திங்கள், 21 ஜூன், 2010

கலிமண்டிலம்! 7

நான்கடிகள் கொண்ட பாடல்.

சீரமைப்பு முறையே- காய் + காய் + காய் + காய்

நான்கடிகளும் ஓரெதுகை பெற்று, ஒன்றாம் மூன்றாம் சீர்களில் மோனை அமையுமாறு வருதல் வேண்டும்.

இவ்வகைப் பாவைத் தரவுக் கொச்சகக் கலிப்பா என்று வழங்குவதும் உண்டு.

காட்டுப்பா

சீராரும் ஓர்மகனே! தேசுடைய என்மகனே!
பாராள வந்தவனே! பாசத்தின் பைங்கொடியே!
ஆராரோ! ஆராரோ! ஆராரோ! ஆராரோ!
ஆராரோ! ஆராரோ! ஆராரோ! ஆராரோ!

தீராத சாதிகளைத் தீர்க்கஉரு வானவனே!
பேராத மதவெறியைப் பேர்க்கவந்த மாவீரா!
வாராத ஒற்றுமையை வரவழைக்க வந்தவனே!
போராடுங் கண்மூடப் பொன்னேநீ கண்ணுறங்கு!

தாய்மொழியைக் காக்கவந்த தன்மானப் போராளா!
தாயழிவைப் போக்கஒரு தண்டெடுக்குந் தலைமகனே!
தாயகத்தைச் சீராக்கத் தயங்காத பகுத்தறிவால்
தாயமுதப் பாலருந்தித் தங்கமக னேஉறங்கு!
புலவர் அரங்க. நடராசன்

அகரம் அமுதன்

41 கருத்துகள்:

  1. நலமா.. நண்பரே?

    தொடர்க உமது இலக்கன ப(சி)ணி.

    பதிலளிநீக்கு
  2. கருணா கரசு கருத்துரை யில்பா
    பெறுவோம் புசித்திடு வோம்!

    இலக்குக் கியற்றா(து) இயல்பாய் இயற்ற
    இலக்கணம் ஈன்றா ரமுதர்!

    பதிலளிநீக்கு
  3. குருதியிலே கண்ணாகக் குவலயத்தில் கொசுமகனார்
    உறுதியுடன் வெவ்வேறு உடல்நாடி உலவிடுவார்
    திறனாளர், திறனற்றோர், சீர்மிகுந்தோர், சிறைசென்றோர்
    எருதனைய விலங்கினங்கள் எவர்மேலும் அமர்ந்திடுவார்

    வெளித்தோற்ற வேற்றுமையில் வெறுத்தொதுக்கா தொருமுகமாய்
    துளியமுதை உயிர்விடினும் துடிப்புடனே உறிந்திடுவார்
    வலிவிழந்து விழும்நானோ மறையுணவை தான்விடுத்து
    பலியிடுவேன் கொணர்வோரை பகுத்தறிவால் பயனுண்டோ ?

    பதிலளிநீக்கு
  4. தாய்தந்தை மணமுறிவு தருந்துயரம் தணியாமற்
    பாய்மரத்தை பறிகொடுத்தப் படகாவார் பலசிறுவர்
    ’பேய் அவள்’-என் றவனுரைக்க ’பித்தனாமுன் தந்தை’யென
    தாய்குலைக்க தடுமாறுந் தளிர்மனங்கள் தவித்திடுமே !

    பதிலளிநீக்கு
  5. ஐயா! தங்கள் பா மிக அருமை!
    நானும் விரைவில் பாவுடன் வருகிறேன்!

    பதிலளிநீக்கு
  6. நேரல்லார் பெருஞ்செல்வம் நிலைக்காதே உடற்புண்ணில்
    கூரான விரல்நகத்தால் குறுதியுறத் தேய்ப்பதற்கே
    நேராகும்; நல்வழியின் நீங்காதார் சேர்பொருளோ
    ஊரார்க்கும் உதவிடுமே உண்மையின்பம் தாந்தருமே!

    பதிலளிநீக்கு
  7. வெண்பாத் தளத்தில் //என் படங்கள்//! வாழ்க ;-)

    பண்ணோடு வந்தார் படங்கண்டு பெற்றோரும்
    பெண்ணோடு இங்குறுவா ரே.

