திங்கள், 22 டிசம்பர், 2008

33.வேற்றுப்பொருள் வைப்பணி!

கவிஞன் தான் கூறவிரும்பும் சிறப்புப் பொருளை உலகமறிந்த பொதுப்பொருளைக் கொண்டு விளக்கிக் கூறுவது வேற்றுப்பொருள் வைப்பணியாம்.

பராவரும் புதல்வரைப் பயத்த யாவரும்
உராவரும் துயரைவிட் டுறுதி காண்பரால்
விராவரும் புவிக்கெலாம் வேதமே அன்ன
இராமனைப் பயந்தஎற் கிடருண்டோ? என்றாள்!

பொருள்:-



வணங்கத்தக்க சிறந்த புதல்வரைப் பெற்ற யாவரும் துன்பம் நீங்கி நன்மை பெருவர் என்பது உலகறிநந்த பொதுப்பொருள். அப்பொதுப்பொருளைக் கொண்டு பாரெலாம் வேதமெனப் போற்றும் இராமனைப் பிள்ளையாகப் பெற்ற எனக்குத் துன்பம் உண்டோ? (இல்லை)எனும் சிறப்புப் பொருளைக் கைகேயி மந்தரையிடம் விளக்குகிறாள்.

ஆகவே இப்பாடல் வேற்றுப்பொருள் வைப்பணி.

ஒற்றுமிகுமிடங்கள்!

16.இரண்டாம் வேற்றுமை விரியில் வலிமிகும்.

இரண்டாம் வேற்றுமை உருபு:- ஐ

கண்ணனை திட்டினேன் - கண்ணனைத்திட்டினேன்.

கந்தனை பார்த்தேன் -கந்தனைப்பார்த்தேன்.

விலக்கம்:-
உருபுதெரிய எழுதுவது வேற்றுமைவிரி எனப்படும். உருபு மறைய எழுதுவது வேற்றுமைத்தொகையாகும்.

காட்டு:-

வீடு கட்டினேன் -வேற்றுமைத் தொகை
வீட்டைக் கட்டினேன் -வேற்றுமைவிரி

17.இரண்டாம் வேற்றுமைத் தொகையில் மிக அருகி சிறுபான்மையாக வலிமிகும்.

காட்டு:-

மக பெற்றான் -மகப்பெற்றான். மகவைப் பெற்றான் என வேற்றுமைவிரியிலும் தொகையிலும் வலிமிகுந்தது காண்க.

பாட்டு கேட்டான் -பாட்டுக் கேட்டான். பாட்டைக் கேட்டான்
பூ தொடுத்தான் -பூத்தொடுத்தான். பூவைத்தொடுத்தான்.

18.இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையின் முன் வலிமிகும்.

காட்டு:-

தயிர்ப்பானை -தயிரை உடைய பானை எனப்பொருள்படும். இத்தொடரில் தயிரை எனும்பொழுது "ஐ" உருபும் "உடைய" என்ற பயனும் உருசேரத்தொக்கி வருவதால் இஃது உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆகும்.

சொறி தவளை -சொறித்தவளை
சென்னை கடற்கரை -சென்னைக் கடற்கரை

19.மூன்றாம் வேற்றுமைத் தொகையில் வலிமிகும்.

சுறா பாயப்பட்டான் -சுறாப்பாயப்பட்டான். இத்தொடரில் சுறாவால் பாயப்பட்டான் என்பது பொருள். ஆல் எனும் மூன்றாம் வேற்றுமை உருபு தொகையில் உள்ளது.

20.மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வலிமிகும்.

பட்டு துணி -பட்டுத்துணி. பட்டினால் நெய்த துணி என்பது பொருள். ஆல் எனும் உருபும் நெய்த எனும் பயனும் தொகையாதலால் வலிமிகுந்தது.

இக்கிழமைக்கான ஈற்றடி:- நங்கைக்கு நாணம் நயம்!

