வியாழன், 25 பிப்ரவரி, 2010

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம் - 4

அடுத்த வகை அறுசீர் மண்டிலத்தின் இலக்கணம் :

1. ஓர் அடியில் ஆறு சீர்கள் வரவேண்டும்.

2. நான்கு அடிகளும் ஓர் எதுகை பெற்றிருக்க வேண்டும்.

3.முதல் சீர், ஐந்தாம் சீரில் மோனை அமைவது சிறப்பு.

4. ஓர் அடியை நான்கு சீர், இரண்டு சீராக மடித்தெழுதுவது மரபு.

5. நான்கு அடிகளும் அளவொத்து, முதல் ஐந்து சீர்கள் மாச்சீராகவும் (தேமா அல்லது புளிமா) ஆறாவது சீர் மாங்காய்ச சீராகவும் ( புளிமாங்காய், தேமாங்காய்-இரண்டில் ஒன்று) அமைந்து வரவேண்டும்.

6. தளை பற்றிக் கருத்துச் செலுத்துதல் வேண்டா.

7. ஈற்றெழுத்து எதுவும் வரலாம்.

எடுத்துக்காட்டுப் பாடல் :

பசித்தால் மட்டும் புலியும் பிறவும்
..........பதறக் கொன்றுண்ணும்
பசியாப்போதும் திமிரால் கொல்லும்
..........பரிவொன் றில்லாரே
விசித்துக்கலங்கும் மாந்தர் கண்ணீர்
..........வீணாய்ப் போகாதே
நசிக்கும் ஒருநாள் நன்றாய் இதனை
..........நனவில் கொள்வீரே!

இப்பாடலை எழுதியவர் புதுவைப் புலவர் அரங்க.நடராசனார் ஆவார்.

இந்த வகை அறுசீர் மண்டிலப் பா ஒன்று எழுதிக் காட்டுக.

32 கருத்துகள்:

  1. வென்ற தாக விளம்பும் சிங்கள
    வீரிய மற்றோரே!
    கொன்ற தாகக் கூசா துரைத்தீர்
    கொள்கை மறவனையே!
    நின்ற தாக வரலா றுண்டோ
    நேர்மை இலாவழியே!
    நின்று கொள்வான் எங்கள் இறைவன்
    நெஞ்சில் வைப்பீரே!

    பதிலளிநீக்கு
  2. /வென்ற தாக விளம்பும் சிங்கள
    வீரிய மற்றோரே!
    கொன்ற தாகக் கூசா துரைத்தீர்
    கொள்கை மறவனையே!
    நின்ற தாக வரலா றுண்டோ
    நேர்மை இலாவழியே!
    நின்று கொள்வான் எங்கள் இறைவன்
    நெஞ்சில் வைப்பீரே!/

    உண்மை தான்

    பதிலளிநீக்கு
  3. அகரம் அமுதா சொன்னது…

    வென்ற தாக விளம்பும் சிங்கள
    வீரிய மற்றோரே!
    கொன்ற தாகக் கூசா துரைத்தீர்
    கொள்கை மறத்தானை!
    நின்ற தாக வரலா றுண்டோ
    நேர்மை இலாப்போது!
    நின்று கொல்வான் எங்கள் இறைவன்
    நெஞ்சில் வைப்பீரே!

    அருமையான மண்டிலம்.

    அடியின் ஈற்றுச்சீர் மாங்காயாக அமைந்திருக்க இரு சிறு திருத்தங்கள்!
    வேறு வகையிலும் நீங்கள் திருத்தலாம்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. மூத்த தமிழே முதற்றாய் மொழியாம்
    .....முடிவைச் சொல்கின்றார்!
    ஏத்தும் ஆய்வர் இந்நா கரிகம்
    .....எவர்க்கும் முதலென்றார்!
    காத்தல் பேணல் கருதாத் தமிழர்
    .....கடைகெட் டழிகின்றார்!
    ஊத்தை உணர்வால் உறுதன் னலத்தால்
    .....உலகில் இழிகின்றார்!

    பதிலளிநீக்கு
  5. நான் நன்றாக உற்று நோக்கிக்
    கற்றுக் கொள்கிறேன்..!!
    பிறகு பாக்கள் புனைகிறேன்..!!
    இங்குள்ள பாக்களையும், புலவர்களையும் பார்க்கும்போது எனது
    மகிழ்ச்சிக்கு அளவில்லை..!!

