சனி, 14 ஜூன், 2008

பாடம்8 வினாவிடை!

நமது அருமைத் தோழர் ஜுவா அவர்கள் நமது பாடம்7- தொடைச் சிறப்பைப் படித்துவிட்டுப் பின்னூட்டில் சில கேள்விக் கணைகளைத் தொடுத்திருந்தார். பின் சற்று நேரத்தில் (உறழ்ச்சித் தொடையைப் படித்துவிட்டு) அதில் பல கேள்விகளுக்கு உறழ்ச்சித் தொடையிலேயே பதிலிருப்பதாகவும் மீண்டும் ஓர் பின்னூட்டிட்டிருந்தார்.

அவருக்குப் புரிந்திருப்பினும் அக்கேள்விகளுக்கு நாம் பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். கேள்விகளும் பதில்களும் பின்வருமாறு:-

1-ஒன்றாம் மூன்றாம் சீரினை (பொழிப்பு மோனை) மோனைத் தொடையாக ஒத்து நோக்குவதைப் போல இரண்டாம் மற்றம் நான்காம் சீர்களையும் நோக்கலாமா?

ஆம். முதல் மூன்றாம் சீர்களில் மோனையமையாதக்கால் முதலிரு சீரிலோ அல்லது முதல் மற்றும் நான்காம் சீரிலோ மோனை அமையலாம். முதல் மற்றும் நான்காம் சீர்களில் மோனையமையப் பெறின் அதைப் “பின்மோனை” என்பர்.

2-குறிப்பிட்ட சில உயிர்மெய்யெழுத்துக்களைத் தவிர இதர எழுத்துக்களுக்கு இனம் கிடையாதா?

ம-வ த-ச ஞ-ந வைத்தவிர மற்ற உயிர்மெய்யெழுத்துக்களுக்கு வந்த எழுத்துக்களே மோனையாக அமையவேண்டும். ஆயினும் அவ்வுயிர்மெய் (எதுகை விதியிலுள்ளதைப் போல) குறிலுக்குக் குறிலோ நெடிலுக்கு நெடிலோ வரவேண்டும் என்ற அவசியமில்லை.

எ.காட்டு:-க-என்ற எழுத்து மோனையாக அமைகிறது என்று வைத்துக்கொள்வோம். உயிரினமான (அஆஐஒள) ஆகிய எழுத்துக்களோடு புணர்ந்துவந்த (அதாவது) க கா கை கௌ இவற்றிலொன்றே மோனையாக அமைய வேண்டும். மாறாக -விற்கு மோனையாக கி-யோ கூ-வோ அமையக்கூடாது.

மோனையாகிய -விற்கு மோனையாக க கா கை கௌ இவற்றிலொன்றை மோனையாக அமைக்கமுடியவில்லையா? குழப்பமில்லை. அதற்கும் நம் பெரியோர்கள் வழிவகை செய்திருக்கிறார்கள். -என்பது வல்லின எழுத்தல்லவா? ஆக வல்லின எழுத்துக்களாகிய க ச ட த ப ற -இவற்றுள் க ச த ப இவை நான்கும் சொல்லின் முதலில் வருமல்லவா? -விற்கு மோனையாக (ச சா சை சௌ த தா தை தௌ ப பா பை பௌ) இவற்றை மோனையாக அமைக்கலாம். இதற்கு வல்லினமோனை என்று பெயர். (இதுவே மெல்லினம் மற்றும் இடையின எழுத்துக்களுக்கும் பொருந்தும்)

3-ஒரு சீரை ஈரசைச் சீராகப் பிரிப்பதா அல்லது மூவசைச் சீராகப்பிரிப்பதா என்பதை முடிவுசெய்ய இந்த தொடைகள் கைகொடுக்கும் போலத் தெரிகிறது. சரியா?

இல்லை. சீர்களைப் பிரிப்பதற்குப் பெரிதும் துணையாயிருப்பது ஒற்றுக்களே!

எ.காட்டு:-
காலத்தின் மாற்றமேற் கத்தக்க தென்பதனால்
நேர்நேர்நேர் நேர்நிரை நேர்நேர் நேர்நிரைநேர்

காலத்தின் மாற்றம் ஏற்கத்தக்கது –என்றெழுதினால் தளை தட்டும்.

ஆகையால் அப்படிப் பிரித்து எழுதியுள்ளேன். இதையே:-

காலத்தின் மாற்றமேற்கத் தக்க தென்பதனால்
நேர்நேர்நேர் நேர்நிரைநேர் நேர்நேர் நேர்நிரைநேர்

இதில் பாருங்கள் மூன்றாம்சீர் வரை தளைதட்டவில்லை.மேலும் கா-விற்குப் பொழிப்பு மோனையாக -வந்து வல்லின மோனையானமை காண்க. நான்காம் சீர் மாமுன் நேர் வந்துத் தளைதட்டுகிறது. ஆகையால்தான் “மாற்றமேற் கத்தக்க” என்று பிரித்தெழுதியுள்ளேன் என்பதறிக.

4-உயிரெழுத்துக்களில் இனமோனை நன்றாகப் புரிகிறது. ம-வ மற்றும் த-ச கூட்டணி ஒரே ஓசைநயம் இல்லாததுபோல் இருக்கிறதே?

ஆம். ஒத்த ஓசை இல்லைதான்.

5-முதல்சீரையும் இரண்டாம் சீரையும் ஏன் மோனைத்தொடையாக ஒத்துக்கொள்வதில்லை. “தங்கச் சொம்பு” “சந்தம் தங்கும்” போன்றவை மோனைத்தொடைகள் இல்லையா?

ஆம். பார்க்கலாம். இதற்கு முன் இணைமோனை என்று பெயர். “சந்தம் தங்கும்” என்பது சரி. “தங்கச் சொம்பு” என்பதில் மோனையில்லை. -என்ற அகரப் புணர்ச்சிக்கு சொ-என்ற ஒகரப் புணர்ச்சி எப்படி மோனையாகும். மாறாக தங்கக் காசு என்று வருமானால் சரியே. ஏனென்றால் -வுக்கு மோனையாக கா-என்ற வல்லினமோனை வருகிறதல்லவா?

அகரம்.அமுதா

2 கருத்துகள்:

  1. தொகுத்து அளித்தமைக்கு நன்றி மேடம்.
    மிச்சிம் இருந்த சந்தேகங்களையும் சொச்சம் இல்லாமல் நிவர்த்தி செய்தமைக்கு நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  2. அது என் கடமையல்லவா? இதற்கெல்லாம் நன்றி எதற்கு? இருப்பினும் தங்கள் நன்றியை நான் ஏற்றுக் கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com