    பதிலளிநீக்கு
  8. //உடற்புண்ணில் கூரான விரல்நகத்தால் குறுதியுறத் தேய்ப்பதற்கே நேராகும்// - உவமை புரியவில்லையே.

    புண்ணில் நகத்தால் சொறியும் ஆனந்தம் போல் இப்போதைக்கு களிப்பு, பின்னர் வலிப்பு என்கிறீர்களா?

    ஆனால் இக்காலத்தில் நேர்மாறாக இருக்கிறதே; இதோ இந்த அரசியல்வாதிகளையும், பல தொழிலதிபர்களையும் பாருங்கள். ஆளுபவர் கூட்டம், எதிரணியினர் என்ற வேற்றுமை எல்லாம் இல்லாமல், தலை-முதல் வால்-வரை எல்லோரும் எவ்வழியில் பொருள் ஈட்டினர் ?

    அவர்கள் இன்னமும் - நீண்ட நாட்களாக - (தலைமுறை, தலைமுறையாக) செழிப்புடனும், பிள்ளை குட்டிகளுடனும் நன்றாக இருக்கத் தானே இருக்கிறார்கள்!

    இனி அடுத்தடுத்த பிறவிகளில் தக்க பலனை (வலியை) அனுபவிப்பார்கள் என்று எண்ணுவோம்!

    பதிலளிநீக்கு
  9. *
    சாகாத வரம்வேண்ட சமுத்திரமாய்ப் புகழ்வேண்ட
    ஆகாவென் றனைவருமே அருமையென வாழ்த்திடவே
    போகாத ஒருவாழ்க்கை பொருளோடு வேண்டுமெனில்
    ஆகாத செயல்துடைத்து அருஞ்செயல்கள் புரிந்திடுவீர்!

    பொன்னும்நல் மணியெதுவும் போகுமிடம் தெரியாது
    சொன்னவைகள் யாவுமுந்தன் சொல்படியே நடக்காது
    பண்ணதுவே அவனையெண்ணி பாடிக்கொண் டிருந்தாலே
    எண்ணமது ஓர்நாளில் ஈடேறும் இதுதிண்ணம்!

    செவ்விளநீர் நிறத்தொப்ப சிறப்பான வாழ்க்கையிதில்
    அவ்விளநீர் வேண்டுமாயின் அறம்மட்டும் புரிந்திடுவீர்
    அவ்வையொடு தமிழ்நூல்கள் அளித்திட்ட படிவாழ்ந்து
    கவ்வைநீக்கி துன்பமிலாக் களிப்பதனை அடைந்திடுவீர்!


    நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  10. வருக! கருணாகரசு! நீங்களும் இங்குப் பண்பாடலாமே!

    பதிலளிநீக்கு
  11. அவனடியாரின் கொசுப் பாக்கள் அருமை. அருமை.

    //////தாய்தந்தை மணமுறிவு தருந்துயரம் தணியாமற்
    பாய்மரத்தைப் பறிகொடுத்த படகாவார் பலசிறுவர்
    ’பேய் அவள்’-என் றவனுரைக்க ’பித்தனாமுன் தந்தை’யெனத்
    தாய்குலைக்க தடுமாறுந் தளிர்மனங்கள் தவித்திடுமே !//////

    அருமை. அருமை.

    பதிலளிநீக்கு
  12. உமா அவர்களுக்கு...

    யாருக்கு நேரல்லார்????? பெருஞ்செல்வம் நிலைக்காதே உடற்புண்ணில்
    ////கூரான விரல்நகத்தால் குறுதியுறத் தேய்ப்பதற்கே
    நேராகும்////; நல்வழியின் நீங்காதார் சேர்பொருளோ
    ஊரார்க்கும் உதவிடுமே உண்மையின்பம் தாந்தருமே!


    மூன்றாம் நான்காம் வரிகள் மிகச் சிறப்பு.

    கூரான விரல்நகத்தால் குறுதியுறத் தேய்ப்பதால் என்னாகும்???? முதலில் இன்பத்தைத் தந்தாலும் பிறகு பெரும்துன்பத்தைத் தரும். அழகிய உவமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. அண்ணாமலையாரின் பாக்கள் அருமை.