    பதிலளிநீக்கு
  6. சிக்கிமிக்கியாரின் பாடல் நன்றாக இருக்கிறது.

    தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  7. ****************
    அண்ணாமலை..!! சொன்னது…

    நான் நன்றாக உற்று நோக்கிக்
    கற்றுக் கொள்கிறேன்..!!
    பிறகு பாக்கள் புனைகிறேன்..!!
    இங்குள்ள பாக்களையும், புலவர்களையும் பார்க்கும்போது எனது
    மகிழ்ச்சிக்கு அளவில்லை..!!
    **********************
    வருக, வருக அண்ணாமலை அவர்களே!
    உங்கள் ஆர்வமும் ஈடுபாடும் கண்டு மகிழ்கின்றோம்.
    தொடர்ந்து படியங்கள்.
    சிறு முயற்சி போதும்.
    மரபுப் பா எழுதலாம்.
    முதலில் ஏற்படும் பிழைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்.
    உங்கள் ஐயங்களைத் தீர்க்கவும் பாடலில் நேரும் பிழைகளை எப்படித் தவிர்த்து எழுதுவது என்று விளக்கவும் நாங்கள் இருக்கின்றோம்.
    தொடர்ந்து வருக.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  8. சிக்கிமுக்கியாரின் பாடல் அருமை. அருமை. மிக அருமையாக சூடு வைத்திருக்கிறார். திருந்துவார்களா தமிழரும், தமிழினத்தலைவர்களும்?

    ====

    தமிழ நம்பி அய்யா அவர்களின் திருத்தங்கள் அருமை. நன்றிகள் அய்யா!

    ====

    புதிதாக வருகைதந்திருக்கும் அண்ணாமலையாரை வருக வருக என வரவேற்கின்றேன். வருக அழகிய பாக்கள் அருள்க.

    ====

    திகழ் அவர்களின் கூற்றிற்கு மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  9. வாழ்ந்தால் மட்டும் போது மென்றால்
    ......வாழ்க்கை ஆகுமாடா
    வாழ்ந்த பின்னும் நம்மை நினைக்க‌
    ......வாழ வேண்டுமடா
    பழக பயில முயன்றுப் பாரு
    ......எல்லாம் முடியுமடா
    வாழும் காலம் கொஞ்சம் வாழ‌
    ......வைப்போம் உலகையடா

    பதிலளிநீக்கு
  10. பார்த்துத் தடவு; பளிங்கு மேனிப்
    பாவை நெருப்புக்கள்;
    சேர்த்துக் கொல்; செதில் உரித்த
    செம்மீன் நிலத்தில்காண்;
    வேர்த்த கைகள் சொட்டும் விரலால்
    வெயிலைக் குளிராக்கு;
    போர்த்தும் போர்வை நழுவ வெட்கப்
    பொழிலில் திளைத்துப்பார்.

    கூந்தல் கலைத்துக் கண்கள் நோக்கு;
    குத்தும் மார்நுனிகள்;
    காந்தள் பூவை வண்டாய்க் கவ்வு;
    கருமைப் புருவமிடைச்
    சாந்துப் பொட்டைக் கவர்ந்துக் கம்பிச்
    சன்னல் மேலொட்டி,
    ஏந்தும் தளிரில் ஏஞ்சல் மலர்மேல்
    எங்கும் முத்தம்தா!

    இறுக்கம் தளர்த்து; இடையில் கைவை;
    இதழ்மேல் வரிகளைக்கல்;
    நெருக்கம் வளர்த்து ஈர முதுகில்
    நகக்கோ டிழைத்துக்கொள்;
    சுருக்கம் மலர்த்து; சூடாய்க் குளித்துச்
    சுழலில் இறங்கிப்பெய்;
    தருக்கம் தவிர்த்துக் கிறுக்காய் நடந்து
    தவறைச் சரியாய்ச்செய்;

    ***

    //உணர்ந்ததைச் சொல்லுங்கள்

    சத்தியமாக இதெல்லாம் நான் உணர்ந்ததில்லை..! :)

    பதிலளிநீக்கு
  11. விழியின் மணியாம் மொழியை ஒருவர்
    ......விழைந்து வாழ்த்துமென்பார்
    விழிநீர் வலிமை வெறியர் வழியை
    ......வேரோ டழிக்குமென்பார்
    விழியில் விரசம் வெட்கம் வழிய
    ......வேகம் உணர்ந்தொருவர்
    விழிப்பும் கனவென் றொருவர் விடாமல்
    ......வேதம் ஓதிடுவார்.

