற்ற இன்பம் இவ்வையமும் பெறவேண்டும் அல்லவா? திகழ், உமா, வசந்த் –போன்றவர்கள் (பிரபலமான பதிவர்கள்) ஏதேனும் வழிமுறையிருப்பின் உரைக்கவும்.

மூன்றாவதாக:-

திகழ் அவர்களின் வெண்பாவனம் வலையைப் பார்வையிட நேர்ந்தது. நல்லபல வெண்பாக்களைத் தொகுத்து வழங்கும் அரிய பணியைச்செய்து வருகிறார். ஒவ்வொரு வெண்பாவையும் படிக்கும்போது வியப்பே மேலிடுகிறது. நம் வலையின் பெண்பாற்கவிஞர் உமா அவர்களின் எண்ணிறந்த வெண்பாக்கள் அவ்வலையில் இடம்பெற்றிருப்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய செய்தியாகும். வாழ்க அவர் பணி!

நான்காவதாக:-

வெண்பா எழுதலாம் வாங்க வலையை மென்மேலும் மெருகேற்றுவது நம் ஒவ்வொருவரது கடமையுமாகும். பாடத்தில் உள்ளடக்கத்தில், ஈற்றடிகளில், மாற்றங்கள் நடைபெற வெண்டிக் கருதுவீராயின் தயங்காது உரைப்பீராக. இணையத்தில் வெண்பாப் பாடம் நடத்தும் வெகுசில வலைகளில் நம் வலையும் ஒன்று அதைத்தொய்வின்றிக் கொண்டுசெல்ல நாம் நம்மைப் புதுப்பித்துக்கொள்வதுடம் மற்றவரையும் கவர்ந்திழுக்க வேண்டும். அதற்கான வழிமுறைகள் அறிவீராயின் அவனடிமை போன்ற பட்டறிவு படைத்தோர் உரைக்கத் தவறவேண்டாம். நன்றிகள். இனி பாடத்திற்குச் செல்வோம்.


2.பொருள்பின்வரு நிலையணி:-

ஒரு பாவுள் ஒரே பொருளைத் தாங்கிப் பல சொற்கள் கையாளப் படின் அப்பா, பொருள் பின்வரு நிலையணியாம்.

காட்டு:-

அவிழ்ந்தன தோன்றி அலர்ந்தன காயா
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை –முகிழ்ந்திதழ்
விட்டன கொன்றை விரிந்த கருவினை
கொண்டன காந்தல் குலை!


மேலுள்ள பா, “அவிழ்தல், அலர்தல், நெகிழ்தல், முகிழ்தல், விரிதல்” ஆகிய வெவ்வேறு சொற்களைக் கொண்டிருப்பினும், “மலர்தல்” என்கிற ஒரே பொருளைத் தாங்கியமையான் பொருள் பின்வரு நிலையணியாகும்.

இக்கிழமைக்கு வெண்பாவின் முதற்சொல் வழங்கப்படும்.

இக்கிழமைக்கான வெண்பாவின் முதற்சொல்:- மன்றல்! (மணம்)


அகரம் அமுதா

புதன், 5 ஆகஸ்ட், 2009

இன்னிசை வெண்பா!



இந்த முறை ஓர் எளிதான வெண்பா எழுதலாம்.

இது நான்கடிப் பாடல்.

இரண்டாமடியில் தனிச்சொல் வராது.

நான்கடிகளும் ஓர் எதுகை ( இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது) பெற்றும் வரலாம்; முதல் இரண்டடிகள் ஓர் எதுகையுடனும், பின் இரண்டடிகள் வேறு எதுகையுடனும் வரலாம்.

வெண்டளை பெற்றிருக்க வேண்டும்.
( நினைவுக்கு : காய் முன் நேர், மா முன் நிரை, விளம் மின் நேர்)

இறுதிச் சீர், நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளுள் ஒன்றால் முடிந்திருக்க வேண்டும்.

இவ்வாறு அமைந்த பாடலை இன்னிசை வெண்பா என்பர்.


எல்லாம் இழந்துவிட் டேதிலியாய் நிற்பவர்க்கு

நல்லோர் கொடையாக நல்கும் பொருள்களை

வல்லாண்மை யாக மறுத்துத் திருப்புகின்ற

பொல்லானே மண்மேடாய்ப் போ.


இந்தப்பாடல் புதுச்சேரிப் புலவர் அரங்க.நடராசனார் எழுதியது.
இப்பாடலில் நான்கடிகளும் ஓர் எதுகை ( 'ல்' ) அமைந்துள்ளது.

இப்போது, நீங்களும் உங்களுக்கு விருப்பமான கருத்தமைந்த ஓர் இன்னிசை வெண்பா எழுதலாமே!


தமிழநம்பி

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

சொல்பின்வரு நிலையணி!