    செவ்விளநீர் நிறத்தொப்ப சிறப்பான வாழ்க்கையிதில்????
    அவ்விளநீர் வேண்டுமாயின் அறம்மட்டும் புரிந்திடுவீர்
    அவ்வையொடு தமிழ்நூல்கள் அளித்திட்ட படிவாழ்ந்து
    கவ்வைநீக்கித் துன்பமிலாக் களிப்பதனை அடைந்திடுவீர்!

    சிவப்பு நிறமுடைய இளநீர் என்பதால் செவ்விளநீர் என்கின்றோம். அஃதொப்ப சிறந்த வாழ்க்கை??? புரியவில்லை.

    பதிலளிநீக்கு
  14. வேகாத வெய்யிலினில் வேர்த்தொழுகெவ் வயதினரும்
    நோகாமற் நொடியினிலே நுரைவழியக் குடித்திடுமிச்
    சாகாமற் சாகடிக்கும் சைத்தானாம் குளிர்பானம்
    நாகாக்கா வெளிநாட்டார் நமனையன்றோ நமக்களித்தார்!

    பதிலளிநீக்கு
  15. வேகியோ வேகாதோ வெவ்வேறு வல்விருந்தை
    வேகுணவுக் கூடந் தரும்.

    பதிலளிநீக்கு
  16. அய்யா: இரு ஐயங்கள்:
    அ) ‘கவ்வைநீக்கித்’ - காய்ச்சீராக எடுக்கலாமா ? விளக்க முடியுமா ?
    ஆ) ‘வேகாத வெய்யிலினில்’ - என்பது பேச்சு வழக்கில் பயன்படுத்தும் ஒரு சொற்றொடர் - ஆனால் "அது என்ன ‘வேகாத வெய்யில்’?" என யோசித்தால் புரியவில்லை? விளக்குவீர்களா?

    நன்றி அமுதனனவர்களே!

    பதிலளிநீக்கு
  17. //வேகியோ வேகாதோ வெவ்வேறு வல்விருந்தை
    வேகுணவுக் கூடந் தரும்.// - இது சரியா?, இல்லை:

    வெந்ததோ வேகாதோ வெற்றுணவும் வல்விருந்தும்
    வேகுணவுக் கூடந் தரும்.

    இது சரியா ? -

    மேலும், ‘வேகுணவுக்கூடம்’ - fast food centre என்பதற்கு சரியான மொழி மாற்றமா ?

    பதிலளிநீக்கு
  18. இளநீர் விற்பரிடம் நாம் சென்று இளநீர் கேட்கும் போது நமக்கு சிறப்பாகவும், பருகவேண்டும் என்று ஆவலைத் தூண்டும் வகையிலும் தோன்றுவது செவ்விளநீர் தானே!அதனாலேயே இதனை அங்கு குறிப்பிட்டேன் ஐயா!

    மேலும்,
    எனக்கும் கூட ஒரு ஐயம் எழுந்துள்ளது.
    திருவமை..உமா அவர்கள் எழுதியுள்ள அழகான பாவில் ஓரிடத்தில்,
    /// கூரான விரல்நகத்தால் குறுதியுறத் தேய்ப்பதற்கே ///
    என்பதிலே வரும் 'குறுதி' என்ற பதம் சரியா?அல்லது குருதி என்று வரவேண்டுமா? அல்லது இரண்டுமே ஒருபொருளா?
    ஆசிரியர், தயவுகூர்ந்து தெளிவித்தால் மகிழ்வேன்!
    நன்றிகள் ஐயா!

    பதிலளிநீக்கு
  19. //'குறுதி' என்ற பதம் சரியா?அல்லது குருதி என்று வரவேண்டுமா? //
    ஐயா கண்டிப்பாக குருதி என்றே வரவேண்டும். தவறாக அச்சிட்டுவிட்டேன். நகத்தால் கீறிச்சொறிதல்.

    //யாருக்கு நேரல்லார்????? //
    நேர்மையில்லாதவர், நேர்வழியில் செல்லாதவர்.
    சரிதானே?