    பதிலளிநீக்கு
  12. நவரசங்களும் இருக்கிறதா என்று தெரியவில்லை, நம் தளத்தின் பாக்கள் பல கோணங்களிலும் புலவர்களின் கருத்துக்களைத் தாங்கி வருகின்றன. தமிழ்மொழிப் பற்று, வீரம், விரசம், விவேகம், விரிவுரை (lecture), அறிவுரை (advise) என பல வித பகிர்தல்கள். இதை நினைத்து எழுதியதே மேலே உள்ள அறுசீர் மண்டிலம்.

    பதிலளிநீக்கு
  13. திகழ்,

    அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

    தொடர்ந்து எழுதுங்கள்.

    எழுத எழுத மென்மேலும் மிளிரும்.

    பாராட்டு. நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வசந்த குமார்,

    பாடல்கள் சரியாக உள்ளன. உணராததை விளக்கியிருக்கிறீர்கள் திறமையாக!

    தடையின்றிப் பாட்டு எழுதப் பழகிவிட்டீர்கள்.
    வேறு கருத்துக்களிலும் எழுதிக் காட்டுங்கள்.

    பாராட்டு. நன்றி.

    பதிலளிநீக்கு
  15. அவனடிமை ஐயா,

    அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

    பாராட்டு. நன்றி.

    பதிலளிநீக்கு
  16. பட்டுத் துணிபோல் பரந்து கிடக்கும்
    பாரீர் கடலாகும்
    கொட்டும் மழையாய் மண்ணில் விழுந்தே
    குடிக்கத் தோதாகும்
    முட்டி மோதி ஓடும் ஆறும்
    உனக்கே யோர்பாடம்
    கட்டுக் கடங்கா மனதை நீர்ப்போல்
    காத்தல் நலனாகும்.

    பதிலளிநீக்கு
  17. ********************
    பட்டுத் துணிபோல் பரந்து கிடக்கும்
    பாரீர் கடலாகும்
    கொட்டும் மழையாய் மண்ணில் விழுந்தே
    குடிக்கத் தோதாகும்
    முட்டி மோதி ஓடும் ஆறும்
    மொழியும் ஒருபாடம்
    கட்டுக் கடங்கா மனத்தை நீர்போல்
    காத்தல் நலனாகும்.
    *************************
    அருமையான மண்டிலம்.
    பாராட்டு. நன்றி.
    மோனைக்காகச் சிறு மாற்றம்!
    எழுத எழுத மிகச் சிறப்பாய் அமையும்.

    பதிலளிநீக்கு
  18. வசந்தகுமார் ஐயா,

    இரு சிறு திருத்தங்கள், முன்னர் குறிப்பிட மறந்தேன்.

    முதல் மண்டிலப்பா இரண்டாம் அடியில் -
    செதில் உரித்த என்ற சீர்கள் புணர்கையில்
    செதி லுரைத்த - என்றாகும்; ஓரசைச்சீராக ஒருசீர் நிற்கும். அதைத் திருத்தி விடுங்கள்.

    மூன்றாம் மண்டிலப்பாவில் முதல் வரியில் -
    தளர்த்து இடையில் சேர்ந்தால், தளர்த் திடையில் என்றாகி ஓரசைச்சீராக ஒரு சீர் நின்றுவிடக்கூடும்.
    எளிதில் திருத்தி விடலாம்.
    கடைசி வரியில் 'தவற்றை' என்று எழுதிவிடுக.

    இவை மிக எளிய திருத்தங்கள். கொஞ்சம் கவனம் செலுத்தினால் இவற்றைத் தவிர்த்து விடலாம்.
    எழுத எழுத, பயிற்சியால் இவை இயல்பாகவே தவிர்ந்துபோகும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  19. தமிழைப் பருகித் தமிழைப் பருகித்
    தவித்துப் போகின்றேன்..
    உமிழ்நீர் சுவையும் ஊறும் அமுதும்
    தேனுங் கசப்பாகும்..
    உமையாள் பாதி உடையார் போலே
    உன்னால் பலம்பெறுவேன்..
    தமையாள் நீயே தாயும் நீயே
    தெய்வமு மானாயே..

