வியாழன், 25 நவம்பர், 2010

இசைப்பா! 1

நாம் இதுவரைப் பெரும்பாலான பாவகைகளைப் பற்றி அறிந்து, இயற்றி இருக்கின்றோம். இப்பகுதியில் நாம் காண இருப்பது இசைப்பாக்களைப் பற்றி!

ஓர் ஒலி ஒழுங்கிற்குட்பட்டு எழுதும் பாவை இசைப்பா என்றால் அது மிகையாகாது. குறிப்பாக இவ்வகைப் பாக்கள் எழுதும் போது தளைகளைப் பற்றிக் கவலைப் படத்தேவையில்லை. ஓசை ஒழுங்கிருந்தால் போதும். சிந்து, நொண்டிச் சிந்து போன்றவை இசைப்பாக்களே!


இப்பகுதியில் மிகவும் எளிமையான முறையில் எழுதப்படும் இசைப்பாடல்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

மதியுரை!

தேய்ந்து தேய்ந்து
தொலைந்த நிலாவும்
தோன்றி வளர்வது கண்டாயா? -அது
தேய்ந்து தொலைந்தும்
தோன்றி வளர்ந்தும்
தரும்மதி யுரைதனைக் கொண்டாயா?

வளரும் போதும்
மதியிழந் தேசிறு
வழியும் மாறிச் செல்வதில்லை -அது
தளரும் போதும்
தன்னை மறந்து
தடத்தை மாற்றிக் கொள்வதில்லை!

கொடுக்கக் கொடுக்கக்
குன்றும் குறையும்
கோள நிலாவும் குறைகிறது -தனை
எடுத்துக் கொடுத்த
இளைய நிலாவின்
இசையே பிறையாய் நிறைகிறது!

முயன்றால் நிச்சயம்
ஏற்ற மென்பதே
பிறைவளர்ந் துணர்த்தும் மதியுரைகாண் -நாம்
முயலா விட்டால்
வீழ்ச்சி யென்பதை
முழுமதி தேய்ந்தே உரைப்பதுகாண்!

இல்லை என்னும்
இருளை ஓட்ட
இளைய நிலாபோல் ஈந்துவிடு -நீ
தொல்லை காணா
திருக்க வேண்டின்
ஈயும் போதே ஆய்ந்துகொடு! -அகரம் அமுதன்.


இப்பாடல்,

இயற்சீர் +இயற்சீர் இயற்சீர் +இயற்சீர்
 இயற்சீர் +இயற்சீர் + காய் =ஓரசைச்சொல்,

இயற்சீர் +இயற்சீர் இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர் + காய்!

 ஈற்றுச்சீர் (7-ஆம் சீர்) இழைபுத்தொடை அமைதல் சிறப்பு. இப்படியே அனைத்து வரிகளையும் இயற்றுதல் ஒருவகை இசைப்பாவே. முயலுக.

அகரம் அமுதன்

திங்கள், 6 செப்டம்பர், 2010

ஆசிரியர் போற்றுதும்!

இந்த ஆசிரியர் நாளில் நம் வெண்பா வலையிற் பயிலும் அனைவரும் தாங்கள் பயின்ற ஏதேனும் ஒரு பாவடிவில் தங்களின் பள்ளிக்கால நினைவுகளை முன்னிருத்தியோ, பொதுப்படையாகவோ ஆசிரியர்களை வாழ்த்திப் பாவடிக்க அழைப்பு விடுக்கின்றேன்.

தங்களுக்கான தலைப்பு - ஆசிரியர் போற்றுதும்

அகரம் அமுதன்

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

வஞ்சி மண்டிலம்! 5

விளம் விளம் தேமா =எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.

பிறந்தவர் புகழுற வேண்டின்
இறந்தபின் நிலைபெற வேண்டின்
பிறவுயிர் தம்முயிர் என்றே
அறிந்தவை வாழ்வுறச் செய்வீர்! -புலவர் அரங்க.நடராசன்

புதன், 18 ஆகஸ்ட், 2010

வஞ்சி மண்டிலம்! 4

மா + விளம் + காய் = எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.

பசித்தால் உண்பது நன்றாகும்
பசியா துண்பது நோயாகும்
புசிக்க வாழ்வது பெருந்தீங்கு
புசித்தல் வாழ்வதற் கெனல்நன்றே! -புலவர் அரங்க. நடராசன்

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

வஞ்சி மண்டிலம்! 3

விளம் + விளம் + காய் என்ற தளையமைப்பைக் கொண்ட வஞ்சி மண்டிலம்.

நல்லவர் நட்பினை நாடுகவே
அல்லவர் நட்பினை அகலுகவே
வல்லவர் ஆகவே வாழுகவே
இல்லையோர் நன்மையும் இதனினுமே! -புலவர் அரங்க. நடராசன்