அகரம்.அமுதா

13 கருத்துகள்:

  1. வெங்கொடியர் ஐந்தறிவில் வீதியிலும் வேறிடத்தும்
    எங்கெங்கும் தாமிருப்பர் ஏந்திழாய்! - பொங்குகையில்
    அங்கையே ஆய்தம்! ஆர்சொலினும் ஏற்காதே!
    "நங்கைக்கு நாணம் நயம்!"

    பதிலளிநீக்கு
  2. வெங்கொடியர் ஐந்தறிவில் வீதியிலும் வேறிடத்தும்
    எங்கெங்கும் தாமிருப்பர் ஏந்திழாய்! - பொங்குகையில்
    அங்கையே ஆய்தமாம்! ஆர்சொலினும் ஏற்காதே!
    "நங்கைக்கு நாணம் நயம்!"

    ஒரு தவற்றைத் திருத்தியுள்ளேன்!
    பொறுத்தாற்றுக!

    பதிலளிநீக்கு
  3. வெண்பா அருமை சிக்கிமுக்கியாரே! வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் திரு சிக்கிமுக்கி! தங்களைப்பற்றி அறியவிரும்புகிறேன். என் மின்மடலுக்கு மடல்வரையவும்

    agaramamutha@gmail.com

    பதிலளிநீக்கு
  5. எட்டு ஒன்பதாம் வகுப்புகளில் படித்தது... தொடரட்டும் உங்கள் சேவை

    பதிலளிநீக்கு
  6. மிக்க நன்றி திரு ஆளவந்தான் அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. ஒற்று மிகுமிடங்கள் பற்றிய தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.
    தங்கள் தகவல் எனக்கு மிகவும் பயன் தரக் கூடியது.
    மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  8. இந்தப் பதிவைச் சந்திப் பிழை சாம்ராட்டுகளுக்கு அர்ப்பணிக்கலாம்

    பதிலளிநீக்கு
  9. வருக! உயர்திரு லதானந்த் அவர்களே! தங்கள் கூற்றை வழிமொழிகின்றேன்.

    பதிலளிநீக்கு
  10. உங்கள் கருத்தைச் சொல்லவும்.

    பேரிடர் வரினும் நேர்கொண்டு பொருத
    பாரினில் பாவையர் உண்டாம் - வீரமிகு
    மங்கையர் சீறினும் சிரிப்பினும் மேல்நோக்க
    நங்கைக்கு நாணம் நயம் !

    பதிலளிநீக்கு
  11. பொருள் நயம் அழகாகக் கையாண்டுள்ளீர்கள். வாழ்த்துகள். சில இடங்களில் தளைதட்டுகிறது அவ்வளவே!

    சரிசெய்த வெண்பா:-

    பேரிடர் வந்தாலும் நேர்கொண்டு போரிடப்
    பாரினில் பாவையர் உண்டன்றோ - வீரமிகு
    மங்கையர் சீறினும் சிரிப்பினும் மேல்நோக்க
    நங்கைக்கு நாணம் நயம் !

    "சீறினும் +சரிப்பினும்" -இவ்விடத்தைச் சரிசெய்யமுடியவில்லை. ஆயினும் தங்கள் நாலடி வெண்பாவைச் சுருக்கிக் குறலாக யாத்திருக்கிறேன். அதிகப்பிரசங்கித் தனத்திற்கு மன்னிக்கவும்.

    பொங்கும் மறஞ்செறிந்து போராடும் ஏல்வையிலும்
    நங்கைக்கு நாணம் நயம்!

    அகரம்.அமுதா

    பதிலளிநீக்கு
  12. நங்கைக்கு நாணமென்றால் நாயகன் முன்தானே
    பொங்குமொரு காதலை இன்னும்கா ணதவன்நான்
    செங்கவியில் நங்கையைப் பாடினாலும் பாடறியேன்
    நங்கையர் நாண நயம்.

    -இராஜகுரு

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com