1.சொல்பின்வரு நிலையணி:-

ஒருமுறை வந்தசொல் பலமுறை வந்து வேறுவேறான பொருளைத் தந்து நிற்குமாயின் அப்பா, சொல்பின்வரு நிலையணி வகையாகும்.

காட்டு:-

பூக்காடு நேர்தமிழைப் போற்றிப்பாத் தென்ற(ல்)செய்
பாக்காடு தான்காடு மற்றெல்லாம் –சாக்காடு
சீக்காடு முட்காடு தீக்காடு முக்காடு
நோக்காடு மற்றறைவேக் காடு!
–அகரம் அமுதா-

மேலுள்ள எனது பாடலில் உள்ள காடு எனுஞ்சொல் முதல் இரண்டடிகளின் முதற்சீரில் வருங்கால் ஒரே பொருளைத் தந்து நிற்பினும், தனிச்சொற்குப் பின் வருங் “காடு” எனுஞ்சொல் (சாக்காடு –இறப்பு, சீக்காடு –நோயுடைய ஆடு, முக்காடு –தலையில் போர்த்துந் துணி, நோக்காடு –நோய், அறைவேக்காடு –வேகாநிலை) ஓரீரசைகளைச் சேர்த்துக்கொண்டமையால் வெவ்வேறு பொருளைத் தந்து நிற்கிறது. ஆதலால் அப்பா, சொல்பின்வரு நிலையாணியாம்.

இக்கிழமைக்கு ஈற்றடி கிடையாது. மேல் வழங்கப்பட்டுள்ள சொல்பின்வரு நிலையணியைப் பயன்படுத்தி வெண்பா வடிக்க வேண்டுகிறேன்.

இக்கிழமைக்கான “சொற்பின்வரு நிலையணி”க்கான சொல்:- (உங்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு சொல்லைத் தேர்ந்து எழுதவும்)

அகரம் அமுதா

திங்கள், 3 ஆகஸ்ட், 2009

பின்வரு நிலையணி!

.......... .... .... .. .... ... ... ... ... ... ... ... .. மலேசிய பேச்சாளர் பாண்டித்துரை --- அகரம் அமுதா
.
அணிவகைகளைப் பற்றி நிறையவே நான் முந்தைய பாடங்களிற் பார்த்திருக்கிறோம் ஆயினும், அவ்வவ்வணிகளுக் கேற்றாற்போல் பாப்புனைந்தோமா? என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நமது வெண்பா எழுதலாம் வலையின் நோக்கம், புதிதாக எழுதுபவர்களை ஊக்கப் படுத்துவதும், முன்பிருந்தே எழுதுபவர்களை மென்மேலும் மெருகேற்றுவதுமேயாகும்.

அந்த வகையில் நம் “வெண்பா எழுதலாம் வாங்க” –வலையின் உயிர்த்துடிப்புக்களான, உமா, வசந்த், அவனடிமையார், திகழ், இராஜகுரு, சவுக்கடியார் யாவரும் எக்கருத்தையும் எளிதிற் சொல்லும் ஆற்றலை இயல்பாகக் கைவரப்பெற்று விளங்குவது கண்டு வியக்கிறேன். இத்தகைய ஆற்றலை நாம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது இன்றியமையாக் கடமையாகிறது. ஆக அணிகள் பற்பலவெனினும் இலகுவாக எளிதாக உள்ள அணிவகைகளுக்கு உட்பட்டு முதற்கட்ட முயற்சிகளைச் செய்யத் தொடங்குதல் சிறப்பெனக் கருதுகிறேன்.

அந்த வகையில் இப்பாடத்திற் காணவிருக்கும் அணி –பின்வரு நிலையணி!

இப்பின் வருநிலையணி மூன்று வகைப்படும். 1.சொல்பின்வரு நிலையணி 2.பொருள்பின்வரு நிலையணி 3.சொற்பொருட்பின்வரு நிலையணி 4.உவமைப்பொருள் பின்வரு நிலையணி.

1.சொற்பின்வரு நிலையணி –ஒருசொல் பலபொருளைத் தருதல்.
2.பொருள்பின்வரு நிலையணி –பலசொல் ஒருபொருளைத் தருதல்.
3.சொற்பொருள் பின்வரு நிலையணி –பலமுறை வந்தும் ஒருசொல் ஒரேபொருளைத் தருதல்.
4.உவமைப்பின்வரு நிலையணி –ஒருபொருளைத் தரும் பலசொல் உவமையாகி நிற்றல்.

இப்பின்வரு நிலையணிகளுக்கான காட்டுகளைப் பின்வரும் பாடங்களில் காண்போம்.

இக்கிழமைக்கு ஈற்றடி வழங்கப்போவதில்லை. மாறாக, தனிச்சொல் தரவிருக்கிறேன்.

இக்கிழமைக்கான தனிச்சொல்:- கோமணம்!

அகரம் அமுதா