    தங்களின் பாடல்களைப் படித்த மகிழ்ச்சியில்
    ஒரு வேகத்தில் எழுதி விட்டேன்.
    தவறுகளிருந்தால் திருத்தியுரைக்கவும்.
    நன்றி..!!

    பதிலளிநீக்கு
  20. ******************
    தமிழைப் பருகித் தமிழைப் பருகித்
    தவித்துப் போகின்றேன்!
    உமிழ்நீர் சுவையும் ஊறும் அமுதும்
    தேனுங் கசப்பாகும்!
    உமையாள் பாதி உடையார் போலே
    உன்னால் வலிவுற்றேன்!
    எமையாள் பவளே எந்தாய் நீயே
    எவர்க்கும் இறையானாய்!
    *********************
    அன்பார்ந்த அண்ணாமலை!

    அருமையான முயற்சி!
    அழகாக எழுதியிருக்கிறீர்கள்!
    பாராட்டு. நன்றி.

    ஈற்றுச்சீர் (ஆறாம் சீர்) தேமாங்காய் அல்லது புளிமாங்காய்ச் சீராக வரவேண்டும்.

    பலம்பெறுவேன் - கருவிளங்காய்;
    எனவே, இதனை,
    வலிவுற்றேன் - புளிமாங்காய் ஆக மாற்றியுள்ளேன்.
    நான்காம் அடியைப் பொருள் தெளிவிற்காகக் கொஞ்சம் மாற்றியுள்ளேன்.

    நீங்களே கூட அதனை விரும்பியவாறு மாற்றலாம்.

    பாராடத்தக்க முதல் முயற்சி!
    தொடர்ந்து எழுதுங்கள்.
    எளிதில் ஆற்றல் கைவரப் பெற இயலும்.

    பதிலளிநீக்கு
  21. அண்ணாமலையாரின் பாடல் அருமை. வளர்க அவரின் தமிழ்ப்பணி.

    உமா அவர்களின் அறுசீர் மண்டிலமும் அருமை. அருமை. இனிவரும் காலங்களில் கடும்போட்டியே நிலவும் போலிருக்கிறது. நானும் என்னை அணியப்படுத்திக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  22. வசந்த மற்றும் அவனடிமையாரின் பாக்கள் நெஞ்சை அள்ளுகின்றன. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  23. //அண்ணாமலையாரின் பாடல் அருமை. வளர்க அவரின் தமிழ்ப்பணி.
    உமா அவர்களின் அறுசீர் மண்டிலமும் அருமை. அருமை. //

    அண்ணா மலையார் அளித்தத் தமிழை
    ........அருந்திச் சுவைத்தோமே
    உண்ணா முலையாள் உயர்வைச் சொன்னார்
    ........உவகை கொண்டோமே
    உண்மை அறிவை உமையாள் உரைத்தார்
    ........உவமை அணியாலே
    எண்ணா நிலையை எளிதில் பெறுவோம்
    ........இறைவன் அருளாலே.

    பதிலளிநீக்கு
  24. அவனடிமை ஐயா,

    அறுசீர் மண்டிலம் அருமையாக எழுதுகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  25. தங்களின் திருத்தங்களுக்கு மிக்க நன்றி.!
    இவை மேலும் எம் தமிழறிவை மேம்படுத்தும்..
    பாத்தொடுக்கும் அனைவருக்கும் நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  26. வண்ணத்துப்பூச்சி

    வண்ணச் சிறகை விரித்து பறந்து
    வானம் அளப்பாயோ!
    கன்னஞ் சிவந்த சிறுவர் கண்ணில்
    காணும் ஒளிநீயோ
    மண்ணில் மலர்ந்த மலர்கள் பெற்ற
    வண்ணம் உன்னாலோ
    பொன்னில் அல்ல மின்னும் அழகை
    உன்னில் கண்டேனே!

    2.சிங்கம் சிறுத்தை சீறும் புலியும்
    இருந்தால் காடாகும்
    எங்கும் ஓடி வேட்டை யாடி
    இரையைப் பிடித்துண்ணும்
    தங்கும் வீட்டில் ஆடும் மாடும்
    தடுப்புத் தொழுவத்தில்
    பொங்கும் பாலை பருகத் தந்தே
    புல்லைத் தின்றிருக்கும்.