    பதிலளிநீக்கு
  20. //சாகாமற் சாகடிக்கும் சைத்தானாம் குளிர்பானம்
    நாகாக்கா வெளிநாட்டார் நமனையன்றோ நமக்களித்தார்//

    அய்யா! அருமை,அருமை வாழ்த்துக்கள்>

    பதிலளிநீக்கு
  21. //வெந்ததோ வேகாதோ வெற்றுணவும் வல்விருந்தும்
    வேகுணவுக் கூடந் தரும்.// - எதுகை விதிப்பிழையைத் திருத்த:

    வெந்ததோ வேகாதோ வெற்றுணவை வல்விருந்தாய்த்
    தந்திடும் வேகுணவுக் கூடம்.


    அப்பா! :-) குறள்-வெண்பா குரல்-வளையைப் பிடிக்குதுப்பா !

    பதிலளிநீக்கு
  22. //செவ்விளநீர் நிறத்தொப்ப சிறப்பான வாழ்க்கையிதில்????//

    இளநீரின் செம்மை அதன் சிறப்பு; அதுபோல்
    வாழ்க்கையில் செம்மை அதன் சிறப்பல்லவா?

    அப்படி ’செம்மைப்பட வாழ அறத்தோடு வாழுங்கள்’ என்று சொல்ல வந்தாரோ அண்ணாமலையார் ?

    பதிலளிநீக்கு
  23. அவனடியாரின் குளிர்நீர்மம் பற்றிய களிமண்டிலம் சிறப்பாகவும் அருமையாகவும் உள்ளது. வாழ்க.

    பதிலளிநீக்கு
  24. அவனடிமை சொன்னது…

    ///அய்யா: இரு ஐயங்கள்:
    அ) ‘கவ்வைநீக்கித்’ - காய்ச்சீராக எடுக்கலாமா ? விளக்க முடியுமா ?///

    கௌவை , கவ்வை -எப்படி எழுதினாலும் அசை பிரிக்கும் போது தேமாவாகவே வரும்.

    ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஒள -ஆகிய ஏழும், அதன் இனவெழுத்துக்களும் நெடிலே.

    ///ஆ) ‘வேகாத வெய்யிலினில்’ - என்பது பேச்சு வழக்கில் பயன்படுத்தும் ஒரு சொற்றொடர் - ஆனால் "அது என்ன ‘வேகாத வெய்யில்’?" என யோசித்தால் புரியவில்லை? விளக்குவீர்களா?///


    பேச்சு வழக்கு என்று சொல்லிவிட்டீர்கள் அல்லவா! பிறகு பொருள் கேட்டால் எப்படி? எனக்கும் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்வார்கள் என எதிர்பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  25. அண்ணாமலையாரின் விளக்கங்கள் அருமை. குருதி பற்றிய விளக்கத்தை உமா அவர்களே தீர்த்துவிட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  26. மேலும், ‘வேகுணவுக்கூடம்’ - fast food centre என்பதற்கு சரியான மொழி மாற்றமா ?


    ஆங்கில அறிவு எனக்கு அறவே கிடையாது. இருப்பினும் அதைத் தமிழ்ப்படுத்தினால் இப்படி வரும் (அல்லது) வரலாம் எனக்கருதுகின்றேன்.

    விரைவுணவுக் கூடம்.

    பதிலளிநீக்கு
  27. வேகியோ வேகாதோ இரண்டு சொல்லமைப்புமே தவறு எனக்கருதுகின்றேன்.
    வெந்தே வேகாமலோ என்பதே எழுத்துவழக்குக்குச் சரியான முறையாகும்.

    பதிலளிநீக்கு
  28. செவ்விளநீர் பற்றிய அவனடியாரின் விளக்கங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  29. பழந்தேனாய்ப் பாகினிப்பாய்ப் பாலருவிப் பொழிரசமாய்ச்
    சுழலீர்ப்பாய் சுகஞ்சேர்ப்பாய் சுந்தரத்தீந் தென்மொழியுன்
    கழல்மீதென் கரமேந்திக் கண்நீங்கா நீர்ச்சொரிந்து
    அழகான கவிபாட ஆர்வத்தில் அமர்கின்றேன்.