    3.காட்டை அழித்து நாட்டை ஆக்கி
    காட்டும் தொழிலாளி
    வீட்டில் உணவும் இல்லா திருக்கும்
    விளக்கம் சரிதானோ
    ஆட்டம் பாட்டம் தன்னில் பணத்தை
    அழிக்கும் முதலாளி
    கூட்டம் தன்னை சட்டம் போட்டே
    குறைத்தல் நலம்தானே.

    பதிலளிநீக்கு
  27. அருமை!

    நன்றாக அறுசீர்மண்டிலம் எழுதுகிறீர்கள் உமா!

    மூன்றும் மிக நன்றாக உள்ளன.

    இரண்டாம் பாடலின் கடைசிச் சீர் கூவிளங்காயாக உள்ளது.

    'தின்றிருக்கும்' என்பதைத் 'தானுண்ணும்' என்று மாற்றி விடலாம். தேமாங்காய் ஆகிவிடும்.
    பொருளும் ஒத்து வரும்.

    நல்ல கருத்துடைய பாடலும், இயற்கையை வியக்கும் பாடலும் நன்றாக எழுதுகிறீர்கள்.

    தொடர்ந்து எழுதுக.

    பதிலளிநீக்கு
  28. /வண்ணச் சிறகை விரித்து பறந்து
    வானம் அளப்பாயோ!
    கன்னஞ் சிவந்த சிறுவர் கண்ணில்
    காணும் ஒளிநீயோ
    மண்ணில் மலர்ந்த மலர்கள் பெற்ற
    வண்ணம் உன்னாலோ
    பொன்னில் அல்ல மின்னும் அழகை
    உன்னில் கண்டேனே!/

    /3.காட்டை அழித்து நாட்டை ஆக்கி
    காட்டும் தொழிலாளி
    வீட்டில் உணவும் இல்லா திருக்கும்
    விளக்கம் சரிதானோ
    ஆட்டம் பாட்டம் தன்னில் பணத்தை
    அழிக்கும் முதலாளி
    கூட்டம் தன்னை சட்டம் போட்டே
    குறைத்தல் நலம்தானே. /

    அருமை உமா அவர்களே

    பதிலளிநீக்கு
  29. வருக அண்ணாமலை அவர்களே

    /தமிழைப் பருகித் தமிழைப் பருகித்
    தவித்துப் போகின்றேன்..
    உமிழ்நீர் சுவையும் ஊறும் அமுதும்
    தேனுங் கசப்பாகும்..
    /

    அருமை

    பதிலளிநீக்கு
  30. திரு.தமிழ நம்பி அவர்களுக்கு,
    மிக்க நன்றி. தங்களின் வழிகாட்டலும் ஊக்கமும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
  31. புதல்வர் வேண்டிப் பூசைகள் பலவும்
    புரியும் தாய்மாரே!
    மதலை அழுதால் வயிற்றுப் பசிக்கு
    மடிப்பால் தந்தீரோ?
    முதன்மை அழகென முலைப்பால் தவிர்த்தல்
    முறைகே டாகாதோ?
    புதுமை நோக்கில் புட்டிப் பால்தரல்
    புகழைப் போக்காதோ?

    ஆவின் பாலை அதன்கன் றிற்கே
    அளிக்க மறுக்கின்றீர்
    தாவிச் சென்றதைத் தட்டிப் பறித்துத்
    தன்சேய்க் களிக்கின்றீர்
    ஆவின் கன்றிற் கதன்தாய்ப் பாலே
    அமுதம் ஆகாதோ
    தாவின் றித்தன் தகைமை காக்க
    தாய்ப்பால் தருவீரே!

    சேயின் உடல்நலம் பேணக் கண்டதைத்
    தின்னக் கொடுக்காதீர்
    தாயின் பாலே சேய்நலம் காக்கத்
    தக்க மருந்தாகும்
    நோயின் பிடியில் தாயும் விழுவாள்
    தாய்ப்பால் கொடுக்காக்கால்
    தாயிதை உணர்ந்தால் தன்முலைப் புற்றைத்
    தவிர்த்திட லாமன்றோ!

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com