    தெள்ளுதமிழ் தேனடைக்குத் தீகாட்ட வேண்டாமே
    அள்ளியள்ளிப் பாவினைநாம் அமிழ்தாகக் கொண்டாடி
    பள்ளுபாடிச் சாறெடுத்துப் பக்திச்சேற் றுடன்செவிகள்
    கொள்ளுமள வைத்தாண்டிக் கொடுப்பதுமென் தமிழ்மொழியே.

    என்கிழவன் அவனுடைஇல் என்கிழவி இருவருமே
    எம்முறைவாழ் எவருடன்கொள் எழுதியதென் இயம்புதலென்
    பொன்னொளிரும் பூமணமும் பொட்டணிந்த பூவையரின்
    கண்மிளிரும் கவியுணர்வாய்க் காவியத்தில் தமிழ்மொழியே.

    பதிலளிநீக்கு
  30. வெண்பாவைத்தான் மறந்துட்டோம். குறட்-பாக்களையாவது மறக்காமலிருக்கலாங்..என்ன ?

    ம்ம்... அப்புறம் ஒரு விசயம்: நம்ம தமிழநம்பி ஆசானப் பாத்து ஒரு வருசம் ஆனாப்போல தோணுது, இதப் பாத்தாவது இங்கிட்டு வராரான்னு பாக்கலாம்.

    *********
    செம்மொழியே சாக்காகச் சில்லறையைச் சேர்த்தவர்க்(கு)
    எம்மொழியுங் காய்க்கும் மரம்.

    செம்மொழியைச் சார்ந்தேநம் செல்வாக்கும் சில்லறையும்
    இம்மொழிக் கேது இணை?

    எம்மொழியில் என்றாலும் ஏய்த்திடுவோம் எப்படியும்
    நம்மொழியை நஞ்சாக்கு வோம்.
    ***********

    பதிலளிநீக்கு
  31. பள்ளிழையாம் பட்டாடை போர்த்திப் பழந்தமிழின்
    மெல்லிடையை மூடும் வசந்த்.


    ஆஃகா! ஆஃகா! வசந்தைப் பற்றி எழுதினாலே அவர் பாணி வந்துவிடுகிறது :-)

    பதிலளிநீக்கு
  32. வசந்த் அவர்களின் பாக்கள் அருமை. அருமை. வாழ்க.

    பதிலளிநீக்கு
  33. அவனடியாரிம் குறள் பாக்கள் அருமை. அதென்ன பள்ளிழை?

    பல இழைகளால் ஆன ஆடையா? அப்படியானால் பல்லிழையாம் பட்டாடை என்று வரவேண்டும் அல்லவா! பள்ளிழைக்கு வேறு பொருளேதும் உண்டா?

    பதிலளிநீக்கு
  34. அய்யா தமிழநம்பி அவர்கள் மீண்டும் பாடங்கள் வழங்க வருவார் என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  35. தைடு.வசந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். பாக்கள் மிக்க அருமை.

    திரு.தமிழ நம்பி அவர்கள் தமிழ்த்தோட்டதில் மரபுப் பா பயிலரங்கம் நடத்திவருகிறார். தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  36. (பாடும்) பள்ளு + இழை = பள்ளிழை என்று வரலாமா ?

    பதிலளிநீக்கு
  37. திரு.அவனடிமை ஐயா, திரு.வசந்த் அவர்களின் பாக்கள் ரொம்பவே அருமையாக உள்ளன.
    நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  38. அவனடிமை சொன்னது…

    (பாடும்) பள்ளு + இழை = பள்ளிழை என்று வரலாமா ?


    கண்டிப்பாகக் கூடாது.

    பதிலளிநீக்கு
  39. பொறுத்தருள்க. அடுத்த இடுகையை இன்னும் ஓரிரு நாட்களில் இட்டுவிடுகின்றேன்.

    பதிலளிநீக்கு
  40. கற்பதுவும் கேட்பதுவும் கருத்தினிலே தெளிவுறவே,
    மற்றவரின் சிந்தனையை மறுத்திடவும் அன்றியதே
    முற்றெனவும் முடிந்திடாதுன் எண்ணத்தைச் சீராக்கி
    உற்றதொரு நல்வழியை உனதாக்கி நடப்பாயே!

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com